Skip to main content

பாதரசத்துளி : சம்யுக்தா மாயா கவிதைகள்

 மறுதலிப்பு


காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்

உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னை

சந்திப்பதே இல்லை

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடி தான்

சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக

எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய் பசும்பாசி

அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்

                               


                  கவிஞர் சம்யுக்தா மாயா

  

சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள அன்பிற்கான ஏக்கம் தரையில் விழுந்த பாதரச துளி போன்றது. எதிலும் ஒட்டாது, தரையிலும் படராது, தரையிலிருந்தும் எழும்பாது திரண்டு தத்தளிக்குக்கும் ஒன்றை இவர் கவிதைகளில் உணரமுடிகிறது. 

'கடல் ஆழத்தில் சயனித்திருக்கும்

கற்சிற்பமொன்று...'



'சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்

அதன் ஆயுளுக்கான

வெல்லத்துண்டு

அதன் முதுகை

ஒடித்துக்கொண்டிருக்கிறது  '


இந்தக் கவிதைகளில் மறுதலிப்பு என்பது  தனிமையான ஒரு இருப்பாக,தனித்த பயணமாக உள்ளது. இந்த வெல்லக்கட்டிக்கு தன் இனிப்பளவே கனம் அதிகம். தன்னை விடவும் கூட கனம் அதிகம்.

தன் கனத்தாலேயே அது ஆழ்கடல் அடியில் அமர்கிறது. மீன்களற்ற நதியில் பாசிபடிந்து கிடக்கிறது. 

ஆனால் இந்தக்கவிதைகள் கனத்தை உதறும் இடங்களில் தான் நாம் இந்த கவிதைகளில் கனத்தை உண்மையாக உணரமுடிகிறது. நீ உதறினாலும் உன்னுடன் இருப்பது நானே என்று சொல்ல ஒரு மனம் தன்னையே உதற வேண்டும் இல்லையா...கனமில்லாத ஒன்றால் தழும்பவும் இயலும் இல்லையா.

தான் தங்கும் இடமெல்லாம்

விளக்கேற்ற வேண்டி சிம்டாவை

கையோடு தூக்கிச் செல்லுமொரு

நாக சன்யாசியைப் போல

உன் பாதைகளில் ஒளி கூட்ட

என் காதலின் வெளிச்சத்தோடு

உன்னைப் பின் தொடர்வது

உனக்கு உறுத்தலாகிறது

வருந்தத் தேவையில்லை நீ

தன் கடன் பணி செய்து கிடப்பதே

என்பது – எல்லோருக்கும்

பொருந்தும் தானே..!

இன்னும் கவலை எதற்கு…?

இதோ பார்..

தன் நெறி தவறாது ஒழுக முயலும்

காபாலிகன் ஒருவன்

கையிலேந்தும் திருவோடு என்பது

மாண்டு விட்ட எவனோ ஒருவனின்

மயானத்து மண்டையோடு தானே.

இந்த பூமியில் பாதரசம் கனமான உலோகம். . வழிந்தோடும் உலோகம். ஔிரும் உலோகம். பெண் மனதிற்குள் உள்ள அகங்காரத்திற்கு இதை உவமையாக சொல்லலாம்.

. தன் கனத்தையெல்லாம் உதறி துளியாகி தத்தளிக்கும் பெண்தன்மை சம்யுக்தாவின் கவிதைகளில் ஔிர்கிறது.

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை 

என்று தன் தன்மையில் உருகி வேறொன்றாக மாறுகிறது திடமான ஒன்று.  துளியாக்கினாலும் அதே ஔியுள்ள பாதரசம்.


பின்குறிப்பு

இந்தப்பதிவை வெளியிட்ட பின் பாதரசம் நஞ்சல்லவா என்ற புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன். நஞ்சே கனிய கனிய மாமருந்து. அமுதே அடர அடர மாநஞ்சு. தன்னை இழந்து கனியும் ஒன்று இந்தக்கவிதைகளில் உள்ளது.















Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...