Skip to main content

பாதரசத்துளி : சம்யுக்தா மாயா கவிதைகள்

 மறுதலிப்பு


காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்

உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னை

சந்திப்பதே இல்லை

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடி தான்

சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக

எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய் பசும்பாசி

அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்

                               


                  கவிஞர் சம்யுக்தா மாயா

  

சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள அன்பிற்கான ஏக்கம் தரையில் விழுந்த பாதரச துளி போன்றது. எதிலும் ஒட்டாது, தரையிலும் படராது, தரையிலிருந்தும் எழும்பாது திரண்டு தத்தளிக்குக்கும் ஒன்றை இவர் கவிதைகளில் உணரமுடிகிறது. 

'கடல் ஆழத்தில் சயனித்திருக்கும்

கற்சிற்பமொன்று...'



'சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்

அதன் ஆயுளுக்கான

வெல்லத்துண்டு

அதன் முதுகை

ஒடித்துக்கொண்டிருக்கிறது  '


இந்தக் கவிதைகளில் மறுதலிப்பு என்பது  தனிமையான ஒரு இருப்பாக,தனித்த பயணமாக உள்ளது. இந்த வெல்லக்கட்டிக்கு தன் இனிப்பளவே கனம் அதிகம். தன்னை விடவும் கூட கனம் அதிகம்.

தன் கனத்தாலேயே அது ஆழ்கடல் அடியில் அமர்கிறது. மீன்களற்ற நதியில் பாசிபடிந்து கிடக்கிறது. 

ஆனால் இந்தக்கவிதைகள் கனத்தை உதறும் இடங்களில் தான் நாம் இந்த கவிதைகளில் கனத்தை உண்மையாக உணரமுடிகிறது. நீ உதறினாலும் உன்னுடன் இருப்பது நானே என்று சொல்ல ஒரு மனம் தன்னையே உதற வேண்டும் இல்லையா...கனமில்லாத ஒன்றால் தழும்பவும் இயலும் இல்லையா.

தான் தங்கும் இடமெல்லாம்

விளக்கேற்ற வேண்டி சிம்டாவை

கையோடு தூக்கிச் செல்லுமொரு

நாக சன்யாசியைப் போல

உன் பாதைகளில் ஒளி கூட்ட

என் காதலின் வெளிச்சத்தோடு

உன்னைப் பின் தொடர்வது

உனக்கு உறுத்தலாகிறது

வருந்தத் தேவையில்லை நீ

தன் கடன் பணி செய்து கிடப்பதே

என்பது – எல்லோருக்கும்

பொருந்தும் தானே..!

இன்னும் கவலை எதற்கு…?

இதோ பார்..

தன் நெறி தவறாது ஒழுக முயலும்

காபாலிகன் ஒருவன்

கையிலேந்தும் திருவோடு என்பது

மாண்டு விட்ட எவனோ ஒருவனின்

மயானத்து மண்டையோடு தானே.

இந்த பூமியில் பாதரசம் கனமான உலோகம். . வழிந்தோடும் உலோகம். ஔிரும் உலோகம். பெண் மனதிற்குள் உள்ள அகங்காரத்திற்கு இதை உவமையாக சொல்லலாம்.

. தன் கனத்தையெல்லாம் உதறி துளியாகி தத்தளிக்கும் பெண்தன்மை சம்யுக்தாவின் கவிதைகளில் ஔிர்கிறது.

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை 

என்று தன் தன்மையில் உருகி வேறொன்றாக மாறுகிறது திடமான ஒன்று.  துளியாக்கினாலும் அதே ஔியுள்ள பாதரசம்.


பின்குறிப்பு

இந்தப்பதிவை வெளியிட்ட பின் பாதரசம் நஞ்சல்லவா என்ற புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன். நஞ்சே கனிய கனிய மாமருந்து. அமுதே அடர அடர மாநஞ்சு. தன்னை இழந்து கனியும் ஒன்று இந்தக்கவிதைகளில் உள்ளது.















Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...