Skip to main content

பாதரசத்துளி : சம்யுக்தா மாயா கவிதைகள்

 மறுதலிப்பு


காட்டின் ஒற்றையடிப் பாதையில்

வாகனமொன்றின் ஒளி வெள்ளத்தில்

செய்வதறியாது மருண்டு நிற்கும்

கள்ளமற்ற மானைப் போல

உன் விழிகளின் இயல்பான வெளிச்சத்தில்

ஸ்தம்பித்து நிற்கிறேன்

உண்மையில் எதிரே இருக்கையில் கூட

உன் கண்கள் என்னை

சந்திப்பதே இல்லை

நீ என்னிடம் பேசும் சொற்கள்

வேறு எவரையோ நோக்கியபடி தான்

சொல்லப் படுகின்றன

காற்றின் திசை மாறும் வேகத்தில்

சிதறி விழும் ஒரு துளி மழைக்காக

வாய் விரிக்கும் சாதகப் பட்சியென

மிகுந்த பொறுமையுடன் காத்திருக்கிறேன்

நீ கவனமின்றி தவற விடும்

சிறு பார்வைக்காக

எனினும் அந்த மாயக்கணம்

தொடக்கூடிய தூரத்தில் முடிவின்றி

நகர்ந்தபடி இருக்கிறது

மீன்களற்ற நதியின் மடியில்

சிறு தீண்டல் வேண்டி

நெடுங்காலமாய் பசும்பாசி

அடர்ந்திருக்கும் கூழாங்கல் நான்

                               


                  கவிஞர் சம்யுக்தா மாயா

  

சம்யுக்தாவின் கவிதைகளில் உள்ள அன்பிற்கான ஏக்கம் தரையில் விழுந்த பாதரச துளி போன்றது. எதிலும் ஒட்டாது, தரையிலும் படராது, தரையிலிருந்தும் எழும்பாது திரண்டு தத்தளிக்குக்கும் ஒன்றை இவர் கவிதைகளில் உணரமுடிகிறது. 

'கடல் ஆழத்தில் சயனித்திருக்கும்

கற்சிற்பமொன்று...'



'சிற்றெறும்பு தூக்கிச் செல்லும்

அதன் ஆயுளுக்கான

வெல்லத்துண்டு

அதன் முதுகை

ஒடித்துக்கொண்டிருக்கிறது  '


இந்தக் கவிதைகளில் மறுதலிப்பு என்பது  தனிமையான ஒரு இருப்பாக,தனித்த பயணமாக உள்ளது. இந்த வெல்லக்கட்டிக்கு தன் இனிப்பளவே கனம் அதிகம். தன்னை விடவும் கூட கனம் அதிகம்.

தன் கனத்தாலேயே அது ஆழ்கடல் அடியில் அமர்கிறது. மீன்களற்ற நதியில் பாசிபடிந்து கிடக்கிறது. 

ஆனால் இந்தக்கவிதைகள் கனத்தை உதறும் இடங்களில் தான் நாம் இந்த கவிதைகளில் கனத்தை உண்மையாக உணரமுடிகிறது. நீ உதறினாலும் உன்னுடன் இருப்பது நானே என்று சொல்ல ஒரு மனம் தன்னையே உதற வேண்டும். கனமில்லாத ஒன்றால் தழும்பவும் இயலும். 

தான் தங்கும் இடமெல்லாம்

விளக்கேற்ற வேண்டி சிம்டாவை

கையோடு தூக்கிச் செல்லுமொரு

நாக சன்யாசியைப் போல

உன் பாதைகளில் ஒளி கூட்ட

என் காதலின் வெளிச்சத்தோடு

உன்னைப் பின் தொடர்வது

உனக்கு உறுத்தலாகிறது

வருந்தத் தேவையில்லை நீ

தன் கடன் பணி செய்து கிடப்பதே

என்பது – எல்லோருக்கும்

பொருந்தும் தானே..!

இன்னும் கவலை எதற்கு…?

இதோ பார்..

தன் நெறி தவறாது ஒழுக முயலும்

காபாலிகன் ஒருவன்

கையிலேந்தும் திருவோடு என்பது

மாண்டு விட்ட எவனோ ஒருவனின்

மயானத்து மண்டையோடு தானே.

இந்த பூமியில் பாதரசம் கனமான உலோகம். . வழிந்தோடும் உலோகம். ஔிரும் உலோகம். பெண் மனதிற்குள் உள்ள அகங்காரத்திற்கு இதை உவமையாக சொல்லலாம்.

. தன் கனத்தையெல்லாம் உதறி துளியாகி தத்தளிக்கும் பெண்தன்மை சம்யுக்தாவின் கவிதைகளில் ஔிர்கிறது.

கரைந்து கொண்டே இருந்தாலும்

உனதிந்த தேன் மெழுகு

எனக்காக உருகுவது இல்லை 

என்று தன் தன்மையில் உருகி வேறொன்றாக மாறுகிறது திடமான ஒன்று.  துளியாக்கினாலும் அதே ஔியுள்ள பாதரசம்.


பின்குறிப்பு

இந்தப்பதிவை வெளியிட்ட பின் பாதரசம் நஞ்சல்லவா என்ற புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன். நஞ்சே கனிய கனிய மாமருந்து. அமுதே அடர அடர மாநஞ்சு. தன்னை இழந்து கனியும் ஒன்று இந்தக்கவிதைகளில் உள்ளது.















Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

டமருகத்தின் தாளமானவள்

 திரியை மட்டும் திரும்பத்திரும்ப மாற்றி..  ஒவ்வொரு முறையும் எரியும் சுடர் ஒன்றே தானா.. ?  வேறு.. வேறா..                             _  சம்யுக்தா மாயா நம் கவிதை மரபில் காதலுக்கும் பக்திக்கும் இடையில் ஈசலின் சிறகு போன்ற மெல்லிய தடுப்பே உள்ளது. அது இருபக்கமும் ஊடுருவும் சவ்வு. பக்தி அதிகமானால் காதல். காதல் அதிகமானால் பக்தி. இந்த மாற்றம் புதிரானது.  அதே போல நாயகன் நாயகி ஃபாவம். அரங்கனை நோக்கி பாடப்பட்ட பாடல்களில்  நாயகி ஃபாவம் மேலோங்கி உள்ளது. ஈசனுக்கு பித்தா..பிறைசூடா என்று சக்ய ஃபாவம் இயல்பாக வருகிறது.  ஈசனை காதலனாக ஃபாவிப்பது என்பது முன்னால் நின்று அவனை பாடுவது அல்ல. அவன் பாதியாகவே ஆவது. ருத்ரனின் பகுதி என்பது அத்தனை எளிதல்ல என்பதாலோ என்னவோ பெண்களில் திலகவதி மட்டுமே பாடியிருக்கிறார்.  காரைக்காலம்மையால் அவனை விளையாட்டு பிள்ளையாக்கி ஆட வைக்க முடிகிறது. ( பொதுவாகவே ஈசன் மீது பாடப்பட்ட பாடல்களில் நாயக நாயகி ஃபாவம் குறைவு)  பெண்கவிகளில் ருத்ரனுக்கு இணையான காளியை சம்யுக்தாவின...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...