Skip to main content

கடல் சிறுகதை தொகுப்பை பற்றிய ஒரு குறிப்பு

 சரவணன் மாணிக்கவாசகம் அவர்கள் தன்னுடைய வலைப்பூவில் கடல் சிறுகதை தொகுப்பை பற்றி எழுதியுள்ளார். கடல் பற்றிய முதல் குறிப்பு. நன்றி.


https://saravananmanickavasagam.in/



கடல் – கமலதேவி:

ஆசிரியர் குறிப்பு:

திருச்சி மாவட்டம் பா.மேட்டூரில் வசிப்பவர். முதுகலை நுண்ணியிரியல், இளங்கலை கல்வியியல் ஆகிய பட்டப்படிப்புகளைப் படித்தவர். இதுவரை மூன்றுசிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது நான்காவது.

நிகழ்காலத்தில் கதை நகர்ந்து கொண்டு போகையில் எந்த எச்சரிக்கையும் இல்லாது, கடந்தகாலம் வந்து கலந்து காலமயக்கத்தை ஏற்படுத்தும் கதைகள் கமலதேவியின் கதைகள். Nuclear familyயே நம்மைச்சுற்றிப் பரந்து விரிந்திருக்கும் காலகட்டத்தில், கமலதேவியின் கதைகளில், சித்தப்பா திருமண செய்முறைகளைப் பற்றிப் பேசுகிறார். சித்தி, அக்காவின் குழந்தையை ஆறுமாதத்திற்கு தத்து எடுத்துக் கொள்கிறாள். சுற்றம் சூழ வாய்த்த கதையுலகம் கமலதேவியின் கதைகள்.

கிராமத்து வாழ்க்கையே பெரும்பாலான கதைகளுக்கான களங்கள். விவசாயத்தை நம்பிய, மண் போகுமுன் உயிரைவிடும் மனிதர்களின் கதைகள். அவர்களது ஆசாபாசங்கள், உறவுச்சிக்கல்கள், அலைக்கழிப்புகள் இவைகளைக் காட்சிப்படுத்துவதே இவரது கதைகள். கணவனுக்கு குழந்தை பெற்றுத்தர முடியவில்லை என்று தானே முன்னின்று இன்னொரு பெண்ணைக் கட்டிவைத்து ஒதுங்கி நிற்கும் பெண், காலில்லாத கணவனுக்கும் உயிரான பெண்ணுக்கும் இடையில் தவிக்கும் பெண் என்று சிக்கலே இல்லாத வெள்ளந்தி மனிதர்கள் இவரது கதாபாத்திரங்கள்.

உரையாடல்கள், புறவர்ணனைகள் மூலம் நகரும் கதைகளில் உயிர்ப்பொறி ஒரிரு வரிகளில் ஒளிந்து நிற்கிறது. நாம கசந்து போயிறல்ல என்று பிச்சி சொல்லும் வார்த்தைகளில், மதுவின் கைவிரல்களை நோக்கி நகரும் ராதாவின் கைகளில், அறிவாளின்ற மிதப்பு என்ற வரிகளில், பெரிய தோகையில் ஒரு பீலியை உருவுதல்,
இருந்து தான் தப்பிக்கணும் என்ற வார்த்தைகளில் கதைகளின் ஆன்மா ஒளிந்திருக்கிறது.

அதிக விளக்கமின்றி உரையாடல்கள் மூலம் கதையை நிகழ்த்தும் யுத்தியில், மேலோட்டமாகப் பார்க்கையில் சாதாரணகதைகள் என்று கடந்துவிடும் அபாயம் இருக்கின்றது. உடன்போக்கு கதையில் காயத்ரி முடிவெடுக்க முடியாமல் திணறுவதாகத் தோன்றும். ஆனால் யோசித்துப் பார்த்தால், என்ன சொன்னாலும் சரி என்பவனை விட உற்றதுணை யார் பெண்ணுக்கு? அதனால் தான் அவனுடன் உடன்போக்கு. இதே போல் மற்றொரு கதை
கடல். மேலோட்டமான பார்வைக்கு சராசரிக் கதைகள் போல் தோற்றமளிக்கும் இந்தக் கதைகளின் பின்னால் பெண்களின் உணர்வுகள் ததும்பி வழிகின்றன. அந்த உணர்வுகளை எளிய வாசிப்புக்குச் சிக்காமல் பதுக்கிவைப்பது கமலதேவியின் கதைகள்.

பிரதிக்கு :

வாசகசாலை 99426 33833
முதல்பதிப்பு ஜனவரி 2022
விலை: 200

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...