Skip to main content

மீண்டும் ஒரு சந்திப்பு: சிறுகதை

       தமிழினி  ஏப்ரல் இதழில் வெளியான சிறுகதை

             மீண்டும் ஒரு சந்திப்பு

தை மாதத்தின் பின்பனி புகைமூட்டம் சென்னையின் சாலையில் நகரும் திரை என நடக்க நடக்க முன் சென்று கொண்டிருந்தது. சற்று மூச்சு வாங்க சாலையோர சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பின்னால் பன்னீர் மரம். இரவில் மலர்ந்த மலர்களின் நறுமணம் என்னைச் சுற்றி பரவியிருந்தது. ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டதும் மனதிற்குள் ஒரு சின்ன குதூகலம் போன்ற உணர்வு. பள்ளிக்கூடத்து மைதானம் நினைவிற்கு வந்தது. பக்கவாட்டிலிருந்த சுற்றுசுவரை தாண்டி எட்டிக்கொண்டிருந்த செம்பருத்தி கிளையின் இலைகளில் இருந்து பனிநீர் ஒவ்வொரு சொட்டாக விழுவது போடியம் விளக்கொளியில் படக்காட்சி போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது. அடுத்த சொட்டு  தாமதமாக நீட்டிய என் கைகளிலிருந்து தப்பியது. 

சென்ற மாதத்திலிருந்து எழுபது வயது முடிந்துவிட்டது. கடற்கரைக்கு செல்ல மாலாவிடம் அனுமதி கேட்டவுடன் வயதை முதலில் சொல்லிக்காட்டினாள். விடிஞ்சு போனா என்ன? என்று கேட்டாள்.  குளிர்ஆடையின் பைகளில் கைகளை நுழைத்து அன்னாந்து மேலே பார்த்தேன். முகத்தில் விழுந்த துளி நீரால் முழு உடலும் அதிர்ந்தது. தலைக்கு மாட்டும் துணியை சரி செய்து கொண்டேன். உள்ளே சட்டைக்கும் பனிஆடைக்கும் இடையில் சிக்க வைக்கப்பட்டிருந்த புத்தகம் அசைந்து நெஞ்சைத்தொட்டது. கைகளை மடியிலிருந்து எடுத்து புத்தகத்தையும் சேர்த்தபடி குறுக்காக கட்டிக்கொண்டேன். 



குளிருக்கு இவ்வாறு கைகளை  கட்டிக்கொண்டு கல்கத்தாவின் அந்த இடுங்கல் தெருவின் சிறு வீட்டில் முதன் முறையாக நுழைந்தது நினைவில் வந்தது. சின்ன சின்ன தடுப்புகள், திரைசீலைகளை வைத்து ஒரு அகன்ற அறையை வீடாக மாற்றியிருந்தாள்.

என்னுடன் அரவிந்தனும் வந்திருந்தான். திருமகள் கதவைத் திறந்து, “வெல்கம்…வெல்கம்…”என்றாள்.  அந்த அதிகாலை அமைதியில் அவளின் சிரிப்பொலி தனித்து ஒலித்தது.

கழிவறைக்கு சென்று வந்ததும், “யாராச்சும் ஒருத்தர் எனக்கு ஹெல்ப் பண்ண வாங்க…”என்று சமைக்கும் இடத்திலிருந்த தடுப்பின் மேல் முகத்தை வைத்து அழைத்தாள். வட்டம் மாற்றிய சற்று சதுர முகம் என்று சொல்லலாம்.

 முதன்முதலாக கலாசபையில் அவள் வயதை ஒத்த நான் அவளைப் பார்த்தேன். பரத நாட்டியத்திற்காக கட்டிய சிவப்புப்புடவையில் ஒல்லியான பெண்ணாக மேடையில் வந்து நின்றாள். கண்ணனை யமுனையின் கரைகளில் தேடினாள். பார்வையில் கண்ணன் பட்டதும் கண்களை அகல விரித்தாள். உடல் ததும்பும் பரவசத்தில் தத்தளித்தாள். அவன் பேச்சுக்கு நாணும் அவளின் முகவாயை நிமிர்த்தி நிமிர்த்தி சலிக்கும் கண்ணனாக மாறினாள். எங்கோ மறைந்து போன அவனை மீண்டும் தேடினாள். அலைபாயும் விழிகளுடன் ராதையாக தனித்து சமைந்து நின்றாள்.

சமையலறை தடுப்பிற்கு பின்னே அவள் முதுகு தெரிகிறது. வயதை கடந்து வரும் வழியில் அந்த சிறுப்பெண்ணை தூக்கி எறிந்துவிட்டாளா இல்லை ஔித்து வைத்திருக்கிறாளா? கருப்பு டீ சர்ட்டும் அகன்ற கால்சராயும்  அணிந்திருக்கிறாள். ஏன் இந்த நீ்ண்ட கூந்தலை மட்டும் விட்டு வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை. 

என்னை ஒருமுறை பார்த்துவிட்டு அரவிந்தன் கால்களை நீட்டி அமர்ந்தான். நான் எழுந்து சென்றேன். தேநீர் கோப்பைகளை மிகச்சிறிய கழுவுத்தொட்டியில் கழுவிக் கொண்டிருந்தாள்.  அடுப்பில் தேநீருக்கான நீரில் தேயிலைத்தூளை இடச்சொன்னாள். சென்னையின் வீட்டைவிட்டு,வேலையை விட்டு இங்கு எதற்கு இப்படி இருக்க வேண்டும்? இவளுக்கு புது இடங்களுக்கு சென்று கொண்டே இருக்க வேண்டும். படிப்பையும் வேலையையும் காரணமாக சொல்லி வீட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறாள். பத்து ஆண்டுகளில் இது நான்காவது ஊர். 

அடுப்பிற்கு பக்கவாட்டிலிருந்த சிறு குப்பியை எடுத்தேன். அதற்கும் சற்று மேல் இருந்த தாங்கிப் பலகையில் பிளாஸ்ட்டிக் டாப்பாக்களின் மேல் புத்தகம் ஒன்று இருந்தது. திரும்பி தடுப்பைத்தாண்டி ஒரு சுற்று நோட்டம் விட்டேன். அங்கங்கே புத்தகங்கள். அரவிந்தன் அமர்ந்திருந்த நீண்ட பலகை மேலிருந்த  மெத்தையில்  நான்கு புத்தகங்கள். அதில் தான் உறங்குவாள் என்று தோன்றியது.

 “ஜனா…ஏலப்பொடி தெரியுதா…மூணு சிட்டிகைக்கு மேல போனா தேவபானத்தை வாயில வைக்க முடியாது…”

நான் மிகக்கவனமாக அதை அளந்து கொதிக்கும் தேநீரில் கலந்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். வடிகட்டியுடன் தடுமாறிய என்னிடமிருந்து வாங்கி உதவமாட்டாள் என்று நன்றாக தெரிந்ததால் அங்கங்கே சிந்திய தேநீருடன் வேலையை முடித்தேன்.

சமையல் மேடையை தூய்மை செய்துவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்ததும் தேநீரை நீட்டினாள். பீடம் போல இருந்த ஒன்றில் அமர்ந்து சம்மணமிட்டபடி, “எப்படியோ முப்பத்தஞ்சு வயசுல விவாகத்த  முடிச்சுட்ட..”என்று என்னைப் பார்த்து சிரித்தாள். சிரிப்பு தேநீருக்கானது.

“வேணான்னுதான் இருந்தேன்னு ஒனக்கே நன்னா தெரியும். ஸ்ரீரங்கத்துக்கே காலு இழுத்துண்டு போறச்ச என்ன பண்றது…எஸ்.ஆர்.சி காலேஜ் வரைக்கும் மனசு அலையடிக்கறப்ப பண்ணின்டா என்னன்னு பண்ணியாச்சு,”

“எதோ ஸ்பீச்சுன்னு தானே போன…ஸ்டூடெண்ட்டா…”

“என்னைய பாத்தா உனக்கு எப்பிடி இருக்கு…சின்ன கொழந்தைகள் பின்னாடி சுத்துற ஆளாவா? எனக்கு கீழ பிறந்தவளுக்கே பதினைஞ்சு வயசுல கொழந்தை இருக்கா…”

அவள் என் கண்களை பார்த்து சிரித்தபடி, “இந்த நா.பா வோட பொன்விலங்கு நாவல்  ஞாபகம் வர்றது. சத்தியமூர்த்தி தன்னோட  மோதிரவிரலை பாத்துண்டே  மோகினிக்கிட்ட சொல்வானே …இந்த விலங்கைக் கழற்றினாலும் எனக்கு வேதனை;கழற்ற முடியாவிட்டாலும் வேதனைன்னு அந்த மாதிரியா,”என்று புருவங்களை உயர்த்தி மீண்டும் சிரித்தாள்.

அரவிந்தன் மௌனமாக தேநீர் உண்டு, தானுண்டு என்று இருந்தான். அவன் பொன்விலங்கு நாவலை மனப்பாடமாக ஒப்பிப்பவன். வேறு இடமாக இருந்தால் அவன் பேச்சை மீறி என் குரலை கொண்டு செல்ல அத்தனை பிரயத்தனப்பட வேண்டியிருக்கும். 

“காவிரி கரைவேலி சம்மந்தம்…நல்ல வரும்படி வேற…”என்றாள். இதற்கு மேல் இவளிடம் பேசக்கூடாது என்று அமைதியானேன்.

“நீ எப்படி…” தேநீர் கோப்பையை வைத்துவிட்டு மீண்டும் அவளே தொடங்கினாள். 

“ நீ அந்த வட்டத்துக்கு வெளியே நிக்கறேன்னு நெனச்சேன்.  விருட்டுன்னு குறிவச்ச துப்பாக்கிகுண்டு கணக்கா மையத்துக்கு போயிட்டியே. காதல்ங்கறது மேலதான் எனக்கு எல்லா கேள்விகளும் ஒத்தகாலுல நின்னு சாதகம் பண்ணுது…”

சட்டென்று அரவிந்தன் சிரித்து விட்டான்.

“நடராஜனோட தூக்கின பாதத்தைதான் பாக்கமுடியும் …ஆட்டத்த நாமதான் கற்பனை பண்ணனும்…அந்த ஆட்டம் தான் புல், பூண்டு, மரஞ்செடியா, ஜீவனாக இந்த மண்ணுல உயிரா உருவாகறது. நாட்டியமாடற நோக்கு தெரியாதா?”

“கற்பனைன்னு நீயே சொல்லியாச்சு. அதுவுமில்லாம நான் பரதமாடியே வருஷக்கணக்காறது…அதைவிடு நீ எதுக்கு சிரிச்ச…”

இதோடு போனால் போகிறான் என்று என்னை விடுவித்துவிட்டு அமைதியாக இருந்த அரவிந்தனிடம் திரும்பினாள்.

அரவிந்தன் காலியான தேநீர் கோப்பையை சுற்றிக்கொண்டிருந்த   வலது கையை எடுத்து நகத்தை கடிக்கத் தொடங்கினான். தன் இயல்பிற்கு மாறாக வார்த்தைகளை கவனமாக தணிக்கை செய்கிறான்.

எனக்குத்தான் அப்படி பேசத்தெரியவில்லை.  இவளிடம் நீள நீளமாக உளறி வைக்கிறேன். நட்பில் கூட ஆளாளுக்கு இயல்பை மாற்றிக் கொண்டிருந்தால் நாம் என்னாவது என்ற சமாதானத்தை வேறு வைத்திருக்கிறேன்.

“கேள்விகள் எல்லாம் ஒரே புள்ளியில சேர்றதுன்னா பதில் கிடைச்சாச்சுன்னு அர்த்தமாகறது…”என்று அரவிந்தனின் குரல் சன்னமாகக் கேட்டது.

“அதெப்படி…ஆறெல்லாம் கடலில் சேருங்கறதால குடிக்கற தண்ணியாகுமோ…சகிக்கமாட்டாத உவர்ப்பால்ல போயிடறது…அதுலருந்து தான் மழ பெய்யறதுன்னு மறுபடி சுத்திவரப்படாது…”

“அப்படி சுத்தி வராம பதில் எப்பிடி கண்டுபிடிக்கறது…”

“பதில் வேணுன்னு சொன்னேனா? கேள்வி இருக்குனுல்லா சொன்னேன்…எதுன்னாலும் ப்யூரஸ்ட் ஃபார்மா இருந்தா மனுஷாளுக்கு உபயோகப்படாதுன்னு நன்னா தெரியறது.  மொத்த மானுசாளும்…கால தேச வர்த்தமானத்துல சலிக்காம காதலையே பேசிக்கொண்டாடி தீர்க்கறப்ப நமக்கும் புத்தி சும்மா நிக்கமாட்டேங்குது….என்னவாக்கும் அதுன்னு,”

“அதான் சொன்னியே…கொண்டாடி அப்புறம் தீர்த்துடறதா….”

“அதப்பத்தில்லாம் எனக்கு அக்கறையில்லை. அதை வச்சுண்டு நடக்கற ஆதிக்கம். அதோட பிரதிபலனா மிச்ச வாழ்க்கையையும் அடகு வைக்கறததான் சிக்கல்ன்னு சொல்றேன்…”

“ம்…”என்ற அரவிந்தன் அமைதியானான்.

“உன்னோட இசம் என்ன சொல்லுது ஜனா?”

நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

“எல்லாமே சமத்துவம்ன்னா…காதல்லயும் அதுதானே…”

“அதெப்டி முடியும் ஜனா…சமமா இருக்கறது தானே சமத்துவமாகும்…ஒசரத்தை கீழ எறக்கி வச்சுண்டு என்ன வியாக்கியானம் பண்ணினாலும் அசட்டுதனமால்ல இருக்கு,”

நான் பெருமூச்சுவிட்டேன். மேசையின் மீது துருவங்களை இணைத்த இரும்பு அரைவளையத்தினுள் பூமிப்பந்து சாய்ந்திருந்தது. அரவிந்தனின் கைப்பட்டு பூமி சுழன்றது.

“சரி…குளிச்சுட்டு வாங்க. நீங்க இருக்கற வரைக்கும் நீங்கதான் சமைக்கனும். எனக்கும் சேர்த்து…”

அரவிந்தன் எழுந்து அறையினுள் சென்றான்.

“ஒடம்புக்கு சுகமா திரு…”

“இந்த பொண்ணுங்களே இப்பிடித்தாம்பீங்க. சொல்லாமலே இருக்கலாம்…”

“அப்படீன்னா பிரச்சனை இருக்குல்ல. பாத்துக்கோ…”

“வலியில்லாத நாள் உண்டான்னு நீ கேட்டிருக்கனும்…”

எதிரே அமர்ந்திருப்பவளை ஒருபோதும், எந்த வார்த்தையாலும் சமாதானப்படுத்த முடியாது. யார் யார் மீது கோபம் என்று கேட்கவும் முடியாது. மொத்த சமூகத்தையும் வரலாறையும் கொண்டு வந்து நிறுத்துவாள்.

“புதுசா என்ன எழுதற…”

“எல்லாவள்களையும் மனசுக்குள்ள ஏத்திண்டு அவாளா இருந்து எழுதறேன்…”

அவள் முகத்தைப் பார்த்தேன். நடுக்கடலை பார்ப்பதை போல முதலில் திகைப்பாக பின் பதட்டம் போல மாறியது. எப்போதும் கேட்க நினைக்கிற கேள்வி தயங்கி நின்றது.

“என்ன ஜனா…சொல்லு…”

“ஏன் உன் இயல்பை நீயே திரிச்சு வேறொன்னா மாத்தற…”

“திரிச்சு உருமாத்தம் பெறாத எதையும் இங்க யாரும் மதிக்கறதில்ல ஜனா…”

“அப்படீயில்ல…”

“ நீ குழந்தையா இருக்கறச்ச உங்கம்மா…கொஞ்சி பேசிறச்ச அத்தன ஆசையா இருக்கும். வயசாகியும் அப்படி பேசறது கொஞ்சம் மனசுக்கு ஒத்துக்காம ஆறதுன்னு நீயே சொல்லுவியே,”

“அது இன்னும் ஞாபத்துல இருக்கா! எப்பவோ ஒரு மனத்தாங்கல்ல சொன்னேன்,”

“ அம்மாவோட சின்னபிள்ள குணாதிசயம் அவமுகத்துல வெளிப்படறது. உனக்கு ஒத்துக்கல. எல்லாவளுக்கும் குறைச்சோ நீட்டியோ அந்த குணம் உண்டு தெரியுமா…அவ மாத்திண்டு இருக்கனும். அது தெரியாத வெகுளியா போயிட்டா…”

பன்னீர் மரத்திலிருந்த இலை ஒன்று தரையில் விழும் சலனத்தில் மெதுவாய் கண்களை திருப்பினேன். மிக மெல்ல அந்த இலை தரையில் படர்வதைப் போல மிதந்து வந்து விழுந்தது. மெல்லிய ஔி வந்திருந்திருந்தது. கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினேன். 

மணலில் கால்கள் புதைந்தன. அக்னி அவிந்தவிந்து உண்டான இந்த மண்ணுருண்டையின் எத்தனை மென்மையான ரூபம் இந்த மணல். ஆனாலும் நடக்க எத்தனை சிரமம். இது  கெட்டிப்பட்ட மேனி அழியாமல்  இருந்திருந்தால் இத்தனை ஜீவகோடிகள் வந்திருக்கறது எப்படி? இத்தனை உதிரியா இருந்தாலும் உபயோகமில்லை. இந்த மணலை திரிச்சு மண்ணாக ஆக்குகிற ஒரு களிம்பு . மண்ணும் நீரும் காற்றும் ஔியும் ஆகாசமும் சேர்ந்து அந்தப் பிசுக்கை உண்டாக்கி ஜீவன்களை ஒட்டி வச்சிருக்கு.

மாலாவின் அழைப்பின் ஒலி மனதை கலைத்தது. அலைபேசியின் காதுக்கருவியை பொருத்திக் கொண்டேன். 

“உங்க ஃப்ரெண்டை பாத்தாச்சா…”

“எலியட்ஸ் மெமோரியலை பாத்துண்டே மணல்ல  நடக்கறேன்…”

“பாத்து பேசுங்கோ. இந்த வயசிலயும் மனஸ்தாபம் பண்ணிண்டு வந்து புலம்பாதீங்க…”

“நான் வம்புக்குன்னே போறாப்ல பேசறியே…”

“ஆமா நான்தான் வம்பு பேசறேன். உங்களுக்கும் அவாளுக்கும் எத்தனையத்தனை  மனஸ்தாபம்…”

“சரி விடு…”

“அவாளுக்கு என்ன எடுத்துண்டு போறேள்…”

“ஒன்னுமில்லை…”

“பார்த்து மூணு வருஷமாச்சே…ஏதானும் வாங்கிண்டு போறதில்லையா…வயசு ஆச்சு ஒருபாடு…ஒரு விவஸ்தையும் தெரியறதில்ல…என்னிட்ட கேட்டா என்ன?”

“அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது. கடற்கரையிலருந்தும் நான்  செமையத் தூக்கிண்டு போணுமாம்பா…”

“நல்ல ஸ்னேகிதாள்…”என்று பேச்சை முடித்தாள்.

மாலா சொல்வதும் சரிதான். நாற்பது ஆண்டுகால நட்பில் பேசாமல் இருந்த மாதங்கள் எத்தனை எத்தனை! பார்த்து  மூன்றாண்டுகளுக்கும் மேலாகிறது.

மாறாத குதூகலத்துடன் அலைகள் வந்து வந்து திரும்பிக் கொண்டிருந்தன. வந்து வந்து திரும்புவதன் ஓசை வலுவாக காதுகளை அறைந்தது. கடல் பக்கத்திற்கு செல்லும் போது இளம்சிவப்பு நிற குர்தா கண்களில் பட்டது. உற்றுப்பார்த்தேன். திரு நடந்து வந்து கொண்டிருக்கிறாள். நடையில் துவட்டம் தெரிகிறது. அவளும் எழுபதை தொடுபவள் தானே. நெற்றியின் வட்டப்  பொட்டு முதலில் தெரிகிறது. பின் புன்னகை.

“ஜனா…எப்பிடி இருக்க…”

நேற்று பார்த்து பேசிவிட்டு மறுபடியும் இன்று பார்ப்பதை போன்ற பாவனை. அவள் மாறவே இல்லை.

“வயசுக்குண்டான உடம்பு…நீ எப்படியிருக்க…”

“அதே தான்…”

அவள் முகத்தில் நன்றாக வயோதிகம் பழுத்திருந்தது. 

“இவ்வளவு தூரம் வரனுமேன்னு இருந்துச்சு. அப்பவே வரனுன்னு முடிவு பண்ணிட்டேன்…”

நான் சிரித்தேன். இன்றைய முதல் சிரிப்பு. சட்டென இன்னுமும் இவள் பேச்சுக்கு சிரிப்பு வருகிறது. யாருக்கான சுவையையோ எங்கேயோ மாற்றி வைத்து விளையாடும் இந்த லோகம் உண்மையில் மாயம் தான்.

மிக மெல்ல இருவரும் கடற்கரை மணலில் அமர்ந்தோம்.

“அரவிந்தனுக்கு என்னாச்சு திரு…”

“டிமென்சியான்னு சொல்றாங்க…ரொம்ப சிரமப்படறான்…”

“ஒருநா வர்றேன்…”

“வந்துட்டு… என்னைய மறந்துட்டியேடான்னு புலம்பக்கூடாது,”

“எப்படி திடீர்ன்னு…”

“படிப்படியாதான் தெரிஞ்சது. எங்க ரெண்டுபேரோட அம்மாக்கள்க்கிட்ட சேர்ந்து வாழறதுக்கு அனுமதி கேட்டப்பவே அரவிந்தனுக்கு பீ.பி இருந்துச்சுன்னு உனக்கே தெரியும். அதுதானே எல்லாத்துக்கும் ஆதிகர்த்தா….இந்த தேகத்துக்கு எதாவது ஒரு நோய் வந்தாகனுமே,”

“ம்,”

கொஞ்சநேரம் கடலை,மணலை மாறி மாறி பார்த்தபடி இருந்தோம். இது பாலையும் இல்லை. சோலையும் இல்லை. விலகி செல்லச்செல்ல களிம்புகளை உருவாக்கி ஒன்றாகும் இரண்டின் ஆதிமூலங்கள். ஏன் என் மனம் கண்ட கண்ட யோசனைகளை புரட்டிப் போடுகிறது. மனதை மாற்றித் திருப்பிவிடுவதற்காக சற்றுத்தொலைவில்  மணல் மேட்டுப்பகுதியை நோக்கி பார்வையைத்  திருப்பினேன். வாடாமல்லி நிறமாக மட்டும் அடம்பின் பூக்கள் மங்கலாகத் தெரிந்தன. அந்த மேடு முழுவதும் பசுமையாக அடம்பு படர்ந்திருந்தது. 

குளிர் ஆடைக்குள் இருந்த புத்தகத்தை எடுத்து அவளிடம் நீட்டினேன். வாங்கி திரும்பித் திருப்பி பார்த்தாள்.

“வாசிச்சுட்டு சொல்லு…”

“நான் ஒனக்கு ஒன்னுமே வாங்கிட்டு வரலயே…”என்று கைவிரித்தாள்.

“ஒருத்தர் எதானும் தந்தா இன்னொருத்தரும் தரனுன்னு அவசியமில்ல…”

“இந்த பிரபஞ்சமே ஒரு கணக்கு தான். இல்லாட்டா எல்லாமே கொலாப்ஸ் ஆயிடுல்ல ஃப்ரோபசர் சார்…”

“….”

இவளுக்கு பள்ளிக்கூடத்துப்பாடம் இத்தனை வயதிற்குப் பிறகு ஆச்சரியமாக தெரிகிறது. புதிதாக எதையோ தொடர்புப்படுத்தி பார்க்கிறாள். ஆமாம். சற்று முன் நான் மணல்வெளியை கடல்நீரை வம்பிற்கு இழுத்ததைப்  போல எதுவோ ஒன்றை இவளும் பிடித்து இழுத்துப்பார்க்கிறாள். ஒத்த வயதின் இரட்டை சரடு.

“நீ எப்பவும் சொல்ற மாதிரி ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்பத்துல, சமூகத்துல இருக்கிற மேடு பள்ளங்களை அப்படியொன்னும் நிரப்பமுடியுன்னு தோணல …”என்றேன்.

அவள் புன்னகைத்தாள்.

“உன்னோட உமை எப்படி இருக்கா…

“லோ பிளட் ப்ரஷர் தான் அவளை படாப்படுத்தறது. மறந்துட்டனே…மாலா உன்னோட மனஸ்தாபம் பண்ணிக்காம வரச்சொன்னா…”

“நாமள பத்தி அவ என்ன நெனச்சுருக்கா…”

“ரெண்டும் ரெண்டு பிரகஸ்பதிகள்…ஒன்னு தலையில ஒன்னு கால் வச்சு ஏறப் பாக்றதுன்னு நெனப்பாள்ன்னு தோணுது…”

“சரிதான்…”

“நேரமாச்சு…போலாமா,”

எழுந்து கையை நீட்டியப்பின் தான் திரு என்று உறைத்தது. மாலாவிற்கு கைநீட்டி நீட்டி அனிச்சை செயலாகவே மாறிவிட்டது. இவள் உன்னால முடியறச்சே என்னால முடியாதாம்பா என்று நினைக்கும் போதே என் கையை பிடித்துக் கொண்டு எழுந்தாள்.



இன்னொரு கையையும் என் கை மேல் வைத்து, “நாளைக்கு கல்கத்தா கிளம்புறோம்,” என்றாள்.

 துள்ளி வரும் கடல் அலைகளின் அருகில் சென்றோம். இளம் சூரிய ஔியில் சிறுமியைப்போல ஒருகையால் என் கையை பற்றியபடி குனிந்து கிளிஞ்சல்களை எடுத்தாள். என்னை குனியச் சொல்வாளோ என்று பதட்டமாக இருந்தது. இடுப்பில் வலி கடுகடுத்தது.

“கிளிஞ்சல் பொறுக்கறது எத்தனை சந்தோசம் பாத்தியா,” என்று கைகளில் தந்தாள்.

நான் தலையாட்டிக் கொண்டேன். இருந்ததிலேயே அழகான கிளிஞ்சல் ஒன்றை வலது கையில் வைத்து விரலால் தடவினேன். மெல்லிய வரிகளின் சொரசொரப்பிற்கு அடியில் தண்ணீரை அடுக்குகாக்கி செய்த சிப்பியின் உள்புறம். தொடுதல் அறியாத தொடுதல் போல வழவழப்பாக சிப்பியென மாறிய ஒன்றிலிருந்து விரலை எடுக்க முடியாமல் வைத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று அதை வைத்திருப்பது அசௌகரியமாக இருந்தது. அலை வந்துத் தொடும் இடத்தில் வீசினேன். சற்று நேரம் சென்று திரும்பிப் பார்த்தேன். அது கடலிலா மணலிலா என்று தெரியாது கண்களில் இருந்து மறைந்திருந்தது. 

அன்று கலாசபாவில் திருவின் நாட்டியம் முடிந்த பின் கூட்டம் கலைந்திருந்தது. யாரும் கவனிக்காத பொழுதில் மேடையில் தொங்கிய வண்ணக் காகிதங்களை ஆசையாசையாய் பிய்த்தெடுத்து கைகளில் வைத்துக் கொள்ளும் திரு கண்முன்னால் வந்தாள். 



குழந்தை அனுமன் விரும்பிய சிவந்த பழம் போல சூரியன் கடல் மேல் எழுந்து கொண்டிருந்தான். ஔியில் மின்னும் அலைகளை, சிப்பிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். என் கைகளை இழுத்தபடி திரு சிப்பிகளுக்காக நகர்ந்து நகர்ந்து சென்றாள். மனம் அனிச்சையாக ஓம் அஸ்வத்வஜாய வித்மே…என்று சொல்லத் தொடங்கியது.


















Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...