Skip to main content

குருதியுறவு :கதை

    2019 ஜூன் வாசகசாலை இணய இதழில் வெளியான கதை.

                                                                 குருதியுறவு       

                                                                                             1                                   

 கருக்கிலேயே மூர்த்திக்கு  விழிப்புத்தட்டி விட்டது.படுக்கையிலிருந்து எழுந்து நின்ற போது இடதுகால் தள்ளாடியது.படுக்கையிலேயே அமர்ந்து காலை பிடித்துவிட்டபடி இருளுக்குள் பார்த்துக்கொண்டிருந்தார்.ருக்மணி நன்றாக உறங்கிக்கொண்டிருந்தாள்.அரவம் கேட்டு விழித்துவிடக்கூடாது என்று மெதுவாக வெளியே வாசலுக்கு வந்தார்.இடதுகாலில் நடுக்கம் இருந்து கொண்டிருந்தது.

இரவெல்லாம் உறக்கம்பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்த அயர்வு உடலில் எஞ்சியிருந்தது. ஒரேஇரவில் அவரின் மனதின் உள்ளே பலஆண்டுகள் புரண்டு கொண்டிருந்தன.பெருமூச்சு எழ கைகளை நீட்டி மடக்கியபடி திண்ணையில் அமர்ந்தார்.பால்காரன் மின்னல் வேகத்தில் கடந்து சென்றான்.நான்குமணி இருக்கலாம் என்று நினைத்தபடி திண்டில் சாய்ந்து வானத்தைப்பார்த்தார்.கோணல் பிறை தனித்து நின்றிருந்தது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த இதே போன்றொரு அதிகாலை பிறையைப்பார்த்தபடி, சந்திரன்வயல்களத்தில் எதிரெதிரே கட்டிலில் படுத்துக்கொண்டு , “எப்ப விடியுன்னு இருக்கு…இருப்பு கொள்ளல,”என்றபடி விழித்துக்கிடந்தான் மூர்த்தி.

சந்திரன்,“அய்யா சொன்னது மனசில இருக்குல்ல…அவர் வந்ததும்தான் நாம புங்கமரகளத்துக்கு போகனும்..”என்றான்.

மூர்த்தி,“நாலு பேருக்கு முன்னாடி நின்னு இதுதான் சரின்னு சொல்றது ஒருமாதிரி நல்லாருக்கு..இல்லடா..”என்றான்.

“இல்லயா பின்ன…அதுக்கு வேண்டிதானே ஒருபைசாக்கு புண்ணியமில்லாத பஞ்சாயத்து வேலக்கு நம்ம அய்யனுங்க அலயறாங்க.உங்கய்யன் போயிட்டபின்ன உனக்கு மவுசுதான்..எத்தன பிள்ளைக  நீ பேசறத பாத்தக்கண்ணு நிக்க பாக்குதுக தெரியுமா? எனக்குதான் இன்னும் கொடுப்பின இல்ல..”என்றான்.

 ஓங்கி சிரித்தபடி, “உங்க அய்யாட்ட சொல்லட்டுமா?”என்று எழுந்து  வேப்பங்குச்சியை ஒடித்துக்கொண்டே வானத்தைப்பார்த்து அமைதியானான்.  பால்காரன் அவிழ்த்துவிட்டு சென்ற கன்று தாயின் காம்பை சப்பிக்கொண்டிருந்து. சந்திரன் கன்றை இழுத்து கல்தொட்டியில் கட்டிவிட்டு மூர்த்தியை பார்த்தபடியே வந்தான்.

மூர்த்தியின் வேப்பங்குச்சியை பிடுங்கிய சந்திரன், மூர்த்தியின் தோளில் ஓங்கித்தட்டி, “பங்காளி…நம்ம அய்யாடா அவரு…பைசல்ல நீ பேசயில ஊடால ஒருவார்த்த விடறாரான்னு பாத்தியா…சின்னவயசுல அவருகூட்டாளிய பாக்கறாப்பல இருக்குன்னு அம்மாட்ட சொல்லுவாரு..”என்றபடி வேப்பங்குச்சியை கடித்தான்.


அன்று கிழக்கே சிவந்த வானத்திலிருந்து இளம்செம்மை நிறத்தில் எழுந்துகொண்டிருந்தான் கோடைகாலத்தின் அனலவன்.

“என்ன பேச்சு யாருக்கிட்ட கேட்டுருச்சுன்னு… இத்தன ஆத்தாம இந்த வானத்துக்கும், அது பெத்தபிள்ளக்கும்..இத்தன சிவீர்ன்னு…பாக்கவே பக்குன்னு இருக்கு தங்கம்,”என்று சுப்பராயன் கூற அவர்கள் வானத்தைப் பார்த்தபடி புங்கைமரக்களத்திற்குள் அடியெடுத்து வைத்தார்கள்.

 “நேத்தைக்கு பேசுனாப்ல இன்னிக்கு மூர்த்தி வாயத்தெறக்கப்படாது…வாயக்கிழிச்சுறுவேங் கிழிச்சு.. கழுத”என்று மூச்சிரைக்க தங்கராசு சந்திரனை பார்த்தார்.அவரின் கண்களின் தவிப்பைப் பார்த்த மூர்த்தி வேறுபக்கம் பார்த்தபடி, “சரிங்கய்யா,”என்றான்.

அங்கே கயிற்றுக்கட்டிலில் கார்மேகம் அமர்ந்திருக்க, பக்கத்தில் அவரே உருமாறி இளம்வயதில் நிற்பது போல சங்கர் கைக்கட்டி நின்றிருந்தான்.கைகாட்டினால் திசையைப்பிடிக்கும் இளையவன் அவன்.பின்னால் ஐந்தாள் கட்டிப்பிடிக்கும் அகலத்தண்டில் நின்றிருந்த புங்கைநிழலில், பஞ்சாயத்து பேச வந்தவர்கள் தூக்குவாளி காப்பியை குடித்தபடி அமர்ந்திருந்தார்கள். வாரியிலிருந்து வேட்டியை இறுக்கிக்கட்டியபடி ராஜீ மேலேறி வந்தான்.அவன் இன்னொரு கட்டிலை கொட்டகையிலிருந்து எடுத்துபோட்டு தங்கராசுவை உட்காரச் சொன்னான்.

“ஒத்தகட்டில்ல தோள்சேர ஒக்காந்திருந்த கூட்டாளிங்க…காலம் எதிர்க்க ஒக்கார வச்சிருச்சு..”என்ற குரலைக்கேட்ட கார்மேகம் நிமிர்ந்து முறைக்க ஆட்கள் அமைதியானார்கள்.

தங்கராசு, “ரெண்டுபேருக்கு பொதுவான களத்த, ஒருத்தருக்கு சொந்தன்னு எப்பிடி சொல்லமுடியும்.நம்ம முப்பாட்டனுங்க எதுக்கு நெலத்த சும்மா போடனுன்னு களத்த கூட்டா வச்சாங்க. அப்படியிருக்க மனசில்லன்னா களத்த  பிரிச்சு எடுத்துக்கலாம்…இதுதான் வழக்கம்.எத்தனநாள் பேசினாலும் யாராவது இதமாத்தி சொல்லமுடியுன்னு நெனச்சீங்களா?”என்று உரலை உயர்த்தினார்.  

கார்மேகம், “நம்ம கண்டது மட்டுந்தான் நாயம்..நெசன்னு யாரும் எம்முன்னால புடிச்சு நிக்க வேண்டாம்…சிவனாண்டி இங்க வா, ”என்றார்.

“உன்னோட நெலம் எவ்வளவு…?”

“ரெண்டு ஏக்கரா?”

“எங்க நெலம் பதினஞ்சு…களம் ஒரு ஏக்கரா…இதுல எப்படி ரெண்டா களத்தப்போடச்சொல்ற?”

“பட்டாபுத்தகத்துல களம் ரெண்டுபேருக்கும் உரிமன்னுல்ல இருக்கு,”

“அந்தநாளய மனுஷங்க…எழுதனுமேன்னு எழுதியிருப்பாங்க…”

“அப்ப எவ்வளவு பிரிச்சு குடுப்ப…”

“அளவுன்னு இல்ல…கொஞ்சம் காசுபோட்டு தர்றேன்..கையெழுத்து போடனும்..”

“சிவனாண்டி என்ன சொல்லனும்? அழுத்தமா சொல்லு”

“எனக்கு களந்தான் பாதைக்கு போற வழி..களத்த இவுகளுக்கு முழுமொத்தமா குடுத்திட்டா..நான் பாதைக்கு சுத்தி சுத்தி போகனும்…அவுங்க களத்த என்னவேணுன்னாலும் பண்ணிக்கட்டும்…களத்துல எம்பங்குக்கு பாதைய பிரிச்சுவிடுங்க…”

“ஆலடியானுக்கிட்ட சொல்லிட்டுதான் இங்க ஒக்காந்திருக்கோம். நெனப்பில இருக்கட்டும்,”என்று தங்கராசு குரலை கடுமையாக்கி கார்மேகத்தை பார்த்தார்.

எங்கும் பச்சை அறுந்த கோடையாதலால் வெயில் உறைக்கத் தொடங்கிய நேரத்திலேயே வேகமேறியிருந்தது.மாற்றி மாற்றி பேச்சு வளர்ந்தது.இடை இடையில் தங்கராசு மூர்த்தியை கண்களால் பின்னால் தள்ளிக்கொண்டிருந்தார்.

பேச்சின் ஊடே சட்டென்று கார்மேகம், “எடுடா…சங்கரு…என் பேச்சுக்கு என்ன மரியாத இங்க?”என்று குரலை உயர்த்தினார்.கோடையின் இடியென அந்தக்குரல் சட்டென்று மார்புக்குலையை பதற செய்யவும் ஆட்கள் பேச்சிழந்து நின்றார்கள்.சங்கர் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து ஈட்டியை உருவி தன்கை நோக்கி நீண்டகைகளிடம் அதை வீசியபடி, மீண்டும் பட்டாக்கத்தியை போரிலிருந்து உருவினான்.

உடல் உதறிக்கொள்ள விழித்த மூர்த்தி வியர்வையை வேட்டியால் துடைத்துக்கொண்டார்.கால்களை கீழே ஊன்றி குனிந்து கட்டைவிரலில்லாத இடதுகாலை எடுத்து வைத்தார்.மனதினுள் தான் வயது ஏறஏற திராணியத்தவனா… கோழப்பயலா? சொல்பாறுக்க முடியாத நோஞ்சானா?  என்று அவரையே அவர் கேட்டுக்கொண்டார்.இருபதுநாட்களுக்கு மேலாக தன்னுள்ளேயே தன்னை பற்றி அவருக்கு ஒருஒவ்வாமை கசந்தது.

வீட்டினுள் சென்று மெதுவாக பாலை அடுப்பில் வைத்தார்.சன்னலின் வழியே தனித்த சிட்டு ஓட்டுக்கூரையில் அமர்ந்து நொடிக்கொருதடவை தலையை திருப்பி கொண்டிருப்பதை பார்த்தபடி பாலை இறக்கினார்.ருக்மணி எழும் அரவம் கேட்டதும் ,வெளிநடையின் மின்விளக்கை ஔிரவிட்டார்.நடையில் வந்தமர்ந்த ருக்மணியிடம் டம்ளரை நீட்டியபடி தானும் அமர்ந்தார்.

முடியை கொண்டையிட்டபடி ருக்மணி, “பைசலுக்கு சந்திரன்மாமா வருவாங்க தானே?” என்றாள்.

“வருவான்..”

“ம்…எனக்கு ஒரே படபடப்பு..”

“நெஞ்சு படபடப்புக்கு மாத்தர போடற உனக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்..முடிஞ்சா பாக்கறது…இல்லன்னா உசுரா போச்சு…”

“அந்த வெள்ளமைய நம்பிதானே வைத்தியசெலவு கடன் நிக்குது..பய படிப்புக்கு …”என்றாள்.

“காலங்காத்தால கண்டத நெனக்கப்படாதுன்னு டாக்டரு சொன்னது ஒனக்கு என்னக்கி ஒறக்கப்போவுதோ..”

வெளியே எட்டிப்பார்த்த ருக்மணி, “கிழக்கால வீட்லயும், வடக்கால வீட்லயும் கெளம்பிட்டாங்க ,”என்றாள்.

“ நேரமாவுதில்ல..நானும் பைசலுக்கு போயிட்டு வரேன்..மெதுவா ஆக்கி வையி.இல்ல கடையில எதாச்சு வாங்கிக்கலாம்..”என்றபடி மூர்த்தி கொடியில் கிடந்த வேட்டி சட்டையை எடுத்து உதறி உடுத்திக்கொண்டார்.

ருக்மணி அவரையே பார்த்தபடியிருக்க என்ன? என்பது போல புருவத்தைத் தூக்கினார்.

“எத்தன பைசல் பேசியிருப்பீங்க..தவறாமையா இருந்திருக்கும்..”

“இல்ல..நெதானமில்லாம பைசலுக்கு போனதில்ல..”

“அத சொல்லல.மனசுக்கு தெரிஞ்சததானே சொன்னீங்க..மனசு தப்பாதா?”

“…”

“ந்தா வந்துட்டேன்..”என்ற ருக்மணி எழுந்து மாடத்திலிருந்த திருநீற்றை அவரின் நெற்றியிலிட்டு, “பொறுத்தவன் பூமிக்கி..திமிறுனவன் சாமிக்கு,”என்றாள்.புன்னகையில் சுளித்த முகத்துடன் மூர்த்தி நிலைப்படியைக் கடந்தார்.

கொட்டகையில் நின்ற எமகாவில் அமர்ந்து வானத்தைப்பார்த்து கும்பிட்டுக்கொண்டார்.மாரியம்மன் கோவிலைத்தாண்டி மேற்கே கொல்லிமலைப்பாதையில் வேகமெடுத்தது வண்டி.அறுவடை முடிந்த வயல்கள் குற்றுகளை மட்டும் நீட்டி களையிழந்து கிடந்தன.அவர் வயலின் விளைந்த சீரகசம்பா பயிர்களைப் பார்த்தபடி வேகத்தைக்குறைத்தார்.பாரம் தாங்காமல் வரப்பில் பாதி சரிந்திருந்தன.இன்னும் இருபதுநாள் போதும் என்று மனம் கணக்குப்போட்டது.


மனதில் முதலில் ஒரு தேம்பலும் பின்னால் ஆத்திரமும் அலைமேல் அலையடிக்க போக்கியத்தின் கரைமேட்டில் வண்டியை நிறுத்தினார்.மதகின் பின்னால் தண்ணீர் அலையடித்து தளும்பிக்கொண்டிருந்தது.வெயிலின் ஔிபட்ட நீரலைகள் கண்களை கூச வைத்தது.மதகின் பின்புறம் திமிறிக்கொண்டிருந்த நீரின் வேகத்தையும், மதகின் முன்னால் சிறுஓடையாக கசிந்த நீரிலும் ஒன்றியிருந்த மூர்த்தியின் பார்வையையும் மனதையும், “யண்ணே…”என்ற குரல் கலைத்தது.

“என்னய்யா..”

“மதவு சாவி… கடசிதண்ணிக்கு…”

“ம்…எத்தன நாள் காயவுட்டு சம்பாவ அறுக்கறதா உத்தேசம்…”

“மீறிப்பானா இருவதுநாளு..”

“எங்கணக்கும் அதுதான்.வீட்ல ஒங்கஅண்ணிக்கிட்ட வாங்கிக்க..கடசி தண்ணின்னு சொல்லு…சாமிட்ட வச்சுத்தருவா…”என்றார்.

“சரிண்ணே…சுருக்க போயிட்டு வந்துடறேன்.பைசல் முடிஞ்சதும் தான் கடசிதண்ணி தொறக்கறோம்..”



மூர்த்தி புன்னகைத்தபடி தலையாட்டினார்.இரண்டு மாட்டுவண்டிகள் எதிரெதிரே வந்தாலும் எளிதாககடந்துபோகும் அகலமுள்ள இருகரைகளும் பாதைகளாக இருந்தன. ஓரங்கள் நெடுக புளி ,புங்கை ,வேம்பு, கொடுக்காபுளி, நாவல் மரங்கள் ஒருசீரில்லாமல் முன்பின்னாக வளர்ந்து ஆட்கள் அமர, உறங்க,பிள்ளைகள்  விளையாட,குளித்தவர்கள் உடைமாற்ற இடம் கொடுத்திருந்தன.

பின்னால் கைகளைக்கட்டியபடி கரைமேல் கொல்லிமலையைப்பார்த்து நின்ற மூர்த்தியின் தோளைத்தொட்ட ராமு, “தூரத்திலருந்து பாக்கறப்ப தங்கராசுஅய்யாவப்பாக்கறப்ல இருந்துச்சுண்ணே..அவங்கெல்லாம் வராங்கப்பாருங்க..கொஞ்சம் ஒரத்து பேசுங்கண்ணே..”என்றார்.திரும்பிய மூர்த்தி கீழே சற்று தூரத்தில் பச்சைகுடையென கவிந்த குட்டியாலமரத்தைப்பார்த்தார்.

ஆலடியானுக்கு சர்க்கரைபொங்கல் படையல் வைத்து ,வாழைப்பழத்தில் குத்திய பத்தியை காட்டி தேங்காய் உடைத்தப் பின், சந்திரன் கையை தன்கைக்குள் வைத்து தங்கராசு, “ வேண்டியவங்க..வேண்டாதவங்க கிடையாதுன்னு நெனச்சுக்க” என்றார்.

முரட்டுக்கைகளுக்குள் பொதிந்திருந்த தன்கையை சிறிது அசைத்தபடி, “எல்லாரையும் நானா நெனச்சுக்கிறேய்யா..”என்றான்.

அந்தகணத்தில் தன்கைக்குள்ளிருந்த இன்னொரு கையும் ,அதன் தண்மையும் சேர்ந்து உடலுக்குள் ஒரு விதிர்ப்பை உண்டாக்க தங்கராசு, “அது பெருந்துன்பம்டா…நிதானிச்சு சொல்லு…இந்தத்தடத்துல நடக்கறத்துக்கு மனசுக்கு கண்ணுதெரியக்கூடாது..”என்றார்.

“இல்லய்யா…நானாயிருந்து எனக்கு இந்ததுன்பம் வந்தா என்னபண்ணுவேன்னு தெரிஞ்சாதான் முன்னாடி நிக்கறவங்களுக்காவ பேச முடியும்..”

“அத யோசிக்கறவன் எங்கியாவது தப்புபண்ணிருவான்…எல்லாரும் சொல்றாப்ல பஞ்சாயத்துன்னு வரப்ப எனக்கு சொந்தபந்தன்னு யாருமில்லன்னு சொல்லிரு..”

“இல்லய்யா…மத்தவங்க சொல்றதத தான் நாமளும் சொல்லனுன்னு இல்லன்னு அய்யா சொல்லுவாங்க.என் மனசுக்குன்னு தோன்ற வழிய மத்தவங்களுக்கு சொல்லிக்கறேன்.அவங்க ஏத்துக்காத நாள்வரப்ப சொல்லல…பெறப்பாலதான் சாதி சனத்துல வேறுபட்டு போயிட்டேன்…வார்த்தையால உங்கக்கூட இருந்துக்கறேன்..” என்று மூர்த்தி சொல்லும் போது அவன் இளம்வயதிற்குரிய உணர்வுகளால் ஆளப்பட்டிருந்தான்.

தங்கராசு கையோடு இழுத்து அவனை கட்டிப்பிடித்துக்கொண்டார்.அவன் மழையில் நனைந்த கோழிக்குஞ்சென அவரின் அணைப்பிலிருந்தான்.அவனுக்கு சர்க்கரைப்பொங்கலை வாயில் வைத்து பெரியவர்கள் , “என்னைக்கும் ஆலடியான மனசில நெனச்சி நீ சொல்ற சொல்லு சாமிக்கு தித்திப்பாவட்டும்,”என்று திருநீற்றை இட்டுவிட்டார்கள்.மூர்த்தியின் கைகள் அவரை அறியாமல் நெற்றிக்கு சென்றது.ருக்மணி இட்ட நீறின் தடத்தை கைகள் உணர்ந்ததும் எத்தனை கட்டுகள் என்று புன்னகைத்துக்கொண்டார்.

                                                                         2


சந்திரன் எழுந்ததிலிருந்து களத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.உள்ளிருந்து அக்கம்மா, “எதுக்கு உன்னோட நீயே மல்லுக்கு நிக்கற…பேசாம எதாச்சும் சாக்கு சொல்லி வெளியூருக்கு போவியா..”என்றாள்.

“நான் வர்றன்னிக்கி பஞ்சாயத்த மாத்துவானுங்க…”என்றார்.

“என்கிட்டயாச்சும் நெசத்த சொல்லு.அன்னிக்கி உங்க அய்யன  வெட்டின காலத்திலருந்து உன்தோளாட தோளா நிக்கற மூர்த்திமாமா மேல சத்தியமா கேக்றேன் ..நெசத்த சொல்லிப்புடு,”என்ற குரலில் வேகமிருந்தது.

“எல்லாம் இந்தப்பாவியால வந்தது..மனுசன்னா ஒரு நேக்குபோக்கு வேணாம்..”

“……”

“இந்தக்கை காசு, அந்தக்கைக்கு தெரியக்கூடாதுன்னு எத்தன தடவ சொன்னாலும் நாய்க்கு ஒறைக்கல…இன்னக்கி என்னய கொண்டாந்து எல்லயில நிறுத்திட்டான் பாவி…பாவி..”என்று பற்களைக்கடித்தார்.

“மூர்த்தி மாமாவா?  என்னபண்ணுச்சு…”

“நெலம்வாங்கன்னு வச்சிருந்த காச பக்கத்துவீட்டுகாரனுங்கக்கிட்ட சொல்லலாமா?..கெழக்கால வீட்டுக்காரன் காச கடனா குடு.வட்டிக்கு ஈடா  ஐஞ்சுவருஷ குத்தகைக்கு ஏழுஏக்கர பாத்துக்க…ரெண்டு போவம் சீரகசம்பா வெளயற பூமி.ஐந்துவருஷதுக்குள்ள மிச்ச காச சேத்து குடுத்துட்டு நெலத்த எழுதிக்கன்னான்..மூர்த்திப்பய காச குடுத்துப்பிட்டான்..எல்லாரும் இருக்கையில நான் என்ன சொல்லமுடியும்?”

“ஏன் அப்பவே நெலத்த எழுதிருக்கலாமில்ல…”

“ஐஞ்சுஏக்கருக்கான காசு அது…வயக்காரன் மனசுல என்ன இருந்துச்சோ..எதுக்கு ரெட்ட செலவு ஏழுஏக்கரையும் சேத்து எழுதிக்கலான்னான்…இவனும் சரின்னுட்டான்…”

“குத்தவப்பத்திரம் இருக்குல்ல…”

“எழுதி வாங்கல..”

“இது என்ன இப்படியா இருப்பீங்க..ச்சை..ஒருவார்த்த வீட்ல கிடக்கறவக்கிட்ட சொல்லனுன்னு தோணுதா உங்களுக்கெல்லாம்..அந்தக்கா ராமன நம்புறாப்புல அந்தமாமாவ நம்பிக்கிட்டு கெடக்குது…”

 “ஆதிதொட்டு பாட்டன்பூட்டன் காலத்துப் பழக்கம்.…பத்து பேருக்கு தெரிய நடந்ததுதான்..”

அக்கம்மா முகத்தை சேலைமுந்தானையால் துடைத்தபடி அவசரமாக குரல்பதற,“ அஞ்சுவருஷம் முடியலயே..”என்றாள்.

“ஆமா..கையில காசு வந்ததும் வேலயக்காட்றான்…சொந்தகாரன்.. ஆள்பலமுள்ள ஆளுன்னு யாராலயும் பேசமுடியல..”

அவர் தோளைப்பிடித்து தள்ளியபடி,“அப்ப மூர்த்திமாமா யாரு? பயந்துட்டியா..?”  என்றவளை மெதுவாக விலக்கி வாசலில் இறங்கினார்.

சந்திரன் பதில்பேசாமல் களத்தைக்கடந்து வெளியேறினார்.வண்டியை எடுக்கப்பிடிக்காமல் வாரிக்குள் இறங்கி குறுக்குப்பாதையில் நடந்தார். வலதுபுறத்திலும் இடதுதோளிலும் பலம் குறைந்ததைப்போல இருக்கவும் தோளைதடவி விட்டபடி நடந்தார்.

பனி சில்லென்று உடலைத்தைத்தது.வேட்டியை இறக்கிவிட்டுக்கொண்டார்.அங்கங்கே நாத்து போட வரப்புகளை செதுக்கி, நீர் தேக்கிய வயல்களில் விழுந்த தென்னைகளின் நிழலைப்பார்த்தபடி குனிந்து நடந்தார்.

 போக்கியத்தில் தனியே திசைதெரியாது நீந்துவது  ,தனியே கொல்லிமலை ஏறுவது , சித்திரைமாதத்தில ஐயாற்றுசுடுமணலில் தனியே நடந்து எங்கோ நிற்பது என சிலநாட்களாக கனவுகள் கண்டு விழித்து, பின் உறக்கம் வராமல் சந்திரன் படுக்கையில் புரண்டுகொண்டிருந்தார்.குடுகுடுப்பைக்காரனிடம் கேட்டதற்கு, “உத்தவங்கள பகச்சிக்காதீங்க,”என்றான்.

குட்டியாலமரத்தின் எல்லைக்கு வந்திருந்தார். அது உயரத்தில் தணிந்திருந்தாலும் விழுது விரித்து படர்ந்து நின்றிருந்தது.கிளைவிரித்து இலைகள் செறிய  எப்பொழுதும்  தண்மையான இருள் கவிய நிற்கும்.அதனருகில் சென்றபின் உள்ளே நுழைய ஒருதயக்கமிருப்பதை அங்கு அனைவரும் உணர்ந்திருந்ததால், பெரும்பாலும் வெளியே நின்று கும்பிடுபோட்டுவிட்டு கடந்துவிடுவார்கள்.உள்ளே அதன் முன்பக்கவிழுதுகளை  அடுத்து அடிமரத்தின் பகுதி மேலும் தண்மையான இருள் சூழ்ந்தது.அங்கு தனித்து அமர்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். 


சந்திரன் அதன் கவிந்த குடைக்குள் புகுந்து ஆலடியானுக்கு கீழே அமர்ந்தார்.ஓங்கிய குரலில், “என்னைய என்ன செய்ய உத்தேசம்ய்யா….என்ன பாவம் பண்ணி தொலச்சேன்னு ஐம்பது  வயசில இந்த கண்டத்துல என்ன தள்ளற? எனக்கு நல்லவழி காட்டல.... “என்றபடி எழுந்து துண்டால் முகத்தை துடைத்தபடி குனிந்து ஆலமரத்தைவிட்டு வெளியே வந்தார்.

ஆலடியானுக்கு அடியானாகக்கிடக்கும் சாமிக்கண்ணு பெரியவர் அங்கே நின்றிருந்தார். அவர், “மனசத்துளாவிப்பாரு…நீ நெனச்சுப்பாக்காதது இருக்கும்..அத அழிச்சிரு”என்றபடி உள்ளே நுழைந்தார்.பனித்துளிகள் சந்திரனின் சட்டையை நனைத்து குளிரை அதிகமாக்கியதால் சந்திரன் கைகளை கட்டியபடி நடந்தார்.

“சந்திரன் பய எங்க?”

“இன்னும் கண்முழிக்கல..”

தங்கராசு,“நேத்து மூர்த்திக்கு ஆலடியானுக்கிட்ட உறுதி வாங்குற பூச முடிஞ்சப்பின்னாடி, அவன் கன்னிபஞ்சாயத்திலயே பய  பேசுனத கேட்ருக்கனும் நீ..”என்றார்.

  அம்மா சிரித்தபடி, “நீ தான் சொல்லேன்மாமா,”என்றாள்.

“மூர்த்தின்னு நாங்கவச்ச பேரு சோடபோகல புள்ள..வெள்ள வேட்டி சட்டையில அப்பிடி இருக்கான்..எழுந்திருச்சு நின்னு பேச பேச எனக்கே வாயடச்சு போச்சு.தன்மனசுக்கு நெசமான பய..அவங்கய்யன நான் நெதமும் நெனச்சுக்கிட்டே கெடந்ததுக்கு பலனா..கண்ணுமுன்னாடி வந்துட்டான் ,” என்று அய்யாவின் குரல் மனதினுள் இருந்து ஒலிக்க, சந்திரன் வரப்பில் நடந்துகொண்டிருந்தார்.

அன்று புங்கைமரக்களத்தில் என்ன நடக்கிறது என்று அவர்கள் உணர்வதற்கு முன்பே தங்கராசு கழுத்துஅறுபட களத்தில் கிடந்தார். “அய்யா…”என்று கத்தவாயெடுத்த சந்திரனின் குரல் வரவேயில்லை. மூர்த்தியின் தொடையிடுக்கில் வந்து குத்திய ஈட்டியோடு வழிந்த செந்நீரை ,மேல்செருகிய விழிகளால் பார்த்த தங்கராசுவின் கண்கள் பார்த்தபடியிருந்தன.பின்னால் வந்த கத்தியை தடுத்த மூர்த்தியின் கைகால்களில் பதிந்தது அது.

சந்திரன் வரப்பில் நடந்துகொண்டிருக்கையில் தெற்கே வண்டிப்பாதையில் எமகாவின் சத்தம் கேட்டு நிமிர்ந்தார்.மூர்த்தி மேற்காக கடந்து செல்வதை பார்த்தபடி வரப்பில் நடந்தார்.

மூர்த்தியின் கைக்குள் கைவைத்து அவர்  சொன்னவார்த்தைகள்,காலத்திலேறி வந்து அவரின் நினைவில் அலைந்தன.

                                                                                 3

சண்முகம் வீட்டிலிருந்து ஹோண்டாவைத் தள்ளியபடி மூர்த்தியின்  வாசலைத்தாண்டி ,அடுத்த வாசல்படியில் வண்டியைகிளப்பி பிச்சாண்டியை ஏற்றிக்கொண்டார்.

சண்முகம், “எதுவும் எழுதி வாங்கலன்னு உறுதியா தெரியுமா?”என்றார்.

பிச்சாண்டி, “ம்ம்...நெனப்பு தெளிஞ்சநாள்ல்ல இருந்து பாக்கறேன் எங்கப் பாத்தாலும், எப்பப் பாத்தாலும் அந்த மூர்த்திப்பய சந்திரன் தோள்மேலேயேதான் கைபோட்டுட்டு திரியுறான்.எங்க சின்னய்யன் மவன் அவன்.எங்கிட்ட ஒருநாளான நாளில ஒக்காந்து பேசினவனில்ல…பாத்துருவம்..யாருக்கு யாருன்னு,”என்றார்.

“ம்.அதவிடு...அந்த மூர்த்திப்பய அகங்காரத்த எறக்கனுண்டா..என்ன மிடுக்கு அவனுக்கு…நமக்கு நேரங்கைகுடுக்க இத்தன வருஷம்..”என்று வண்டியை முடுக்கியபடி, “பாட்டனுங்க காலத்துல அவுங்க பத்து தலக்கட்டு, படிச்சு நாலுவார்த்த பேச தெரிஞ்சிருந்தாங்கன்னு நம்மகூட வச்சிக்கிட்டோம்.இன்னிக்கு இவன் மட்டுந்தான்..இன்னைக்கும் அதே ஒய்யாரமா?”என்று ஆத்திரப்பட்டார்.

“என்னமோ…ஆலடியானுக்கு அடுத்த அம்சம்ன்னு நெனப்பு அவனுக்கு.இவனுங்க ரெண்டு பேரும் சேந்து கூத்தடிக்கறன்னிக்கி ஆலடியான் பாத்தான்னா, அவன் கையிலஇருக்கற தடியாலயே நாலு போடுவான்..”

“அது தடியில்ல…தண்டமாம்..”

“ஆமா..தண்டப்பயலுங்க…இனிமே எங்கயும் நின்னு பேசமுடியுமா?” என்று சிரித்தபடி வண்டியை போக்கியத்தின் கரையில் நிறுத்தினார்கள்.

ராஜீ, “அடுத்தவீட்டுக்காரன இன்னும் வெளிய காணுமே….”என்றபடி அடுப்படியை எட்டிப்பார்த்தார்.

“யய்யா..இன்னியோட கணக்க முடிச்சுவிடு.தயவுபாக்கற நேரமில்ல..நம்ம நெலம் நமக்கு வேணும்.ஆளும் பேருமா போறீங்க..அதட்டிப்பேசி முடிங்க.சந்திரன் மாமா வருவரில்ல…”

“வந்துதானே ஆகனும்..வரனும்...”என்று சிரித்தபடி தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த பாக்கியத்தை பார்த்தார்.

“நீ என்னடி மூஞ்ச ஒன்றமுழத்துக்கு தூக்கிவச்சிருக்க…”

“ஒருஆள நம்பவச்சு காச வாங்கியாச்சு.நெலம்போனா வராதுன்னு நம்பவச்சத கெடுக்கற…  அதுக்கும் மேலயும் போறீய..என்னாத்துக்குன்னு தெரியலயே..”

“இங்கப்பாரு…வாங்கின காச சொளையா எண்ணி வைக்கறேன்…எங்கப்பன் முப்பாட்டன் சொத்து..”

“ கால்ல விழாத கொறயா கைநீட்டி வாங்கின.நாளைக்கே நமக்கு அந்த நெலம வரதா..”

“காலையிலயே…வாயமூடும்மா.இன்னிக்கு முடிச்சுட்டு வாய்யா…நான் கறிக்கொழம்பு வக்கிறேன்…நம்ம பொழைக்க என்னவழியோ அதுநல்லவழி,”என்ற மகளைப்பார்த்து மீசையைமுறுக்கியபடி புன்னகைத்து வாசலுக்கு வந்தார்.மூர்த்தி வண்டியை எடுத்து உதைத்து செல்வதை பார்த்தபடி கொஞ்சநேரம் நின்றப்பின், தன்வண்டியில் ஏறினார்.

                                                             

                                                                                        4      

போக்கியத்தின் கரையின் மரநிழல்களில் அனைவரும் அமர்ந்தார்கள்.கொஞ்சம் தள்ளி மூர்த்தி அமர்ந்தார்.சீனு எழுந்து போக்கியத்தின் நீரை இருகைகளாலும் தொட்டு கும்பிட்டு திரும்பி நின்று, “ வயக்காரங்க முன்ன சொல்லுங்க, பின்னால வெள்ளாமைக்காரவங்க சொல்லலாம்,” என்றார்.

ராஜீ, “எல்லாரும் நாத்துபோடறாங்க…வாங்குன காச எண்ணி வைக்கறேன்.மூர்த்தி இனிமே நெலத்துல கால வெக்கக்கூடாது,”என்றார்.

“இந்தப்பட்டத்துக்கு நாத்து இருவதுநாள் தள்ளிப்போயிருச்சு.வீட்டுக்காரிக்கு ரெண்டு ஆப்ரேசன்..நேரம் சரியில்ல.இந்த வெள்ளமதான் எந்நம்பிக்க..எங்கஷ்டம் தெரியாததில்ல…வெள்ளமைய எடுத்துக்கறேன்..”

“அதெப்படி..இவரு வெள்ளம எடுக்க இந்தமாசமே ஆவும்..உங்க தாமசத்துக்கு நாங்க பொறுப்பில்ல.இப்பவே காட்டவிட்டு கெளம்பனும்,”

“ஐஞ்சுவருஷத்துக்கு குத்தவக்கு பேசிகாசக்குடுத்தேன்..முழுசா மூணுவருஷம் இருக்கு..”

“காசக்குடுக்கறவரதான் வயல்ல உரிம.. காச வாங்கிக்கப்பா.நம்ம சொந்தபந்தகாரங்க நீங்கள்ல்லாம் பாத்து சொல்லுங்க.நாளப்பின்ன மனுஷ வேணுமில்ல…”

“மூர்த்தியண்ணே வயக்காடுமட்டுமா….இன்னும் ஆறேழு வெள்ளாம பின்னுக்க நிக்குதுல்ல..மெதுவா வாரவனுக்கும் சேத்துதான பாத..”

“வழக்குன்னு வராதத்துக்கு எதுக்கு தீர்ப்பு…வந்த வழக்க பேசு…”என்ற ராஜீவின் குரல் கடுமை அங்கிருந்தவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது.

“பேச்சுக்கு கட்டாத எடத்துல என்னத்த இன்னும் பாக்கறது..”என்று ரவி எழ அதுதான்  தருணம் என்று ஆட்கள் கலைந்தார்கள்.

சந்திரனும்,மூர்த்தியும்,ராஜீயும் இன்னும் இரண்டு பெரும்பெருத்தார்களும் எங்கோ பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்க பின்னால் ராமு தனியாகவந்து அமர்ந்தான்.

சந்திரன் தொண்டையை செருமிக்கொண்டு போக்கியத்தின் நீரைப்பார்த்தபடியிருந்தார்.இரண்டு பயல்கள் போட்டிப்போட்டுக்கொண்டு சொரக்கான் அடித்து நீந்தி சிரித்துக்கொண்டிருந்தார்கள்.காலைவெயிலில் நீர்படர்ந்த முகங்கள் மின்னின.பற்கள்தெரிய நெற்றியில் கரும்முடிதிரட்சிகள் நீரால் படிய மெல்லிய இளம் தோள்கள் நீரிலிருந்து எழுந்து தாழ அவர்கள் நீந்திக்கொண்டிருந்தார்கள்.

“வழக்குக்கு வரலன்னா நாமளா ஒத்துபோகலாம்…கணக்குன்னா கணக்குதான்.வயக்காரங்க கணக்குப்படியாகட்டும்…”என்றபடி கணபதி எழவும் மற்றவர்களும் எழுந்து அவருடன் நடந்தார்கள்.

மூர்த்தி வேட்டியைப்பிடித்தபடி எழ இடப்பக்கம் உடல்சரியவும் வேம்பை பிடித்துக்கொண்டார். கண்களை மூடியபடி அப்படியே நின்றார்.

“நமக்குள்ள சண்ட போட்டுப்போம்…நாளக்கு கூடிப்போம்…இவன் யாருடா நாயம் பேச வர்றவன்,”என்ற குரலோடு சேர்ந்து வந்த ஈட்டி இன்றும் மூர்த்திமேல் பாய்ந்தது.

“என்ன மாமா…என்னாச்சு,”என்று அருகில்வந்த ராமுவிடம் , “உன்வயசுல அடிபட்ட காலுடா…அப்பப்ப சுள்ளுன்னு வலிக்குது..உன்வயலுக்கு தண்ணிய விடு…”என்று மொண்ணையான இடது ஆட்காட்டிவிரலால் வேட்டியை பிடித்தபடி நடந்தார்.

முன்னே சென்ற அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த பன்னீரும் சங்கிலியும் மூர்த்தியைக்கண்டதும் , “நாத்துவிட்டாச்சுண்ணே… வரப்பு கட்ற இடிபிடி ...நீ கொஞ்சம் வாயேன்…”என்றான்.

மூர்த்தி அவர்களைக்கடந்து பன்னீருக்கும் சங்கிலிக்கும் இடையில் நடந்தார்.கொஞ்சம் தடுமாறிய நடை.அதை பார்த்தபடி அவர்கள் கரைமேட்டில் பேச்சின்றி நடந்தார்கள்.

மூர்த்தி பின்பக்க வேட்டியை சற்று தூக்கி பின்னங்கைகட்டில் வைத்து, இடதுகாலை கவனமாக தூக்கிவைத்து நடப்பதைப்பார்த்தபடி நடந்த சந்திரன், ஏதோ ஒருகணத்தில் மனம் துணுக்குற பார்வையை மாற்றினார். அவரின் மனதில் சாமிக்கண்ணு  பூசாரியின் குரல் கேட்டது.சந்திரன் மனதிற்குள் கூசியபடி கண்களை மூடிக்கொண்டார்.

மூர்த்தி சட்டென திரும்பி, “சந்திரா...வாய்யா.அதான் பைசல் முடிஞ்சிருச்சே..”என்றார். சந்திரன், “ நீ பேசிட்டு வா... நாங்கரையில நிக்கறேன்,”என்றபடி வேம்பின் அடியில் நின்ற எமகாவின் மீது சாய்ந்து நின்றார்.

        


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...