Skip to main content

இற்றைத்திங்கள் அந்நிலவில் :6

[2023 டிசம்பர் சொல்வனம் இதழில் வெளியானக் கட்டுரை]

 இயற்கையை நோக்கியிருத்தல்

கழார்க்கீரன் எயிற்றியார் சங்ககாலக்கவிஞர். இவரின் பாடல்கள் அகநானூறு, நற்றிணை,குறுந்தொகை பொன்ற சங்கஇலக்கிய தொகை நூல்களில் உள்ளன. 

இவர் காவிரிபூம்பட்டிணத்திற்கு அருகில் உள்ள கழார் என்னும் ஊரில் பிறந்தவர். கீரன் என்பரை மணந்தார். எயிற்றியார் என்பது குறிஞ்சி நிலப்பெண்ணை குறிக்கும் பெயர்.

ஒக்கூர் மாசாத்தியாரின் பாடல்களில் ‘முல்லை எயிறு என நகைக்கும் கார்காலம்’ முழுவதும் முல்லை மலர் அனைத்துப் பாடல்களிலும் மலர்ந்து கொண்டிருந்தது.

கழார்கீரன் எயிற்றியாரின்  பாடல்களில் பல நிறங்களில் பலவிதமான மலர்கள் மலரும் கார்காலத்தின் இறுதிநாட்களின்  சித்திரம் உள்ளது. தோன்றிப்பூ அகல் ஔியை போல சுடர்ந்தன என்று ஒரு பாடலில் வருகிறது. கார்த்திகை மாதமான இதே காலத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பாடலை இன்று வாசிக்கிறோம்.

 ஈங்கை மலர்

விண் அதிர்பு தலைஇய,விரவு மலர் குழைய

தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடைநாள் [அகம்: 163]

இடிகள் முழங்கி மலர்கள் உதிர குளிர்ந்த மழை பெய்து முடிக்கும் காலம். எதிர்பார்ப்பின் மகிழ்ச்சி, கோபம் என அனைத்து உணர்வுநிலைகளும் குறைந்துவிட்ட காலம்.

அயிர்இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ

கொடியார் சென்ற தேயத்து மடியாது

இனையே ஆகிச் செல் மதி

மழைகாலத்தின் இறுதிநாட்களில் நின்று கொண்டு தலைவி அவன் சென்ற அன்றே மனமும் சென்று விட்டது என்கிறாள். மழைகாலத்தின் முதல் வெள்ளத்தை செந்தண்ணீர் என்பார்கள். மண்ணையும் தன்னுடன் கலக்கி எடுத்துச்செல்லும் நீர். 


                              கரும்புப்பூ

நீடு கழைக்கரும்பின் கணைக்கால் வான் பூக்

கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர

பாசிலை பொதுளிய புதல்தொறும் பகன்றை

நீல் உண் பச்சை மறைத்து அடைச்சிய

தோல் எறி பாண்டிலின் வாலிய மலர

கோழிலை அவரைக் கொழு முகை அவிழ

ஊழ் உறு தோன்றி ஒண்பூத்த தளை விட…[ அகம் 217]

என்று தலைவி தான் காணும் நிலமெங்கும் மலர்ந்துள்ள மலர்களைக் காட்டி இத்தனை மலர்கள் மலர்கின்றன என்று சொல்கிறாள். கரும்புப்பூவில் இருந்து பகன்றை ,அவரை ,தோன்றி, முசுண்டை, கருவிளை ,முளரி என்று பலவித மலர்கள் மலரும் காலம் அது. மழைநின்று தூவானமாகிறது. தலைவன் இன்னும் வரவில்லை. நிலம் இத்தனை பூக்களை கொண்டு தன்னை அழகுபடுத்திக்கொள்ளும் காலத்தில், அணிகளை துறந்து தலைவி காத்திருக்கும் காலமாக இருக்கிறது.



 அவரைப் பூ

துணிதுவைக்கும் பெண் கஞ்சிப்பசையிட்டு முறுக்கி வைத்த துணி போல செடியில் பகன்றை மொட்டு விட்டிருப்பதை தலைவி பார்க்கிறாள்.

நலந்தகை புலைத்தீ பசைதோய்த் தெடுத்துத்

தலைப்புடைப் போக்கி தண்கயத்திட்ட

நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்

பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ

இன்கடுங் கள்ளின் மணமில கமழும்

புன்கண் மாலையும் புலம்பும்

இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே [குறுந்தொகை 330]

நீரிலிட்ட முறுக்கிய துணி அவிழ்வதைப்போல பகன்றை மலர்ந்தது என்கிறாள். மெல்ல முறுக்கவிழ்க்கும் மனம் ஒன்று இந்தப்பாடலில் உள்ளது.

                      பகன்றை மலர்

வாடையொடு நிவந்த  ஆய்இதழ்த் தோன்றி

சுடர்கொள் அகலின் சுருங்குபிணி அவிழச்

சுரிமுகில் முசுண்டைப் பொதிஅவிழ் வான்பூ

 விசும்பு அணிமீனின் பசும்புதல் அணியக்

களவன் மண்அளைச் செறிய,அகல்வயல்

கிளைவிரி கரும்பின் கணைக்கால் வான்பூ

அகலில் சுடர் எழும்புவதைப் செங்காந்தள் மலர்கிறது. இந்தப்பாடலில் மழை நின்ற இறுதிநாட்களின் வெளிச்சம் உள்ளது. முசுண்டை மலர்கள் பஞ்சு போல மலர்கின்றன. நிமிர்ந்தால் இரவின் கருத்த வானில் விண்மீன்கள் மலர்ந்துள்ளன. இந்தப்பாடல்களில் குறிப்பிடப்படும் ஈங்கை மலர்கள் powder puff flower என்று அழைக்கப்படும் பூவைப்போல உள்ளது. அப்படி மென்மையாக மலரும் அவள் மனப்பூவின் ஈரத்தை, பொருளில் மனம் சேர்த்துள்ள தலைவன் நினைப்பானா? என்று தலைவி புலம்புகிறாள்.


தொல் நலம் சிதையச் சாஅய்

என்னள் கொல் அளியல்? என்னாதோரே

மழைக்காலமும் நிறைவடையப் போகிறது.  இயற்கையும் இத்தனை நிறங்களில் இதழ் விரிக்கிறது. தலைவன் இன்னும் வரவில்லை என்ற மனநிலையில் எழுதப்பட்ட பாடல். துயர் என்று கூட இந்தப்பாடல்களின் மனநிலையை சொல்லமுடியாது. இனியதுயர் கொண்ட ஒரு மனநிலை. 

இந்தப்பாடல்களின் கண்ணீர் இல்லை. இயற்கை மலர மலர அவள் மனமும் மலர்கிறது. ஒரு நெகிழ்வான மனநிலையின் ஈரம் உள்ள பாடல்கள் என்று இந்தப்பாடல்களை சொல்லலாம்.

போதவிழ் வான் பூ என்ற வரியை அடைமழைக்குப் பிறகு வானம் பூக்கும் வெளிச்சம் என்ற பொருளில் எடுத்துக்கொள்கிறேன். மண்ணும் விண்ணும் மலரும் காலம். காத்திருக்கும்  தலைவியின் மனமும் கண்களும் மலரும் காலம். 

மலர்தல் என்ற நிகழ்வை எத்தனை விதமாக சொல்லியும் கழார்கீரன் எயிற்றியாருக்கு தீரவில்லை. மீண்டும்…

புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய

காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்

நீர்வார் கண்ணின் கருவிளை மலர

[அகம்: 294]  என்கிறார்.


பூவகம் என்பது அவளின் மனஅகமே தான்.

நுண்ணுறை யழிதுளி தலைஇய

தண்வரல் வாடையும் பிரிந்திசினோக் கழலே [குறுந்தொகை 35]

தலைவியின் அத்தகைய மனம் கனலாகும்படி திரும்பி வராமல் இருக்கிறான்.

தலைவி பார்க்கும் நிலமெங்கும் பல நிறங்களில் மலர்களாக மலர்வது எது? தளிரையும் மலராக்கும் அது.  அதுவே அவளை மலர்விக்கிறது. 

இயற்கையில் மலர் என்பது ஒரு அழைப்பு. கழார்கீரன் எயிற்றியார் அத்தனைப்பாடல்களிலும் வித விதமான சொற்களிலும் அதையே சொல்கிறார் . இயற்கையை நோக்கியிருக்கும் மனம், தான் காணும் இயற்கையின் மொழியை தன் மொழியில் மாற்றிப்பார்க்கிறது. 

அகநானூற்று பாடல்களில் காத்திருப்பு மலர்களாக விரியும் போது குறுந்தொகை நற்றிணை பாடல்களில் பிரிவின் துயராக மலர்கிறது.

பழமழை பொழிந்தெனப் பதனழிந் துருகிய

சிதட்டுக்கா யெண்ணின் சில்பெயர் கடைநாள் [குறுந்தொகை 2]

காலம் தப்பிப்பெய்த மழையால் உள்ளீடு அற்று காய்க்கும் எள் செடி போல கார்காலத்தில் வராது போன தலைவனால் தலைவி மனமும் வெறுமை கொள்கிறது.

………….என் கண்

துஞ்சா வாழி தோழி! காவலர்

கணக்குஆய் வகையின் வருந்தி,என்

நெஞ்சுபுண் உற்ற விழுமத் தானே [குறுந்தொகை: 261]

அவன் வராததால் ஒரு கணமும் கண்களை மூடாத நாழிகை கணக்கனை போல நானும் மாறினேன் என்கிறாள் தலைவி.

துஞ்சாம் ஆகலும் அறிவோர்

அன்பிலர் தோழி நம் காதலோரே [நற்றிணை :281]

இத்தனையும் அறிந்து என்னை பிரிந்துதிருக்கும் தலைவர் அன்பிலாதவர் என்று தோழியிடம் சொல்கிறாள். 

வா என்று எத்தனை மொழிதல்கள், வரவில்லை என்று எத்தனை பழித்தல்கள் என்று பாடல்களை வாசிக்கும் போது தோன்றியது.

‘பெருநசை உள்ளமொடு வருநசை நோக்கி’ என்கிறாள் தலைவி. நசை என்பதற்கு ஆசை,அன்பு,நம்பிக்கை,ஈரம் என்று பலபொருள் உள்ளது. இந்தப்பாடல்களில் நான்கு சொற்களுமே ஒன்றாக உள்ளது. பெருநசை உள்ளம் [பேரன்பு மிக்க உள்ளம்] என்ற சொல்லே, இந்தப்பாடல்களில் இத்தனை நிறங்களில் பூக்கிறது. 

அன்பு என்பது ஒரு பார்வையில் நம்பிக்கை, இன்னொரு பார்வையில் காயாத ஈரம். அகமும் புறமும் பெய்யக்கூடிய அந்த மழை பூப்பித்த மலர்களுக்கு ஆயிரம் இதழ்கள்.

ஊரில் மாரியம்மன் திருவிழாவிற்கு ஒலிப்பெருக்கியில் பாடல்கள் ஒலிக்க விடுவார்கள். கம்பீரமான குரலில் ஒலிக்கும்  தேவி துதிகள். திருவிழாவின் கும்பல், கூச்சல்களுக்கு நடுவில் வீட்டு வேலைகளின் சலிப்புகளுக்கு இடையில் தலைக்கு மேல் எங்கோ  ஒலித்துக் கொண்டிருக்கும்.

‘ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ எங்கள் தேவி முகம்’

கேட்கும்போது சில சமயம் புல்லரிக்கும். [பக்தியால் இல்லை]. காதல், பக்தி இலக்கியங்களில் தான் ஆகச்சிறந்த மனஉணர்வுகளின் ஆழத்துக்குள் இருந்து சொல்லெடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. கழார்கீரன் இயற்றியாரின்  இந்தப்பாடல்களை வாசிக்கும் போது தேவி முகம் மட்டுமல்ல, தேவியின் மனமும் அப்படிதான் என்று தோன்றியது. எத்தனை  நிறங்களில் நான் மலர்ந்து காட்டுவேன்? எத்தனை சொற்களில் சொல்லிகாட்டுவேன்? என்று கழார் கீரன் எயிற்றியாரின் தலைவி சொல்கிறாள்.


நிஷாகந்தி

செல்லும் வழி எல்லாம்

விழி துளிர்த்துக்கொண்டே செல்கிறேன்

நிலவில் அவை நிஷாகந்தி

மலர்களைப்போல

உனக்கு மட்டுமாய் ஔிரட்டும்

பின்னூடே வந்துவிடு

என் சமரனே

                  கவிஞர் ப்ரிம்யா கிராஸ்வின்








Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...