Skip to main content

அகமும் புறமும் : என்னுரை

 நாளை என்னுடைய முதல் கட்டுரை தொகுப்பான அகமும் புறமும் வெளியாகிறது.

சமர்ப்பணம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு….


நன்றி

வாசகசாலை நண்பர்களுக்கும், வாசகசாலை இணைய இதழில் தொடராக வெளியான போது வாசித்து பின்னூட்டம் அளித்த வாசகநண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்த நூலை பிழை நோக்கி உதவிய நண்பர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும்.


என்னுரை


கடலும் மலையும்

சங்க இலக்கியம் மீது பள்ளி வயதில் இருந்து ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் என்னுடைய தமிழாசிரியர்கள். மருதை அய்யா, இராஜாராமன் சார்,மதர் அல்ஃபோன்ஸ் சிஸ்ட்டர்,தமிழ் விரிவுரையாளர் ராதா ஆகியோர்களை நினைத்துக் கொள்கிறேன்.

அதற்கு பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘சங்க சித்திரங்கள்’ கட்டுரைத்தொகுப்பு மீண்டும் சங்கஇலக்கிய வாசிப்பை தூண்டுவதாக இருந்தது.  தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். மொழியழகும்,பாடல்கள் மனதில் வரையும் காட்சிகளும் சங்கப்பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் என்னை ஈர்க்கின்றன. 

புறப்பாடல்களில் சங்ககாலத்தின் அறம்,மன்னர்கள்,போர் பற்றிய தகவல்கள் நம் ஆர்வத்தை தூண்டுபவை. ஆனால் அகப்பாடல்களில் காதல் உணர்வை மட்டும் சலிக்கவிடாமல் எப்படியெல்லாம் விதவிதமாக சொல்ல முடிகிறது என்ற வியப்பு இன்று வரை உண்டு.

இந்தக்கட்டுரைகள் ஒரு வாசகியின் பகிர்தல்கள். நான் சங்க இலக்கியத்தின் வாசகி மட்டுமே. மொழி அழகின் மீது காதலும், பித்தும், கிறுக்கும் கொண்ட வாசகி.

ஊரில் கட்டிடங்கள் எழ எழ கண்முன்னே கொல்லிமலை அங்கங்கே மறைவதை பார்க்க ஏக்கமாக இருக்கிறது. சிறுவயதில் கூரைவீடுகள், ஓட்டு வீடுகளாக இருக்கும் போது எதிர்சந்தின் இறுதியில் கொல்லி மலை இருப்பதாக நினைப்பேன். ஒரு வகையில் உண்மைதான். எதிர்சந்திலிருந்து நேர்க்கோட்டில் நடந்தால் ஒரு மைல் தொலைவுதான் இருக்கக்கூடும். என் சிறுவயதில் கதை சொல்லும் அய்யாவிடம், “ அர்ஜூனர் நம்ம முடக்குல இருந்து அம்பு விட்டா சர்ன்னு போய் கொல்லி மலையில குத்திருல்லங்கய்யா,” என்று கேட்பேன்.

அது போல இலக்கியம் காலத்திற்கும் மனதிற்குமான ஒரு நேர்கோட்டு வழி என்று சங்கப்பாடல்களை வாசிக்கும் போது தோன்றும். காட்சிகள் வேறுபட்டுக்கொண்டே இருக்கிறது. உணர்வுகள் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட காதலின் அடிப்படை மனநிலை சங்கப்பாடல்களில் உள்ள மனநிலையாகத்தான் இருக்கும். வீட்டில் இருந்து பார்த்தாலும்,தெருக்களை, வயல்பதைகளை சுற்றி சுற்றி சென்றாலும் தரிசிப்பது அந்த மாமலையை தான். அது என்றும் அங்கிருக்கிறது. இலக்கியம் என்ற கையை பிடித்துக்கொண்டால் இரண்டாயிரம் ஆண்டு ஒன்றும் தூரமில்லை. 

அங்கு சென்று நிற்கும் போது அதன் பிரமாண்டமும் பேரெழிலும் நம்மை பரவசம் கொள்ள செய்பவை. நம்மை மலர்த்த வல்லவை. சங்கஇலக்கியம் நம் மொழியின் மாமலை.

இன்னொரு வகையில் கவிதைகள் தீராத கடல் போன்றவை. நாம் கடையக் கடைய அது திரண்டு கொண்டே இருக்கும். சங்கஇலக்கியம் நம் மொழியின் தீராத பாலாழி.

இது என்னுடைய முதல் கட்டுரைத்தொகுப்பு. எழுத்து மூத்தவர்களுக்கு அன்பும்,வணக்கங்களும்.

                                          அன்புடன்,

                                        கமலதேவி

                                            பா.மேட்டூர்

                                          [11/12/2023]

Kamaladevivanitha@gmail.com


இந்த நூலுடன் மேலும் ஐந்து நூல்கள் வெளியாகின்றன. அதில் எழுத்தாளர் கா.சிவாவின் முதல் நாவலான 'தண்தழல்' வெளியாகிறது. எழுத்தாளர் பத்மகுமாரியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியாகிறது. மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.




                                                      


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...