Skip to main content

அகமும் புறமும் : என்னுரை

 நாளை என்னுடைய முதல் கட்டுரை தொகுப்பான அகமும் புறமும் வெளியாகிறது.

சமர்ப்பணம்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு….


நன்றி

வாசகசாலை நண்பர்களுக்கும், வாசகசாலை இணைய இதழில் தொடராக வெளியான போது வாசித்து பின்னூட்டம் அளித்த வாசகநண்பர்களுக்கும் அன்பும் நன்றியும். இந்த நூலை பிழை நோக்கி உதவிய நண்பர்களுக்கும்,அட்டைப்பட வடிவமைப்பாளருக்கும் அன்பும் நன்றியும்.


என்னுரை


கடலும் மலையும்

சங்க இலக்கியம் மீது பள்ளி வயதில் இருந்து ஈடுபாடு உண்டு. அதற்கு காரணம் என்னுடைய தமிழாசிரியர்கள். மருதை அய்யா, இராஜாராமன் சார்,மதர் அல்ஃபோன்ஸ் சிஸ்ட்டர்,தமிழ் விரிவுரையாளர் ராதா ஆகியோர்களை நினைத்துக் கொள்கிறேன்.

அதற்கு பிறகு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் ‘சங்க சித்திரங்கள்’ கட்டுரைத்தொகுப்பு மீண்டும் சங்கஇலக்கிய வாசிப்பை தூண்டுவதாக இருந்தது.  தொடர்ந்து சங்கப்பாடல்களை வாசிக்கிறேன். வாழ்நாள் முழுவதும் வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். மொழியழகும்,பாடல்கள் மனதில் வரையும் காட்சிகளும் சங்கப்பாடல்களை நோக்கி மீண்டும் மீண்டும் என்னை ஈர்க்கின்றன. 

புறப்பாடல்களில் சங்ககாலத்தின் அறம்,மன்னர்கள்,போர் பற்றிய தகவல்கள் நம் ஆர்வத்தை தூண்டுபவை. ஆனால் அகப்பாடல்களில் காதல் உணர்வை மட்டும் சலிக்கவிடாமல் எப்படியெல்லாம் விதவிதமாக சொல்ல முடிகிறது என்ற வியப்பு இன்று வரை உண்டு.

இந்தக்கட்டுரைகள் ஒரு வாசகியின் பகிர்தல்கள். நான் சங்க இலக்கியத்தின் வாசகி மட்டுமே. மொழி அழகின் மீது காதலும், பித்தும், கிறுக்கும் கொண்ட வாசகி.

ஊரில் கட்டிடங்கள் எழ எழ கண்முன்னே கொல்லிமலை அங்கங்கே மறைவதை பார்க்க ஏக்கமாக இருக்கிறது. சிறுவயதில் கூரைவீடுகள், ஓட்டு வீடுகளாக இருக்கும் போது எதிர்சந்தின் இறுதியில் கொல்லி மலை இருப்பதாக நினைப்பேன். ஒரு வகையில் உண்மைதான். எதிர்சந்திலிருந்து நேர்க்கோட்டில் நடந்தால் ஒரு மைல் தொலைவுதான் இருக்கக்கூடும். என் சிறுவயதில் கதை சொல்லும் அய்யாவிடம், “ அர்ஜூனர் நம்ம முடக்குல இருந்து அம்பு விட்டா சர்ன்னு போய் கொல்லி மலையில குத்திருல்லங்கய்யா,” என்று கேட்பேன்.

அது போல இலக்கியம் காலத்திற்கும் மனதிற்குமான ஒரு நேர்கோட்டு வழி என்று சங்கப்பாடல்களை வாசிக்கும் போது தோன்றும். காட்சிகள் வேறுபட்டுக்கொண்டே இருக்கிறது. உணர்வுகள் அப்படியே தான் இருக்கிறது. இன்னும் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும் கூட காதலின் அடிப்படை மனநிலை சங்கப்பாடல்களில் உள்ள மனநிலையாகத்தான் இருக்கும். வீட்டில் இருந்து பார்த்தாலும்,தெருக்களை, வயல்பதைகளை சுற்றி சுற்றி சென்றாலும் தரிசிப்பது அந்த மாமலையை தான். அது என்றும் அங்கிருக்கிறது. இலக்கியம் என்ற கையை பிடித்துக்கொண்டால் இரண்டாயிரம் ஆண்டு ஒன்றும் தூரமில்லை. 

அங்கு சென்று நிற்கும் போது அதன் பிரமாண்டமும் பேரெழிலும் நம்மை பரவசம் கொள்ள செய்பவை. நம்மை மலர்த்த வல்லவை. சங்கஇலக்கியம் நம் மொழியின் மாமலை.

இன்னொரு வகையில் கவிதைகள் தீராத கடல் போன்றவை. நாம் கடையக் கடைய அது திரண்டு கொண்டே இருக்கும். சங்கஇலக்கியம் நம் மொழியின் தீராத பாலாழி.

இது என்னுடைய முதல் கட்டுரைத்தொகுப்பு. எழுத்து மூத்தவர்களுக்கு அன்பும்,வணக்கங்களும்.

                                          அன்புடன்,

                                        கமலதேவி

                                            பா.மேட்டூர்

                                          [11/12/2023]

Kamaladevivanitha@gmail.com


இந்த நூலுடன் மேலும் ஐந்து நூல்கள் வெளியாகின்றன. அதில் எழுத்தாளர் கா.சிவாவின் முதல் நாவலான 'தண்தழல்' வெளியாகிறது. எழுத்தாளர் பத்மகுமாரியின் முதல் சிறுகதை தொகுப்பு வெளியாகிறது. மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று.




                                                      


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...