Skip to main content

பிள்ளையார்

ஒரு சமூகமாக நம் குழந்தைகளை நாம் என்னவாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் என்று அதிகாலையில் இருந்து யோசனையாக இருந்தது. அதிகாலை 3.50 திலிருந்து உறக்கம் வரவில்லை. நான் கல்வியியல் கல்லூரி முடித்து வந்ததிலிருந்து சிறுவர்களை கவனித்து வருகிறேன். 




அவர்கள் ஏன் சிறுவர்களாக இல்லை? என்பது என்னை அடிக்கடி தொந்தரவு செய்கிறது. சூட்டிகை,குறும்பு,விஷமத்தனங்களுடன் இருக்கும் சிறுவர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள். ஆனால் இன்று சிறுவர்கள் பதின்வயதுடையவர்கள் போலவோ,இளைஞர்கள் போலவோ நடந்து கொள்வதை பார்ப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது. [பூமர் என்பது சொல்லப்படும் காரணப்பொருளால் நல்ல சொல்] . ஊடகங்களை நாம் காரணம் சொல்கிறோம். அது ஒரு காரணம் தான்.

தனக்கு எதிரே கண்முன்னே காண்பவற்றை தான் அவர்கள்  பிரதிபலிக்கிறார்கள். அவர்கள் கண்முன்னால் பார்க்கும் சகமனிதர்கள் பற்றிய எந்த பிரக்ஞையும் அற்ற இளைஞர்களும் மூத்தவர்களும் அவர்களுக்கு முன் மாதிரிகளாக இருக்கிறார்கள்.

இன்று அதிகாலை மூன்றே முக்காலுக்கு விசில் சத்தமும், பாட்டு கருவியில் பாட்டு சத்தமும் கேட்டு சட்டென்று கண்விழித்தேன். எதிர் வீட்டில் வீடுகட்டுகிறார்கள். கட்டுமான பொருட்கள் வரும் வாகனமாக இருக்கும் என்று நினைத்து அமைதியாக இருந்தேன். விசில் சத்தம் எரிச்சல் அடைய வைக்கவே யார் என்று பார்க்கலாம் என்று இரும்பு கதவின் திரைசீலையை விலக்கிப்பார்த்தால் ஐந்தாறு சிறுவர்கள். தெருவே  தூங்கிக்கொண்டிருக்கிறது. நாற்சந்தியில் விசிலடித்துக்கொண்டு சத்தமாக பாடல் வைத்தார்கள்.

பெரும்பாலும் நான் கோபப்படுவதில்லை. அதுவும் சிறுவர்களை கண்டாலே மனம் மலர்ந்துவிடும். அன்பு தான் கோபமாகிறது. 

'மணி என்னடா ..இந்நேரத்துக்கு இவ்வளவு சத்தமா பாட்டு ..குழந்தைங்க பெரியவங்கெல்லாம் தூங்கறங்கல்ல...' என்றதும் அவர்களில் பெரியவன் சத்தத்தை குறைத்துவிட்டு குனிந்து கொண்டான்.

பிள்ளையாருக்கு தென்னம் ஒலையில் படல்கோயில் கட்டி அலங்காரம் செய்து வைத்திருந்தார்கள். நல்ல திறமை தான். இரவு ஒரு மணிலிருந்து அலங்காரம் செய்ததாக விடிந்ததும் ஒருவன் சொன்னான். விலைக்கு வாங்கிய பிள்ளையாரை விட அவர்களாகவே களி மண்ணில் செய்த குட்டிப்பிள்ளையார் அவர்களை போலவே க்யூட்டாக இருந்தது.

அவர்களில் இளையவன் 'மணி ஒன்னு' என்று எகத்தாளமாக சொன்னான். கருங்கல்லில் அமர்ந்து கால் நீட்டி அமர்ந்து கொண்டான். அவனை மட்டும் யார் என்று அடையாளம் தெரியவில்லை.

'யார் வீட்டு பயடா நீ' என்றேன். பதில் சொல்லவில்லை. மீண்டும் அதட்டியதும் 'கிழக்கால வீதி' என்று அவன் சொன்னான். பொய் என்று புரிந்துவிட்டது.  

'ஹரி...அவன் யார்டா' என்றதற்கு அவன் வாயே திறக்கவில்லை.

'தனுஷ்..அவங்க அப்பா பேரென்ன' என்று கேட்டதற்கு அவனும் வாய் திறக்கவில்லை. யஸ்வந்த்,கிரி இருவரும் தலை நிமிரவே இல்லை. 

இந்த இவன் பாட்டு பாடிக்கொண்டிருந்தான். முகச்சாயல் பிடிபட்டு விட்டது. 

'ஜானகி தம்பி மவனா நீ...இரு உங்க தாத்தாக்கிட்ட சொல்றேன்,' என்று சொன்னதும் பாட்டை நிறுத்தினான். இந்த மாதிரி குழந்தைகள் ஒரு குழுவை உருவாக்குவார்கள். இன்னும் கொஞ்ச நாளில் தன் மூத்தவர்கள் போல அட்டகாசம் செய்வர்கள்.

எனக்கு மற்ற குழந்தைகள் பற்றி தான் கவலை. எந்த நேரம் என்றாலும் மற்றவர்களை தொந்தரவு செய்யலாம் என்று சமூகம் அவர்களுக்கு காண்பிக்கிறது.

ஒரு நாள் பிள்ளையார் தன் தாய்க்கு காவலாக இருக்கும் போது ஈசன் வந்தார். தந்தை ஈசனே என்றாலும் தாயின் தனிப்பட்ட நேரத்தில் இடையீடு செய்ய அனுமதிக்கவில்லை என்ற கதை எனக்கு சிறுவயதில் சொல்லப்பட்டது. இன்று ஈசனை எதிர்த்தார் என்பது மட்டும் Shorts ல் வருகிறது..முழு கதையும் பார்க்கப்படுகிறதா என்று தெரியவில்லை.

'ஐந்துமணிக்கும் பாட்டு போட்டுக்கலாம் ' என்று சொன்னேன். எதிர்வீட்டு வராண்டாவில் படுத்தவர்கள் ஏழுமணி வரை எழுந்திருக்கவில்லை. அவர்களின் அலங்காரத்தின் சிகரமாக இருந்த ஜோக்கர் ஒரு உருவகம் போல சிரித்துக்கொண்டிருந்தது. அவர்களின் முகங்களை கொஞ்ச நேரம் பார்த்தேன். எழுப்பிவிட தோன்றவில்லை.

அழகு 'பிள்ளை'யார் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.





Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...