Skip to main content

கீறல்

 தமிழினி அக்டோபர் இதழில் 2022 ல் வெளியான சிறுகதை

கீறல்

புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு உஷா பள்ளிவாயிலை நோக்கி ஓடினாள். வகுப்பிலிருந்து அனைவருமே வெளியேறியிருந்தார்கள். காலை பதினோரு மணிக்கு பள்ளிக்கூடம் சாத்தப்படும் என்று பிள்ளைகள் எதிர்பார்க்கவில்லை. நேராக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிலும் அறிவுறுத்தி சொல்லி அனுப்பினார்கள். குதித்து கொண்டும், சிரித்தபடியும் தலைமையாசிரியர் அறைக்கு அப்பால் உள்ள தென்னை மரங்களை கடந்து சிறிய படல் வழியில் வெளியேறினார்கள். 

பள்ளிக்காவலாளி ராமசாமி மேற்கு பக்கமாக இருந்த பள்ளியின் முக்கிய வாயிலை பெரிய தென்னம்படலை இழுத்து வைத்து மூடிக்கொண்டிருந்தார். பக்கவாட்டில் உள்ள நெட்டிலிங்கமரத்தின் அடித்தண்டுடன் படலை பிணைக்கும் கனமான இரும்பு சங்கிலியை இரண்டு முறை கீழே தவறவிட்டு எடுத்து மாட்டினார்.  பெரிய அரசஇழைவடிவிலான இரும்புப் பூட்டு அது. உஷா அவருக்கு பூட்டை எடுத்துக்கொடுப்பதற்காக திரும்பி ஓடி வந்தாள்.

“நானே பூட்டிக்கிறேன்..நீ  சுருக்க வூட்டுக்கு ஓடு,”என்று அவர் கத்தினார். அவர் குரல் இரும்பு ட்ரம்மை குச்சியால் அடிப்பதைப்போல அழுத்தமாக ஒலித்தது.



 அவள் திரும்பி தார்சாலையின் கிழக்கு திசையில் நடந்தாள். தலைமயாசிரியரின்  சாம்பல் நிற ஸ்கூட்டி அவர்களை  கடந்து சென்று நின்றது. அவர் அவர்களை விரைவாக வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு வண்டியை முடுக்கினார்.  பாஸ்கர் அவளை திரும்பிப் பார்த்து நின்றான். 

“எல்லாப்பிள்ளைகளும் வூட்டுக்கு போயிருச்சு. நம்ம வாத்தியாரு சீக்கீரம் போவச்சொன்னாருல்ல,”

“என்னால பையத்தூக்கிக்கிட்டு ஓட முடியலடா,”

சாந்தி அவர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றாள். உஷா  தார்சாலையில் இருந்து சந்திற்குள் இறங்கினாள். பாஸ்கர் தயங்கி நின்றான்.

“ந்தா பாரு பிள்ள.. சந்து பொந்துல ஓடாம…தார்ரோட்டு வழியா நேர் வழியில போவச்சொன்னாங்கல்ல,” என்ற சாந்தி அவளின் கையை பிடித்து இழுத்தாள்.

“அங்க ஒருநாய் குட்டிப்போட்டுருக்கு. மூணுகுட்டி…புசு புசுன்னு சுருண்டு படுத்திருக்கு…”

பாஸ்கரும் சாந்தியும் தாங்கள் அவளுடன் வரவில்லை என்று சொல்லிவிட்டு நேராக தார்சாலையில் ஓடினார்கள். தார்சாலை திரும்பும் முடக்கில் இருக்கும் டீக்கடை அதிசயமாக மூடியிருந்தது. அங்கு கொஞ்ச நேரம் நின்று தட்டியில் ஒட்டப்பட்டிருந்த திரைப்படத்தின் சுவரொட்டியைப் பார்த்தாள்.

பின் மெதுவாக நடந்து சுரேஸ் வீட்டின் சந்திற்குப் பின்னால் இருந்த அரசமரத்து கல்கட்டில் பையை இறக்கி வைத்தாள். பழையகாலத்து கருங்கல்கட்டு மேடை அது. பழுத்த இழைகள் மஞ்சளாக மேடைமுழுவதும் உதிர்ந்து கிடந்தன. எங்கும் உக்கிரமான வெயில் சலனமில்லாது படிந்து கிடந்தது. அரசமரத்திற்கு கீழே சற்றுத்தள்ளி மேற்கு புறம் கம்பி தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த செல்லியம்மன் விழி நிறைய சினத்துடன் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள். 

உஷா பாவாடையை சுருட்டியபடி கல்மேடையில் அமர்ந்தாள். பளபளக்கும் சிவப்பு நிற பாவாடை அசைய அமர்ந்திருக்கும் செல்லியம்மனை தலையை சாய்த்துப் பார்த்தாள். தன்னைப்போல ஆறாம் வகுப்பு படிக்குமோ? இல்லையில்லை சின்னப்பிள்ளையா இருக்கே. ஐஞ்சாப்பு தான் என்று அவளே சொல்லிக் கொண்டாள். எந்தப்பள்ளிக்கூடத்துல படிக்கும்? என்ற யோசனையை தள்ளி வைத்துவிட்டு எழுந்தாள்.

உதிர்ந்து கிடந்த இலைகளில் ஒன்றை பொறுக்கி சுருட்டி குழல் போல ஊதினாள். சத்தம் வரவில்லை. அங்கே கிடந்த கருங்கல் பாறையில் ஏறி நின்றாள். இடிந்த மண்சுவருக்கு அப்பால் பெரியநாய் படுத்திருந்தது. அதன் வயிற்றுப்பக்கத்தில் முன்று நாய்க்குட்டிகள். புசு புசு வென்று என்று தேங்காய்பூ துண்டு போல சுருண்டு படுத்திருந்தன. அதில் இரண்டு குட்டிகள் கருப்பு,ஒன்று செவலை.

கல்லில் இருந்து இறங்கி நெருஞ்சி செடிகளில் கால்படாமல் தாவித்தாவி ஓடினாள். பாதி நின்ற செம்மண் சுவருக்கு இந்தப்பக்கமே நின்று சுவரில் கையூன்றிக் கொண்டாள். வெயில் ஏறிக்கொண்டிருந்தது. குட்டிகளின் மடங்கி இருந்த சிறிய காதுகளை, ஏறி இறங்கும் வயிறை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வியர்த்து வழிந்தது. துடைப்பதற்காக பாவாடையை பிடித்தபடி குனிந்தாள். ஊதா நிற அரைப்பாவாடை அணிந்திருந்தாள்.

“பாவாடையைத் தூக்கறப்ப  அக்கம் பக்கம் ஆளிருக்காங்களான்னு பாக்கனும்.  பொட்டபிள்ளைக்கு பதிவுசு  இருக்கனும்,” என்று எப்பொழுதும் திட்டும்  அப்பாயியின் கத்தல் நினைவிற்கு வந்தது. சட்டென்று பாவாடையை கீழே விட்டாள். திரும்பி சுற்றிலும் பார்த்துவிட்டு பாவாடையால் முகத்தை துடைத்தாள். மொத்தமான பாவாடை ஈரத்தை உறிஞ்சவில்லை.

மீண்டும் நாய்க்குட்டிகளை பார்க்கத் தொடங்கினாள். குட்டிகள்  பாலுக்காக காம்பை சப்பத் தொடங்கியிருந்தன. அய்யே..என்று சிரித்து கண்களை மூடிக்கொண்டாள். நாய்க்குட்டிகளை மட்டும் பார்ப்பதற்காக பாதிக்கண்களை  திறந்தாள். மரத்திலிருந்து காகங்கள் பறந்து இலைகளை  உதிர்த்துவிட்டது. பெரியநாய்  தலையை உயர்த்தி விருட்டென்று பார்த்தது.

அது அவளைப் பார்த்து  ற்ற்…ற்ற் என்று  பற்களை காட்டி உறுமியதும் அவள் அரசமரத்திடம் ஓடி வந்தாள். இன்னொரு இலையை எடுத்து சுருட்டி ஊதினாள். இந்த முறை பச்சையான இலையை  வசமாக சுருட்டியதால் சத்தம் எழும்பியது. பீபீபீ… என்று ஊதிக்கொண்டே பையை எடுத்துக் கொண்டு சந்திலிருந்து நடந்து தார்சாலையில் ஏறினாள்.

முடக்கில் கருப்பு நிற ஜீப் ஒன்று நின்றது. மேற்கூரை இல்லாத வண்டி. பள்ளிக்கு அருகில் உள்ள  தேநீர்க்கடையில் அவள்  எப்போதும்  பார்க்கும்  தாத்தா வண்டிக்கு பின்புறம் நின்றார். உள்ளே யாரோ ஒருவர் படுத்திருந்தார். கால்கள் மட்டும் ஆடிக் கொண்டிருப்பது தெரிந்தது. அவள் உற்று பார்த்தபடி ஜீப்பை நோக்கி நடந்து அருகில் சென்றாள்.

உயரமான ஒருவர் சட்டென்று திரும்பி,“ஏய்… அந்தப்பிள்ளைய அந்தட்டம் நவுத்துடா,” என்றார். அந்தப்பக்கம் நின்றவர் ஓடி வந்து அவளின் தோளைத் திருப்பினார். அப்படியும் அவள் பார்த்துவிட்டாள்.

அவள் கால்கள் நடுங்கத் தொடங்கின. ஒரு உடல் தளர்ந்து கிடக்க பாதி அறுபட்ட தலையிலிருந்து ரத்தம் ஊறி வழிந்திருந்த சட்டை வேட்டியுடன் அந்த உருவம் சரிந்து கிடந்தது. அந்த உடல் முழுவதும் வெட்டி இழுத்து ஒரு முறை அதிர்ந்தது. உடல் ஒருமுறை துள்ளியது. மாடு அடிவயிற்றிலிருந்து கத்துவதைப்போல ஒரு சத்தம். அவளின் அடிவயிறு கூசியது. உடலை குறுக்கி படுத்துக்கொள்ள வேண்டும் போல இருந்தது. அடிவயிற்றிலிருந்து ஏதோ ஒன்று நெஞ்சுக்கு பாய்ந்து அழுத்தியது.

அவள் தோளைப்பிடித்து நகர்த்தியவர் எதோ சொன்னார். அவளுக்கு சரியாக விளங்கவில்லை. கால்கள்  எடுத்து வைக்க முடியாதபடிக்கு தள்ளாடின. சட்டென்று பின்புறமிருந்து ஜீப் சத்தம் ஒலித்ததும் அவளின் உடல் திடுக்கிட்டு அதிர்ந்து தரையில் விழுந்தது.

அவள் அருகில் காலடி சத்தங்கள் கேட்டன. ஒருவர் அவளை உட்கார வைத்து முதுகில் கைத்தாங்கலாக பிடித்தார். சூரியஔி கண்களை கூசி மறைக்கவும் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“ஏட்டு…தூக்கி தோளுல போடு..”

“யாரு வூட்டு பிள்ள..”என்ற குரல்கள் மாறி மாறி கேட்டன. ஒரு கை அவளை தோளில் இறுத்திக்கொண்டது. அப்படியே தோளில் சாய்ந்து கொண்டாள். அந்தக்கை அவள் முதுகை மெதுவாக இரண்டு முறை தட்டிவிட்டு முதுகிலேயே இருந்தது. அவள் எதையோ முணுமுணுத்தாள்.

“பிள்ள தகப்பன தேடுது சார்…பாவம்,”

 “ஆம்பளயாளுக ஒருத்தனும் வெளிய தலைகாட்டப்பிடாது.  ஒம்பொண்டாட்டிய வரச்சொல்லு …” 

“எந்த நேரத்துக்கே ஸ்கூல் விட்டுருச்சு ஏட்டு…”

“ஊரே சுத்திட்டு வரும்…இதெல்லாம் நம்ம கண்ணுல படாம சந்து போந்துல நடந்து வந்திருக்கும்,”

அவர்கள் நடக்கும் காலடிஓசைகளும், காக்கைகளின் சிட்டுக்குருவிகளின் ‘ கா.. கா..கிச்.கிச்..’ ஓசைகளும் கலந்து கேட்டது.

“சார்..அதோ அந்த கம்பத்து வூடு தாங்க…”

“சரி..சரி..நீ போ..”

“இந்தப்பிள்ளக்கு வேர்வையில சட்டையே நனைஞ்சுருச்சு சார்,”  

“பயந்திருச்சு…நமக்கே என்னடான்னு போயிருச்சுல்ல. கெடா வெட்றாப்ல..இன்னொருத்தன நுங்கு சீவறாப்ல அங்கங்க சீவி போட்டுருக்கான். ஆறுபேர தொரத்தி தொரத்தி ஒருத்தனே வெட்டியிருக்கான் பாத்துக்க. வயசுப்பய கையில கத்திய குடுத்தா இப்படித்தான்,”

கொஞ்சநேரம் அவளுக்கு அப்பாயியின் சத்தமும், பேச்சுக்குரல்களும் கேட்டன. பின் சத்தங்கள் நின்று அப்பாயியின் குரல் மட்டும் கேட்டது.

“ஏய் தாண்டவா..இங்கன கொஞ்சம் வந்துட்டு போ. பிள்ள பயந்துருச்சுய்யா…சுருக்க வாடான்னா,” என்று அப்பாயி கத்தியது. அவள் முற்றத்துக் கட்டிலில் படுத்திருந்தாள்.

“அடுப்பு கங்குல இரும்பு கரண்டி காம்பை போடுக்கா,” என்ற தாண்டவன் தாத்தாவின் குரல் அவள் அருகில் வந்தது. நெற்றியில் அவரின் கை சொரசொரப்பாகத் தொட்டுத்தடவியது. கண் இமைகளை வழுக்கட்டாயமாக இழுத்துப் பிரித்தார்.

அவளின் மணிக்கட்டை பற்றினார். சிறிது நேரம் சென்று தன் கைக்குள்  மணிக்கட்டை சுற்றிப் பிடித்தார். நெற்றியில் திருநீறை பூசிவிட்டார்.

“ஒன்னுமில்ல..ஒன்னுமில்ல..அந்த கரண்டியை எடுத்தா..திடுக்குத்தண்ணி குடுத்துப் பாப்போம்”

சுர்ர் என்ற சத்தம் எழுந்தது. கையிலிருந்த மோர் சொம்பில் சுடுகரண்டிகாம்பை விட்டு கலக்கி எடுத்தார். 

அவளை இடது கையால் தூக்கிப்பிடித்து, “இதை குடிச்சுட்டு படுத்துக்கம்மா,”என்று வாயில் செம்பை வைத்தார். மோர் புளிப்பு சுவையுடன் வெது வெதுப்பாக அவள்  தொண்டையில் இறங்கியது

“திடுக்குத் தண்ணி குடிச்சிருச்சு..ஒன்னும் பயமில்ல. பசி நேரம்..வெயில் வேற. பாக்கக்கூடாதத பாத்திருச்சுல்ல...அதான்” என்றபடி நெற்றியை தடவி படுக்க வைத்தார்.

“ஒங்க ஆள தொடையில ரெண்டு மூணு எடத்துல சீவி போட்டுட்டாங்களாமே,”

“எத்தன பேரு வெட்டுனானுங்க. வெட்டுபட்டவனுங்க எத்தன பேருன்னே இன்னுமும் தெரியலையேய்யா,”

“ஆமாமா..”

“மச்சினனுக்கு என்ன ஆச்சோன்னு இந்தப்பிள்ளையோட அப்பன் பஸ் ஏறிட்டான். அப்பனும் ஆத்தாளும் அங்க போயிட்டாங்க. பள்ளிக்கூடம் விட்டு ஊரு சுத்திப்பிட்டு  இதுக்கு இப்பதான் வூடு தெரிஞ்சிருக்கு,”

“உங்காளு பொழச்சு வருவாரோ என்னமா,”

“வந்திருவான். இவனுக்கெதுக்கு பைசலும் பஞ்சாயத்தும் . ஊரு மெக்க அலைஞ்சா..இப்டித்தான் ஆவும்,”

“தாத்தன் காலத்துலருந்து போறாங்க..இன்னிக்கு போறப்ல புதுசா பேசறியே,” 

“அத விடு..இந்தப் பிள்ளையப்பாரு. பொட்டப்பிள்ளைன்னா  சொன்ன பேச்சக்கேட்டா தானே…ஊர்சுத்திட்டு கண்டத பாத்துட்டு வந்திருக்கு. சொன்னா இவங்கப்பனுக்கு கோவம் அய்யாத்து தண்ணியாட்டமா பாஞ்சுக்கிட்டு வரும்…”

அப்பாயி போர்வையை போர்த்திவிட்டது. அன்று ஒருநாள் பெரியசாமி கோவிலில் பாதி கத்தியுடன் தெறித்த ஆடு அவள்  கண்ணில் வந்தது. அய்யா….அய்யா என்று பதறினாள். தாண்டவன் தாத்தாவின் கை அவள் முதுகை தடவியது.



“மனசுக்கு  போதம் சரியில்லக்கா…தூங்கி எந்திருச்சா  சரியாப்போயிடும்…”

அவள் கண்களுக்குள் கருப்பும் சிவப்புமாக ஔியிலைகள் பிரிந்தன. செஞ்சிவப்பு விரிந்தது. பின் கருமை. கட்டிலுக்கு அடியில் விரிந்து சென்ற கரும்பரப்பு ஆழஆழமாக நகர்ந்தது. அதில் அவள் சருக்கி விழுந்து கொண்டிருந்தாள்.

அவள் ஆழத்திலிருந்து அழைத்தாள். ஒரு கை நீண்டு வந்து அவளைப்பிடித்து தூக்கியது. அவனின் இடது தொடை இரண்டாக உடைந்து தொங்கியது. ரத்தம் வழிந்து கொண்டிருக்க அவன் புன்னகைத்தான். தன் நீண்ட கையை இன்னும் நீளமாக நீட்டி பொம்மை போல அவளைத் தூக்கி ஆற்றின் அக்கரையில் வைத்தான். அவள் திரும்பிப்படுத்துக் கொண்டாள்

 எதிரே முற்றத்து செம்பருத்தி செடி நிழலில்  தாண்டவன் அமர்ந்திருந்தார். வெற்றிலைபாக்கை சிறிய இரும்பு உரலில் குத்திக்கொண்டிருந்தார். விரலை விட்டு விழுதை தோண்டியெடுத்து அப்பாயிடம் கொடுத்தார். நானும் கொஞ்சம் வாயில் போட்டுக்கொண்டு மீண்டும் உரலை தலைகீழாக இடது உள்ளங்கையில் கவிழ்த்தார்.

“பிள்ள பேச்சுக் குரல் கேக்குதே,” என்று எழுந்து அருகில் வந்தார். குனிந்து அவள் பேசுவதை உற்றுக்கேட்டார். சிரித்தபடி அப்பாயியை அருகில் அழைத்தார். அவள் பேசுவதைக்கேட்ட அப்பாயி நிமிர்ந்து இடுப்பில் கையூன்றி நின்றது.

“துரியோதனன் கனவுல வந்திருப்பானோ. நல்லதா கெட்டதா…”

தாண்டவன் தாத்தா வெளியே சென்று வெற்றிலையை துப்பிவிட்டு வந்தார்.

“கீழ விழுந்துட்டா தூக்கிவிடற தாட்டியமுள்ளவனத் தானே கூப்புடுவோம். சரியான ஆளத்தான் உம்பேத்தி கூப்புடுது,”

“இவங்கப்பன் எப்பப்பாத்தாலும் கதை சொல்லிக்கிட்டுருப்பான். நேத்து ராவு கூட பின்னாடி வேப்பமரத்துக்கடியில ஒக்காந்து கத கேட்டுச்சு..அந்த நெனப்புல பேசுது,”

“ம்மாடீ…ந்தா இப்ப துரியோதனன் வந்திருவான். தூங்கு…” என்று அவள் தலையைத்தடவியப்பின்,“துரியாதனரே எறங்கி வாரும்..எம்பிள்ளைக்கு மனசு ஒருமிக்கறவரைக்கும் எந்தரூபத்துலயாச்சும் கூடவே இருய்யா,” என்று கண்களை மூடி கும்பிட்டு அவள் தலையில் கைவத்து விட்டு வெளியேறினார்.

பொழுது இருட்டத்தொடங்கியிருந்தது. அவள் எழுந்து கட்டிலில் அமர்ந்தாள். முற்றத்தில் குண்டு பல்ப்பின் மஞ்சள் வெளிச்சம் தண்ணீரில் எண்ணெய் பிசுகைப்போல பரவியிருந்தது. கட்டிலில் கால்களை குறுக்கியபடி அமர்ந்தாள். வெள்ளைத்தாளை எண்ணெயில் நனைத்து குண்டுபல்பின் அருகே தொங்கவிட்டிருந்தார்கள். அதில் சிறுபூச்சிகளின் கண்ணாடி சருகு போன்ற மிகச்சிறிய இறக்கைகள் ஒட்டிக்கொள்ள பறக்கமுடியாத துடிப்புக்கூட இல்லாது பூச்சிகள் ஓவியம் போல அசையாமல் இருப்பதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். கால்களில் உளைச்சல் இருந்தது. கீழே இறங்கி நடக்கலாமா வேண்டாமா என்று தரையை பார்த்தபடி குனிந்திருந்தாள். மீண்டுமம படுத்து உறங்கிப்போனாள்.

செல்லிஅம்மனின் சிவந்த பாவாடை காற்றில் ஆடியது. உறுமிய பெரிய நாயின் நாக்கு சிவப்பு அவளை நோக்கி நீண்டு வந்தது. பின் மெதுவாக அது குட்டிகளின் உடலை நக்கியது. அவை பால்காம்புகளை பற்றி இழுத்தன. அவள் கண்களை மூடி சிரித்துக்கொண்டாள். செல்லி அம்மனின் முகத்தை பார்த்து நிமிர்ந்தாள். சிரித்த கண்களுடன் அவளை விளையாட வரச்சொல்லி அழைத்தாள். செல்லியின் கைகளில் அந்த மூன்று நாய்க்குட்டிகளும் இருந்தன. அய்யாவின் குரல் கேட்டது. அப்பாயி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தது. அவரின் பதைப்பான குரல் அவள் அருகில் வந்து நின்றது. கண்களை திறந்து பார்த்தாள்.

சட்டென மிரட்சியில் விழிமணிகள் விரிந்தன. பின் கண்களை மூடிக்கொண்டாள். அவர் குனிந்து அவளின் கண்கள் நிலைத்த இடத்தைப் பார்த்தார். வெள்ளை சட்டையில் பரவியிருந்த ரத்தம் கரும் சிவப்பு நிறத்தில் காய்ந்திருந்தது. அவர் சட்டையை கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவள் கண்களுக்குள் சிவப்பு வண்ணம் சுழன்று கருமையாகத் தொடங்கியது. அவர் கைகளின் தண்மை அவள் கன்னத்தை தட்டியது. அவள் கண்களை திறக்க முயற்சி செய்தாள். இமைகளுக்கு அடியில் விழிமணி உருண்டு அசைந்தது. கண்களுக்குள் மீண்டும் மீண்டும் செந்நிறம் விசிறி அலைந்தது. துள்ளி விழுந்தது. “உஷா எந்திரி,” என்று திரும்பத்திரும்ப அய்யா அழைத்துக் கொண்டிருந்தார்.













Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...