Skip to main content

மதுரம்

 https://youtu.be/zpHNHJCzmxI


செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன். 

'மதுரம் ஜீவாமிர்த பிந்து' 

எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார். 

சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புதமாக நடித்திருப்பார். தந்தை அவமானப்படும் முதல் சில நிமிஷங்களை கண்டும் காணாமல் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பார். தன்னை அறியாமல் அவர் ஆவேசம் கொள்ளும் இடமே படத்தின் ஆன்மா. அவர் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டுவிடும்.

சிறையில் இருந்து திரும்பி வரும் போது தந்தை குடிகாரராக இருப்பார். தங்கை நடிக்கச்செல்வார். வீடே அவர் வீடாக இல்லாமலிருக்கும். வீட்டில் இருந்து வெளியே தங்கி சம்பாதிக்கும் சிறுதொகையை தன்னால் இறந்தவரின் மகனுக்கு அனுப்புவார்.

தன்னுடன் பணிக்காக தேர்வெழுதிய சகவயதினர் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியாக தினமும் கையெழுத்திடுவார்.

இந்தப்படத்தில் 'இந்த ஜீவிதம் மதுரம்' என்று மோகன்லால் உணரக்கூடிய இடம் மிக மிக மெல்லிய ஒரு இடம். 

மோகன்லாலின் நடிப்பு அவர் முகத்தில் நடையில் உடல்மொழில் பார்வையில் புருவங்களில் என்று அற்புதமாக  வெளிப்படும் பாடல் இது. 'ஏட்டன் வல்லியதொரு ஆர்ட்டிஸ்ட்டானு' என்று எத்தனையோ பேர் சொல்வதைப்போல நானும் சொல்கிறேன்.

மானுடர்க்கு சாய்ந்து கொள்ள மரங்களின் மடியை எப்போதும் இந்த நிலம் அருளியிருக்கிறது. 

'பாடுமீ ஸ்னேக ரூபம் போல

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

'நின் விரல் பூத்தொடும் போழ்தென் நெஞ்சில்

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

வீட்டில் அன்னையின் பூவிரலாக இருப்பது வேறிடத்தில் பால் நிலவின் ஔியாகவும்,மென்காற்றாவும்,சாய்ந்து கொள்ளும் விருட்சத்தின் வேராகவும் இருக்கிறது. இங்கு நாம் இழந்த அரியவை அனைத்தும் இன்னொரு வடிவில் பெறக்கூடியவை தானா?


Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...