Skip to main content

மதுரம்

 https://youtu.be/zpHNHJCzmxI


செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன். 

'மதுரம் ஜீவாமிர்த பிந்து' 

எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார். 

சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புதமாக நடித்திருப்பார். தந்தை அவமானப்படும் முதல் சில நிமிஷங்களை கண்டும் காணாமல் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பார். தன்னை அறியாமல் அவர் ஆவேசம் கொள்ளும் இடமே படத்தின் ஆன்மா. அவர் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டுவிடும்.

சிறையில் இருந்து திரும்பி வரும் போது தந்தை குடிகாரராக இருப்பார். தங்கை நடிக்கச்செல்வார். வீடே அவர் வீடாக இல்லாமலிருக்கும். வீட்டில் இருந்து வெளியே தங்கி சம்பாதிக்கும் சிறுதொகையை தன்னால் இறந்தவரின் மகனுக்கு அனுப்புவார்.

தன்னுடன் பணிக்காக தேர்வெழுதிய சகவயதினர் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியாக தினமும் கையெழுத்திடுவார்.

இந்தப்படத்தில் 'இந்த ஜீவிதம் மதுரம்' என்று மோகன்லால் உணரக்கூடிய இடம் மிக மிக மெல்லிய ஒரு இடம். 

மோகன்லாலின் நடிப்பு அவர் முகத்தில் நடையில் உடல்மொழில் பார்வையில் புருவங்களில் என்று அற்புதமாக  வெளிப்படும் பாடல் இது. 'ஏட்டன் வல்லியதொரு ஆர்ட்டிஸ்ட்டானு' என்று எத்தனையோ பேர் சொல்வதைப்போல நானும் சொல்கிறேன்.

மானுடர்க்கு சாய்ந்து கொள்ள மரங்களின் மடியை எப்போதும் இந்த நிலம் அருளியிருக்கிறது. 

'பாடுமீ ஸ்னேக ரூபம் போல

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

'நின் விரல் பூத்தொடும் போழ்தென் நெஞ்சில்

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

வீட்டில் அன்னையின் பூவிரலாக இருப்பது வேறிடத்தில் பால் நிலவின் ஔியாகவும்,மென்காற்றாவும்,சாய்ந்து கொள்ளும் விருட்சத்தின் வேராகவும் இருக்கிறது. இங்கு நாம் இழந்த அரியவை அனைத்தும் இன்னொரு வடிவில் பெறக்கூடியவை தானா?


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...