Skip to main content

மதுரம்

 https://youtu.be/zpHNHJCzmxI


செங்கோல் என்ற மலையாளத் திரைப்படத்தின் பாடல். மூன்று ஆண்டுகளுக்கு முன் அடிக்கடி கேட்கும் பாடல். ப்ளே லிஸ்ட்டில் முதலில் உள்ள பாடல். இன்று ஏனோ கேட்க வேண்டும் என்று தோன்றியது. 

இந்தப்படத்தை பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் எழுதியிருந்தார். இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட படம்.  என்னுடைய 'கொறச்சு அறியும்' மலையாளத்தை வைத்து நானாக புரிந்து கொண்ட படம். தமிழ் தெரிந்தவர்கள் மலையாளத் திரைப்படங்களை புரிந்து கொள்ளலாம்.

இந்தப்பாடலையுமே அப்படித்தான் புரிந்து வைத்திருக்கிறேன். 

'மதுரம் ஜீவாமிர்த பிந்து' 

எந்த நிலையில் இருந்தாலும் இந்த வாழ்க்கை இனிது என்று சொல்லும் இந்தப் பாடல் படத்தில் வரும் இடம் முக்கியமானது. மோகன்லால் சிறையில் இருந்து விடுதலையாகி தினமும் உள்ளூர் காவல்நிலையத்தில் கையெழுத்திடும் நிலையில் இருப்பார். 

சிறைக்கு செல்லும் முன் காவல் துறை பணிக்கான தேர்வு எழுதி நேர்முகத் தேர்விற்காக காத்திருக்கும் இளைஞர் அவர். காவலரான தன் தந்தையை தெருவில் அவமானப்படுத்தும் ரௌடியை அடிப்பதால் குற்றவாளியாவார். அதற்கு முந்தின காட்சியில் மோகன்லால் அற்புதமாக நடித்திருப்பார். தந்தை அவமானப்படும் முதல் சில நிமிஷங்களை கண்டும் காணாமல் உணர்வுகளை அடக்கிக் கொண்டிருப்பார். தன்னை அறியாமல் அவர் ஆவேசம் கொள்ளும் இடமே படத்தின் ஆன்மா. அவர் வாழ்க்கையையே திசை திருப்பிவிட்டுவிடும்.

சிறையில் இருந்து திரும்பி வரும் போது தந்தை குடிகாரராக இருப்பார். தங்கை நடிக்கச்செல்வார். வீடே அவர் வீடாக இல்லாமலிருக்கும். வீட்டில் இருந்து வெளியே தங்கி சம்பாதிக்கும் சிறுதொகையை தன்னால் இறந்தவரின் மகனுக்கு அனுப்புவார்.

தன்னுடன் பணிக்காக தேர்வெழுதிய சகவயதினர் பணிபுரியும் காவல் நிலையத்தில் ஒரு குற்றவாளியாக தினமும் கையெழுத்திடுவார்.

இந்தப்படத்தில் 'இந்த ஜீவிதம் மதுரம்' என்று மோகன்லால் உணரக்கூடிய இடம் மிக மிக மெல்லிய ஒரு இடம். 

மோகன்லாலின் நடிப்பு அவர் முகத்தில் நடையில் உடல்மொழில் பார்வையில் புருவங்களில் என்று அற்புதமாக  வெளிப்படும் பாடல் இது. 'ஏட்டன் வல்லியதொரு ஆர்ட்டிஸ்ட்டானு' என்று எத்தனையோ பேர் சொல்வதைப்போல நானும் சொல்கிறேன்.

மானுடர்க்கு சாய்ந்து கொள்ள மரங்களின் மடியை எப்போதும் இந்த நிலம் அருளியிருக்கிறது. 

'பாடுமீ ஸ்னேக ரூபம் போல

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

'நின் விரல் பூத்தொடும் போழ்தென் நெஞ்சில்

மதுரம் ஜீவாமிர்த பிந்து'

வீட்டில் அன்னையின் பூவிரலாக இருப்பது வேறிடத்தில் பால் நிலவின் ஔியாகவும்,மென்காற்றாவும்,சாய்ந்து கொள்ளும் விருட்சத்தின் வேராகவும் இருக்கிறது. இங்கு நாம் இழந்த அரியவை அனைத்தும் இன்னொரு வடிவில் பெறக்கூடியவை தானா?


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...