Skip to main content

எட்டா வாழ்வை எட்டும் கதைகள்


         எழுத்தாளர் இராசேந்திர சோழன்


எட்டாத வாழ்வை எட்டும் கதைகள் என்ற கட்டுரை நூலிற்கான தொகுப்புரை:

சிற்றில் நண்பர்கள் குழு சார்பாக எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு, குமரகுரு பன்முக கலைகல்லூரியில் எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

ஏற்கனவே சிற்றில் சார்பாக எழுத்தாளர்கள் எம்.கோபாலகிருஷ்ணன்,யுவன் சந்திரசேகர்,யூமாவாசுகி,விட்டல்ராவ் மற்றும் வண்ணநிலவன் ஆகியோருக்கு ஒருநாள் கருத்தரங்கு நடைபெற்றுள்ளது.



“எட்டாத வாழ்வை எட்டும் கதைகள்” கருத்தரங்குக்கு தலைமையுரையாற்றி எழுத்தாளர் சு.வேணுகோபால் கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இரண்டாம் அமர்வாக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒருங்கிணைத்த இராசேந்திர சோழன் புனைவுலகம் சார்ந்து எழுத்தாளர்கள் ஹரிஸ், சிவப்ராசாத், கோகுல் பிரசாத் ஆகியோர் உரை வழங்கினார்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பேராசிரியர்  திலீப்குமார் இராசேந்திர சோழன் எழுதிய நாடகங்கள் பற்றிய உரையை வழங்கினார். மேலும் அவருடைய நாடகக் குழு எழுத்தாளர் இராசேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நகைச்சுவையுடன் நிகழ்த்திக் காட்டினார்கள். அபுனைவு அரங்கையும், நிறைவு விழா அரங்கையும் எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் ஒருங்கிணைத்தார். பேரா மானசீகன், பேரா பா.ரவிக்குமார், சீனு தமிழ்மணி மற்றும் பத்திரிக்கையாளர் மாயவன் கண்ணன் ஆகியோர் நெகிழ்வான செறிவான சிறப்புரைகளை வழங்கினார்கள்.


குமரகுரு பன்முக கலை கல்லூரி நிர்வாகமும், தமிழ்துறையும், விஸ்காம் துறையும் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள். இந்த நிகழ்வில் கல்லூரியின் தமிழ் துறை மாணவர்கள் பங்கேற்றார்கள். அதுவே ஒரு எழுத்தாளுருக்கு செய்யும் மரியாதை என்று நினைக்கிறோம். ஒரு எழுத்தாளரை அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்லும் இந்த வாய்ப்பிற்காக இந்த நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர்கள், ஏற்பாடு செய்தவர்கள் என்று உறுதுணையாய் இருந்த  அனைவருக்கும் உளம் நிறைந்த நன்றிகள்.


எட்டாத வாழ்வை எட்டும் கதைகள் என்ற தலைப்பில் நடந்த ஒருநாள் கருத்தரங்கை ஆவணப்படுத்தும் விதமாக இந்த கட்டுரை தொகுப்பு தொகுக்கப்பட்டுள்ளது. கருத்தரங்கில் பேசியவர்களில் கட்டுரைகளும் மேலும் சிற்றில் குழுமத்து நண்பர்கள் சிலரது கட்டுரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கட்டுரைத்தொகுப்பில் எழுத்தாளர் ராசேந்திரசோழன் படைப்புலகம் பற்றி பன்முகப்பார்வை கொண்ட கட்டுரைகள் உள்ளன. எழுத்தாளரின் படைப்புலகை பலகோணங்களில் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த தொகுப்பு அமைவதே இதன் முக்கியத்துவமாக நினைக்கிறோம்.


எழுத்தாளர் சு.வேணுகோபால், புயலாக நுழைந்து பனியாக நின்ற இராசேந்திர சோழன் என்ற தனது கட்டுரையில் எழுத்தாளரின் சிறுகதை உலகம் பற்றிய மிக விரிவான பார்வையை முன்வைக்கிறார். எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் சமூகமனிதன் என்ற தலைப்பில் எழுத்தாளரின் தனிப்பட்ட ஆளுமை பற்றி  எழுதியுள்ளார். எழுத்தாளர் ப.சுடலைமணி பின் நவீனத்துவ புரிதல் என்ற தலைப்பில் எழுத்தாளரின் பின்நவீனத்துவம் பித்தும் தெளிவும் என்ற நூல் பற்றி எழுதியுள்ளார். எழுத்தாளர் சிவப்ரசாத் மார்க்சியமும் நவீனஅழகியலும் இணையும் புள்ளி என்ற தலைப்பில் எழுத்தாளரின் சிறுகதைகளை பற்றிய தன்னுடைய மூன்று விதமான பார்வையை முன்வைக்கிறார். 

 எழுத்தாளர் லாவண்யா சுந்தரராஜன் அதிகாரத்தின் பிடியில் என்ற தலைப்பில் எழுத்தாளரின் எழுத்தின் அடிநாதமான கலகக்குரலானது அதிகாரத்தின் பிடியை தீவிரமாக விமர்சனம் செய்கிறது என்ற பார்வையில் எழுதியுள்ளார்.


எழுத்தாளர் தி.பரமேசுவரி  ராஜேந்திரசோழன் பேசும் பெண்ணியம் என்ற தலைப்பில் அவரின் கட்டுரைகள் பற்றி எழுதியுள்ளார். பெண்ணியம் பேசுவதாக இருந்தாலும் மனித மாண்புக்கு அக்கறை தருபவர் என்றும் பெண்களுக்கான உரிமை சார்ந்த விஷயங்களில் அக்கறை  கொண்டவர் என்றும் பெண்ணியம் சார்ந்து இராசேந்திர சோழனின் பார்வையையும் எழுதியுள்ளார். எழுத்தாளர் அரிசங்கர் எதார்த்தம் என்பது கறைபடிந்த கருணையில்லாத ஒன்று என்னும் தலைப்பில் எழுத்தாளரின் படைப்புலகம் மற்றும் அவரின் கொள்கை சார்ந்த தனிவாழ்க்கையை இணைத்து எழுதியுள்ளார். இராசேந்திர சோழனின் படைப்புகளும் அவரின் ஆளுமையும் சரியாக புரிந்துக்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை அரிசங்கர் வழியுறுத்துகிறார். எழுத்தாளர் ஹரீஷ் பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள் மற்றும் தோழர்கள் என்ற தலைப்பில் எழுத்தாளரின் சிறுகதைகள் பற்றிய தன் பார்வையை எழுதியுள்ளார். தமிழினி ஆசிரியர் கோகுல் ப்ரசாத் வருங்காலத்தை நோக்கும் எழுத்து என்ற தன் கட்டுரையில் இராசேந்திரசோழன் தன் எழுத்தில் கையாளும் ஆண்பெண் உறவுநிலைப் பற்றி எழுதியுள்ளார்.


மேலும் எழுத்தாளரின் ஏற்புரையும் இந்தத் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தக்கட்டுரைகள் அனைத்தும் இராசேந்திர சோழன் என்ற படைப்பாளியை,தனிமனிதரை,தனக்கென ஒரு தனி அரசியல் பார்வை கொண்ட சமூகமனிதரை பலகோணங்களில் முன்வைப்பதாக இருக்கும் என்று நம்புகிறோம். 


இராசேந்திரசோழன் பற்றி சிலவற்றை தொகுப்புரையில் கூற விழைகிறோம். இவர் எழுத்தாளராக மட்டுமின்றி அரசியல் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் இயங்கிய களச்செயற்பாட்டாளர். இந்து தமிழ் இதழிற்கு இவர் கொடுத்த நேர்காணலில்,  “அறிவு சார்ந்து அதிகாரம் செலுத்தாமல் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இயங்க வேண்டும் என்பது என் நம்பிக்கை’ என்று அமைப்பு சார்ந்து இயங்குவது பற்றி தன் நிலைப்பாட்டை கூறுகிறார். 

மேலும் ‘மார்க்ஸியம் வழிகாட்டிய குறிக்கோள் என்பது அறிவை ஜனநாயகப்படுத்துவது தான்’ என்று கூறுகிறார். அவர் எழுத்தின் அடிப்படை குறிக்கோளாக இயங்கியது என்ன? என்ற கேள்விக்கு ‘மக்களின் தேவை சார்ந்து இயங்க எண்ணினேன். அறிவை ஜனநாயகப்படுத்துவதற்கு அதுவே நல்ல வழி’ என்று சொல்கிறார்.


எழுத்தாளர்,இதழாளர்,நாடகஆசிரியர்,சமூக களப்பணியாளர்,ஆசிரிய சங்கங்களின் செயல்பாடுகள் என்று பன்முகம் கொண்ட ஆளுமையான இராசேந்திர சோழன் அவர்களின் எழுத்துலகு சார்ந்த இந்த கட்டுரை தொகுப்பை கொண்டு வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். 

‘எனக்கு இறை நம்பிக்கை இல்ல.  ஆனால் இறை மறுப்பு சார்ந்த பகுத்தறிவுவாதம் சமூகத்தில் மனிதனை மேலும் மேலும் அவநம்பிக்கைக்கு கொண்டு போகிற செயல்பாடாகவே முடியும் என்று நினைக்கிறேன். இறைநம்பிக்கையும் மத வெறியும் ஒன்றல்ல . எனக்கு மார்க்ஸியம் காட்டிய வழி அறிவை ஜனநாயகப்படுத்துவது தான்’ என்று அழுத்திக் கூறும் எழுத்தாளர் இராசேந்திர சோழன் அவர்களை வணங்கி இந்த தொகுப்பை சிற்றில் நண்பர்கள் குழு சார்பாக அவருக்கு சமர்ப்பிக்கிறோம்.


இந்த நூலை வெளியிடும் யாவரும் பதிப்பகத்திற்கு அன்பும் நன்றியும்.


                                                                                                                                                                கமலதேவி 

                                                                                                                                                             15.04.2023/ பா.மேட்டூர்

                                                                                                                                                             






Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

காலம் சிதறி கிடக்கும் வெளி

வரலாற்றுப் புத்தகங்களை ‘காலம் சிதறிக்கிடக்கும் வெளி’ என்று சொல்லலாம். ஒரு வரலாற்று புத்தகத்திற்குள் நுழைவது என்பது காலத்திற்குள் நுழைவது. ஒரு வரலாற்று ஆய்வாளரோ ,வரலாற்று ஆசிரியரோ எவ்வளவு தான் வகுத்து தொகுத்து எழுதினாலும், ஒரு வரலாற்று நூல் தன்னை வாசிப்பவர்களை திசையழிந்த பறவை போல காலத்தில் பறக்க வைக்கிறது. நம் மனதிற்கு உகந்த அல்லது நெருக்கமான வரலாறு என்றால் அந்த வாசிப்பனுபவத்தை தேன் குடித்த வண்டின் திசையழிதல் என்று சொல்லலாம்.                 [  முனைவர் வெ. வேதாசலம் ] முனைவர் வெ.வேதாசலம் அவர்களின் முதல் நூலான திருவெள்ளறை என்ற அவரின் முனைவர் பட்ட ஆய்வு நூலை வாசித்த அனுபவத்தை ‘காலத்துக்குள் திசையழிந்த அனுபவம்’ என்று சொல்வேன். ஆசிரியர் சங்ககாலத்திலிருந்து நம் காலம் வரை [1977], பல்லவர், சோழர் ,பாண்டியர் நாயக்கர் ,காலனியதிக்க காலகட்டம் வரை காலவாரியாக திருவெள்ளறையின் வரலாறு, அதன் சமூகஅமைப்பு,கோயில்கள்,கலை,மக்கள் என்று தொகுத்து ஆதாரபூர்வமான தரவுகளுடன், ஆண்டுகளுடன், கல்வெட்டு சான்றுகளுடன், அச்சு தரவுகளுடன் கொடுத்திருக்கிறார். ஆனால் ஒரு இலக்கியவாசகராக இ...