Skip to main content

போதவிழ் அகம்

 [2024 ஜூலை கவிதை இதழில் வெளியான வாசிப்பனுபவம்]

போதவிழ் அகம்

சங்கப்பாடல்களில் ‘போதவிழ் வான்பூ ‘ என்ற ஒரு சொல் உண்டு. மொக்கு போன்ற கூம்பிய இருள். ஔி வந்து தொட்டதும் பூவைப் போல பூத்த வானமாகிறது என்று சங்ககாலக் கவி சொல்கிறார். இங்கு இருள் என்பது கூம்பியிருத்தல். மொக்குக்குள் இருப்பதும் அதே பிரபஞ்ச இருள் தானே. இங்கு மொக்கு ஒரு குட்டி பிரபஞ்சமாவதை உணரமுடியும்.


ஒரே நேரத்தில்

பூக்க வைக்கும்

வேர்ப்பின்னல்


ஆயிரம்

அலைகளுக்கு அடியில்

இம்ம் என்றமைந்திருக்கும்

ஆழ்கடல்


ஈர்த்தும்

விலகியும்

சுற்றும்

அனைத்தையும்

தாங்கி நிற்கும்

கடுவெளி


என் ஆழத்து

அகவிழி


கல்பனா ஜெயகாந்த்தின் இந்தக்கவிதையில் இவர் சொல்லும் அனைத்திலும் அந்த மொக்கு வெவ்வேறு வடிவில் உள்ளது. அசையாத ஒரு தன்மை. ஔியோ, காற்றோ, எதுவோ வந்து தொட காத்திருக்கும் தவம். அல்லது வெறும் இன்மை. 

 மலர்தலுக்கும் விரிதலுக்கும் அசைவிற்கும் அடியில் உள்ள ஔியை, அசைவின்மையை, ,செறிவை எங்கெங்கிருந்தோ தொட்டெடுக்கும் கவிமனம் பின் தன்னுள்ளே அதை உணர்கிறார். அசையாத ஆழம். அதிகாலை குளம் போல. கன்னியின் மனம் போல. பெரியோர்கள் சொல்லும் அறிதலுக்கு முந்தைய நிலை போல அல்லது பிரபஞ்சம் உருவாவதற்கு முந்தைய நிலை போல. 

இறுதி வரியில் ஒரு குழந்தை கை சுட்டி சுற்றியிருப்பவரை தாய் தந்தை என்று சொல்லியப்பின் முதன்முதலாக தன் நெஞ்சை தொட்டு சொல்லதைப்போல தன்னில் முடிக்கிறார்.

இன்னொரு கவிதையில்…

காணா அவ்விழியின்

பெருநோக்கு

எதைக்கண்டதால்

விரியா அதன் இதழில்

இச்சிறுநகை என்று கேட்கிறார்.

மண்ணிற்குள் வேரில், பிரபஞ்ச கடுவெளியில், ஆழ்கடலில், பின் தன்னில் கூம்பிய மொக்கை மலர்த்தியது எது?

அகத்தை மலரச்செய்வது எதுவோ அதுவே இந்தக்கவிதைகளில் நகைக்கிறது. [எவையோ என்றும் சொல்லலாம்.  தான் என்று உணர்தலில் இருந்து ஞானம் அடைவது வரை.]

அதுவே ஒன்று பலவாகி மலர்கிறது. இம்ம் என்று அமர்ந்திருந்த அதுவே எண்ணற்ற  அலைகளாகிறது. ஈர்த்து விலகியும் நிற்கும் அதுவே சுழல்கிறது. பின் தான் என்றாகி லயிக்கிறது. அதன் பின் ஒவ்வொரு இதழாக மலர்கிறது. இந்த இருக்கவிதைகளில் உள்ளது ஒரு முடிவிலா வட்டம். பிரபஞ்சம் என்றும், அறிதல் என்றும், மனம் என்றும் உணரமட்டுமே முடிந்த ஒன்று. ஈதொன்றும் இல்லாமல் கூட இந்தக்கவிதையை வாசிக்கலாம். போதவிழ் அகம். எதனாலோ தொடப்பட்ட உள்ளம்.  


Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...