Skip to main content

படுகளம் நாவல் வாசிப்பனுபவம்

[படுகளம் நாவல் குறித்து எழுதிய கடிதம்]

அன்பு ஜெ,

வணக்கம்.
நலம் விழைகிறேன்.



படுகளம் நாவல் வாசித்தேன்.

ஒரு கலைஞனை வியாபார சூழல் தூண்டும் போது அவனுளிருக்கும் வியாபாரி விழித்துக் கொள்கிறான்.  பொதுவாக சாதாரணனிலிருந்து கலைஞன் விழித்துக்கொள்வது நடக்கும். ஆனால் இங்கு கலைஞனிலிருந்து வியாபாரி. ஏனோ தானோ என்றில்லை. அவன் கலைஞனில் இருந்து முழுமையான வியாபாரியாகும் தருணம் வரை. ஒரு விஸ்வரூபம். அந்த விளம்பரத் தட்டி எழுந்து நிற்பது போல அந்தக்கடைத்தெருவில் அவனும் எழுந்து நிற்கிறான்.
 
இந்த நாவலில் அவனுடைய மனவேகம் தான் கலையனுபவமாகிறது. ஆதர்சனமாக உணர்பவர்களின் பாதிப்பால் உருவாகும் வேகம். துரத்தப்படுகையிலும் ஓடும்போதும் உள்ளே சுரக்கும் உயிர்திரவத்தால் நிறைந்தது தான் காடு...பசி தோற்று உயிரிச்சை வெல்லும் தருணம் நாவலாகியிருக்கிறது.

'இரும்பு ராடு ஒன்று சீட்டின் அடியில் வைத்திருந்தேன். அதை என்ன செய்வது என்று தெரியவில்லை' என்ற வரியில் சட்டென்று கண்கலங்கியது. ' அதை தூக்கிப்போட்ரு' என்று தான் வாசிக்கும் போது முதலில் மனம் சொல்லியது. அது இல்லாமலிருந்தால் அவன் அழிந்து போயிருப்பான். ஒட்டுமொத்த நாவலே அது தான். தன்னுள் உள்ள இரும்பு ராடை அவன் உணர்ந்து ,வெளியே எடுத்து, பயன்படுத்தி ஓரமாக வைத்துவிட்டு வாழ்க்கைக்குள் நுழைகிறான். அது அங்கே ஓரமாக இருக்கிறது. அது அங்கேயே இருக்கட்டும் என்று தோன்றியது. கழுவி பூசையில் வைத்த பொருள் போல. 

முதன்முதலாக அவன் கடைவீதியில் வந்து அமர்ந்ததும் எனக்கு அபிமன்யூ நினைவில் வந்து கொண்டிருந்தான். நாவலின் முடிவில் அபிமன்யூ வெல்வதை பார்த்த குதூகலம் இருந்தது. நிரந்தரமாக இங்கிருக்கும் வியாபார பத்மவீயூகத்திற்குள்ளேயே வாழக் கற்றுக்கொண்ட அபிமன்யூ. அவன் முதல் கொலை முயற்சிக்கு தப்பி ஓடும்போது அந்தத்தெருவே பத்மமாக தோன்றியது. வாழும் வரை வெளியேற முடியாத பத்மம். அங்கேயே ஒவ்வொருவராக எதிர்கொண்டு வென்று உயிர்த்து சிறிது சிறிதாக உயிர்குறைந்து அங்கேயே மடிய வேண்டிய ஒன்று. அது பெறும் முதல் உச்சத்தை மட்டும் தொடும் நாவல். நாவலை முடித்தப்பின் அந்த படுகளபத்மத்தின் ஒவ்வொரு இதழாக விரிகிறது.

 நாவலை மனதில் விரியச்செய்வதில் முக்கிய பங்கு  வகிப்பது நாவலின் களம். பின்பு தருணங்களின் தவிர்க்க முடியாத தன்மை. எதிர்கொண்டே ஆக வேண்டிய தருணங்கள். தலைப்பில் நீங்களே சொல்வது போல படுகளத்தின் இயல்பே இந்த நாவலை நல்ல அனுபவமாக்குகிறது. 
இன்னொரு தளத்தில் அனைத்து செயல்களங்களும் அவ்வாறு தானே என்று தோன்றியது.
குடும்பத்திலிருந்து நாடுகள் வரை....  அந்த இரும்பு ராடு வெவ்வேறாக உருமாறுகிறது.

 கற்பனை உலகிலிருந்து வாழ்வின் எதார்த்ததனதில் நுழையும் ஒவ்வொருவரிடமும் அந்த ராடு வந்து சேரும் தருணத்தை அனைவரும் உணர்ந்திருப்போம். புதிதாக திருமணமாகி வரும் பெண்ணிலிருந்து நாட்டு எல்லை வரை. சாந்தமாக வருகிற பெண்கள் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பிடிவாதத்தை அவ்வபோது கையிலெடுப்பார்கள். அவர்கள் அந்த காலகட்டத்தை இறுதி வரை சொல்லிக்கொண்டிப்பதை பார்க்கலாம். அவர்களுக்கு மிக முக்கியமான தருணம் அது.

அழகானது மெல்லியது தீங்கு என்பதே அறியாதது உலகிலேயே அழகானது புழு. கூட்டின் அழுத்தத்தால், தான் வளருவதால் அது பட்டாம்பூச்சியாக மாறுவது ஒரு தருணம். இது வரை அந்த சிறகு வண்ணமயமானது அழகானததாக இருந்தது. இந்த நாவலில் அது காற்றை கிழிக்கும் கத்தியாக மாறியிருக்கிறது. அந்த கலைத்தருணத்திற்காக அன்பு.

அந்த காற்றே தான் அதன் உந்துவிசை...அது பறக்கும் வெளியும் கூட.  அந்த கத்தி கலைஞனுடைய கையிலிருப்பதால் தன் பதையில் உள்ள காற்றை மட்டுமே கிழித்து சென்று அது சிறகாகவே எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருக்கும்.

 அந்த காட்டின் வேட்டையில் தப்பித்து அந்த காட்டை தன் சிறகுகளால் அனுதினமும் அளக்கும் வண்ணத்துப்பூச்சி அந்த கலைஞன். உண்மையில் நடைமுறை அன்றாட வாழ்விலும் கூட கலைஞர்கள் அப்படியாகவே இருக்கிறார்கள். அண்மையில் ஒரு இசைக்கலைஞரை அப்படி உணர்ந்தேன்.

அன்புடன்,
கமலதேவி

Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...