Skip to main content

பிறப்பு

 

நித்தியம்


காற்றில் அசைகையில்

இலைளெல்லாம்

மலர்களாகிவிடுகின்றன.

காற்றற்ற போதும்

மலர்களைக்காண

நீ இன்னும் கொஞ்சம்

உடைய வேண்டும்.



காலையில் கவிஞர் இசையின் இந்தக்கதையை வாசித்ததும் எனக்கு ராமனும் கைகேயியும் மனதில் வந்தார்கள். பத்துவயதில் சிறுவர்களுக்கான ராமாயணம் புத்தகத்தை வாசித்தேன். அந்தப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் மனதை கற்பனையில் அமிழ வைப்பவை. காட்டிலிருந்து திரும்பிய ராமர் மறுபடி கைகேயி மீது அன்பாக இருந்தார் என்ற கதையை இருபது வயது வரைக்கூட என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை. நான் அப்போதெல்லாம் ஒருவருடன் பேசாமல் இருப்பதை அவருக்கு கொடுக்கும் தண்டனை என்று நினைப்பேன். 

காந்தி எபெஃக்ட் என்று அய்யா கிண்டல் செய்வார். [காந்தியை சரியாக புரிந்து கொள்ளாமை] . பேசாமல் ஒருவரை தவிர்ப்பது வன்மம்,இது மனிதர்களை கைவிடுவது,கோபக்காரர்களாக ஒருவரை மாற்றுவது என்ற கருத்து அவருக்கு இருந்தது. பெரிய பிழைகளுக்காக மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார். 

' பேசமாட்டேன்' என்று முதன்முதலாக சொன்ன போது தங்கை மகன் ராஜமித்திரன் 'ஏன் தம்பிக்கிட்ட கமலா பேசமாட்ட...'என்று முகம் சுருக்கிய முதல் தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் போதும் குழந்தைகளிடம் இதையே செய்வேன். குழந்தைகளிடம் இது நன்றாக செல்லுபடியாகும். குழந்தை மனதுள்ளவர்களிடமும். 

ராமன் கைகேயிடம் இப்படி பேசாமல் இருந்திருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் காலத்தின் கைகளில் மிக்க அன்புள்ளவர்களின் அன்பே ஆயுதமாகிறது. அது சமநிலையை உடைக்கிறது. எதையோ நடத்திப்பார்க்கிறது.  மறுபடி ராமன் கைகேயியை காணும் நிகழ்வை பலமுறை பலவிதமாக மனதில் ஓட்டிப்பார்த்திருக்கிறேன். 

 ராமாயணத்தின் கதாப்பாத்திரங்கள் லட்சிய கதாப்பாத்திரங்கள். சென்று தொட முடியாத உளஉயர்வு கொண்டவை. மானுட பண்புகளின் கனவுவெளி என்றும் ராமாயணத்தை சொல்லலாம். ஒரு பெரும் சமூகத்தின் கனவு.

 அரண்மனையில் அனைவருக்கும் எதிராளியான கைகேயி தன் மகனால் உடைந்து சிதறி ராமனை எங்கும் கண்டாளா? அன்பை புரிந்து கொள்ள அன்பு உடைய வேண்டுமா? வைரத்தை வைரத்தால் அறுப்பதைப்போல. 

 இந்தக்கவிதை ஒரு பிறப்பை சொல்கிறது. உடைதலிற்கு பின்பு புதிதாக பிறக்கும் மனம். உடைதல் என்பது அன்பில் நேர்மறையாக மறையாகிறது.

அன்பை உணர துயரம் என்ற கூர்முனையின் ஔி வேண்டுமென்று கவிஞர் சொல்கிறாரா...அனைத்தும் சரியாக இருக்கும் போது பூக்கும் என்று சொல்ல முடியுமா...ஏதோ ஒன்று சமநிலை குழையும் போதே பூக்கிறது. எதோ ஒன்று சமநிலை குழையும் போதே பிறப்பு நிகழ்கிறது. உயிர்களின் பிறப்பு முதல் எழுத்து வரை. 

துயரங்களில் இருந்து, இழப்புகளில் இருந்து, நேற்றிலிருந்து 'பிறந்தெழுக' என்பதே படைத்தளித்து பூவுலகை ஆளும் காலத்தின் ஆணை.



Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...