இன்று எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம் பார்த்தேன். சாகித்ய அகாதமியால் வெளியிடப்பட்டது. மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் ஆவணப்படத்தை எதேச்சையாக சென்ற வாரம் ஒரு நாள் சாயுங்காலம் பார்த்தேன். அன்றாட இக்கட்டுகளிலிருந்து அது தந்த மலர்ச்சியால் அடுத்தடுத்து எழுத்தாளர்கள் அசோகமித்திரன், நீல பத்மநாபன், யூ. ஆர். அனந்தமூர்த்தி ஆவணப்படங்களை தொடர்ந்து இன்று ஜெயகாந்தனின் படம்.
படம் முடிந்ததும் 'கங்கை எங்கே போகிறாள்' நாவலின் இறுதி காட்சி மனதில் வந்து கண்கலங்க வைத்தது. அது தந்த தொந்தரவிற்கு காரணம் உண்டு. சமீபத்தில் இரு பெண்களின் வாழ்க்கை மாற்றத்தை கண்முன்னே கண்ட தொந்தரவு அது.
என் தங்கை நிவேதாவும் நானும் கங்கை எங்கே போகிறாள் வாசித்து முடித்து கண்கலங்கியது நினைவில் வருகிறது. இருபதுகளின் தொடக்க வயதில் வாசித்தோம்.
பிரபுவை பிரிந்தப்பின் கங்காவில் ஏற்படும் மாற்றம் எங்களை அப்போது மிகவும் பாதித்தது. இன்றும் அந்த மாற்றம் தொந்தரவு தருகிறது. அப்படி என்றால் அந்த நாவலில் கலை சரியான விதத்தில் செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம்.
கற்பு ,சமூகம், சரி தவறு ,ஆண் மனோபாவம் இதெல்லாம் பற்றி நாங்கள் பேசவில்லை. கங்காவிற்குள் பிசகிப் போகும் ஒன்று தான் எங்களுக்கு தொந்தரவாக இருந்தது . இங்கு பிசகு என்ற சொல்லை மன நலத்துடன் தொடர்பு படுத்தவில்லை.
அந்த நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும். அக மாற்றம், புற மாற்றமாக வருகிறது என்று பூரணமாக சொல்ல முடியாது. ஆனாலும் ஏன் அவள் பேச்சையும் உடையையும் மாற்றிக் கொள்கிறாள். உண்மையிலேயே அவள் அகம் மாறிவிட்டதா என்ன ?
நாவலில் உள்ள காலம், சமூக மனநிலை, மனித அபிப்ராயங்கள் இன்று மாறிவிட்டது. ஆனால் கங்காவின் அகம்? ஏன் பெண்கள் புறத்தை மாற்றிக்கொள்ள விழைகிறார்கள். அவர்களுக்கு புறம் என்னவாக இருக்கிறது.
கங்கா ஏன் பிரிவிற்கு பிறகு முழுவதுமாக தன் நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்கிறாள்.
அவளுக்குள் உள்ளது என்ன... கோபமா வெறுமையா ஆங்காரமா சோகமா..
ஜெயகாந்தன் அதை என்னவென்று நாவலில் சொல்ல முற்படவில்லை. வாசிப்பவர்களிடம் விட்டுவிட்டு நகர்ந்து கொள்கிறார்.
வலிந்து உருவாக்கப்பட்ட முடிவல்ல.. பிரச்சாரம் அல்ல அந்த முடிவு.
கண்முன்னே வாழ்க்கை எத்தனை விதங்களில் பிடிபடாமல் இருக்கிறது..
தித்திக்க காதலித்து திருமணம் செய்து கொண்டு விரும்பி அலங்காரம் செய்து கொண்ட பெண்கள் ஏமாற்றத்தால் ஸ்லேட்டில் கிறுக்கியதை அழிப்பதை போல அலங்காரம் செய்வதை அறவே விட்டுவிடுகிறார்கள்.
இயல்பாக இருப்பவர்கள் மத்திம வயதில் புறக்கணிப்பால் தங்கள் தோற்றத்தை மாற்றுகிறார்கள்.
ஒரு குழந்தை பொம்மையை வீசி எறிவதை போல. இதுவரை தன்னில் இருந்த ஒன்றை வீசி எறிகிறார்கள். பொம்மையை வீசி விட்டு அழாத குழந்தை உண்டா?
மீண்டும் இன்று இதை எழுதும் இந்த இரவில் இன்னும் ஆழமாக எழுத்தாளர் ஜெயகாந்தனை உணரமுடிகிறது. பெண்மை என்று சொல்லப்படும் விஷயங்கள் எல்லாம் உபரி தான். அது அவளிடம் கூட இல்லை. பெண் என்பவள் பெண்மையை பிரதிபலிக்கும் சாதனமா? என்ற கேள்வி எழுகிறது.
காங்கா எங்கே போகிறாள்.. என்று எழுதியவரும் அந்தத் தாயை போல கேள்வியுடன் கங்காவை பார்த்துக்கொண்டு நம்முடனே நிற்கிறார்.
அது அன்றாடமான சென்று திரும்புதல் அல்ல. போய்க்கொண்டே இருத்தல்.


Comments
Post a Comment