கோடையில் ஒரே மரங்களை தொடர்ந்து பார்ப்பது பரவசமாக அனுபவம்.
பெரும்பாலும அரசமரங்கள், வேம்பு, நுணாமரங்ளை தொடர்ந்து பார்ப்பேன். இலையுதிர்ப்பு முடிந்து நுணா மரத்தில் பூக்கும் நட்சத்திரங்கள் போன்ற வெள்ளை மலர்களும்,அடர்ந்து தளிர்க்கும் வேம்பின் இலைகளும் மலர்களும், அரசின் இளம்பச்சை தளிர்களையும் பார்ப்பது பரவசமானது.
அரச மரம் இலையுதிர்ப்பதை பார்ப்பதுவுமே மனதை மலைக்க வைக்கும். முழுவதுமாக முற்றிலுமாக உதிர்ந்து குச்சி குச்சியாக நிற்கும். பின் ஒரு நாள் காலையில் மரம் முழுவதுமே இளம்பச்சை தெரியும். பச்சைகளில் எத்தனை நிறம். நுணாவின் அடர் கரும்பச்சை, வேம்பின் அடர் பச்சை, அரசு தளிர்க்கும் இளம்பச்சை. அரசு தளிர்க்கும் பச்சையை பிறந்த குழந்தைக்கு ஒப்பிடலாம். மென்பச்சை.
இங்கு கோடை என்பது வெண்மை. கோடையின் முல்லைமலர்களும், நுணாப்பூக்களும், வேப்பம் பூக்களும் முதலில் பூக்கின்றன. வெண்மை அனைத்து நிறங்களும் சமன்வயப்பட்டது தனித்த நிறமல்ல. எல்லா நிறங்களும் வெளிப்படுவது.
மிச்சமில்லாது உதிர்ந்து சட்டென்று முழுக்க தழைப்பது அரசமரம். நாமுமே சில நேரங்களில் சிலவற்றை முற்றிலுமாக உதிர்த்து தழைக்க வேண்டியுள்ளது.
காலையில் சூரியன் உதிக்கும் போது முல்லையும் வேம்பும் மணத்தக்காளியும் நுணாவும் மலர்ந்திருந்தன. சிறிய வெள்ளை பொட்டு போன்ற மணத்தக்காளி மலர்.
அரசு தளிர்ப்பதை மலர்தல் என்றே மனம் உணர்கிறது.
சுற்றிலும் துளிர்ப்பதற்கான எத்தனிப்பில் இயற்கை ததும்பிக்கொண்டிருக்கிறது. தளி ரய் துளிராய் மலராய்.சட்டென்று...
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்...
என்று பாடிய அமரகவியின் கைகளை பிடித்துக்கொண்டேன்.
கோடையில் உள்ளோடும் மண் ஈரம் உயிரை தளிர்க்க வைப்பது. வான் சூடு தளிர்ப்பதை மலர வைப்பது. நம் மனமும் வாழ்வும் போல.




Comments
Post a Comment