Skip to main content

அல்லிக்குளம்

 



பதின் வயதில் இந்த அல்லிக்குளத்தில் சாய்ந்து கொண்டு முதன்முதலாக தென்றல் பற்றி சொந்தமாக இருபது வரிகள் எழுதினேன். தென்றல், கடல், மலை என்று தலைப்புகள் கொடுத்து இருபது வரி கவிதை எழுதுவது தான் வீட்டுப் பாடம். 

விடுதியில் இருந்ததால் பள்ளி முடிந்தப்பின் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இந்த குளத்தின் வலது ஓரம் என்னுடைய இடம். 

நேற்று தங்கை நிவேதா பொதுத்தேர்வு கணிதத்தாள்களை திருத்தும் பணிக்காக முசிறி அமலா பள்ளிக்கு சென்றாள். எனக்காக பள்ளியை புகைப்படம் எடுத்து வந்தாள்.  

'பையனோ பெண்ணோ தெரியல  நூறு மார்க் போட்டேன் கமலா.. ஒரு சின்ன தப்பு இல்லை.. ஆறு பேர் மறுபடி மறுபடி திருத்தம் பாத்தாங்க.. என்று பரவசமாக சொன்னாள். 

கணிதப்பிரிவு வேண்டாம்  என்று இங்கு தான் நான் உறுதியாக சொன்னேன். நான் விரும்பிய சிறப்பு தமிழ் பிரிவு வேண்டாம் என்று அய்யா உறுதியாக இருந்தார். 
 அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டு தமிழில் எதையாவது சொந்தமாக எழுதி பழகியதும் இங்குதான். 

பத்தாம் வகுப்பு வரை வீட்டில் கல்கியின் கதைகள், கல்கி மாத இதழ்,இந்தியா டுடே, ராமகிருஷ்ண விஜயம் இதழ்கள் வாசிப்பது வழக்கம். விடுதியில் கதை புத்தகங்கள் வாசிக்கவோ வைத்திருக்கவோ முடியாத சூழல். துணைப்பாடத்தில் உள்ள சிறுகதைகளை மறுபடி மறுபடி வாசிப்பேன்.
 
அதனால் பெரிய நோட்புக் ஒன்று வாங்கி புத்தகப்பையில் வைத்துக்கொள்வேன். நாள்குறிப்பேடு ஒன்றும் பையில் உண்டு. அந்த நோட்புக்கில் மனதில் தோன்றுவதை எழுதுவது வழக்கம். அன்று பெரும்பாலும் அன்பு சார்ந்த மன  அல்லாட்டங்களை எழுதி பார்த்திருக்கிறேன். பின் சுற்றுலா சென்று திரும்பியப்பின் சென்று வந்த இடங்கள், இயற்கை சார்ந்த மன ஓட்டங்களை எழுதினேன். ( இரண்டு ஆண்டிற்குள் ஐந்தாறு சுற்றுலாக்கள். சிஸ்ட்டர்கள் சுற்றுலா விரும்பிகள். ) 

அதிகாலையில் நடந்து பார்த்த முட்டம் கடற்கரை, உச்சி வெயிலில் சென்ற மணப்பாடு தேவாலயம் இரண்டும் இன்றும் என் கனவில் எப்போதாவது வரும். 

பள்ளி மைதானம், வேம்புகள், புளியமரங்கள், மேனகா என்று மன ஆழத்தில் பதிந்தவற்றை எழுதினேன். பள்ளி இறுதி தேர்விற்கு முன் வழக்கமாக கேட்கப்படும் கேள்விக்கு  தமிழ் டிகிரி படிப்பேன்.. கதை எழுதுவேன் என்று சொன்னேன்.  விலங்கியல் ஆசிரியரான ஜூலி சிஸ்டர் நெற்றியில் சிலுவை குறியிட்டு தலையில் கை வைத்து 'எழுது மக்களே. . 'என்றார். ஆனால் வாழ்க்கை ஒரு விதத்தில் தமிழை என்னிடமிருந்து பறித்தது ஒரு வகையில் எல்லாமுமாக அதை அளித்தது. 
( அவர் குமரி மாவட்டத்துக்காரர் என்று இப்பொழுது புரிகிறது. அவரின் பாஷை அவரை தனியாகக் காட்டும்).  



இந்த அல்லிக்குளம் ஒரு சமயம் பூத்து நிறையும். சில நாட்களில் ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமிருக்கும். சில சமயங்களில் படத்தில் உள்ளது போல இலைகளாக படர்ந்திருக்கும். இது ஒரு தவம். ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது தவறாமல் பூத்திருக்கும். இந்த மாற்றம் நாம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் உள்ள இயல்பு. மழை, பனி வெயில், காற்றுகால பருவ மாற்றம் போல. 

Comments

Popular posts from this blog

வைதரணி மலர்கள் [ காவியம் நாவல் வாசிப்பு]

 மனித ஆழ்மனதை [ Subconsious] தன் நிகழ்களமாக கொண்ட நாவல் எழுத்தாளர் ஜெயமோகனின் 'காவியம்'.  இந்த நாவலில் வரக்கூடிய பைதான்...பாட்னா , காசி உட்பட அனைத்து இடங்களும் மனதின் அகவெளி தான். ஆழ்மனம் வழி ஆதிப்பெருகவிகளுள் ஒருவரான குணாட்யரின் வாழ்வையும்,தற்கால சமஸ்கிருத அறிஞனான துகாராமின் வாழ்க்கையும்,சாதவாகன பண்பாட்டின் கதைகளும் கோர்க்கப்பட்ட நாவல். நாவலின் காலம் இருபத்தோராம் நூற்றாண்டிலிருந்து கதைகளின் வழி சாதவாகனர்களின் காலம் வரை பின்னோக்கி சென்று இதிகாசகாலம் வரை கதைகளின் வழியே நீண்டு செல்கிறது. இந்த நாவலில் உணர்வுகள் நாவலின் காலம் வரலாறு என்று அனைத்தும் கீழ்நோக்கி [பின்னோக்கி] நோக்கி ஆழத்திற்கு செல்கிறது.  விந்தியமலைக்காட்டின் கதை சொல்லும் பிசாசான கானபூதி காலத்தில் மாறிமாறி அமர்ந்து கதை சொல்கிறது. நிகழ்காலம் என்று நம்பப்படும் நம் காலத்தில் அமர்ந்து சாதவாகன காலத்தின் கதையை துகாராமிற்கு சொல்கிறது. சாதவாகனர்களின் காலத்தில் அமர்ந்து குணாட்யரிடம் இருபத்தோராம் நூற்றாண்டின் துகாராமின் கதையை சொல்கிறது. காலத்தின் நடுவில் அமர்ந்து குணாட்யரிடம் இதிகாச கதைகளை எழுதிய வால்மீகி வியாசரின் கதைகளை ...

மூள் தீ

        வாசகசாலை இணைய இதழில் 2020 ஜூலை இதழில் வெளியான சிறுகதை.                             மூள் தீ ம்மா..ம்மா…என்ற பதறும் குரல் கேட்டு நடுநிசி கடந்த பின்னிரவு நேரத்தில் பதறி விழித்தது கணபதிபாளையம்.இரு மச்சுக்கட்டிடங்களுக்கு இடையிலிருந்த நூறாட்டுகாரபெரியசாமி தாத்தாவின் தகரம் வேய்ந்த வீட்டை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். கைலியை மடித்துகட்டிக்கொண்டு வெற்றுடலுடன் தெருவின் முச்சந்தியில் நின்ற சரவணன், “வீட்ல இருக்கற தண்ணிக்குடத்தை எடுத்துக்கிட்டு ஓடியாங்க…”என்று கத்தியவாறு ஓடினான்.நாய்கள் தெருவில் நிலைகொள்ளாமல் திரிந்தன. பெரியசாமி தாத்தாவின் கட்டுத்துறையிலிருந்து அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளின் கண்கள் பதறியபடியிருந்தன.அவற்றை இழுத்து தெருவோரமாக மின்கம்பத்தில் மேனகா கட்டிக் கொண்டிருந்தாள்.அவை வீட்டை நோக்கி அடிக்குரலில் கத்தின.நான்குவீடுகள் தள்ளியிருந்த இடிந்தவீட்டின் நுணாமரத்திலிருந்து பறவைகள் சலசலப்பு கேட்டது. ஆட்கள் தண்ணீரை வாரியிறைப்பதற்கு மேல் தீ எழுந்து விட்டிருந்தது.உள்ளே கட்டுத்துறையின் மூங்கில்கள்...

அலைகடல் துலாவும் கட்டுமரம்

 எழுத்தாளர் ஜெயமோகனின் கடல் நாவலை ஏற்கனவே திரைப்படமாக பார்த்த நினைவிலிருந்து வாசிக்கத்தொடங்கினேன்.   இத்தனை படங்களுக்கு பின்பும் ஏழாம் வகுப்பு விடுமுறையில் துறையூர் அஜந்தா தியேட்டரில் பம்பாய் திரைப்படத்தில் கண்ணாளனே பாடலின் அரவிந்தசாமியே இன்று வரை மனதில் பதிந்திருப்பவர். படத்தின் தொடக்கத்தில் அவரை ஃபாதராகவும் அர்ஜூனை எதிர்கதாபாத்திரமாகவும் ஏற்று கொள்வதும் சாதாரண ஒரு சினிமா பார்வையாளராக எனக்கு சிரமமாக இருந்தது. நம் சினிமாவில் கதாநாயகர்களில் கமல்ஹாசன்  தவிர யாரும் நம்மை கதாபாத்திரமாக ஒரு நடிகரை பார்க்கப்பழக்கவில்லை.[ என்னுடைய இந்த அபிப்ராயம் கடல் வெளியான காலகட்டத்தை சார்ந்தது. நான் சினிமா பார்ப்பது மிகவும் குறைவு. அதிலிருந்து என் எண்ணத்தை சொல்கிறேன்]. அரவிந்தசாமி பாசிநிற பச்சை யெஸ்டி (Yezdi) பைக்கில் ஊருக்குள் நுழையும் காட்சியிலிருந்து படிப்படியாக அந்த காட்சி முடியும் போது ஃபாதர் சாம் ஆக நம் மனதில் மாறுவார். அவரின் இயல்பான புன்னகை இந்த ஃபாதர் கதாபாத்திரத்திற்கு பெரிய பலம். அதே போல அர்ஜூனின் இறுகிய முகமும் அதை உடைத்து வரும் சிரிப்பும் ஏதோ ஒரு வகையில் கதாப்பாத்திரத்தை நம்முள்...