பதின் வயதில் இந்த அல்லிக்குளத்தில் சாய்ந்து கொண்டு முதன்முதலாக தென்றல் பற்றி சொந்தமாக இருபது வரிகள் எழுதினேன். தென்றல், கடல், மலை என்று தலைப்புகள் கொடுத்து இருபது வரி கவிதை எழுதுவது தான் வீட்டுப் பாடம்.
விடுதியில் இருந்ததால் பள்ளி முடிந்தப்பின் மைதானத்தில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து படிக்கலாம். இந்த குளத்தின் வலது ஓரம் என்னுடைய இடம்.
நேற்று தங்கை நிவேதா பொதுத்தேர்வு கணிதத்தாள்களை திருத்தும் பணிக்காக முசிறி அமலா பள்ளிக்கு சென்றாள். எனக்காக பள்ளியை புகைப்படம் எடுத்து வந்தாள்.
'பையனோ பெண்ணோ தெரியல நூறு மார்க் போட்டேன் கமலா.. ஒரு சின்ன தப்பு இல்லை.. ஆறு பேர் மறுபடி மறுபடி திருத்தம் பாத்தாங்க.. என்று பரவசமாக சொன்னாள்.
கணிதப்பிரிவு வேண்டாம் என்று இங்கு தான் நான் உறுதியாக சொன்னேன். நான் விரும்பிய சிறப்பு தமிழ் பிரிவு வேண்டாம் என்று அய்யா உறுதியாக இருந்தார்.
அறிவியல் பிரிவில் படித்துக் கொண்டு தமிழில் எதையாவது சொந்தமாக எழுதி பழகியதும் இங்குதான்.
பத்தாம் வகுப்பு வரை வீட்டில் கல்கியின் கதைகள், கல்கி மாத இதழ்,இந்தியா டுடே, ராமகிருஷ்ண விஜயம் இதழ்கள் வாசிப்பது வழக்கம். விடுதியில் கதை புத்தகங்கள் வாசிக்கவோ வைத்திருக்கவோ முடியாத சூழல். துணைப்பாடத்தில் உள்ள சிறுகதைகளை மறுபடி மறுபடி வாசிப்பேன்.
அதனால் பெரிய நோட்புக் ஒன்று வாங்கி புத்தகப்பையில் வைத்துக்கொள்வேன். நாள்குறிப்பேடு ஒன்றும் பையில் உண்டு. அந்த நோட்புக்கில் மனதில் தோன்றுவதை எழுதுவது வழக்கம். அன்று பெரும்பாலும் அன்பு சார்ந்த மன அல்லாட்டங்களை எழுதி பார்த்திருக்கிறேன். பின் சுற்றுலா சென்று திரும்பியப்பின் சென்று வந்த இடங்கள், இயற்கை சார்ந்த மன ஓட்டங்களை எழுதினேன். ( இரண்டு ஆண்டிற்குள் ஐந்தாறு சுற்றுலாக்கள். சிஸ்ட்டர்கள் சுற்றுலா விரும்பிகள். )
அதிகாலையில் நடந்து பார்த்த முட்டம் கடற்கரை, உச்சி வெயிலில் சென்ற மணப்பாடு தேவாலயம் இரண்டும் இன்றும் என் கனவில் எப்போதாவது வரும்.
பள்ளி மைதானம், வேம்புகள், புளியமரங்கள், மேனகா என்று மன ஆழத்தில் பதிந்தவற்றை எழுதினேன். பள்ளி இறுதி தேர்விற்கு முன் வழக்கமாக கேட்கப்படும் கேள்விக்கு தமிழ் டிகிரி படிப்பேன்.. கதை எழுதுவேன் என்று சொன்னேன். விலங்கியல் ஆசிரியரான ஜூலி சிஸ்டர் நெற்றியில் சிலுவை குறியிட்டு தலையில் கை வைத்து 'எழுது மக்களே. . 'என்றார். ஆனால் வாழ்க்கை ஒரு விதத்தில் தமிழை என்னிடமிருந்து பறித்தது ஒரு வகையில் எல்லாமுமாக அதை அளித்தது.
( அவர் குமரி மாவட்டத்துக்காரர் என்று இப்பொழுது புரிகிறது. அவரின் பாஷை அவரை தனியாகக் காட்டும்).
இந்த அல்லிக்குளம் ஒரு சமயம் பூத்து நிறையும். சில நாட்களில் ஒன்றிரண்டு பூக்கள் மட்டுமிருக்கும். சில சமயங்களில் படத்தில் உள்ளது போல இலைகளாக படர்ந்திருக்கும். இது ஒரு தவம். ஜூன் மாதம் பள்ளி திறக்கும் போது தவறாமல் பூத்திருக்கும். இந்த மாற்றம் நாம் உட்பட அனைத்து உயிர்களுக்கும் உள்ள இயல்பு. மழை, பனி வெயில், காற்றுகால பருவ மாற்றம் போல.


Comments
Post a Comment