திரும்புதல்: சிறுகதை

      சொல்வனம் 2018  பிப்ரவரி இதழில் வெளியான கதை.       

                           

  திரும்புதல்


மழைகால இருளில் சுடரத்தொடங்கும் ஒற்றை விளக்கை சூழும் பூச்சிகளென பள்ளிவிட்டு வெளிவருகையிலேயே, அன்றாடம் வந்து மொய்க்கத்துவங்கி விடுகிறது. அதுவாக வருவதில்லை. மனம் காத்திருக்கும் போல என்று நினைத்துக் கொண்டு ஒடுகம்பட்டி பேருந்துநிலையத்தில் நிற்கிறேன். பத்துநிமிடத்திற்கு ஒருஆள்,ஆடு,மாடு கடந்து போகும் பாதை.பக்கவாட்டில் பெயர் தெரியாத குன்றொன்று குற்றுச்செடிகளோடு நிற்கிறது.

கையிலிருந்த உணவுப்பையை சிமெண்ட்பெஞ்சில் வைத்தேன்.சகஆசிரியைகள் பேசிக்கொள்ளும் ஒலிகளை உள்வாங்கி பதில் சொல்லிக் கொண்டு இன்னொரு தனிப்பாதையில் நடந்து கொண்டிருந்தது என் மனம். காலையில் கட்டிய பருத்திப்புடவை துவண்டிருந்தது. விசிறியிலை மடிப்புகளை சரி செய்தேன். அக்காண்டிக்குருவி மின்கம்பியிலிருந்து எழுந்து பறந்தது.அது புளியமரக்கிளையில் மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படி எதையாவது நான் பார்த்துக் கொண்டிருந்தால் அம்மா, “விட்டேத்தியா எதையாவது பாத்துக்கிட்டே என்னதான் நெனச்சிட்டு இருப்ப”, என்பார். ஒன்றுமே நினைப்பதில்லை என்பதுதான் உண்மை. அதனால் எதுவுமே சொல்லாமலிருந்துவிட்டால், “நீ என்ன வேணாலும் கத்திக்கிட்டு கெட.எனகென்னா நாலுகாணியா போச்சுன்னு உங்க அய்யாமாதிரி இரு.எங்கிருந்து எந்தநேரத்தில ஆண்டவன் பிறப்பிச்சானோ? மனுசக்கிட்ட பேசறத்துக்கு கூலி கேக்கற குடும்பம்”,என்று எங்களை புரிந்து கொள்ள இயலாமல் புலம்பிக் கொண்டிருப்பார். சரி என்று விளக்கச் சென்றால் அது பெரும்சத்தமாகும் என்பதால் சிவனே என்று இருந்துவிடும் பழக்கம் வேலையிடத்தில் எவ்வளவோ உதவுகிறது. அதற்கு ஒயிலாக ஒருபெயர் வேறு ‘எமோசனல் இன்டலிஜென்ஸ்” என்று. பெருசா என்ன? சின்னதிலிருந்து பத்துபேரோட வாழ்ந்தா தானாவருகிற பழக்கம்.

காப்பீடு கட்டுவதற்கான தவணைப்பற்றிய எண்ணம் காலையில் விடுதியிலிருந்து வெளிவருகையில் நினைவிற்கு வந்தது. இப்போது மீண்டும்.வேலைக் கிடைப்பது என்பது வேலைகிடைப்பது மட்டுமல்ல என்று தோன்றுகிறது. திருச்சி பேருந்தில் ஏறினோம். மெல்லிய பசிஉணர்வு தெரிந்ததும் தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்கையில் இளஞ்சிகப்பாகிக் கொண்டிருந்த வானம் கடந்துகொண்டிருக்க ,மண்ணைப் பார்த்தேன். என்ன மண் இது? புதர்செடிகளில் கூட அத்தனைக்கு இலைகள் இல்லை. விவசாயமும் இல்லை. திருச்சிக்கு ஏதோ ஒருவேலைக்கு போவார்களாக இருக்கும். பாசனவாய்க்கால் இருப்பதாகக்கூட தெரியவில்லை. மழைகாலத்திலயே இப்படின்னா?

அலைபேசியை எடுத்ததும் கோகிலாவின் நினைவு வந்தது. எத்தனை வேலைகளுக்கிடையிலும் என் மின்னஞ்சலுக்கு மனதை அளிப்பவள். பேசிக்கொள்ள நேரம் ஒத்துவராததால் புதிதாக இந்தமின்னஞ்சல் பழக்கம்.

அன்புள்ள கோகிலா,

நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ,நீயும் ஒருபேருந்தில் திரும்பிக் கொண்டிருப்பாய். நான் உனக்குப் பிடித்த இளம்பச்சைநிற காட்டன் புடவை கட்டியிருக்கிறேன். ‘மழைக்குள்ளே நனையும் காற்றைப் போல அல்லவா மனம்’ ன்னு ஒருபுதுப்பாட்டு வந்திருக்கு கேட்டியா?.புகுந்தவீடு பழகிவிட்டதா?புதுவீடு அவ்வளவு நெருக்கமா இல்லைன்னு எழுதியிருந்தியே? இப்ப எப்படி இருக்கு?. எனக்கும் அதே சிக்கல்.அறந்தாங்கியில நம்ம ஹாஸ்டல் மாதிரி இல்ல இந்த புதுஹாஸ்டல். மனசு ஒட்டவே இல்ல.மகிழ்ச்சியா இருக்கிற நண்பர்களைப் பார்க்கையில் மனுசங்கதான் இடத்தை தீர்மானிக்கிறாங்கன்னு தோணுது. நம்ம பழைய ஹாஸ்டல்ல  சுபாவுக்கு ,இப்ப அங்க இருக்கவே சிரமமா இருக்குன்னு சொன்னா.திருச்சி சாலைகளில் நடக்கையில் சகநடையாளர்கள் கூட்டம் கூட்டமா, தனித்தனியா போய்க்கிட்டே இருக்கறதா தோணுது கோகிலா.எங்க போறோம்?

 தாத்தா நினைவு வருது. தெரிஞ்சவங்க ,தெரியதவங்க எல்லாரும் நல்லவங்கதான் அவருக்கு. அப்படியே தவறிடுச்சுன்னாலும் பத்துக்கு ஒருநாத்து சோடைம்பாரு.பழையபடி மனுசங்கதான் அவருக்கு நம்பிக்கை.  சின்னவயசில நான் நினைப்பேன் எதுக்கு இந்த தாத்தா பாட்டியெல்லாம் போகையில,வாரையில... கிண்டலும், கேலியும், அழுகையுமா பேசிக்கிறாங்கன்னு.ஆனா இப்பதான் அது தேவைன்னு தோணுது. இப்ப நம்மகூடி பேசுறபேச்சு போல அல்லஅது.ஏன் இதை எழுதறேன்னா நல்லவிதமா பேசறவங்க கிடைச்சா விடாத. நான் நைட் எழுதறேன் என்று மின்னஞ்சலை அனுப்பிவிட்டு அலைபேசியை தோள்பையில் வைத்தேன்.

“நீங்க புதுசா எதுல பணத்தை போடலான்னு இருக்கீங்க”

“தங்கத்தில போட்டாச்சு…நிலம் பாக்கலாம்”

“நல்ல சேமிப்புதிட்டமா பாக்கலாம்”

“எல்லாத்தையும் எதிலயாவது போட்டுட்டு என்ன பண்ண?”

“செலவ இறுக்கிப்பிடிங்க”

“ம்”

“இன்கம்டேக்ஸ் உதைக்கமா பாத்துக்கனும்”

“எங்க வீட்ல புதுசா ஏதோ தங்கநகைத்திட்டம் சொன்னாரு.விசாரிக்கறேன்”

“எங்க?”

“மலைக்கோட்டை பக்கத்தில புதுசா..ஏதோ சொன்னார்.கேட்டு சொல்றேன்”

எதிர்காற்று முகத்தில் படர்ந்து விலகிக்கொண்டிருந்தது. ஈரமே இல்லாத காற்று. இந்த உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த எனக்கு,“நான் என்ன செய்யறது? “என்ற கேள்வி மனதில் ஓடத்தொடங்கியது. தோளை உரசி அமர்ந்திருந்த ஜெசி டீச்சர், “என்னாச்சு நிஷா?”என்றார்.

“போட்டித் தேர்வுக்கு படிச்சமாதிரி இந்த சேமிப்புத்திட்டங்களைப் பத்தியும் படிச்சிருக்கலாம். ஒரு மண்ணும் புரியல. நல்லவேள கையில பணத்தைத் தராம பேங்க் கணக்கில போடறாங்க. இல்லன்னா ஒருகையில பணத்தை வச்சிக்கிட்டு மறுகையில மண்டைய பிச்சுக்க வேண்டியது தான்”

“கல்யாணம் ஆனாதான் தெரியும்..பணம் பஞ்சா பறக்கறது”

நான், “ சேமிச்சா நல்லது.கல்யாணமாகிடுச்சுன்னா என்ன செய்யறது?. இதே யோசனைன்னு நினைக்கையில அய்யோன்னு இருக்கு.பாடப் புத்தகங்களைத் தவிர்த்து வாசிச்சது எப்ப?போட்டித்தேர்வுக்கு முன்னாடி ‘கங்கா எங்கே போகிறாள்’!” என்றேன்.

ஜெஸி டீச்சர்,“ஆமா.நானும் எப்பவோ வாசிச்சது.மறுபடி பழக்கத்தைக் கொண்டுவரனுன்னு பாக்கறேன்.நாளைக்கி நாளைக்கின்னு நாள்தான் போகுது.பிள்ளைகளைத் தவிர ஸ்கூலில் புதுசா சுவாரஸ்யமா என்ன இருக்கு? வேலக்கு சேர்ந்தப்ப  பத்தாம் வகுப்பு கணிதம் விளையாட்டா இருந்தது.இரண்டு பிள்ளைகளுக்கு ஆல்ஜீப்ரா அலர்ஜியாக இருந்து ,அழுகையாக மாறி எப்படியோ தேறிவிட்டார்கள்”என்றார்.

“இந்தவருசமும் அதே பத்தாம்வகுப்பு .பிள்ளைகளின் புதிய முகங்கள்,ஒரே கணக்குக்கு விதவிதமான பதில்கள் தான் சுவாரஸ்யமா இருக்கு,”என்றார்.

“முன்னெல்லாம் தப்பாகணக்கு போடறத பாத்தா கோவமா வரும்.கணக்குத் தெரியுங்கற திமிரு.இப்ப எப்படி தப்பு வருதுன்னு பாக்கறது ஒருவிதமா இருக்கு,” என்றேன். 

“இந்த நித்தீஸ் இருக்கான்ல..அவன் ஒருகணக்கை பத்துவிதமா போடுவான்...”சிரித்தேன்.

“ஆறாம் வாய்பாடு சொல்றானா?”

“எங்க? ம்கூம்.அவன் கண்ணும், பேச்சும், சிரிப்பும்”

“அழகுப்பய. குறும்பு கலந்த வெகுளித்தனம். இந்தமாதிரிப்பயல்கள் பேட்ச்க்கு கொறஞ்சது ஒருத்தனாவது இருப்பான். பிள்ளைகளும் உண்டு. இந்தமாதிரி பிள்ளைகள் இல்லன்னா ஸ்கூல் ஒரு நிறுவனம் மட்டும்தான்,” என்றபின் மீண்டும்,

“எப்படியாவது பத்தாவது ஒப்பேத்தி விட்டுட்டோம்ன்னா லைசன்ஸ் வாங்க பயன்படும். பய..இப்பவே ட்ராக்டரை எடுக்கறான்னு அவங்கப்பா வந்து சொன்னாரு,” என்றார்.

“ஒருத்தனா!..நாலஞ்சு தேறும்.ஆனா..ரிசல்ட் போகுதே டீச்சர். எப்படி கவனிச்சுக்கிட்டாலும் அவன்களுக்கு முடியலயே. நாமல்ல மேலிடத்தில பேச்சு வாங்க வேண்டியிருக்கு”, என்றேன்.

“அதனால என்ன நிஷா? அவங்ளுக்குதான் ஸ்கூல்ங்கற பாதுகாப்பு வேணும். அவங்களுக்காக ஒருநாள் பேச்சு கேட்டா பரவாயில்ல”, என்று புன்னகைத்தார்.

“ஆமா டீச்சர்.படிக்கும்போது படிச்சதெல்லாம் நாமளே காத்தில விட்டுட்டா?”

“???”

“இதெல்லாம் பின்னாடி பேசுவோம்.நீங்க என்னமோ சொல்ல வந்தீங்களே?” 

“நமக்கும்தான் சம்பளக்கணக்கு கொடுக்கற சலம்பல் புரியமாட்டிக்குது. பொறுப்பில்லாதவளாக இருக்கற மாதிரி இருக்கு டீச்சர். எந்த மாதிரி இருந்தால் சரியான நான்?”

“மெதுவா புரியும். குழப்பிக்காதீங்க.சேமிப்பைவிட அடுத்த பெரியவேல, பொருள முன்னாடியே வாங்கிட்டு… கடனாளியா நாமளே போய் விழறது.சேமிப்பு தேவலாம். இந்த சனியன், நம்ம காச இன்னொருத்தன் சேமிச்சு, அவனுக்கு போக நமக்கு..சேமிக்கக்கூட மனக்கட்டுபாடு இல்லாமையா போயிட்டோம்?”

“இதெல்லாம் யாருக்கிட்ட கேட்டாலும் கொண்டு போய் காசுகொடுத்து வரிசையில சாயங்காலம் வரைக்கும் ஹாஸ்பிடல்ல உக்கார வச்சுற வாய்ப்பிருக்கு. எல்லாத்துக்கும் மேல எமன் இது. எதைச் சொன்னாலும் மனஅழுத்தம் மண்ணாங்கட்டின்னு…கீழ மேல நகராம அப்படியே சராசரியில நிக்கனும்”

“லிஸ்ட்டில் இருக்கற எல்லாமே குடும்பத்தில இருக்கிற எல்லாருக்கும் நடந்திருக்கனும்…இல்லன்னா மாத்திரை.சித்தப்பா வீட்ல... அண்ணன் அவம்பாட்டுக்கு இருப்பான்.எல்லாருக்குமே சம்சாரியா வாழனுன்னு தோணும்ன்னு சொல்லமுடியுமா? இப்ப யாருக்கு எது நடந்தாலும் அவனாலன்னு ஆயிடுச்சு,”என்றார்.

“அவங்கப்பாவுக்கு இரத்தஅழுத்தம் வந்தது அண்ணனால தானே?” என்று சிரித்தேன்.

“சித்தி பஸ் மாத்தி ஏறினது கூட இவனாலதானாம்” என்று சொல்லி ஜெஸி முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டதைப் பார்க்க கேலிச்சித்திரம் ஒன்றை பார்ப்பதைப் போல இருந்தது.

“இன்னக்கி கீர்த்தி கேக்கறா,பாரதி ஏன் அப்படி செஞ்சார்ன்னு?”

“என்னத்த கண்டுட்டாளாம் அந்த விசாலாட்சி?”

“வீட்டப்பாத்துக்காம பாட்டு எழுதிக்கிட்டு இருந்திருக்காரு.வேலக்கி போவாம” ங்கறா என்று சொல்லிவிட்டு, “ஆமா…விசாலாட்சி தான்”,என்று கண்களை விரித்து ஜெஸி சிரித்தார்.

“ம்.அவக்கிட்ட என்ன சொன்னீங்க?”, என்று காலைமாற்றி கம்பியில் நீட்டினேன். திரும்புகையில் இடதுபார்வைக்கு டீச்சரின் மாநிறநெற்றிசிறுமுடிகளில் நரை தெரிந்தது.அழகுதான் என்று நினைத்தேன். நீலப்புடவையில் பூசினஉடலை அசைத்து கைகால்களை நீட்டி மாற்றி அமர்ந்தார்.

“இல்லம்மா ....அவரு பத்திரிக்கையில வேல செஞ்சாருன்னு சொன்னேன்.அதுக்கு அவ ,போங்க டீச்சர்.. அவருக்கு எத்தன மொழி தெரியும்!அரசாங்க வேலையில எவ்வளவு சம்பளம்! அவருக்கு பிடிச்ச பாட்ட எழுதறேன்னு யாரு பேச்சயும் கேக்கலயாம்.சினிமாபடத்தில பாத்தேன். செல்லம்மா அழுதுகிட்டே இருக்காங்க”ங்கறா

“நீங்க வேற..அவ பதினஞ்சு வயசு பிள்ள பரவாயில்ல…..”என்று ஏதோ சொல்ல நினைத்து பின், “நாமதான் சொல்லனும்.அவ பாக்கறத தானே சொல்றா.பாவம் பரம்பொருள்களே டி.வி யில என்பிள்ள ,என்பிள்ளன்னு தவிச்சு போற காலமில்ல இது”, என்று டீச்சரைப்பார்த்தேன்.

டீச்சர் ஒரு ஆழ்ந்தபார்வையோடு என்னைப் பார்த்து, “தனி ஒருத்தனுக்கு உணவில்லையேல் ஜெகத்தினை அழித்திடுவோன்னு எரிக்கிறமாதிரி சொல்லனுன்னா… பசிச்சு குடல் கிழிஞ்சிருக்கனும்”, என்றார்.

நான் வெளியே பார்த்தபடியிருந்தேன்.மீண்டும் டீச்சர்,“அதே படத்தில அவங்கப்பா சொல்வார் காலத்தைமீறி கனவு காணாத.தோத்து போயிடுவன்னு”,என்றார்.

“ஆமா டீச்சர்.நாம அதுக்கு தானே அந்தப்படத்தைப் பாக்கறோம்.இந்தமாதிரி ஒருவார்த்தய பிடிச்சுக்கிட்டு அவ்வளவு பெரிய வாழ்க்கையை தோல்வின்னு சொல்லறதுக்கு”

“ம்.நீங்க மட்டும் என்ன? உங்களுக்கு தானே சேமிக்கனுங்கறீங்க.நான் மட்டும் என்ன? என் குடும்பத்துக்காக மட்டும் தானே நினைக்கிறேன்.அப்படியே உங்கமனச கேள்வி கேட்க விடுங்க.என் தம்பிக்கும் உங்கவயசிருக்கும்.அவங்க கூட்டத்தையும் பாக்கறேன்.வேலைக்கு போயாச்சு.ஆனாலும் நிம்மதியில்லை.நல்லதுக்குதான்”

“!!!?”

கீரம்பூர் நிறுத்தத்தில் ஜெசிடீச்சர் இறங்கிக் கொண்டார். பேருந்தில் நெருக்கம் குறைந்து காற்று நடந்தது. அந்த நிறுத்தத்தில் ஏறியவர்கள் அமரும் ஓசைகள் கேட்டன.பகல்ஔிக் குறையும் நேரம் இது.

“டியர் யங் டீச்சர்..”என்றபடி அனந்தன் அவளின் இருக்கையில் அமர்ந்து பைகளை இருவருக்கும் இடையிலிருந்த இடத்தில் நிரப்பினார். கறுப்பும் வெள்ளையும் கலந்த தலைமுடியும் யானைக்கண்களும் அவரைக் கூட்டத்திலிருந்து  வேறுபடுத்தும்.

“என்னசார் இத்தன பேக்ஸ்?” 

“பேங்க்ல ஒரு விருந்தும்மா” , என்றபடி ஒரு இனிப்பு பொட்டணத்தைக் கொடுத்தார்.

“மிச்சமா சார்?...உங்களுக்கு சந்தனகலர் சட்டை நல்லாயிருக்கு”

“தாங்ஸ்.உனக்குன்னு எடுத்து வச்சதுன்னு நினைக்கறதுல என்ன சிரமம்? ” என்று புன்னகைத்தார்.

“நம்மள நாமே ஏமாத்திக்கக் கூடாது சார்”

“வாதம் பேசாத.நோக்கு என்ன வயசு? சிரிச்சுண்டு இருக்கமாட்டாம ஓயாத யோசனை.இந்த வயசிலயே அரசு வேல..லட்சணம், கருக்கு..உனக்கு இன்னும் என்ன கொடுக்கனும் வாழ்க்க?”

“அதான் சிக்கலே”

“!!!”

“சேமிக்கனும்.எல்லாரும் எதிலயாவது இன்வஸ்ட் பண்றாங்க.நான் பொறுப்பா இல்லயா சார்?”

“கஸ்ட்ட காலம்.இதுக்கு போயா இப்படி உக்காந்திருக்க? நான் லிங்க்ஸ் அனுப்பறன்.என் மகளோட சில ஐடியாஸ் இருக்கு.அதபத்தி அவகிட்ட பேசு.அதவிட நல்ல வழி ஒருத்தன கல்யாணம் பண்ணி அவன் தலையில இதெல்லாத்தையும் தூக்கிப் போடு.உங்க மாமி இந்நேரம் பளிச்சுன்னு நடக்க கிளம்பியிருப்பா.நான் போனதும் உட்கார விடாம அதுஇதுன்னு துரத்தியடிப்பா.புது ஹாஸ்டல் எப்படி?” என்று சிரித்தார்.

“ம்”

“இதென்ன ரெங்கநாதா…தா..தா….! கல்யாணம்ன்னு சொன்னா இந்தவயசில இத்துணூண்டாவது ரியாக்ட் பண்ணனும்”, என்றுஆள்காட்டிவிரலை கட்டைவிரலால் அளந்து காட்டினார்.

“ஆமா அதுதான் கொறச்சல்.கல்யாணம்ன்னாவே….அவனுக்கு எந்தஊர்ல வேல.எனக்கு மாற்றல் கிடக்குமா?அவனுக்கு கிடைக்குமா?இங்கிருந்து எவ்வளவு தூரம்ன்னு எத்தனை கேள்வி”

“வாயில போடுவேன்..அவன் இவனுட்டு”

“வாய்ச்சாதானே அவர்.சங்கப்பாடல்ல யாருன்னு தெரிஞ்சே தலைவி சொல்லலியா? குறும்பொறைநாடன்,வினைத் தேரன்,ஊரன்…ம்..ம்ம்..” என்று புருவத்தைத் தூக்கினாள். 

“ஒன்னும் சொல்றதுக்கில்ல. இப்படி இருக்காத. ஃபீல் ஹேப்பி. இந்த வயசுக்கு அதான் அழகு”

“உங்க வயசுக்கும் அதானே அழகு” , என்று சிரித்தாள்.



“மகாலட்சுமி….”

“ஏன் சரஸ்வதி சிரிக்கமாட்டாளா? அழகா இருக்க மாட்டாளா?”

“இன்னக்கி முன்னாடியே இறங்கனும்.நாளைக்கு வாயாடலாம்” என்றபடி பைகளை எடுத்துக் கொண்டார். நடத்துனரின் விசில் காதை துளைத்தது.

அவர் இறங்கும்வரை பார்த்துக் கொண்டிருக்கையில் நடத்துனர், “உங்க ஃப்ரண்டு என்ன இன்னிக்கு முன்னமே இறங்கிட்டார்?” என்றபடி கடந்து சென்றார்.

மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி வலதுதோளில் பையை மாட்டிக் கொண்டு இடது கையில் முந்தானையை பிடித்தபடி கண்ட்டோன்மெண்ட் சாலையில் விடுதியை நோக்கி நடந்தேன். மெல்லிய புழுதிப்படலம் சூழ்ந்திருக்கிறது. மரங்களில் காக்கைகளின் ஒலிமட்டும் கேட்கிறது. மீண்டும் ஆயுள்காப்பீடு நினைவுக்கு வந்தது.

அந்தியெழுந்து மெல்லிய ஔியில் அனைத்தையும் அழகாக்கிக் கொண்டிருந்தது..சாலைஓரம் நெடுக ஒவ்வொரு மரமாக கடந்து கொண்டிருந்தேன். தரையில் வாடிய பூக்கள். கண்ட்டோன்மெண்ட் உள்ளே நடக்கும் பயிற்சிகள் பற்றிய எந்த கவனமும் இன்றி அமைதியிலிருந்தது புறசாலை.அது ஒரு துண்டிக்கப்பட்ட உலகம். தொடர்ந்து நிதானவேகத்தில் வாகனங்கள். சாலையை குறுக்காக கடக்க நின்றேன்.

மரத்தில் சாய்ந்து அந்தஅம்மா பிளாஸ்டிக் பையில் எதையோ வைத்து தின்று கொண்டிருந்தாள்.பின்னாலிருந்து வந்த மெல்லிய ஔியில் பறந்துகொண்டிருந்த வெண்முடிகள் ஔிர்ந்தன.தோள்பையிலிருந்து பத்துரூபாயை எடுத்து நீட்டினேன்.

“இப்ப எதுக்கு குடுக்கற.அதான் சோறு திங்கறனே.நாளக்கி குடு,” என்று வேகமாக கையை ஆட்டியபடி சொன்னாள். கையிலிருந்த சோற்றுப்பருக்கைகள் சிதறின.

நான் சற்று பின்வாங்கினேன்.பழத்தள்ளுவண்டிக்காரர், “வயித்துக்கு போட்டுருச்சுன்னா வாங்காதும்மா.நீ போ” என்றார்.

நான் புன்னகைப்பதை நானே உணர்ந்தபடி ,வாகனங்கள் வழிவிட்ட சாலையை கடந்து கொண்டிருந்தேன்.பசிக்கிறது.


Comments

  1. மிக நல்ல கதை. ஒரு கதையில் பல இடங்களுக்கு/தலங்களுக்கு சென்று வருகிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்