இப்படிக்கு..:சிறுகதை

 2018 சொல்வனம் மார்ச் இதழில் வெளியான கதை


இப்படிக்கு…                                                                                                                   

ப்ரியமுள்ள யது,

 அன்றாடபாடுகளுக்கு நம்தெருவாசிகள் சென்றுவிட்ட அமைதியில் சிட்டுகளின் கிச்கிச்களும்,காகங்களின் உரையாடல்களும்,தவிட்டு குருவிகளின் ஙாஙா க்களும்,சேவல்களின் மந்தித்த கொக்கரிப்புகளும்,மைனாக்களின் ங்ங்ஙாஙா க்களும் தெருவை உயிர்ப்பிக்கின்றன.மழைமாதகாலையின்  முதல்ஔி, எதிரே உள்ள கொல்லிமலையை பசுமையாக விரித்து அங்கங்கே கருமையாய் மடித்து பிளங்களை முப்பரிமாணத்தில் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கிறது.பச்சை மாமணி போல் மேனி என்று மனம் சொல்லிக் கொள்ளும் தருணம் இயல்பாக உன்பெயரோடு இணைந்து உன்னை கண்முன் நிறுத்துகிறது.இதையெல்லாம் நீ பள்ளிச்சிறுவனாக இருக்கையில் பார்த்த நினைவிருக்கலாம்.

மென்பொறியாளனாகியப் பிறகு இவையெல்லாம் உன் வாயில் எழவே இல்லை.இப்போது நம் ஊர் என்பது உனக்கு விடுமுறைக்கான ஒரு சடங்கு இல்லையா? பொருள் தேடும் சென்னையின் காலைமாலைகள் குளிர் அறையில் ஒன்றுபோலத்தான் என நினைக்கிறேன்.எனினும் உன் பேச்சில் அந்த ஊரின் கால நிலைகளை நான் அறிய விழைந்தாலும், “ நேரமில்ல… எங்க நேரம்?”என்ற உன் அங்கலாய்ப்பால் கேட்காமல் ஒவ்வொருமுறையும் விட்டுவிடுகிறேன்.

இங்கே தொடங்குகிறது… யது எங்கே? என்ற கேள்வி.மென்பொருளாளன் என்றால் யது இல்லையென்றாகும் நிலையா? இல்லை இருபத்துநான்கு மணி நேரமும் மென்பொருளாளன் மட்டுமா? இந்த இருபத்துநான்குமணி நேர சேவைகள் போல.இதற்கெல்லாம் ஒரு வேகத்தடுப்பாக உன் திருமணமிருக்கலாம் என நினைத்தேன்.மென்பொருளாளினியை நீ தேர்வு செய்த போது,வேடிக்கைப் பார்ப்பவளாக உன் அரங்கத்தில் அமர்ந்தேன்.

இரண்டு வாரங்களாக யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்ற பதட்டத்தோடு உன்வீட்டிற்குள்  போர்க்களம்.சத்தங்களில்லா என்மாடியறையில், என்காதுகளுக்கு உன்வீட்டு சத்தம் கேட்டுவிட்டது.இன்னும் நானறியாத உன்னவளிடம் எனக்கு சொல்வதற்கு எதுவுமில்லை.

சமமான படிப்பு ,வேலை ,ஊதியம் ,வயது என்றவுடன் சரி என்றாய்.பெண் சற்று பருமன் என்று அனைவரும் சொல்லியும் , “அதனாலென்ன? ஒரேவயசு அப்படிதானிருக்கும்” என்ற உன்மீது மேலும் ஒரு அழகிய படலம் படர்ந்தது.

டிரண்டுக்கு ஒத்துவராமல் நீ அவளை, “என்னம்மா,இங்கவாம்மா,” என்றழைப்பதை அனைவரும் கிண்டல் செய்தபோது உன்இயல்பு தெரிந்த நான், கொஞ்சம் யது இன்னும் இருக்கிறான் என புன்னகைத்துக் கொண்டேன்.



சென்ற மழையில் தாழ்வார தரையில்,  மெல்லிய கோடு விரிசலாகி  மழைபெய்ய பெய்ய பாசிபடர்ந்து காலைஇழுத்து விட்டுக் கொண்டிருந்துவிட்டு, காய்ந்த பின் கரிகறையாய் நின்றது.ரிமூவர்ஸ் வாங்கி களைந்து எடுத்தாலும் ,இந்த மழைக்கும் அங்கேயே பாசிபிடிக்கிறது. விரைவாக அடைக்க வேண்டும்.இல்லையெனில் நம் திண்ணையே பாழாகும் என்று அய்யா சொல்லிக் கொண்டிருக்கிறார்.அந்தத் திண்ணையில் எத்தனை நாட்கள் தாயம், பல்லாங்குழி, திருடன் போலீஸ், அச்சுக்கல், வளையல்சேர்ப்பு என்று விளையாடியிருப்போம்.ஒவ்வொரு முறையும் யாரோ ஒருவர் தோற்க தானே செய்தோம்.உடனே சிரித்தபடி அடுத்த விளையாட்டைத் தொடங்கிய வேளைகளியில், அம்மாக்கள் அழைத்த குரலோடு தான் இன்றும் அந்த திண்ணைகள் உள்ளன.எப்படி என்பாய்? இப்பொழுதெல்லாம் விழாக்களன்றி நம் ஊரின் இயல்பான மதியம் உனக்கு தெரிய வாய்ப்பில்லை.பின் மதியத்தில் தெருவயசாளிகள் தாயக்கட்டைகளை உருட்டும் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியானவற்றை பகிர்கிறோம் இல்லையா?

பெண்ணில்லாத வீடு என்பதால்,அம்மா வயலில் இருந்து வருவதற்குள், சாயுங்காலம் வீடுபெருக்கி,தண்ணீர் எடுத்து வைத்துவிட்டு எங்களோடு நீயும் டியூசன் வரும் நாட்கள் நினைவில் இல்லையா?!அம்மாவோடு நீயும் மறந்துவிட்டாயென நினைக்கிறேன்.வளர்ந்தும் கூட மட்டையோடும், பந்தோடும் ஏரிக்கு விளையாட செல்லும் மேமாதங்களில் இந்த வேலைகளையெல்லாம் நீ செய்துவிட்டு சென்றதாகவே எனக்கு நினைவு.பின் எப்போது நீ வேலைகளை இன்னார் இந்த வேலைதான் செய்யலாம் என பிரிக்கத் துவங்கினாய் என்று தெரியவில்லை.

உன் வேலையிடத்தின்,வேலையின் சுமையும் அழுத்தமும், ஆசுவாசமும் உன் சகாக்களுக்கும் ஒன்று போலத்தானே?இல்லை நமக்கு மட்டும் தான் இத்தனை அல்லல் என்ற கூட்டத்தைச் சார்ந்தவனா?.எனில் பிறதுறைகளை, வீட்டிலிருப்பவர்களை உணர்வது எப்படி? சிங்கம் உணவு தேடும் காட்டில் தானே சிற்றெறும்பும் தேடுகிறது.

 திரைக்குப் பின்னாலிருந்து திருமாங்கல்யம் அணிவிப்பதைப் பற்றி,நம் சடங்குகள் என்பதற்கு அப்பால் ஒன்றுண்டு.மெல்லிய கதர்துணிக்குப் பின்னால்  அவளுக்கு அவனும் ,அவனுக்கு அவளும் தெளிவில்லாமல் தெரியும் துவக்கம்.

சகித்துக் கொள்வதாக உனக்கு நீயே வேடமிட தேவையில்லை.பின்னொரு நாளில் உன்னை சகித்துக் கொள்வதாய் தெரியும் போது வாள் ஒன்று கீறிச் செல்லும்.திருமணத்திற்கு முன் வேண்டாம் என்று கூட நினைக்கலாம்.பின்னால் எந்த எண்ணத்திற்கும் பொருளில்லை.

என்ன?பழையபஞ்சாங்க சுமைய தூக்கி வைக்கிறேனா? கண்டிப்பாக இல்ல.தனி மனிதன் என்ற கருத்தியலால் கூட்டு குடும்பம் வேண்டாம் என்பது சரி.பெற்றவர்கள் முடியும் மட்டும் தனித்திருக்கட்டும் அதுவும் சரி.பிள்ளைகளுக்கு பழக்கமில்லை யாரிடமும் அண்டாது..முன்ன பின்ன போனாப் போகட்டும் சரி.வீதியில் தப்பு செஞ்சலும் பக்கத்து வீட்டு அப்பா, மாமா, அம்மா சொல்லும் போது, “எம்பிள்ளய சொல்ல நீ யாரு?” என்ற கேள்வி காலத்தோட வேலை.பின்ன அவரு யாரு? பெரியமனுச வாரப்ப முடக்கில நின்னு என்ன பேசினாலும்,செய்தாலும் அவரு தலைகுனிஞ்சிட்டு போக அனுமதி உண்டு.இந்த நேரத்தில அவருக்கு ரோட்ல என்ன வேல?.இப்படியே போயி பிடிச்சா,இப்ப என்ன கல்யாணம் தானே? கோர்ட்ல பாத்துக்கலாம்.

எல்லாத்துக்கும் நம்ம சமூகம் கொடுக்கற பிழை பொறுத்தல்,உரிமை எல்லாம் எங்கயோ, யாரோ,காயம் படக்கூடாதுன்னும், வாழ்க்கை அவங்கவங்களுக்கு உரியதுங்கறத்துக்காக தான்.அதை இவன் என்னைய போடானுட்டான்,முறைச்சிட்டான்,காலையில டீ போடல,அவ பாத்துட்டாங்கறதுக்கெல்லாம் பயன்படுத்தறோம்ன்னு நினைக்கிறேன்.கடைசியில வன்பாருள்களின் காலமாயிடுச்சு.மென்பாருளில்லா வன்பொருள் வெறும் டப்பா இல்ல?!

எனக்கு எல்லாரும் சமம் ங்ற உன்னோட பஞ்சாங்கத்தை விடு.உன்னோட தோழிக்கு அது உன்னோட மனவாக்கு.ஆனால் அம்மாவுக்கும், அவளுக்கும் இல்லை.இருவரிடமும் மாறி,மாறி ஒரே சொல்லை சொல்ல வேண்டும்.என்னடா …நீ எதையதைன்னு உனக்கு சொல்லி விளங்க வைக்கிறது. ஒருபுத்தகத்தையாவது வாசிக்கறயா?ம். அதுவும் நல்லவனுக்கான அடையாளம் தான்.இந்தக்கடித இறுதியில ஒருபுத்தகத்துகான இணைப்புஇருக்கு.

அவ ஏன் இப்படியிருக்கான்னு உனக்கு புரியலன்னா அறிவியல் முறையிலயோ?ஆன்மீகத்திலயோ?நடைமுறையிலயோ பதில் தேடு.எங்க?அப்பவே, “ டேய் பயாலஜி எடுடா,”ன்னேன் கேக்கல.சைக்காலஜி புத்தகங்கள குடுத்தப்ப கிண்டல் பண்ணின.ஆன்மீகம்..சுத்தம்.உங்க உலகத்தில படிக்கறதுனா என்னடா?எனக்கு புரியல.

பெய்தமழையில் அத்தனை அழுக்குகளையும் அடித்துக் கொண்டு, எந்தஅழுக்கின் முகத்தையும் காட்டாமல் கரந்து செந்நீராய் பெருக்கெடுக்கிறது நம்ஆறு.இன்னும் ஒருவாரத்தில் தெளிந்துவிடக் கூடும்.

எல்லாரும் வயல்களில் நாத்து போட்டுருக்காங்க.மழைக்கு முன் மண்வெட்டிய வச்சி பெயர்த்தெடுத்த மண்ணை, இப்ப சின்னஞ்சிறிய முளைகள் சல்லடைக்கண்களாக துளைச்சி எழுந்து வருதுப்பா.எல்லா மனசுக்கும் ஏதோஒரு மழை காலம் உண்டு யது.

மழைக்கு காத்திருக்கிறது நிலம்.நிலம் நோக்கியே பயணிக்கிறது மழை.என்றாலும் காய்தலும், பெய்தலும் மாறிமாறி நிகழ்வதே இயற்கையின் விதி.விதிகள் மாறினால் பிரளயம் அல்லது பாலை.சுழலட்டும் உன் நிலம்.

 ப்ரியமுள்ள,

ப்ரியா.

அன்புள்ள ப்ரியா,

என்னோட இன்பாக்ஸில் இது என்ன புது ஐ.டி ன்னு திறந்தா! பழைய பல்லாங்குழி.ம்..எனக்கு எழுதனுன்னு தோணியிருக்கு.இந்த மெயில வாசிக்கறப்ப அவ ரூமில் வாட்ஸ்அப்பில் இருக்கா.நேத்துதான் ப்ரண்ட்ஸ் ரூமிலிருந்து வீட்டுக்கு வந்தேன்.வீடு அமைதியா இருக்கு.சிறிய இடைவேளை.

இங்கக் கூட வானம், மேகம் ,காற்று, கடற்கரை,சாலையோரம் பூப்பித்த மரங்கள்,செடிகள் ன்னு எல்லாமே இருக்கும்மா.என்னமோ நானெல்லாம் வேற்றுகிரகவாசி மாதிரி எழுதியிருக்க. 

அதுசரி..நான் என்னமோ ஆணாதிக்கவாதியா மாறிட்டங்கறது போல எழுதியிருக்க.உன்னோட நெற்றி சுருக்கிய முகம் முன்னாடி வருது.நல்லாவே இல்ல.கொஞ்சம் புன்னகையோட கூட வாசிக்கலாமே.

ஏன்..டீ போட்டு தரமாட்டீங்களா?.வீடு பெருக்க மாட்டீங்களா?.நானும் செய்யலன்னு சொல்லல.நானே செய்யனுமா?.

வேலை சுமை தெரியாம இல்ல.அதே வேலையத்தானே நாங்களும் செய்யறோம்.பின்ன தினமும் உங்கள வேற தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஊர்வலம் வரனுமா?.என்னை அப்படியா நினைக்கிற?.குழந்தையில இருந்து கூடவே இருந்த நீயுமா?.ஆச்சரியமா இருக்கு.நீ எப்ப பெண்ணாதிக்கவாதியா மாறினன்னு நானும் கேட்கலாமில்ல? என்ன?.

முறைச்சிட்டான்,பேசிட்டான் ங்ற மாதிரியான சின்னபிள்ளைகள் சச்சரவில்லப்பா.நீயும் ஒருத்தனோட கமிட்டாகிப் பாரு.நானா,அவளாங்கற பிரச்சனையில்ல.இது ‘தான்’மட்டுந்தாங்கற பிரச்சனை.

காயம்படக்கூடாதுன்னுதான் ஒரு பையை ரெடியாவே வச்சிருக்கேன்.பசங்க ரூமுக்கு கோவிச்சிக்கிட்டு போறதுக்கு.கூப்பிட யாரும் வர்ரதில்ல..அப்படியே ஒருநாள் கிளம்பி வீட்டுக்கு வர வேண்டியது தான்.

நீ சொல்றது சரிதான்.அவளோட மழைக்காலம் எதுன்னு புரிஞ்சுக்க முயற்சி செஞ்சிக்கிட்டுதான் இருக்கேன்.ஆனா வானம் கனிந்து பெய்யாமல்..சில்வர் அயோடைடு மழை மாதிரி தான்.பார்க்கலாம்.

நம்ம மூணாவது வீட்டு நந்து திருப்பூரில் இருந்து இதே விசயத்துக்காக பேசினான்.ஒன்னு தெரியுது சென்னையில போடற சத்தம் கணபதிபாளையத்துக்கு கேக்காம இருக்காது போல.

புத்தகத்துக்கான இணைப்பை பார்த்தேன்.வாசிக்கனுன்னு நினைச்சவே மலைப்பா இருக்கு.நிறைய ஆண்டுகளிருக்கும்.உன்னோட நம்மஊர் வாசகசாலையில வாசிச்ச கதைகள்தான் கடைசி.

நேத்து மெரினா மணலில் அமர்ந்து கடல் பார்க்கையில் தழும்பிக் கிட்டேயிருக்கு சிந்தவே இல்லன்னு தோணுச்சி.ஒருவேளை அது சிந்த இங்க பாத்துன்னு தோணுச்சு.இல்ல அது மீறாத வரைதான் நமக்கு வாழ்க்கைன்னு நினைச்சேன்.அதே நேரம் கட்டட்றதுன்னு ஒன்னு இங்க இல்லவே இல்லன்னு தோணுது.

அதுவுமில்லாம ஒன்னு நல்லா தெரியுது.அம்மா,நீ,இவ ன்னு எல்லாரும் ஏதோ ஒருவகையில என்னை தேர்ந்தெடுத்தது நீங்க ன்னு மட்டும் புரியுது.டார்வின் சொல்றாப்ல.அப்ப நான் அவ ஸ்பெசல்ன்னு அவளுக்கு ஏதோ ஒரு மொழியில சொல்லிட்டே இருக்கனும்.மேலும் அம்மாவ விட,தோழிய விட நீ எனக்கு ஒருபடி மேலன்னு சொல்லனும்.

இப்ப வானில் பிறை எழறத ஏழாவது மொட்டமாடியில இருந்து பாக்கறேன்.அது எனக்கான ஒரு ஔிப்புன்னகையா விரியுது.இரவின் மேற்குவானின் முதல் மீன் தெரியுது.நீ சொல்லுவியே..அதை பார்க்கிற நேரங்களில செய்தே தீர வேண்டிய ஒருசெயலை நினைவு வச்சிக்கனுன்னு.அத பாக்கறப்பல்லாம் அந்த நினைவு வந்து அந்த காரியத்தை செய்யற தீர்மானம் வரனுன்னு.இப்ப கண்ணெதிரே மின்னும் விண்மீனைப் பார்த்து மனதிடம் சொல்றேன், “வாழ்க்கையை சின்ன சின்ன ஈகோவிற்காக சிக்கலாக்கிக்காம மகிழ்ந்திருக்க முயற்சிக்கிறேன்”.சரியா ப்ரியா? 

தான் ங்கற போட்டிய முடிச்சி வைக்க நாம்ன்னு சொல்லி வாழ்க்கையை ஔியாக்க சூழாகியிருக்கிறது முத்து.

அன்புடன்,

யது.





Comments

  1. மென்பொறியாளனாகியப் பிறகு இவையெல்லாம் உன் வாயில் எழவே இல்லை.இப்போது நம் ஊர் என்பது உனக்கு விடுமுறைக்கான ஒரு சடங்கு இல்லையா? பொருள் தேடும் சென்னையின் காலைமாலைகள் குளிர் அறையில் ஒன்றுபோலத்தான் என நினைக்கிறேன்.எனினும் உன் பேச்சில் அந்த ஊரின் கால நிலைகளை நான் அறிய விழைந்தாலும், “ நேரமில்ல… எங்க நேரம்?”என்ற உன் அங்கலாய்ப்பால் கேட்காமல் ஒவ்வொருமுறையும் விட்டுவிடுகிறேன்.

    "சிங்கம் உணவு தேடும் காட்டில் தானே சிற்றெறும்பும் தேடுகிறது." -

    திரைக்குப் பின்னாலிருந்து திருமாங்கல்யம் அணிவிப்பதைப் பற்றி,நம் சடங்குகள் என்பதற்கு அப்பால் ஒன்றுண்டு.மெல்லிய கதர்துணிக்குப் பின்னால் அவளுக்கு அவனும் ,அவனுக்கு அவளும் தெளிவில்லாமல் தெரியும் துவக்கம்.

    கடைசியில வன்பாருள்களின் காலமாயிடுச்சு.மென்பாருளில்லா வன்பொருள் வெறும் டப்பா இல்ல?!

    வாழ்க்கையை சின்ன சின்ன ஈகோவிற்காக சிக்கலாக்கிக்காம மகிழ்ந்திருக்க முயற்சிக்கிறேன்”

    -- அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பசியற்ற வேட்டை

பெண் கல்வி,விடுதலை மற்றும் தன்னறம்

எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் நேர்காணல்