Skip to main content

பாட்டையா

                                                                           முத்தத்தின் சுவை

                                                       சிறுகதை:பாட்டையா

 எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி


மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை. அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும். அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது. ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார். அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.  இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும் ,என்அய்யாவுக்கும் ,ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.

என்நினைவின் ஒருபக்கத்தில் ஓரமாக இருந்த அவரை, பதின் வயதில் மீண்டும் மையத்திற்கு இழுத்து வந்தது இந்தக்கதைதான். மீண்டும் அவர் அன்று எங்களுக்கு சொல்லியது என்ன? வாழ்ந்து காட்டியது என்ன? என்று சிந்திக்கவும்,  புரிந்து கொள்ளவும்,அதன்வழி மனிதர்களை பார்க்கவும் அணுகவும் இந்தக்கதை முகாந்திரமாக இருந்தது. பாட்டையாக்களை  நினைவுபடுத்தவும் கதைகளே தேவைப்படுகின்றன.

பாட்டய்யாக்கள் குழந்தைகளுக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெரியவர்களிடம் பேசுவதற்கு பெரும்பாலும் எதுவும் இருப்பதில்லை. இன்றையப்பாட்டையாக்கள் மாத்திரைகளால் உறங்கிக்கொண்டோ, தனித்தோ கிடக்கிறார்கள். சிலஆண்டுகளுக்கு முன்புவரைக்கூட திண்ணைகளில் ,வெயில்காலத்தின் இரவுகளில் வாசல்களில் கயிற்றுக்கட்டில்களில் கதைகளின் முனகல்கள் கேட்டன. இன்று வயசாளிகள், சகவயசாளிகளுக்கு ஊரின் கதைகளை நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இப்பொழுது துவங்கியிருக்கும் கோடையில் வாசல்களில் ஆட்கள் கயிற்றுக்கட்டில்களில் நிலவொளியில் படுத்திருக்கிறார்கள். ஓரத்தில் ஒற்றைக்காலை தூக்கிப்போட்டபடி பிள்ளைகள் அருகில் இல்லை. கதைகள் பிடிக்காத பிள்ளைகள் இருக்கமுடியாது. எனில்? உள்ளூரில் படித்து வந்தப்பிள்ளைகளுக்கு நேரமிருந்தது. இன்று பிள்ளைகள் படிப்பதைவிட,படிப்பதற்கான பயணக்களைப்பில் உள்ளே உறங்கிக்கிடக்கின்றன. சாயுங்காலம் வீதியைப்பார்க்கையில் பத்து வயதிற்குள்ளான பிள்ளையின் முகமா?நடையா?குரலா?! இவை என்று பிள்ளைகளைப்பார்க்க யோசனையாக இருக்கிறது.

என் பத்துவயதின் ஞாயிறு அன்று, உறக்கம் கலையாத அதிகாலையில்  கைகள் என் தலைமீது படிய அய்யா அம்மாவிடம், “பாலுப்பிள்ள அய்யா தவறிட்டாராம்..பாத்துட்டு வர்றேன். பாப்பா எழுந்திருச்சதும் மெதுவா சொல்லு,”என்றார்.

“இதுக்கிட்ட என்னன்னு நாஞ்சொல்றது…செத்து போறதுன்னா என்னாங்கும். இல்ல எனக்கு புரியாத எதாச்சும் கேக்குமே..நீங்க வந்துட்டு இதுக்கிட்ட சொல்லி கூட்டிக்கிட்டு போங்க..”என்னும் போதே நான் விசுக்கென்று எழுந்தமர்ந்தேன்.

பின்பு மெதுவாக மனதினுள் மறைந்த தாத்தா, இந்தக்கதைக்குப்பின்பே என்னுள் மீண்டும் எழுந்து வந்தார். படிக்கும் காலத்தில் விடுதியிலிருந்து வீட்டிற்கு வரும் நாட்களில் வீட்டில் உள்ளவர்களிடம், எங்களூர்க்காரர்களிடம் அவரைப் பற்றி கேட்டு வைப்பன். இன்றும் பழைய ஆட்களை காண்கையில் பாலுப்பிள்ளை தாத்தாவை தெரியுமா? என்று பேசத்தொடங்குவது என் வழக்கம். அந்தக்குடும்பமே எங்கள் ஊரில் வேர் இல்லாமல் போனாலும் அவரை நினைக்கும் ஆட்கள் இன்றும் உண்டு.

ஏழாங்கிளாஸ் பாடம் நடத்துகையில் அரிஞ்சர் பாட்டையா ஞாபகம் வந்து உறுத்தியது என்று ஒரு ஆசிரியரின் நினைவிலிருந்து இந்தக்கதை தொடங்குகிறது. மொத்தக்கதையும் கிராமத்தில் வாழ்ந்து அரசாங்கப்பள்ளியில் படித்த ஒவ்வொருவருடன் பொருந்திப்போகக்கூடிய கதை. 

பழைய நினைவுகளை ஏக்கமாக நினைப்பதற்காக நான் இந்தக்கதைகளைப் பற்றி எழுதவில்லை. நாம் எதன்மூலம் இந்தவாழ்க்கையை  புரிந்து கொள்ள முடியும் என்ற புரிதலுக்காக எழுதிப்பார்க்கிறேன். சிறுவயதில், பதின்மையில் எந்தஅளவு நம் ஆளுமையில் கதைகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்காக எழுதுகிறேன். கதைகள் ஏன் தேவை என்பதற்காக காரணத்தை தேடுவதற்காகவும் இருக்கலாம். நம்சூழலில் இருக்கும் நிரந்தரக்கேள்வி…எதற்காக பாடப்புத்தகத்தைத்தவிர பயனில்லாத வேறுபுத்தகங்களை வாசிக்க வேண்டும்? 

புத்தகங்கள் வாசிப்பதோ,எழுதுவதோ,கதைசொல்வதோ பிழைப்பில்லாதவர்கள் செய்வது.

என்பன போன்ற தொந்தரவு செய்யும் கேலிகளுக்கு எனக்கு நானே தேடும் பதில்கள் வாசிப்பனுபக்கட்டுரைகள்.

பயன்மதிப்பிற்கும் இலக்கியத்திற்கும் தொடர்பில்லை. ஆனால் அகப்பயணம்,ஆன்மீகப்புரிதல்கள்,வாசித்தவற்றிலிருந்து ஏறிச்சென்று நமக்கு மட்டுமான சில வாழ்க்கை பார்வைகளை கண்டடைதல் போன்றவை இந்த எளிய வாழ்வில் எவ்வளவு பெரிய பயன்மதிப்பு.

நம்ஆழம் மிகவும் தனித்தது. அதற்கு துணையாக நிற்ககூடிய தகுதி எவற்றிற்கு உண்டு என்று நான் உணர்கிறேனோ, அதை பகிர்வதற்காக இதை எழுதுகிறேன். கதைகளும் ஒருவகையான பகிர்தல்கள் தானே.

இந்தக்கதையில் பட்டையாவின் இறப்புநாளில் பட்டைய்யாவின் எதிர்வீட்டுநிழலில் வாத்தியார் பாட்டைய்யாவுடனான தன்நாட்களை நினைத்திருக்கிறார். பாட்டையா என்ற ஆளுமை தனக்கு என்னவாக இருக்கிறார் என்று மனதில் அலசிக்கொண்டிருக்கிறார்.  

பாலுப்பிள்ளை தாத்தா இறந்த அன்று ,சின்னப்பிள்ளைகள் இழவுவீட்டில் நிறைய நேரம் கூடாது என்று யாரோ  ஒருவரால் நான் தூக்கிவரப்பட்டு வீட்டில்விடப் பட்டது மட்டுமே என் நினைவில் இருக்கிறது. அன்று பத்துவயது பிள்ளையை குழந்தையாகவே பார்க்கும் மனநிலை மாறாத மனிதர்களுடன் வாழ்ந்தேன் என்பதை நெகிழ்வாக உணர்கிறேன்.

கதையில் நிலவொளி சரிந்த முற்றத்தில் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் பட்டைய்யாவைத் தேடி பிள்ளைகள் சூழ்கின்றன. அவர் பிள்ளைகளுக்காக அங்கிருக்கிறார். வயசாளிகளின் பேச்சுக்களுக்கு சிறுவர்களின்றி யாரும் கவனம் கொடுப்பதில்லை. அவர்களுக்கு பிள்ளைகளும், பிள்ளைகளுக்கு அவர்களும் தேவைப்படுகிறார்கள்.

கதையின் ஆசிரியர்கதாப்பாத்திரம் சிறுவயதில் அவசரஅவசரமாக இரவுஉணவை முடித்துவிட்டு கதைகேட்க பாட்டையாவைத் தேடி ஓடுகிறான். அதுபோல பறக்கும் மனநிலை எதிலாவது இருந்தால் அந்தநாளின் மையமாக அதுமாறும். காலையில் எழும்போதே இன்றைக்கு இதைசெய்துவிட்டால் அந்தமையத்தை சுவைக்கலாம் என்று ஆழ்மனதிற்குத் தெரியும் . நாம் மற்றவற்றை பெரும்பாலும் சரியாக செய்வாம். அந்த மையமாக இருக்கும் தகுதி கொண்டவை, சிறுவயதில் கதைகள் . வளர்ந்தபின்னும் அதேதான்  என்று நினைக்கிறேன்.

வாழ்வை இனிமையாக்கும் கதைகள். இனிமை என்பது வயது ஏற, ஏற இனிமை என்பதன் பொருள்மாறிக் கொண்டேயிருக்கிறது.

மூன்றாம் வகுப்பின் ஒரு ரணகளநாளில் என்னை குளிக்க வைக்கையில் அம்மா அழுதுகொண்டே, “பச்சப்பிள்ளைய இப்படியா குச்சியில அடிபாரு..ராட்சசன்,”என்று அய்யாவைத் திட்டிக்கொண்டிருக்கையில் எட்டிப்பார்த்த அய்யா, “குளிச்சிட்டியா….போலாமா பாப்பா,”என்றார்.

“ம்மா….அய்யாடியூசனுக்கு போவமாட்டேன்,”

“என்ன பாவம் பண்ணித்தொலச்சனோ…வாத்தியாரக் கட்டிக்கிட்டு நான் படுறபாடு பத்தலன்னு இதுகளும்.எல்லாத்திலயும் மண்டக்கிறுக்கு. வாத்தியாரு வேலதானே…பெரிய கலெக்டருன்னு நெனப்பு,”என்ற அம்மா சத்தம் கேட்டுத் திரும்பினார். துண்டு எடுத்துவந்து எனக்கு துவட்டிவிடும் அய்யாவைப்பார்த்ததும் வாயை மூடிக்கொண்டார்.

சத்தம்வராமல் அழுதபடி நடந்த என் வலதுகையை பிடித்தபடி , டியூசன் செல்லும் வழியிலிருந்து விலகி அடுத்த வீதிக்குள் நுழைந்தார். வாசலில் பத்துபதினைந்து பிள்ளைகள் சூழ மர ஈசிச்சேரில் அமர்ந்திருந்த பாலுப்பிள்ளை தாத்தாவிடம், “இது நம்ம பாப்பா. நீங்கப் பாத்துக்கங்கய்யா,”என்றார்.

“ஊருபிள்ளங்களே உன்கிட்ட ட்யூஷன் வருது...”என்று சிரித்தபடி தாத்தா நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“என்னால முடியலங்கய்யா..நல்லா படிக்குது. கணக்கு ஏறமாட்டிக்குது…பூஞ்சையான பிள்ளையா இருக்கு வேற...”

“ம்…”என்ற தாத்தா அய்யா பிடித்திருந்த என்கையில் குச்சியின் அடித்தடத்தைப் பார்த்ததும், “என்னய்யா இது..”என்றார். அய்யா தலையை குனிந்து கொண்டார்.

தாத்தா என்னைப்பார்த்து பொக்கைவாய் விரிய புன்னகைத்து , “வாடி எம்பாப்பாத்தி…”என்றதும் நான் ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன். கன்னத்தின் உப்புதடத்தில் முத்தமிட்ட தாத்தா, “ஐய்யா...முத்தம் இனிக்குதே…”என்று பிள்ளைகளைப் பார்த்து சிரித்தது இன்றும் மாறாமல் உள்ளுக்குள் இனிக்கிறது.

தாத்தாவின் கதைகளில் ஜான்சிராணி,சுபாஷ்,காந்தி அதிகமாக வருவார்கள். தன்தலைக்கு மேல் இருக்கும் அவர்களின் படங்களை காட்டியபடி அவர்ளைப்பற்றி சொல்வார். அரிசந்திரன் கதை,சிரவணன் கதைகளை மீண்டும்,மீண்டும் சொல்வார். சிபியின் கதை,தர்மர் யட்சன் கதை,பீமன் பகன் கதைகளை அவருக்குள்ளே ரசித்து சொல்வார். வீட்டுப்பாடம் முடிச்சாக்கதை,வாய்பாடு ஒப்பிச்சா கதை,அழகாக எழுதினா கதை,பொய் சொல்லாம உண்மையை சொன்னா கதை என்று எங்களை ஒரு மாயபூஞ்சவுக்கால் விரட்டிக் கொண்டிருப்பார்.

பாட்டைய்யா கதையில் சிறுபிள்ளைகளை வசீகரிக்கும் சாகசக்கதைகள், அவர்களை பின்னோடச்செய்யும் வீரதீரக்கதைகளை பாட்டைய்யா சொல்கிறார். அவை அந்த ஆசிரியரின் வாழ்க்கைப்பார்வையில் நுண்ணிய, அதேநேரம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதாக கதையில் சொல்லப்படுகிறது. ஆம்…அந்தசக்தி அவற்றிற்கு உண்டு. கதையில் வரும் ஈனாப்பூச்சி..அண்ட பேரண்டப்பட்சிகள் போன்றவை  பிள்ளைகள் மனதில் கனவை உருவாக்குபவை. கதையில் ‘பாட்டையா ஒரு ராசாதான்’ என்று ஒருவரி வரும். அது கதைசொல்லிகளோடு இருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மேலும் கதைசொல்லிகளாக மட்டும் அவர்கள் இருப்பதில்லை. பாலுப்பிள்ளைதாத்தா வீட்டின் இரண்டாம் கட்டில் அன்னாந்து பார்த்தால் சதுரமான வழி இருக்கும். ஏணி போட்டு ஏறிவேண்டும். மேலே அம்புலிமாமா போன்ற கதைப்புத்தகங்கள் பழையவிளையாட்டு பொருட்கள் இருக்கும். அதை எடுக்க ,திரும்பி வைக்க பிள்ளைகள் சரசர என்று ஏறுவார்கள். ஒருநாள் நானும், இன்னொருவனும் கீழேயே நின்று அவர்களைப் பார்த்துக்கொண்டும், கெஞ்சிக்கொண்டும் இருப்பதை தாத்தா பார்த்தார். என் கையைப்பிடித்தபடி “ஏறு,” என்றார் . கிட்டத்தட்ட சதுர வாயிலை எட்டுவதற்கு இரண்டுபடி இருக்கையில், அவர் பிடி நழுவுகையில், உள்ளங்காலை கையில் ஏந்தி “மேல காலஎடுத்து வையி..எடு கால,” என்றார். உள்ளே ஏறி நின்று நாங்கள் இருவரும் திரும்பி அவரைப்பார்த்து சிரித்ததும், “அவ்வளவுதாண்டா தங்கங்களா,”என்று சொல்லி சிரித்த குரலை, இன்றும் நான்செய்யும் சிலசெயல்களுக்கு பின்னால் கேட்கிறேன். என் மனதின் குரல். அவர் எங்கிருந்தோ சொல்லிக்கொண்டிருக்கிறார்.

பாட்டையா கதையில் ஆசிரியர் பாட்டய்யாவுக்கு வாய்க்கரிசி போடுகையில் சமூகம், குலம், சாதி, உறவு என்ற கோடுகளை அழிக்கிறார். கிராமத்தில் இன்றும் அப்படியெல்லாம் செய்துவிட முடியாது. கதைகள், இலக்கியங்கள் எல்லைகளை ஏதோ ஒருவகையில் மாற்றி அமைக்கின்றன. வீட்டிற்குவரும்போது தன் பிள்ளைகள் கார்டூன் பார்ப்பதை பார்க்கும் ஆசிரியர் ,“ பாட்டையா கதை சொல்கிறார்,” என்று சொல்வதோடு கதையை பொன்னுசாமி முடிக்கிறார்.

ஏதோ ஒரு வடிவில் கதைசூழ் உலகம் இது. வாழ்விற்கு தேவையான ஆதாரம். அந்த இடத்திலிருந்து இலக்கியம் நோக்கி நகர்கையில் அது வேறு ஒரு வாழ்க்கை பரிமாணத்தை,நம்மை சூழ்ந்துள்ள பிரபஞ்சத்தை உணர,முன்னாலிருக்கும் சகர்களை புரிந்துகொள்ள உதவுகிறது. தான் பிறனாவும் ,அதுவாகவும் மாறும் வாய்ப்புக் கிடைக்கிறது. அது குறைவதால் கூட இன்று இத்தனை பதற்றம் சார்ந்த நோய்கள் வருகின்றன என்று தோன்றுகிறது. பாட்டய்யா கதை பெற்றோர்களுக்கானது என்றும் எனக்குத் தோன்றுகிறது.

தாத்தா வீட்டில் பின்கட்டு செடிகளின் நடுவே ஒரு மல்லிச்செடி மட்டும் உயரமாக தளதளவென்று நிற்கும். பூக்காத அதைபற்றிக்கேட்டால் தாத்தா, “பூத்தாதான் செடியா? அது பூக்க நினக்கல,”என்பார். ஒரே மாதிரி எல்லாமும் இருக்கத்தேவையில்லை என்பார்.

இப்படிக் கதைகளும், கதைசொல்லிகளின் வாழ்வும், அவர்களின் பார்வைகளும் மிகவும் தேவையான ஒன்று. இன்றும் யூ டியூபில் பவா செல்லதுரை சொல்லும் கதைகளை ஆசையாகக் கேட்கிறேன். நமக்கான கதைசொல்லி இருப்பது வாழ்வின் மிகப்பெரிய வாய்ப்பல்லவா? இந்தக்கதையில் ஆசிரியர் கதாப்பாத்திரம் எனக்கு  இரண்டாக பிரிந்து தெரிகிறார். ஒன்று ஆசிரியரான தந்தையாக, இன்னொன்று சகவயது நானாக..அப்படி மாற்றி மாற்றி  வருவது வாசிக்கையில் நல்ல அனுபவமாக இருக்கிறது.

இந்தக்கதையில்,” சும்மா கிடக்காத..தனித்துவமாக இரு,”என்று ஒருவரி வரும். அது பொன்னுசாமி பாட்டையா நமக்கு சொல்வதாக தமிழ்தேர்வில் எழுதினேன். ஊரோட ஒத்து போ…நீ சராசரிதான்…என்பவை அதிமாக சிறுவயதில் அறிவுரையாகக் கேட்டவை.அதுவும் பெண்பிள்ளைகளுக்கு …கலெக்டரானாலும் சட்டி கழுவனும்…கட்டினவனுக்கு துணிதுவக்கனும் என்பார்கள்.

நாங்கள் மிகச்சாதாரணமானவர்களாக இருந்தாலும் பாட்டைய்யாக்கள் தான் எங்களை தங்கபாப்பாத்தியாகவும்,அண்ட பேரண்ட பட்சிகளாகவும்,அறிவுள்ள ராணிகளாகவும் ,வலிமைமிக்க ஈனாப்பூச்சிகளாகவும் பறக்கவிட்டவர்கள். அவர்களின் ஒவ்வொரு கதைகளும் எங்கள் கன்னத்துமுத்தங்கள்.

                                                                                     






Comments

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...