Skip to main content

சுழலில் மிதக்கும் பூ: சிறுகதை

     இது என்னுடைய மூன்றாவது கதை. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத சொல்வனம் இதழில் வெளியானது. நன்றி: சொல்வனம்

             சுழலில் மிதக்கும் பூ           

தேர்வறையிலிருந்து ராமர் வெளியேவந்து தூணில்சாய்ந்து முதுகை சற்று குனித்து கருப்புஷீவைப் பார்த்தபடி நின்றான். ஆறடிக்கு சற்று குறைவானவன். மேமாதவெயில் முதுகில்படிந்து கொண்டிருந்தது. தேர்வு பற்றிய பேச்சுக்கள் இணைந்து இரைச்சலாகியது. மேகங்களற்ற தெளிவானை வெறிக்கத் தொடங்கினான்.

கருப்புவெள்ளை சீருடைகளுக்கிடையே புகுந்து நீலவண்ணச் சீருடையில் வந்த இவள் அவன் கைப்பற்றி புருவம் தூக்கினாள். “பாஸாயிடுவேன்..”என்றவனின் அடுத்திருந்து வந்தவன் “இதுல பாஸாயிட்டா போதுமா?”என்றபடி சிரித்தான்.

கடைசியாக வந்த பாலா அவனிடம் கீழே சைகைகாட்ட படியிறங்கி சிரித்தவன் ஓடினான்.

"வெயிலடிக்குதுடா...இந்தட்டம் வா,” என்ற பாலாவின் குரலால் கலைந்து தலையாட்டியபடி ராமர்  நகர்ந்தான். வியர்வை பெருகி முதுகை நனைத்திருந்தது.

“கீழப்போய் சாப்பிட்டு போலாம்” என்றவனிடம் ராமர் மறுத்தான். மீசையை தடவியபடி பாலா புருவம்சுருக்கி, "ஏண்டா...இன்னுமா?” என்றபடி திரும்பிக் கொண்டான். நிற்கையிலேயே கடந்துசென்று வடியும் வாய்க்கால் நீராக நண்பர்கள் இறங்கிச் சென்று மைதானத்திலும் உணவகத்திலும் தேங்கினர்.




படிகளில் மேல்கீழாய் இவளும் ,ராமரும் அமர்ந்தார்கள். பாலா உண்பதற்கு வாங்கி வரச் சென்றான். ராமர் முன்னால் சுவரில் பாதிக்கும் மேலிருந்த சன்னல்வழி இளஞ்சிவப்பில் காய்ந்து முற்றியிருந்த சோளக்காட்டைப் பார்த்த படியிருந்தான். முற்றியசோளக்கதிரில் அதன் ஆட்டத்தற்கேற்ப உடல் வளைத்துக் கொண்டே அமர்ந்து சோளம் கொறித்துக் கொண்டிருந்தது ஒரு பச்சைக்கிளி. ஓசைகள் அடங்கிய அந்த மூன்று மாடிக்கட்டிடம் வெப்பத்துடன்,காற்று நடமாட்டமின்றி அழுந்தியிருந்தது.

சேலையை சரிசெய்தபடி இவள் இறங்கிவந்த படிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சென்றமாதத்திலிருந்த ராமரை நினைத்துக் கொண்டாள். முகம்நோக்கி பேசுவதைத் தவிர்க்கும் இவனின் அடுத்த துருவம் அவன்.

வாரம் முழுவதும் விடுமுறையிலிருந்த ராமரைப்பற்றி செவ்வாயன்று நேற்று திருமணம் என்றும் ,புதனன்று பதிவுமணமென்றும்,சனியன்று காவலர் விசாரணை என்றும் கல்லூரியின் நூறுநாவுகளும் ரகசியம் பேசிக் கொண்டிருந்தன. திங்களன்று எவரையும் பார்க்காத பார்வையோடு ராமர் கல்லூரி மீண்டான்.

நெருங்கிய நண்பர்களை முற்றிலும் தவிர்த்த அவனை அவர்கள் தள்ளிநின்று மீள எதிர்பார்த்திருந்தனர். வகுப்பில் “பதின்பருவ மாணவர்கள் மேல் ஓப்பார்குழுவின் ஆதிக்கம்,முக்கியத்துவம் என்ன?...என்பது நினைவில்நிறுத்த வேண்டிய பாடப்பகுதி. அந்தப் பகுதியை நடத்திய ராமர் நினைவு படுத்தலாம்,” என சாந்தகுமார் அய்யா சொல்லி ஐந்துநிமிடங்கள் சென்று எழுந்தவன் நினைவில்லை என அமர்ந்தான். கைகளை பிசைந்து உதட்டை கடித்ததுக் கொண்டிருந்தான்.

“என்னடா இவன்?...என்ன ராமர்?”குரல்களை மீறி ஒலித்தது மணி. மைதானத்தைச் சுற்றி மாறிமாறி பசுமைகொண்டிருந்த வேம்பு புங்கைகளின் மேற்கே ராமர் நெடுநேரமாக நின்றிருந்தான்.

அதேஇடத்தில் நண்பர்களிடையே தோளில் கைப்போட்டு பேசிச் சிரிக்கும் கூட்டத்தில் இவன் தலை தனியேத் தெரியும். கூட்டத்திலும், வெளியிலும் சட்டென்று கண்களில்பட்டு பதிந்தமுகம்...சிரிக்கும் முகத்தை நினைத்துப் பார்த்த இவள் அவனருகே சென்று “சாரோட முகமே மாறிடுச்சு ...என்னாச்சு உனக்கு?” என்ற போது பாலா அருகில் வந்தான்.

அவன் இருவரையும் மாறிமாறி பார்த்துவிட்டு நகர்ந்தான். அடுத்து வந்த நாட்களில் வலிய பேசிப்பேசி இருவரும் அவனை நெருங்கினார்கள்.

வகுப்பில் மறுமுறையும் பதிலளிக்காமல் நின்ற அவனை ஓங்கிப்பேசினார் அய்யா. உணவு இடைவேளையில் வகுப்பில்  அருகில் அமர்ந்து, “ஏன் ?”என்று பாலா அழுத்திகேட்டவுடன், "ஐஞ்சு நிமிசம் யோசிச்சும் ஞாபகம் இல்லப்பா..”என்ற ராமரை  கண்கள் சுருங்கப் பார்த்தான் பாலா. அடுத்த இருக்கையிலிருந்து எழுந்து வந்து ராமர்கைகளில் இருந்தத் தாளை இவள் வாங்கிப் பார்த்தாள். அதில் அய்யா கேட்ட கேள்வியை முழுத்தாளில் மீண்டும் மீண்டும் எழுதியிருந்தான். உணவிற்காக கலைந்தனர்.

சுள்ளென்று நடுமண்டையில் உறைத்த வெயிலை தடுக்க முந்தானையை தலையில் போட்டு விடுதியிலிருந்து நடந்த இவளும் ,தோழியும் பொறியியல் கல்லுாரிப் பாதையில் முந்தானையை கையில் பிடித்தபடி, “சோறுதிங்க நாலுகாலேஜ் தாண்டவேண்டியிருக்கு...ஊருக்கு இளைச்சவன் வாத்தியாரு மட்டுமில்ல அதுக்கு படிக்கிறவளும் தான். எல்லையில கொண்டி பி.எட் காலேஜுக்கு திட்டம் போட்டவன்  புள்ளக்கி கணக்கு வராம போவ,”சிரித்தபடி சோற்றுப்பாத்திரத்தை கைமாற்றினாள்.

"புதுசா என்ன? அவனோட பேச்சு...அவன்லாம் ஒரு..வாயில வந்துடும் ...வீட்ல சாப்பாடு போடலயா அவனுக்கு...”என்றபடி கல்லூரிக்குள் நுழைந்தாள் சுகுணா.

மைதான மரவரிசையில் வடக்குப்பக்க சிமெண்ட்பெஞ்சில் அமர்ந்திருந்த ராமரிடம்,"சாப்பிடு...”நீட்டியபடி அமர்ந்தாள். சூடாக இருந்த முள்ளங்கிக்குழம்பு சோற்றை  குதறிக் கொண்டிருந்தான். பாலாவும் வந்தமர்ந்து கொண்டான்.

இருவரும் இருபுறமும் அமர்ந்து தேர்வுக்கான பாடங்களை கலந்து பேசத் தொடங்கினார்கள். இடையில் பாலாவிடம் ராமர், “இது நினைவிருக்கு. அவ டியூட்டி முடிஞ்சு வர்ற வரை ஹாஸ்பிடல் வராண்டாவில் இதைத்தான் படிச்சிட்டிருந்தேன்,” என்றான். அதிலிருந்து படிக்கத் தொடங்கினார்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் அதையே வழிமுறையாகக் கொண்டார்கள். தேர்விற்கான நாட்கள் அறிவிக்கப்பட்டு கல்லூரி பதட்டம் கொண்டிருந்தது.

பாலாவின் அறையிலேயே தங்கிக்கொண்டான் ராமர். கிணற்றில் ஊற்றுமுகம் வரை வற்றியநீரை இறைப்பதைப்போல நீண்டதொலைவு சென்றும், உள்நோக்கிமுகர்ந்தும் ,வெளியிழுக்கும் வேகத்தில் சிந்தியும் ஏதோவொரு பற்றுகயிறால் நினைவை இறைத்துகொண்டிருக்கும் ராமரை சொல்லாலும்,சிரிப்பாலும்,தொடுகையாலும் சூழ்ந்திருந்தான் பாலா.

மருத்துவரிடம் சென்றபோது அவர் நிறைய பேசினார். இரவு உறக்கத்திற்கு ஒருமாத்திரை ஒருமாதத்திற்குக் கொடுத்து ,“ஒன்னுல்ல...சின்னதா ஒருஎதிர்சுழற்சி,”என்று தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பினார்.

“இது அவள் சாம்பல் டிரஸ் போட்டு வந்தன்னக்கி,அவள் பிறந்த நாளன்னக்கி ‘குமரப்பருவத்தினரை புரிந்து கொள்ளுதல் ‘நடத்தினாங்க...அவளோட ஜீ.ஹச் போன அன்னக்கி ‘ஆளூமை ‘நடத்தினார் பாஸ்கர் சார்..”என்று ராமர் பாடங்களை மெல்ல மெல்ல மீட்டெடுத்து வராதவைகளை ஒதுக்கினான்.

தேநீர் விருந்தன்று பேச்சிற்கான நேரத்தில்  ஆளுக்கொரு கருத்து சொல்கையில் ராமர், "வெள்ளம் எப்பவரும்,நாம எப்பவிழுவோன்னு தெரியாது. டீனேஜ் கூட வெள்ளம் மாதிரிதான்... அந்த நேரத்தில நம்பிள்ளைகளுக்கு அவனை நோக்கிவரும் அத்தனை விசைகளிலும் துணையிருப்போம். அதுக்கும்தான் ஆசிரியன்,”என்றான்.

தேர்வன்று ராமர் மிகவும்பதட்டமாக இருந்தான். இவள் “எனக்கும்தான் மறந்துட்டு எல்லாம். சும்மா குழம்பாத ,"என்று கருப்புக் கயிறை கையில் கட்டினாள். பக்கத்திலிருந்தவன், “நீ இந்தமாதிரி ஏதாவது ஆரம்பிச்சா கைநிறைய காசுபாக்கலாம்...அவன் பண்ணினதுக்கு இன்னும் இருக்கு,”என்றான்.

அவனிடம், “கூட்டமான பஸ்க்கு காத்துக்கிட்டுருக்கவன் தானே நீ..” என்றாள்.

 அவன் மீண்டும், "வெள்ளப்பூனைக்குட்டி மாறி இருந்துக்கிட்டு புலின்னு நெனப்பு,” என்றவுடன் “பூனக்கி புலிய தெரியுமோ இல்லையோ பால் எதுன்னு நல்லா தெரியும்,”என்றாள். உடனே அவன் வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

பாலா இரவு பகலாகவும் ,இவள் கல்லூரியிலுமாக அவன் காதுகளில் கேட்க பாடங்களை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இடையில் ஞாயிறு அன்று மூவரும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அமர்ந்திருக்கும்போது ராமர் இவளிடம்,"உனக்கு என்கிட்ட தயக்கமா இல்லையா?..உன்  ஃப்ரண்ட்ஸ் கண்ணில தெரியுது,” என்றான்.

”முதல்ல  இருந்தது....கூட்டத்தில நிக்கும் போதே தனியா தெரிவ. தனியா நிக்கும் போது மொட்ட மேட்டல நிக்கிற ஒத்தப்பனைய பாக்கற மாதிரி பக்குனு இருந்துச்சி. தனியா விடமுடியல,”என்றவளின் கைகளைப் பிடித்துக் கொண்டான் ராமர்.

“உன்னோட ஃப்ரண்ட்ஸ் கூட ஏன் பேசமாட்டிக்கிற?” என்ற பாலாவிடம் ராமர்,

“பேசக் கூடாதுன்னு நெனைக்கலடா...என்னன்னு தெரியல அவங்கள பாக்கவே தயக்கமா இருக்கு...”என்றான்.

தேர்வுகள் நிறைவுபெற்று அமர்ந்திருக்கும் இன்று ஒருகனவு என நினைத்து தலையைக் குலுக்கி இவள் தன்னிலைக்கு வந்தாள்.

கீழிருந்து உணவுப் பொட்டலங்களோடு பாலா வந்தான். பையிலிருந்த டிபன் பாக்ஸையும் எடுத்து படிகளில் வைத்து விட்டு பேண்டை தூக்கிவிட்டு அமர்ந்து கண்ணாடி சரிசெய்து கால்களால் ஷீவை நெம்பி கழட்டியபடி , "சாப்பிடலாமா?”என்றான்.

இவள் முந்தானையால் தண்ணீர் பாட்டிலைத் துடைத்துத் திறந்தாள். இவ்வளவுக்கும் பிறகும் அசையாமலிருந்த ராமரை தட்டினான் பாலா. எங்கிருந்தோ மீண்டெழுந்தவன் போலொரு அசைவை அவனிடம் உணர்ந்த இவள் இவ்வளவு நேரம் அவன் என்ன நினைத்திருந்திருப்பான் என்று தன்னுள்ளே கேட்டுக் கொண்டாள்.

பாலா, “ஒரு டியூசன்சென்டரில் ப்ளஸ்டூ மேக்ஸ்க்கு என்னைய கூப்பிட்டிருக்காங்க. உனக்கும் தமிழ் வேக்கண்ட் கேக்கட்டா...”என்றான்.

“அரியலூர்லயா?”என்று அமைதியானான்.

“உங்க ஊர்லருந்து பக்கம்தானேடா”

இவள்,“என்னன்னு சொல்லித்தொலையேன்,”என்றாள்.

 ராமர்,"வீட்ல தெரிஞ்சுட்டதால தான் கல்யாணம் பண்ண வேண்டியதாயிடுச்சு..."

அமைதிக்குப் பின்

“மூணு நாள் அரியலூர்ல இருந்தோம்...அவங்கவீட்ல போலீசோட வந்துட்டாங்க..”

இவள்,"மூணு நாளாவும் அந்தபொண்ணு உன்கிட்ட எதுவும் சொல்லலையா?” என்றுக் கேட்டாள்.

ஏதோ கேட்கவந்த பாலா இவள் முகம்பார்த்து நிறுத்திக் கொண்டான்.

“என்ன?”என்றவளிடம்”உன்கிட்ட எல்லாம் சொல்லியே ஆகனுமா?” என்று நெற்றி சுருக்கினான்.

ராமர், "இல்ல..போலீஸ் சொன்ன பிறகுதான் தெரியும். எவ்வளவு மனஉளச்சலா அவளுக்கு இருந்திருக்கும்,”பேசியபடி ராமர் கையிலெடுத்த தக்காளிசாதத்தின் மிளகாயை பாலா எடுத்தபடி, “எந்தநேரத்திலயும் முழுசா சிதறிட கூடாது ராமர். கற்பனையாவாவது எதையாவது பிடிச்சுக்கனும். அடுத்தது என்னன்னு பாக்கலாம். இளங்கோ அண்ணாகிட்ட சட்ட ரீதியா என்னபண்ணலான்னு கேக்கனும்,”என்றான்.

“உடல் சம்மத்தப்பட்ட பிரச்சனையை அந்த பிள்ள என்னன்னு சொல்லும். அவங்கவீட்ல அதைதான் காரணமா சொல்லிருக்காங்க...”என்ற ராமர் வேறுபுறம் பார்த்தான்.

வெளியே அடர்பசுமையில் நின்ற வேம்புகளும்,புன்னைகளும் 40 டிகிரி வெயிலை வாங்கித் தந்த பதநிழலில் தோழிகளும் நண்பர்களும் பேசியபடியிருந்தனர். காகம் விருட்டென பறந்த அசைவில் கலைந்தனர் மூவரும்.

“ இளங்கோ அண்ணந்தான் வாதாடுறாரு..முன்னாடி ஒருத்தரும் பேசமுடியாது. அவரும் பரீட்சை முடிக்கனுமில்ல.  நிமிந்து உக்காருடா முதல்ல..”என்றவளைப் பார்த்தபடி உணவிலிருந்து எதையோ தூக்கி எறிந்தான் ராமர்.

“அவ உன்கிட்ட வந்துட்டா நீ முழுசாயிடுவ...பசங்கக்கிட்ட உன்னால ஈசியா மூவ் பண்ணமுடியுன்னு தோணுது. வேலைக்கு ஸ்கூலுக்கெல்லாம் அப்லை பண்ணணும்,"என்றபடி அவன் தோளில் தட்டிவிட்டு எழுந்து ஷீவுக்குள் காலை நுழைத்தான் பாலா.

“அண்ணன் ஸ்கூலுக்கு,அண்ணி ஹாஸ்பிட்டலுக்கு ...ரெண்டுபேரும் வேலைக்கு ம்ம்ம்...சமைக்க ,பாத்திரம் கழுவ கத்துக்கடா,”என்றவளைப் பார்த்து சிரித்தான் ராமர்.

“உன்னோட ப்ளான் என்ன?" என்றான் பாலா.

இவள்வ “உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லனுமா?”என்றாள்.

”என்கிட்ட சொல்லு,"என்றான் ராமர்.

“ம்ம்..பயோடேட்டா,”என்றெழுந்தாள்.

“கல்யாணத்துக்கா? சிண்டுவச்ச கத்தரிக்கா மாதிரி இருந்துக்கிட்டு..”என்றபடி படிகளில் இறங்கி ஓடினான் பாலா.

திரும்பி சிரித்து முடியொதிக்கியவன் புதியராமர். அவன்  பின்னால் ஓடியபடி “இல்லடா..சிண்டுவச்ச வெள்ளமுள்ளங்கி,”என்றான்.

“உலக அழகன்களா..வரன்டா..”என்றபடி படிகளைத் தாண்ட எடுத்தக் காலை சேலை தடுக்கியது. இவளுக்கு ஏனோ’ராமரின் அவள்’ நினைவிற்கு வந்தாள். கீழே இருவரின் அரவம் கேட்டுக் கொண்டிருந்தது.


Comments

  1. Loving these lines...
    , "வெள்ளம் எப்பவரும்,நாம எப்பவிழுவோன்னு தெரியாது. டீனேஜ் கூட வெள்ளம் மாதிரிதான்... அந்த நேரத்தில நம்பிள்ளைகளுக்கு அவனை நோக்கிவரும் அத்தனை விசைகளிலும் துணையிருப்போம். அதுக்கும்தான் ஆசிரியன்,”

    “எந்தநேரத்திலயும் முழுசா சிதறிட கூடாது ராமர். கற்பனையாவாவது எதையாவது பிடிச்சுக்கனும். அடுத்தது என்னன்னு பாக்கலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...