Skip to main content

ஊசல் :சிறுகதை

 2017 ஜீன் மாத சொல்வனம் இதழில் வெளியான கதை

  ஊசல்

கல்லூரி நூலகக்கடிகாரத்தின் ஊசல், சட்டியில் பயறை வறுக்கும் கரண்டியென இடவலமாக ஆடிக்கொண்டிருந்தது.அனைத்து நொடிகளும் ஒன்றேயான முடிவிலாக் காலத்தின் சாட்சியென நினைத்த அமுதா சன்னலை ஒட்டியிருந்த வட்டமேசையில் புத்தகத்தை வைத்து இடதுமுழங்கையை ஊன்றி கன்னத்தில் கைவைத்து, வலதுகையால் பக்கங்களை புரட்டினாள் .

“இந்த அர்த்த ராத்திரியில் என்னடாதெருவில் நடை?” ...நாயைப்பார்த்த பாபு வாயை முடிக்கொண்டான் என்ற வரியைப் படித்துவிட்டு சன்னலுக்கு வெளியே பார்த்துப் புன்னகைத்தாள்.மாலை ஔியில் புல்வெளியில் இருந்த மரம் மஞ்சளாய் கொழித்திருந்தது.பெயர் என்ன?...மஞ்சள்புங்கை என வைத்துக்கொள்ளலாம்.

கையிலிருந்த காகிதக்குறிப்பில் இந்தமாதத்திற்குள் வாசிக்கவேண்டுமென குறித்த புத்தகப்பட்டியலில் கால்பாகம் கூட முடிக்கப்படாததைக் கண்டு காகிதத்தை மேசையில் வீசினாள்.

கல்லூரி சேர்ந்து இந்த நான்குமாதங்களில் மனதினுள்ளே சிலாம்பாக அருவிக்கொண்டேயிருப்பது ‘எல்லாம் போச்சு’ என்ற ஏக்கம்.இந்த மைக்ரோபயாலஜி என்ற பெயரே ஒட்டவில்லை.

மனதை எந்தக்காரணம் கொண்டும் தட்டிக்கொடுக்க முடியவில்லை.தனக்குப் பிடித்தப் பாடப்பிரிவின் வகுப்பறையைக் கடக்கையில் இன்னதென்று சொல்லமுடியாத உணர்வு.தன்வகுப்பறையில் இருக்கையில், “ இது எப்ப முடியும்?” என்று மனம் கேட்டுக்கொண்டே இருந்தது.

தோழிகள் அவர்களுக்குரிய ஏதோ ஒருபொழுதில் மனம் விடுபட்டிருக்கையில் அவளுக்கு தன்னை எப்போதுமே ஏதோ ஒருசுமை அழுத்திக் கொண்டிருப்பதாகவே இருந்தது .இதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு பள்ளியில் இருந்ததைப் போல கதைப்படிக்கலாம்.வேலையைப்பற்றிய பயத்தை நினைத்து முகத்தை சுழித்த அமுதா, ‘டங்டங்’ என்ற கடிகாரஅறிவிப்பு ஓசைக்கேட்டுத் திரும்பினாள்.

 வேகமாக எழுந்து, “ஷேக்ஸ்பியரின் நாயகி என்ன செய்யறாளோ?” என்று நினைத்துக்கொண்டவளாக புத்தகத்தை வைத்துவிட்டு கையெழுத்திடுகையில் நூலகர், “ என்ன சீக்கிரமே?” என்றார். பேசிவிட்டு கண்ணாடிக் கதவைத்திறந்து நடைப்பாதைக் கடந்து படியேறும் போது கல்லூரி அமைதியிலிருந்தது.

முதல்தளத்தில் கேன்தண்ணிரைக் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூச்சை இழுத்துவிட்டாள். நுண்ணுயிரியல் ஆய்வகத்தினுள் நுழைந்து வெள்ளைஅங்கியை மாட்டித் திரும்புகையில் டெஸ்டிமோனா, “லேப் மறந்து நாவல்ல இருப்பன்னு நெனச்சேன்,” என்று புன்னகைத்தாள்.

“ நீ இந்தக்கண்ணாடிக்கூண்டுலயே கிடக்கறது மாதிரிதான்.தெத்துப்பல்லுக்கேத்த எத்துப்பல்லுன்னு...இந்தப்பாடத்துக்கு உருகன்னு நீ ஒருஆளு,” என்றபடி அமுதா பேனாவையும்,கைக்குட்டையையும் பாக்கெட்டில் செருகிக்கொண்டு கழுவுதொட்டியிலிருந்த சோப்பைக் கையிலெடுத்தாள்.

“வேல்யூ தெரியாம பேசற.கதை கத்திரிக்காயெல்லாம் படிச்சு என்ன? . யூ.வீ  ரூம்ல லேம்ப் இப்பதான் போட்டேன்,” என்றபடி நாற்காலியில் மோனா அமர்ந்தாள்.சிரித்துக்கொண்டு இருவரும் நகரும்நாற்காலிகளை உந்தித்தள்ளி  போட்டி வைத்துக்கொண்டிருக்கையில் கண்ணாடி கதவில் நிழலாட அமைதியானார்கள்.

மூன்று வாரத்திற்கு முன்பு வளர்தளதட்டில்(petri plate) ஊட்டதிரவத்தை(Nutrient broth) ஊற்றி கதிர்விச்சறையில் சிறிதுநேரம் வைத்ததும் அது வடிகஞ்சி தயிரானால் இருப்பதைப்போன்று கெட்டியானது.வெளியில் கொண்டுவந்து காற்றில் நீட்டி சிறிதுநேரத்தில் சீர்வெப்பப்பெட்டியில்(Incubator) வைத்து இரண்டுநாள் சென்று எடுக்கையில்  பலவிதவண்ணங்களில் நுண்ணுயிர்கள் நிறைத்து வளர்ந்திருந்தன.அதைக்கண்டு இத்தனையும் காத்துல இருக்கா?உவ்வே..கருமம் என்று பிள்ளைகள் பேசிக்கொண்டார்கள்.

இரண்டுவாரத்திற்கு முன்பு இ.கோலை என்ற பாக்ட்டீரியத்தின் தூயஇனத்தை (pure Culture) சோதனைக்குழாயிலிருந்து கண்ணாடித்தட்டில் வளர்க்கும் முயற்சியிலிருந்த முதலாமாண்டு மாணவர்களின் நுண்ணுயிர்க்கூட்டங்களை பார்வையிட்ட முதுநிலை மாணவர்கள்,

“ஸ்டேஃபைலோகாக்கஸ்,”

“ஸ்ட்ரெப்டோகாக்கஸ்?!”

“ ஃபங்கல் காலனீஸ் நிறைய இருக்கு,”என்று வண்ணங்களை வைத்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

“ஓப்பன் எர்ல இருந்து வளந்த மைக்ரோப்ஸ் எல்லாம் இதுலயும் இருக்கே எப்படி?!”என்ற அமுதாவிடம் விரிவுரையாளர்,“எல்லாம் உங்க கையில இருந்தது. ஆல்கஹால் வச்சு எல்லாத்தையும் துடைக்கனும். மொதல்ல கையத் துடைக்கனும்.ஸ்டெரைல் கன்டெய்னர்ஸ்ஸ  ஓபன் ஏர்ல வைக்கக்கூடாது,”என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

“இதென்ன குளிக்காதமாதிரி, கைக்கழுவாத மாதிரி பேசறாங்க ..காத்தால குளிச்சப்பறம்தான் எல்லா காரியமும்,”என்ற வித்யாவின் கண்ணாடித்தட்டில் அதிக வண்ணங்கள் இருந்ததைக்கண்டு சிரித்தார்கள்.அந்த சோதனை ஒத்திவைக்கப்பட்டது.

இந்தவாரம் “இ.கோலை யோட மொட்டிலிட்டி டெஸ்ட்…யாராவது ரிசல்ட் காட்டரீங்களான்னு பார்ப்போம்,” என்ற விரிவுரையாளர் ஏமாந்துபோனார்.

“ இந்த வருஷ பேட்ச் சரியில்ல..இதுங்கள வச்சு என்ன பண்ண?”என்று அவர் சென்றதும் பிள்ளைகள், “எப்பிடியோ முடிஞ்சது,”என்று கிளம்பினார்கள்.

“அது இடப்பெயர்ச்சி செய்யுந்தானே? நாளைக்கு சாயுங்காலம் ஃப்ரீ லேப்.யாருவேணுன்னாலும் வரலாமாம்.நீ வர்றியா?” என்றாள் மோனா.

“லைப்ரரி போகனும்…முறைக்காத…சரி வர்றேன்,”என்று இன்று வந்திருக்கிறாள் அமுதா.

“ நாமதான் சரியா செய்யல,”என்றாள் மோனா.

“அப்பிடி சொல்லமுடியாது.அது உயிருள்ளது தானே?அதனால கிருத்துவம் பிடிச்சதாக்கூட இருக்கலாம்.சரியா அது குணத்தப் பிடிக்கமுடிஞ்சா தப்பாது…”

“என்ன?நாவல்ல படிச்சியா?” 

“இல்ல மோனா…தோணுச்சு.ஸ்பெசிபிஃக் கேரக்டர் ஆஃப் ஆன் மைக்ரோ ஆர்கானிசம்ன்னு  கிளாஸில அத்தன தடவ சொல்றாங்கல்ல? அதனால சொன்னேன்.நொந்து பெத்து,அலைஞ்சு வளத்தவங்களுக்கே நம்மளப் புரியல! இதுங்கள நம்ம புரிஞ்சிக்கிட்டு  மார்க் வாங்கி,”என்று பெருமூச்சுவிட்டாள்.

“வீட்ல புரிஞ்சுக்கலன்னு எப்பிடி சொல்வ? நம்மளப்போல பிள்ளைகளை வேலைக்குன்னு தானே செலவுபண்ணி படிக்கவைக்கிறாங்க.நீ கனவு காணறதுக்கு அவங்கப்பணம் கட்டாதும்மா,”

“அதுவா இதுவான்னே இதுவரைக்கும் வந்தாச்சு.எனக்குப்பிடிச்ச எதுவுமே நடக்கல,”

“சரி..சரி..உன் ஹீரோ என்ன பண்றார்?” என்றாள் மோனா.

“என்ன?!”

“ கதையிலப்பா…”

“ ஒருநிமிசம் கும்பி கலங்கிருச்சு.எனக்கே தெரியாம யாரோடவாவது கோத்துவிட்டு கதை வசனம் பேசறீங்களோன்னு தோணிடுச்சு.பாபுவா? கதை கும்பகோணத்திலருந்து…பாபநாசத்துக்கு போயிடுச்சு.குட்டிப்பையனா இருந்த கதை வருது..”என்று புன்னகைத்தாள்.

“யமுனா?”

“நீயும் வந்து படிச்சுப்பாரு.கேட்டப்பின்னாடி அதனால என்ன யூஸ் ன்னு திருப்பி கேப்ப,”என்ற அமுதாவைப் பார்த்து மோனா முறைத்து வாய்மூடிக்கொண்டாள்.

வெயில் இறங்கிக்கொண்டிருப்பது சன்னல்வழி தெரிந்தது. அல்கஹாலில் கைகளைத்துடைத்து  கையுறைகளை மாட்டிக்கொண்டு கதிர்வீச்சறையின் விளக்கை அணைத்துக் காத்திருந்தார்கள்.

கதிர்வீச்சறைக்குள் சென்று குழிகண்ணாடிப்பட்டையில்(Cavity slide) நுண்ணுயிர்த்துளியை(broth culture) வைத்த கண்ணாடித்தாளை(cover slip) ஒட்டி வெளியே எடுத்துவந்தார்கள்.

உள்ளேவந்த ஆய்வகஉதவியாளர், “முதல் வருஷபிள்ளைகள் தானே?! எதுக்கு இப்படி துறுதுறுன்னு அலையறீங்க?.சுத்தமா எடுத்துவச்சிட்டு ஆறுமணிக்கு கிளம்பிடனும்.சீனியர்ஸ் வருவாங்க,”என்றபடி வெளியே சென்றார்.

கண்ணாடிப்பட்டையைத் தூக்கிப்பார்த்து அமுதா,“தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் எண்ணிலடங்கா உயிர்கள் கொண்ட  ஒற்றைத்துளி…அட நம்ம கையில பூமி..” என்றாள்.

 முறைத்த மோனா,“கடுப்பாயிருவேன்.ரிசல்ட் வரனும்.சும்மா ஆடிக்கிட்டு இருக்காத.ஆட்டாம கையில வச்சிரு..” என்றபடி சென்று நுண்ணோக்கியை இரண்டுகைகளிலும் குழந்தையென எடுத்துவந்தாள்.

“பேருக்கேத்த சரியான நாடகக்காரி நீ…சிரிக்கவும்,முறைக்கவும்,கண்ண உருட்டவும்..”என்ற அமுதா, மோனாவின் பார்வையைக் கண்டு வாயைமூடிக் கொண்டாள்.

 சூரியஔிவிழும் சன்னலின்புறம் நுண்ணோக்கியை வைத்து அல்கஹால் நனைத்த பஞ்சில் துடைத்து பொருளருகுஆடிக்கு கீழே கண்ணாடிப்பட்டையைப் பொருத்தினாள் மோனா.

கண்ணருகுஆடியை மீண்டும் ஆல்கஹால்பஞ்சில் துடைத்து ஒற்றைக்கண்ணால் உற்றுப்பார்த்தபடி வலதுகையால் ஆடிகளை நகர்த்தும் திருகியை திருகிக்கொண்டிருந்தாள்.

மீண்டும் ஆடிகளைத்துடைத்தாள்.

“ஆவியாப் போகாதது எது? படிக்கறதிலருந்து இந்தப் பஞ்சில இருக்கிற சாராயம் வரை...” என்ற அமுதாவை மோனா இடக்கையால் அடித்து,“வாய மூடுடி..ஒன்னுமே தெரியல..”என்றாள்.

“நானும்  படிக்கற பிள்ளதான்..தள்ளு அந்தப்பக்கம்,” என்று நுண்ணோக்கியை நோக்கிக் குனிந்தாள்.மீண்டும் துடைத்தவள் அத்தனை பயிற்சியில்லாமல், இடதுகையில் ஒற்றைக்கண்ணை மூடிக்கொண்டு நுண்ணோக்கியின் திருகியுடன் தொடுகையால் கண்களை திறந்தபடி கண்ணாமூச்சியாடினாள்.

“ஐஐ…நகருது..” என்று சற்றுநேரம் பார்த்துவிட்டு நிமிர்ந்து குதித்தாள் அமுதா.



“தள்ளுடி…”என்று குனிந்த மோனாவின் கைகளைப்பற்றி, “ எந்த பொசிசனையும்  மாத்தாமப் பாரு,”என்றாள்.

“நாந்தான் முதல்ல பாத்தேன்..” என்று கத்திக்கொண்டிருந்த அமுதாவிடம், மோனா,“நீ ஒன்னும் புதுசா கண்டுபிடிக்கல,”என்றாள்.மறுமுறைப் பார்த்த மோனா,”நானும் பாத்துட்டேன்,” என்றாள்.

“நாமதான் முதல்ல பாத்திருக்கோம்,” என்ற அமுதாவைப் பார்த்து சிரித்தாள் மோனா.

மீண்டும் தூய்மைப்பணிகளை முடித்து கைகளைக் கழுவுகையில் முதுநிலை மாணவர்கள் வரத்தொடங்கியிருந்தனர்.வெண்அங்கியை இடதுகையில் மடித்துத் தொங்கவிட்டு குறிப்பேடுகளை கையில்பிடித்து படிகளில் இறங்குகையில் வலதுகையை அமுதாவின் தோளில் போட்டபடி மோனா, “நீ ஏன் ஆர்ட்ஸ் எடுக்கல?”என்றாள்.

“ஆர்ட்ஸ்ன்னா வீட்டில இருந்து கரஸில படிச்சா போதுன்னாங்க.ஆதான் இந்தக் கிணத்தில வந்து விழுந்துட்டேன்.”

“என்னது கிணறா?!”

“பின்ன…ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளைகளை பத்தி பேச்சு வருது.புதைகுழியில விழறதுக்கு கிணறு பரவாயில்ல, நாமளா நீச்சலடிச்சு கரையேறிக்கலாம்,” என்று சிரித்தாள்.

மோனா அவள்தோளில் அடித்து,“ நீ எப்படியாவது பேசிக் கொண்டாடிக்கற!” எனக்கு இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..சொல்லத் தெரியல…” என்றாள். தரையில் வந்து நின்று,“திங்கக்கிழமை இதேமாதிரி ரிசல்ட் வருமா?” என்றாள்.

அமுதா,“வரலன்னா என்னைக் கூப்பிடு,”என்று சிரித்தாள்.புன்னகையோடு முறைத்த மோனாவிடம்,“யூ ஆர் த ஃபர்ஸ்ட் ஒன்,” என்று தோளில் தட்டிய அமுதா,“திங்கக்கிழமை சாயுங்காலம் தானே லேப்?” என்றாள்.

“ம்”

முகம் சுருக்கியபடி நூலகம் நோக்கித் திரும்பிய அமுதாவிடம் மோனா, “டீ குடிக்க வரலயா?” என்றாள்.

“வேணாம்.வெள்ளிக்கிழமைனால சாவகாசமா ஒன்பதுமணிவரைப் படிக்கலாம்.அங்க வந்து டீ குடிக்க அரைமணி..பின்ன ஊருக்குப் போகக் கேட்டுப் பிள்ளைகள் நிக்கிறாங்க,நகரமுடியாது. சாப்பிட தட்டு மட்டும் எடுத்திட்டு வாடா,” என்றாள்.

“ம்.நீ அந்தகூட்டத்திலதான் இருந்தன்னு சொல்ல நான்சாட்சி.நீ போ..”என்று அமுதாவின் தலையில் தட்டினாள்.மோனா நடைப்பாதையில் எட்டுவைக்க அமுதா நூலகத்தினுள் நுழைந்தாள்.ஊசலின் டக்டக் ஒலி….உள்ளே நூலகம் முழுவதும் பலக்கடிகாரங்களின் ஊசல்ஓசைகள் கேட்டன.




Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...