2017 ஜூலை சொல்வனம் இணைய இதழில் வெளியான சிறுகதை
ஊற்றுகள்
அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு ஃபோர்வண்டியின் ஒலி எழுந்தது. அது முடக்குவேம்பைக் கடந்து நின்றது. பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன. அப்போதுதான் அசந்துபடுத்த நாய்கள் சுழன்றெழுந்து குறைத்து, பின் நிதானம்கொண்டு சுற்றிவந்தன.
மாசிமாதகிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிற கூரைவீடுகளும்,முற்றம் வைத்த மஞ்சள்ஓட்டுவீடுகளும்,தகரம்வேய்ந்த மண்வீடுகளும்,மில்லினியத்திற்குப் பின் கட்டிய பச்சை,ரோஸ்,ஊதா நிற திண்ணைகள் இல்லாத சிறுமாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது.
இரும்புக்குழாய்களை இறக்கிபோட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர். வெயிலேறத் தொடங்கியது. வயல்வேலையில்லாததால் ஆட்டுமாட்டிற்கு தண்ணீர்காட்டி ,தீனிபிடுங்கிப் போட்டுவிட்டு வந்தவர்கள் அந்தஇடத்திற்கு அருகிலிருந்த வேம்படியில், வீடுகளின் நிழல்களில் குத்துகால் இட்டு உட்கார்ந்தனர்.
களிங்கன்வீட்டுப் பின்பக்கம் வெட்டிப்போட்டிருந்த புங்கைமரத்தின் அடிமரத்தில் ராசுநாய்க்கரும்,சற்றுத்தள்ளி பொம்மன்பூசாரி பெருமூச்சுடன் சற்று நைந்த வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு குந்தினார்கள்.
“ ஒடம்பு கனத்துக்கிச்சு.நீ மூங்கிக்குச்சி மாதிரி அப்புடியே இருக்க”,என்றார் பூசாரி.
“ஒடம்பு கனக்கவும் நிறம்கூடிப் போய் நல்லாத்தானே மாமா இருக்கீரு,”என்று ராசுநாய்க்கர் சட்டையில்லாத உடலைத் துண்டால் தட்டிக் கொண்டார்.
“வயித்துக்குப் போட்டாச்சா ராசு?”என்றபடி வெற்றிலையை எடுத்தார்.
“நீராரம் ஆச்சு.பெருகின ஆளு..வௌக்கமா தின்னுருப்பீரு,”என்று சிரித்தபடி சுண்ணாம்பு டப்பாவை இடுப்பு வேட்டிமடிப்பில் தேடினார்.
“உங்கக்கா கட்டில்ல கெடக்கறப்ப எங்க வெளங்கத் திங்கறது..கம்மஞ்சோறும் முருங்கக்கீர கொழம்பும். உங்கக்கா வைக்கிற ருசி வரல,”
“மாமா.. நாக்கத் தட்டறதுக்கு காலம் வந்துருச்சு,”என்ற ராசுநாய்க்கர் எழுந்து பழுப்படித்த வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு நின்றார்.
“ஆமாமா..இந்தப் பிள்ளைகளுக்கு மாசத்துக்கு ரெண்டுநாளு கம்மஞ்சோறு திங்க கசக்குது. மண்ணு இந்தக் காய்ச்சகாய்ஞ்சா வயக்காட்டுல கம்பும் மிஞ்சாது. இந்த எடத்துல தோண்டுறாங்களே…தண்ணிவருமா?”
“வரும்ன்னு தானே இத்தன சத்தமும். உங்க கேணியில தண்ணியில்லன்னா குழா இறக்கலாமில்ல,”
“கடனுக்கு குழா எறக்கி வரும்படி இல்லாம போச்சுன்னா? கையில காசிருந்து செய்யனும். எத்தன கேணி பாத்திருப்ப இங்கன தண்ணிவருமா?..சும்மா சொல்லு..”
“என்னக் கேட்டா..கேணிமுடக்குல ஊத்துக்காணும்,”
“அந்தக்கேணியிலயே தண்ணி இல்லப்பா!”
“மேங்கேணில்ல? இங்க தொலக்கிறாப்புல அங்க தொலச்சா தண்ணி வரும்,”
“ச்ச்..அதவிடு. இங்க சொல்லு”
ராசு அமைதியானார். இருவரும் வெற்றிலையை மென்றனர்.
“நெஞ்சு ஒழிஞ்சி கிடக்குப்பா,”என்று வாய்க்குள் சொல்லியபடி அமர்ந்திருந்த புங்கமரத்தை வலதுகையால் தட்டினார்.
“அக்கா கட்டில்ல கிடக்குக்குல்ல…அதான் கண்டத நெனக்கத் தோணுது. வெசனம் ஆள சாச்சுரும்..தெம்பு தாட்டியமா இருக்கனும்,”
“இப்பவோ, நாளக்கோ போயிட்டாதான் அதுபடுறபாடு முடியும். அதனால இல்ல..இதுவேற”
“எனக்கும் விடியகாத்தால முழிக்கும்போ பகீர்ன்னு இருக்கும். அப்பிடியே.. எந்திருச்சி வாசலுக்கு வந்து கெழக்கால பாத்தா அக்கம்மா அடுப்பில வேல செஞ்சுகிட்டிருப்பா. அக்கம்பக்கத்தில யாராச்சும் ஏதாச்சும் பேசுவாங்க. அப்படி இப்படின்னு மனசு நேரா ஒக்காந்துக்கும். நம்ம சோட்டு ஆணுபொண்ணெல்லாம் மண்ணுக்குள்ள போயிட்டேயிருக்குல்ல. என்னதான் பெத்தபிள்ள,பேரப்பிள்ள இருந்தாலும் நம்மள நெசமாதெரிஞ்ச, நம்மளபெரிசா நெனக்கிறவங்க, நம்மக்கூட பெறந்து வளந்த ஊர்காரங்க தானே?”
“மூணாநாளு செத்துப் போனாளே பாருவதி…வூட்டுப்பக்கம் வந்தான்னா, ரெண்டுவெத்தல தராமா வாசலத் தாண்டி போமாட்டா. இல்லன்னாலும் வாயி என்னமோன்னு இருக்கு, வெத்தல குடு மாமான்னு வாங்கி, வாசல்ல இருக்குற அடுப்புப்பக்கத்தில ஒக்காந்துருவா. வெத்தலையில அவ சுண்ணாம்புத் தடவர நேக்கிலயே நமக்கு பிடிகெடச்சிரும். மனசத் தட்டிப்பாத்துக் கிட்டிருக்கான்னு. தெக்கம்பாக்க கடிச்சுக்குக்கிட்டே அங்க, இங்கன்னு போக்குக் காட்டிக்காட்டி பேச்சுக்கு வந்துருவா. வெத்தலய மெல்லுற நேரத்துல என்னபேசுறதுன்னு நெனப்பாளாயிருக்கும். மொதச்சாரு துப்பிட்டுவந்து எந்தவூட்டையாவது மந்தையில வச்சிட்டுதான் போவா. போறத்துக்கு முந்தி மனுசன்னா அப்படித்தானே மாமா? மத்தவங்க போக்குக்குன்னு நடந்தா..எத்தன போக்குக்கு நடக்கறது.அவங்கவுங்க மனசுக்குள்ளது…என்ன சொல்ற?”ன்னு அத்தனமனுசரும் நல்லமனுசருனுட்டு போயிருவா,”
“ஆமா.மனுசவாயி மந்தையில வச்சுபேசாத வூடுன்னு எதாச்சும் உண்டா?”
பொழுது நடந்துகொண்டிருக்க ஆட்கள் தாயம் ஆடுவதற்காக கேணிமுடக்கின் நீண்டதிண்ணைக்கும்,தலைசாய்க்கலாம் என்று பக்கத்திலிருந்த வாய்ப்பான திண்ணைகள் நோக்கிக் கலைந்தார்கள். இயந்திரம் சுக்கான்புகையாக பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. வெண்புகை. வெயிலில் ராசுநாய்க்கரின் இளஞ்சிகப்பு கடுக்கன் அவர் தலைதிரும்புகையில் ஔிர்ந்தது.
“மூணுமாசப்பிள்ள மூச்சுவிடமுடியாமக் கெடக்கு.இன்னும் தண்ணியக்காணூம்”,என்று தென்னமரத்துவீட்டுக்காரம்மா சொல்லிக் கொண்டிருக்கையில் முந்நூறுஅடி இறங்கியிருந்தது.
ராசு,“நானாவே தனியா நீரோட்டம் பாத்து வெட்டுன மொதக்கேணி இவுங்கக் கேணிதான்,”என்றார்.
“தண்ணி வரவரைக்கும் தூக்கம் வந்திருக்காதே?”என்று சிரித்த பூசாரியின் காதில் கொத்தமல்லிவிதை வளையம் ஆடியது.
“எத்தனமட்டுல கண்ணுத் தொரக்குமோன்னு தான் மனசு சலசலங்கும். தண்ணிவராம இருந்ததில்ல,”
சுற்றிசுற்றி வந்த தட்டானை விரட்டினார் பூசாரி.
“இது ஊத்துபூமிய்யா. வெயிலும் மழயும் முழுவிச்சுல வர்ர பூமி. அதா.. அந்த புங்கமரம் நிக்குது பாரு. அங்கன நல்ல ஊத்து உண்டு. சின்னப் பயகல்லாம் பாங்கியில கடன வாங்கி குழாஎறக்கி நெல்லு நடறானுங்க…!”
“நம்ம கையில அதிகாரமில்ல பாத்துக்க. சும்மா வயலுக்கும் வீட்டுக்கும் நடக்கறேன். பயதான் எல்லாம். எம்பேத்தி கல்யாணதுக்கு வாங்கின கைமாத்து நிக்கிது. கட்டில்ல போறேன்னு போறேன்னு ஒன்னுகிடக்கு. செலவுக்கு என்ன பண்றதுன்னு அலையறான்..”என்று பூசாரி துளைத்து இறங்கும் இரும்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். புகை ஏறியபடியிருந்தது. பொழுது கடந்து கொண்டிருந்தது.
“முன்னப்பின்ன எனக்கு பதினஞ்சு பிராயமிருக்கறப்ப துரசாமிநாய்க்கர் கூட கேணிவெட்ட போவேன். கங்கநீரோட்டம் கணிச்சு அம்படிச்ச அர்சுனன்கதய சொல்வாரு”
“அது என்ன?”
“சண்டகளத்துல பிஷ்மரு கொறஉசுராக் கிடக்கயில தண்ணி தான் கேட்டாராம். மகராசனானாலும் கடசி தவிப்பும் தாவமும் தண்ணிக்கு தானே. இவன் ஊத்து கணிச்சு அம்பு போட்டிருக்கான். கணிப்பு அப்படியிருகனும்பாரு,”
“சரிதான். நானும் அவருசொல்ல கத கேட்டிருக்கேன்”
“கருத்தப்பிள்ளய கட்டிவச்சிட்டாங்கன்னு நான் சலிச்சுக்கிட்டப்ப அவரு அழகெல்லாம் கருப்பு ராசு.கண்ணகி..அல்லிராணில்லாம் என்ன நெறங்கற.. கருப்புதாம்பாரு,”
“ம்ம்…தண்ணி வரது மாறி தெரியலயே?”என்ற பூசாரி மேற்குபக்கமிருந்த சாக்கடையைப் பார்த்துசிரித்தபடி, “புள்ளகுட்டியோட வாராபாரு… செவலக்கோழி. இங்கனதான் தண்ணிகுடிக்க வாட்டமுன்னு கண்டுவச்சிருக்கா,”என்ற போதே கோழிக்குஞ்சுகள் சாக்கடையில் குதிக்கத் தொடங்கியிருந்தன.
வெள்ளையம்மா இரண்டுஆடுகளும், மூன்றுகுட்டிகளுமாக வயலில் இருந்து வந்தாள். ஆடுகள் சத்தத்தைக் கேட்டு மிரண்டு பின்வாங்கிக் கத்தின.
“நா கூடவாரப்ப என்னடி உங்களுக்கு?தாதா.. த்ததா,”என்று மெதுவாக ஆடுகளை நகர்த்தினாள்.
உச்சிப்பொழுதில் நானூறு அடிக்குமேல் குழாய்கள் இறங்கியிருந்தன. அதிகாரிகள் வந்து பேசினார்கள். இயந்திரம் நிறுத்தப்பட்டது.
“பொகஞ்சு போச்சாட்டுக்குடா..”என்றபடி இரண்டுபயல்கள் இருசக்கரவாகனத்தில் கடந்து போனார்கள். போர்வண்டி சத்தம் நின்றதும் அப்பாடா என்றிருந்தது.
வரைபடத்தை வைத்து, “ இந்தவார்டுல இந்தசந்தில் ஒரு குறி போடு,”என்று குறித்துவிட்டு கிளம்பினார்கள். ஆழ்குழாயினருகே மிருதுவான சுக்கான் வெண்மணல் சிமெண்ட் போல குவிந்திருந்தது. பெண்கள் காரைத்தட்டுகளும்,அகலபாத்திரங்களுமாக வந்து மண்ணை அள்ளிச்சென்று வாசல்களுக்கு நிரவினார்கள்.
தண்ணிக்கு குடிக்க வந்தமாடுகள் கூட்டம்கண்டு தயங்கி நின்றன. இளைய கருப்பி கல்தொட்டி நீரைப் பார்த்த மாத்திரத்தில் கயிற்றிலிருந்து நழுவி ஓடிவந்தாள். பின்னாலேயே மூத்ததுகள் உடல்தசைகளும், மடியும் அதிர வேகநடையில் வந்துவிட்டன.
அந்தவீட்டய்யா சிரித்தபடி அகராதிப்பிடிச்சவ…ஆனா காரியக்காரி. அம்மாக்காரிகளையும் கூடவே இழுத்தாந்துட்டா என்றார்.
ஈயஅன்னபேசினிலிருந்த தவிட்டுநீரைக் குடித்துமுடித்த கருப்பி,பேசினை காலால் எத்தி உருட்டியது. முதுகில் ஒன்று வாங்கிக்கொண்டு உடலை பின்னால் வளைத்து அடித்தக்கையிலிருந்த தவிட்டை நக்கியது. அய்யா அதை முதுகில் ஓங்கித்தட்டித் தடவினார்.
ராசுநாய்க்கரும்,பூசாரி தாத்தாவும் எழுந்து உடல்முறுக்கிக் கொள்கையில் வண்டி கிளம்பிச் சென்றது.
“எங்க அம்மா இருந்தாள்ள..கருங்காப்பி வச்சு சொம்புல குடுக்கும். என்னிய பாக்கறதில என்ன சொகமோ?! அதுக்குதான் தெரியும். பாத்துக்கிட்டே இருக்கும். உங்கக்கா கூட மவன அப்பிடிதான் பாக்கும். நமக்குதான் பிடிச்சுக்க ஒன்னுமில்ல,”
“அப்பிடியில்ல மாமா. இந்தவயசில மனுசங்கள அப்பட்டமா தெரியுது. கொரங்குகுணம்..செத்தக்குட்டிய பிடிச்சுக்கிட்டே அலயறாப்புல.நெனச்சா வெசனம்..நெனக்காதீரு,”
அவர்கள் தேநீர்கடைக்குச் சென்று திரும்பி நடந்தார்கள். முடக்கில் நாற்பது ஆண்டுகளுக்குமுன் ராசு ஆட்களோடு சேர்ந்து வெட்டி இப்போது நீரில்லாமல் கிடக்கும் கிணற்றை பார்த்தார்.
“இப்பக்கூட இந்த இடம் தோண்டினா கசிஞ்சு வரும். எல்லா எடத்திலயும் ஊத்து இருக்குமா? கேட்டீர்ன்னா சொல்லமுடியாது. ஆனா ஊத்தில்லாத நெலமுமில்ல மாமா,”
பூசாரி புன்னகைத்து தலையாட்டினார். கிணறின் உள்ளிருந்த சந்துகளிலிருந்து சிட்டுகள் விருட்டென பறந்தன. சில சிட்டுகள் ஆகாயத்திலிருந்து சர்ரென்று கிணற்றுக்குள் பாய்ந்தன.
Comments
Post a Comment