எழுத்தாளர் திருச்செந்தாழை
எழுத்தாளர் பா.திருச்செந்தாழைக்கு இலக்கியத்திற்கான புதியதலைமுறை தமிழன் விருது வழங்கப்படுகிறது என்ற அறிவிப்பை எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். கண்விழித்ததும் பார்த்த முதல் செய்தி. உடனே அவரின் கதைகள் மனதில் சுழன்றன. அவற்றைப்பற்றி நான்கு வரிகளாவது எழுதிவிட வேண்டும் தோன்றியது.
நேற்று முன்தினம் தமிழினி இணையஇதழில் திருச்செந்தாழையின் வீழ்ச்சி சிறுகதை வாசித்தேன். அந்தக்கதை மனதிலேயே சுழன்று கொண்டிருந்ததால் சமைக்கும்போது அம்மாவிடன் கதையாக கூறினேன்.
ஒரு வாசகியாக செந்தாழையின் கதைகளில் என்னைத் தொட்டு அசைப்பவை அவரின் கதைமாந்தருக்குள் இருக்கும் 'வெகுளித்தன்மை' . வியாபாரத்திற்கு சரியான எதிர்நிலை என்றால் அது வெகுளித்தனம் தானே. வியாபரம் என்பது எத்தனை பெரிய ஆடுகளம்.
வியாபாரத்தை ஒருவர் கையிலெடுக்கும் போது முதலில் எழும் எண்ணம் வீழ்ச்சி பற்றியதாகத்தான் இயல்பிலேயே நமக்கு எழுகிறது.
வியாபாரத்தை கதைக்களனாக் கொண்டு எழுதும் போது வியாபாரத்தில் வெல்லும் ஒருவரை விட தோற்கும் ஒரு கதாப்பாத்திரம் நம்மை பதட்டமடைய வைக்கிறது. பொதுவாக வியாபாரத்தில் வெல்லும் தலைமுறைக்கு அடுத்தத்தலைமுறை வியாபார சூட்சுமங்களை மனதிலிருந்து இழக்கிறது. வீழ்ச்சி என்ற இந்தக்கதையில் இருகுழந்தைகள் வெகுளித்தன்மையிலிருநது சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளத்துவங்கும் தருணங்கள் அழகாக வெளிப்பட்டுள்ளன. இரு குழந்தைகளின் வாழ்க்கை பார்வை மாறும் தருணங்களின் கதை என்பதால் இந்தக்கதை மேலும் மனதிற்கு நெருக்கமாக உள்ளது.
வீழ்ச்சி கதைக்கான இணைப்பு:
சிற்றில் குழுவில் முன்வைக்கப்பட்ட திருச்செந்தாழையின் இருகதைகள்.
கதை: துலாத்தான்
ஆசிரியர்: பா. திருசெந்தாழை
இதழ்: தமிழினி
பரிந்துரை: கமலதேவி
வழக்கம் போல திருச்செந்தாழை அவர்களின் வியாபார களம் சார்ந்த கதை. ஆ.மாதவன் அவர்களின் கடைத்தெருவின் கலைஞன் போல இவரிடம் மண்டி வாழ்க்கை சித்திரங்கள் நிறைய இருக்கின்றன. தரகு வேலையின் சாமர்த்தியமும்,தரகரின் உண்மை வாழ்க்கை நிலையும் பற்றிய கதை. கதை முடிவு அத்தனை எதார்த்தமாக இருந்த போதும் கவித்துவமானது என்று தோன்றுகிறது.
கதை: விலாஸம்
ஆசிரியர்: பா. திருச்செந்தாழை
இதழ்: தமிழினி
பரிந்துரை: கமலதேவி
உரையாடல்: சுரேஷ் பிரதீப்
*
கமலதேவி:
கதையை வாசித்ததிலிருந்து இன்னும் அந்த முடிவு மனதைவிட்டு அகலவில்லை. அப்படியான முடிபுள்ள கதைகளை எழுதவிரும்பித்தான் அனைவரும் எழுதிப்பார்க்கிறோம். மொடமொடப்பான தூய வெள்ளைசட்டையில் மழைத்துளிகள் விழ மூட்டைத்தூக்கும் கொக்கியுடன் ஓடும் அந்த மையக்காதாப்பாத்திரம் மனதில் சட்டமிடப்பட்ட அசையும் படம் போல இருக்கிறார். கண்முன்னே தினமும் அத்தகைய ஒருவரை காண்பதால் கூடுதல் ஒட்டுதலாக இருக்கலாம். இத்தகைய கதைகள் யதார்த்த கதைகள் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துக்கின்றன.
*
சுரேஷ்ப்ரதீப்:
மொழி கச்சிதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் நல்ல கதை. இக்கதை தேர்ந்து கொண்டிருக்கும் களம் ஓரளவு புதிதாகத் தெரிந்தாலும் அக்களம் வழியே சொல்லப்படும் உணர்வுகள் ஏற்கனவே நன்கு பரிச்சயமானவை என்றே தோன்றுகின்றன. பெரும்பாலும் ‘வாழ்ந்து கெட்ட’ குடும்பங்களின் கதைகள் வாழ்ந்து கெட்டவர்களின் வழியாகவே சொல்லப்பட்டிருக்கும். இங்கு எதிரே இருப்பவரால் சொல்லப்படுகிறது. மேலும் அப்பாவை பார்த்து பார்த்து பையன் அடையும் ஆச்சரியம் வாசகருக்கு கடத்தப்படுகிறதா என்பதும் சந்தேகமாகவே இருக்கிறது.
https://tamizhini.in/2021/04/25/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b8%e0%ae%ae%e0%af%8d/
அன்புள்ள கமலதேவி
ReplyDeleteநான் திருச்சியில் இருந்து டெய்ஸி. இன்று ஜெ சாரின் தளத்தில் இருந்து உங்களது தளத்திற்கு வந்தேன். திருச்செந்தாழையைப் பற்றிய உங்களது பதிவுகளைப் படித்தேன். எனக்கு திருவின் எழுத்துக்கள் மிகவும் பிடிக்கும்.வீழ்ச்சி படித்து நானும் திருவிற்கு எழுதினேன். வியாபாரத்தில் வெகுளியாய் இருந்து தோற்பதே தெரியாமல் தோற்றுப்போகும் ஆட்களின் கதை திருச்செந்தாழையை தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது இல்லையா? நீங்கள் சியமந்தகத்தில் எழுதிய துதிக் "கை"கட்டுரையையும் படித்திருக்கிறேன். அந்தப் படிமம் மிகவும் பிடித்திருந்தது. விவிலியத்தில் ஒரு வசனம் உண்டு. "வலதுபுறம் இடதுபுறம் சாயும்போதும் வழி இதுவே என்று பின்னால் இருந்து வரும் ஒரு சொல்". எனக்கு அந்தக் குரலாகத்தான் ஜெ சார். நீங்களும் உங்கள் கட்டுரையில் அதையே சொல்லி இருந்ததால் உங்களையும் பிடித்து விட்டது. உங்கள் எழுத்துக்களை படிக்கிறேன் கமலதேவி. என்னுடைய எண் 9942380036. உங்களுக்கு வசதிப்படும்போது பேசலாமா?
வாழ்த்துக்களுடன் டெய்ஸி.
டெய்ஸிக்கு அன்பு
ReplyDelete