Skip to main content

அகமும் புறமும் 16

         2023 மார்ச் 1 வாசகசாலை இணைய இதழில் வெளியான கட்டுரை.


காலத்தால் சிதையாதது


கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,

வேனில் ஆயின் மணி நிறங்கொள்ளும்

யாறு அணிந்தன்று நின் ஊரே,

பசப்பு அணிந்தனவால் மகிழ்ந,என் கண்ணே


ஐங்குறுநூறு: 45

பாடியவர்: ஓரம்போகியார்

திணை : மருதம்

தோழி கூற்று பாடல். [தலைவி கூற்றை தோழி கூறுவது. பரத்தை இல்லம் சென்று நீண்ட காலம் கழித்து திரும்பும் தலைவனுக்கு தோழி உரைத்தது]



காதலில் எப்போதும் ஒருவித பித்து நிலை உண்டு. உற்றவரைத் தவிர அது பலநேரங்களில் மற்றவருக்கு  புரிவதில்லை.

எங்கள் வீட்டிற்கு மூன்றாவது வீட்டில் உள்ள அம்மாவின் பெயர் பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. தங்கவேலு பெண்டாட்டி என்றே அழைப்பார்கள். அவரின் மகன் வயதில் உள்ள நாங்கள் விஜயகுமார்அம்மா என்று சொல்வோம். 

விவரம் தெரிந்ததில் இருந்தே நான் தங்கவேலுவை பார்த்ததில்லை. அவர் பக்கத்து ஊரில் எங்கோ வேறொரு அம்மாவுடன் வாழ்ந்தார். விஜயகுமார்அம்மா தன்  கணவரின் பரம்பரை சொத்தான ஒரு ஏக்கர்நிலத்தின் விவசாய  வேலைகள் முழுவதையும் தனி ஒருவராகவே செய்வார். மற்றநாட்களில் கூலி வேலைக்கு செல்வார்.  யாரிடமும் காரணம் இல்லாமல் நின்று பேசுபவரில்லை. இளமையிலேயே கணவன் விட்டுச்சென்றதால் அவர் எப்போதும் சிடுசிடுப்பாக மாறிவிட்டார் என்று அம்மா சொல்வார். அவருக்கு அம்மாவின் வயதுதான் இருக்கும். இயல்பாக பெண்கள் சூடிக்கொள்ளும் பொட்டு பூ கொழுசு போன்றவற்றை  அணிந்து  அவரைப் பார்த்ததில்லை. வரிந்து கட்டியசேலையும் கழுத்தில் ஒரு கருப்பு கயிறுமாகவே எப்போதும் மாறாத ஓவியம் போல இருக்கிறார். ஊரில் உள்ள மிகச்சிறிய துணிக்கடையில் தான் தனக்கான ஆடைகளை வாங்குகிறார். அவர் தன் அன்றாடத்திற்கான பொருட்களை ஊருக்குள்ளேயே தேடிக்கொள்கிறார்.  வெளியூர்களுக்கு சென்று பொருட்கள் வாங்கத் தெரியாதவர். காய்ந்த சோளத்தட்டை மாதிரி மிக ஒல்லியான தேகம். 

ஓயாது வேலை செய்பவர். காலை வேலைக்கு சென்று மதியம் ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவார்.  வீட்டுவேலைகளை முடித்துவிட்டு மீண்டும் மூன்று மணிக்கு அந்தி வேலைக்கு சென்றுவிடுவார். அவர் தண்ணீர் எடுக்கும் போதுக்கூட நிதானமாக நடந்து பார்த்ததில்லை. எப்போதும் சாட்டையால் முடுக்கப்படும் சர்க்கஸ் விலங்கு மாதிரியான ஒரு பதட்டத்துடன் கூடிய வேகம் அவரிடம் இருக்கும்.

கடின உழைப்பால் மண்வீட்டை மாற்றி சமையல் அறையுடன் இணைந்த ஓரறை கொண்ட மாடி வீட்டை  கட்டிக்கொண்டார். அண்மையில் தங்கவேலு இறந்துவிட்டார். தகவல் வந்ததும் சொந்தக்காரர்கள் கூடி என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

வயலில் இருந்து வந்த அந்தஅம்மா வீட்டு வாசல் படியில் அமர்ந்திருந்தார். வழக்கமாக கணவன் இறந்ததும் மனைவிக்கு புதுப்புடவையும், வளையல்களும், பூவும் அளிக்கப்படும் சடங்கை பற்றிய பேச்சு வந்தது.

அவரின் அண்ணன் முறைக்காரர் பொதுவாகக் கூட்டத்தைப் பார்த்து , “என்னைக்கு அது மலர்ச்சியா இருந்துருக்கு?... ஒரு எழவும்  இங்க செய்யக்கூடாது,” என்றார்.

அந்த வீட்டில் இருந்து மூன்று ஆட்கள் மட்டும் ஒரு மாட்டு வண்டியில் தங்கவேலு உடலை கொண்டு வந்து வைத்துவிட்டு சென்றார்கள். திருமணம் செய்து கொள்ளாத உறவு என்பதால் அவர்களின் உறவினர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

மாட்டுவண்டியை பார்த்ததும் விஜயகுமார்அம்மாவின் கேவல் சத்தம் மட்டும் தனியாக கேட்டது. எத்தனை நாள் இரவும், பகலும், அந்தியும், இரவும் இந்த விழிகள் அவருக்காக இதே இடத்தில் அமர்ந்து வழியை பார்த்திருக்கும். ஒரு சிறு உதவிக்கு ஆளில்லாமல் இந்த கண்கள் பரிதவித்திருக்கும். மனதில் இருக்கும் ஒன்றை பகிர ஆளில்லாத வாழ்க்கை. எங்கு சென்று நின்றாலும் புறணிகளால் ஆன பெண் உலகத்தை,ஒரு பெண் பேசினால்.. ஒரு உதவி கேட்டால்.. சரியான பொருளில் புரிந்து கொள்ளாத ஆண் உலகத்தை எந்த பிடிமானத்தில் கடந்திருப்பார். தங்கவேலு மட்டுமே தன் வாழ்வில் இருக்க வேண்டும் வைராக்கியம் அது. தன் வறுமையை மற்றவர்  சாதகமாக ஆக்கிக் கொள்ளவிடாத ஆன்மசாதகம் போன்ற ஒரு வாழ்க்கை. வீசி எறியப்பட்ட ஒரு மலர் ,நதி நீரில் விரும்பி விழுந்ததை போன்ற ஒன்று  அது. 



அம்மா என்னிடம், “கல்யாணம் ஆகி இங்க வரப்ப இந்த அக்கா மாசமா இருந்துச்சு..அவரு ஆளு எப்படி இருப்பாரு தெரியுமா? ஒரு பொண்ணப் பிடிக்கலேன்னா கல்யாணதப்பவே சொல்லனும். இப்பிடி சிரிக்கவுடாம, பேசவுடாம ஒரு பொம்பளை வாழ்கையையே ஒன்னுமில்லாம ஆக்கிட்டாரே,” என்று பெருமூச்சு விட்டார்.

மாட்டுவண்டியில் இருந்து இறக்கிய அவர் உடலைக் கண்டு அந்தஅம்மா தன் நரம்போடிய கைகளால்  ஒட்டிய மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளத் துவங்கினார். விஜயகுமார் கோபத்தில் ‘அந்த ஆளுக்காக யாரும் இங்க அழுகக்கூடாது’ என்று  கத்தினான். 

அனைத்து சடங்குகளையும் ஒரு நாளில் முடித்து விட்டு சொந்தங்கள் கிளம்பிவிட்டார்கள். தெரு சிலமணி நேரங்களில் இயல்பாகி விட்டது. அடுத்தநாள் அதிகாலையில் விஜயகுமார் அம்மாவின் அழுகுரல் தெருவை எழுப்பியது. அதிகாலையில் கேட்கும் அழுகுரல் நம்மை மிகவும் தொந்தரவு செய்யக்கூடியது. தெருவே விழித்துக்கொண்டது.  அம்மாக்கள் எழுந்து அவர் வீட்டிற்கு சென்றார்கள். அய்யாக்கள் கைலியும் துண்டுமாக அங்கங்கே கூடி நின்று பேசத்தொடங்கினார்கள்.

விடிந்து திரும்பி வந்த அம்மாவிடம், “ஏம்மா இப்படி பண்றாங்க..அவருக்காக எதுக்கு இவங்க இப்படி அழறாங்க,” என்று சலித்துக் கொண்டேன்.

அம்மா அமைதியாகப் படுத்தார். மறுபடி நான், “எரிச்சலா வருதும்மா..இவங்க ஏன் இவ்வளவு கஸ்ட்டப்படுறாங்க,”என்றேன்.

“மனசு அப்படி..வாழ்ந்து தீத்திருந்தாக்கூட தீந்து போயிருக்கும். இந்த அக்கா அவரை நெனச்சே காலத்தை ஓட்டிருக்குல்ல..” என்றபடி திரும்பிப்படுத்தார். நான் எழுந்து சன்னலை திறந்து பார்த்தேன். வாசல்படியில் தேம்பியபடி அந்த அம்மா அமர்ந்திருந்தார். அழுகை நின்றிருந்தது. சின்னப்பிள்ளையை போன்ற நிற்காத அமைதியான விசும்பலால் மூச்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். வரப்பு பிரச்சனையின் போது இந்தஅம்மா பக்கத்து வயல்காரரிடம் ‘எந்த பஞ்சாயத்துக்கு வரனுன்னு சொல்லுண்ணே’ என்று கேட்ட நிகழ்வு என் சிறுவயது நினைவாக மனதில் இருந்து எழுந்து வந்தது. மிரட்டலிற்கோ, ஏச்சு பேச்சுகளுக்கோ பணியாத  குணம் அவரிடம் எப்போதும் இருந்தது.

திருவிழாவில் தவறாமல் அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக்கடன் முடிப்பார். கார்த்திகை மாதம் ஊரைச்சுற்றி உள்ள சிறு தெய்வங்களுக்கான பொங்கல் வழிபாடு நடக்கும். அவர் வயலின் அருகில் உள்ள ஊமைப்பிடாரிக்கு தவறாமல் பொங்கல் வைப்பார். இதில் அவருக்கு எந்த சலிப்பும் இல்லை. அந்த சமயத்தில்  உற்சாகமாகவும் இருப்பார். மற்றபடி கோயிலுக்கு செல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. அவருக்குள் நாமறியாத நிறைவு உண்டு என்று நினைக்கிறேன்.

அகமும் புறமும் தொடரை எழுதத்தொடங்கிய பின்பு தான் இது நடந்தது. இந்தப்பாடலை தொடக்கத்தில் வாசித்தபோது ஒன்றுமில்லை என்று கடந்து வந்திருந்தேன். விஜயகுமார் அம்மாவை எழுத வேண்டும் என்று தோன்றியதும் இந்தப்பாடல் நினைவிற்கு வந்தது.

எளிய உணர்வு என்றோ, எளிய அன்பு என்றோ,எளிய கவிதை என்றோ எதுவும் இல்லையோ? ஒவ்வொரு சங்கக்கவிதையும்  தன்னுள் ஒரு அசலான வாழ்வை வைத்திருக்கிறதா? அன்பை எளிது எளிது என்று அன்றாடம் சொல்லும் போது,  அரிது அரிது என்றே ஒரு முழுவாழ்க்கை சொல்கிறது. இறக்கங்களால் ஆன ஒரு முழுவாழ்வில் மாறாத அன்பு அரிதே. அதற்கு உரியவர் இருக்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை போலும். ஒரு பெண் மனதின் மாறாத பேரன்பை இந்தப்பாடலில் காணலாம்.


குளிர்காலத்தில்

கலங்கிய நீரும்,

கோடைகாலத்தில்

தெளிந்த நீரும் பெருக்கும்

ஆற்றை உடையது

உன் ஊர்.

உன் வருகையால் 

எமக்கு 

மகிழ்ச்சி அளிப்பவனே…

இந்த எல்லா காலத்திலும்

நீயில்லாததால்..

என் கண்கள்

பசலையை மட்டுமே

அணிந்தன.

 




Comments

  1. அருமையான பதிவு...
    எனது பதிவை இங்கே படியுங்கள்
    https://prabhavathiwrites.blogspot.com/

    ReplyDelete
  2. நன்றிங்க பிரபாவதி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...