Skip to main content

ரீங்கரிப்பு

    2020 அக்டோபர் 24 சொல்வனம் இணையஇதழில்  வெளியான சிறுகதை.

                                                               ரீங்கரிப்பு

காற்றுக்காக அழகன் வீட்டிற்கு வெளியே வேம்பின் அடியில் நின்றார்.வானம் அடைத்துக் கொண்டு புழுங்கியது.ஒருவாரமாக மனதிற்கு ஊசலாட்டமாக இருக்கிறது.மரத்தில் தேனீக்களின் ரீங்கரிப்புகள் பதட்டம் கொண்டன.பக்கத்து மச்சிலிருந்து மணீஷ்பயல் விட்டெறிந்த குச்சி கீழே விழுந்தது.வேம்பு பூத்து நிறைந்த இந்தக்கோடையில் கட்டிய கூடு.

தான் சேர்த்த அமுதத்தை காக்க கொடுக்குகள் நீட்டி சுழன்று பறந்து தவிக்கும் அணு அணுவான விஷங்கள் என்று மனதிற்குள் தோன்றியது.சட்டென்று இப்படித்தான்  சென்னையின் பேரரவமான சாலைகளில்,வேலைசெய்யும் சந்தடிகளில் வார்த்தைகள் காதுகளுக்குள் ஒலித்து சங்கடத்தை விளைவிக்கும்.தேனீக்களின் ரீங்காரம்  நின்றபாடில்லை.

மரத்திலிருந்து தள்ளி கம்பிவேலிப்பக்கம் சென்றார்.“வணக்கண்ணே…தேன்கூட்டுக்கு தீய வைங்க.வூட்டுக்கு முன்னாடி நல்லதில்ல,”என்றபடி கையில் தூக்குவாளியுடன் சைக்கிள் கேரியரிலிருந்து சாமி கையுயர்த்தினான்.தலையாட்டி புன்னகைத்தார்.மஞ்சு ஆரஞ்சுப்புடவையில் இன்றைய புதுஒப்பனையில் வெளியில் வந்தாள்.காதலித்த அன்று இருந்த மெலிந்த உடலிற்கு வந்திருக்கிறாள்.ஆனால் அவளில்லை.

அர்ச்சனா ஓடிவந்து மஞ்சுவிடமிருந்து ஸ்கூட்டி சாவியை வாங்கி முன்பக்கம் அமர்ந்து சாவியை கைகளில் உருட்டினாள்.

“அப்பாகூட இருடீ…வேல எடத்துல நீ என்ன பண்ற…”

“போம்மா…வீட்ல மாசக்கணக்கா போர் அடிக்குது…”

இருவரும் சென்றப்பின் அங்குக்கிடந்த பலகைக்கல்லில் அமர்ந்தார்.இத்தனை ஆண்டுகளாக வந்து சென்ற சொந்தஊரில் இவர்களுக்கு தெரிந்தவற்றில் கால்வாசிதான் எனக்குத்தெரிகிறது.

 சென்னையில் இருக்கும் போது உணராத ஒன்று மனதில் முட்டிக்கொண்டிருக்கிறது.வீட்டிற்கு சென்று ஒருமாதம் இருக்கமுடிந்தால் எப்படி இருக்கும்? என்பது எத்தனை எதிர்பார்ப்பாக இருந்தது.

கம்பிவேலியின் வாயிலை இழுத்துவிட்டப்பின் நூலகத்தை நோக்கி நடந்தார்.அது ஊரின்கடைசிகோடியில் யாருமறியாத மலைக்காட்டு சுனை போல கிடக்கிறது.ஊரடங்கு தளர்விற்குபின் இதாவது திறந்திருக்கிறது.இந்த வாரத்தில் சென்னைக்கு வருமாறு முதலாளி சொல்லியிருக்கிறார். 

முப்பதுவயதில் முதன்முறையாக ஊரைவிட்டு பிழைப்பிற்காக திருப்பூருக்கு கிளம்பிய அதிகாலையில் கைக்குழந்தையாக அச்சு தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தாள்.ஊரில் இருக்கக்கூடாது என்பது மட்டுமே அப்போது மனதின் ஒரே எண்ணம்.படிப்பை வைத்து பனியன் கம்பெனியில் வேலைக்கிடைத்தது.மாறி…மாறி..இன்றிருக்கும் வேலை என்ன? என்பதைவிட சம்பளம் எவ்வளவு? என்பது முன்நிற்கிறது.மீண்டும் கிளம்ப வேண்டும்.

மஞ்சுவும், அர்ச்சனாவும் இந்தஐந்து மாதங்களில் எனக்கு யாரோ போல தெரிகிறார்கள்.அவர்களின் அன்றாடத்திற்குள் திடீரென்று நுழைந்து அவர்களுக்கு நானும் யாரோவாகி விட்டேனா? இந்த ஐந்துமாதங்களில் எத்தனை விதமான புரியவில்லைகள்.மஞ்சுவுக்கு சந்தவம் பிடிக்காமலாகியிருக்கிறது! இவர்களுக்கு நான் விருந்தாளியா?

நேற்று  முழுவதும் அச்சு மௌனமாக இருந்தாள்.என்னக்கேட்டும் விடை கிடைக்கவில்லை.சாயுங்காலம் மஞ்சு வந்ததுமே கண்டு கொண்டாள்.

“சக்திவீட்டுக்கு போறதுன்னா போயிட்டு வாயேன்,”

அதை என்னிடம் சொல்வதற்கு என்ன? சக்திவீட்டிற்கு என்றால் நான் எதாவது நினைப்பேன் என்றா! அம்மாவிடமே அனைத்திற்கும் அனுமதி வாங்கும் வழக்கமா?

நேற்று இரவு தோசை வார்த்துக்கொண்டிருந்த மஞ்சுவிடம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த அச்சு வேகமாக,

“அம்மா..இங்கவந்து பாரேன்,”என்றாள்.

மஞ்சு,“ஸ்ஸ்..”என்று வாயில் கைவைத்துக்காட்டுகிறாள்.அச்சுவின் சிரிப்பு மாறியது.

“நீயேம்மா எப்பவும் போல ஜாலியாவே இருக்கமாட்டிக்கிற…”

நூலகத்தில் யாருமில்லாத அழுத்தமான அமைதி.உள்ளே நுழைந்ததும் நூலகர் நிமிர்ந்து ஒருபார்வைக்குப்பிறகு குனிந்து கொண்டார்.கையெழுத்திடும் ஏடு உள்ள மேசை ,முதன்முதலாக கால்சட்டை  பையனாக வந்த அன்று மிக உயரமாக தெரிந்த அதே மேசை.

ராமுசார் தான் காரணம்.அவர் அத்தனை அழகாக வெள்ளைசட்டையில் கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து வருவதைக்கண்டு உண்டான ஈர்ப்பால் அவனும் நூலகத்திற்குள் நுழைந்தான் .அங்கே வரிசையாக கிடந்த பச்சைநிற இரும்பு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்தான்.அதை சுற்றி சுற்றி பார்த்த அழகனை கண்ட நூலகர்சாமிநாதன், “படிடா…”என்று முதுகில் தட்டினார்.

அழகன் புத்தகஅடுக்குகளுக்குள் நுழைந்து ஒருசுற்று சுற்றி வந்தார்.செய்தித்தாளை திருப்பிவிட்டு வெளியேறி வயல்பாதையில் நடக்கத்தொடங்கினார்.சென்னையில் நூலகங்கள் எங்கிருக்கிறன என்று தேடத் தோன்றாத மனதிற்கு ஊருக்கு வந்த மறுநாளே நூலகம்தான் நினைவிற்கு வரும்.

“அழகு அந்த டேபிளுக்கு என்ன ஆடர்ன்னு கேளு…”

“காப்பில சக்கர வேணாம்ப்பா,”

பின்னிருந்து எங்கோ தொலைவில் குரல்கள் கேட்டன.பதமான மண்தரை. செருப்பு காலடிகளை வாங்கி அழுந்தி நின்றது.வேட்டியின் வலதுஓரத்தை ஒருகையால் பற்றிக்கொண்டு தன்னேரிவயல்திருப்பத்தில் திரும்பிப்பார்த்தார்.காலடிச்சுவடுகள் தூரம் வரைக்கும் தனித்து பதையில் நீண்டிருந்தன.

சற்றுதொலைவில் மாசிக்குன்று எழுந்து நின்றது.நாற்று போட்டிருந்த வயல்காற்று சட்டை வேட்டிக்குள் புகுந்து வெளியேறியது.அங்கங்கே இளம்பச்சை நிறத்தில் அலையடித்துக்கிடந்தன வயல்கள்.தொலைவிலிருந்தே செல்வம் புன்னகைப்பது தெரிகிறது.பனியனும், சிவப்புநிற கால்சட்டையும், சேறு அப்பிய உடலும் தலைப்பாகையுடன் நீர்ஊறி சேறுகுழம்பிய வயலுக்குள் நிற்கிறார்.சதைபிடிப்பில்லாத சுக்கான உடல்.

“என்னப்பா இம்புட்டு தொலவு நடந்தே….”

“வரப்புல எறங்கி குறுக்கப்புடிச்சு வந்தா.. இதெல்லாம் தூரமா…”

“பெரியஊர்ல கசகசன்னு கிடந்துட்டு..இங்கன கஸ்ட்டமா இருக்கா…”

அழகன் புன்னகைத்து வரப்பில் பக்கவாட்டில் திரும்பி நின்றார்.

“நம்ம வயலா செல்வம்?”

அவர் கொஞ்சம் வெட்கப்பட்டதைப்போல திரும்பி சிரித்து தலையாட்டினார்.

“நாத்து வுட்டாச்சு போலயே..”

“ஆமாமா…மூணுக்குழி..இதவாங்கறதுக்குள்ள இந்தசென்மம் மாஞ்சுப்போச்சு..”

“ஒடம்பு நல்லாருக்கா..”

“நல்லாருக்கேன்…முன்னமாதிரி கூலிக்கு போக முடியல…நம்ம வயலோட சரி..”

“கோயில் வரைக்கும் போயிட்டு வர்றேன்…”

“இப்ப மேடு காடெல்லாம் திரியற வயசில்ல..செருப்பு போட்டிருக்கியா..சரி..சரி..போனமா வந்தமான்னு இரு,”

 தலையாட்டி நடந்தார்.பச்சை இங்கிருக்கிறது என்ற சொல் மனதினுள் ஓடிக்கொண்டே இருந்தது.

குன்றின் கீழ் எப்போதும் காத்துக்கிடக்கும் கரும்பாறையில் அமர்ந்தார்.வழவழ என்று ஆட்கள் அமரும் பாறை.புழுக்கம் கசகசத்தது.நீராவி எழுந்து பரவிநின்றது.எழுந்து மலையாங்காட்டிற்குள் நுழைந்தார்.மழைகால பட்டாம் பூச்சிகள் கருப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை,காப்பியின் வண்ணங்களில் எழுந்து பறந்து சுற்றின.பெரிய பெரிய புளியமரங்கள் செறிந்திருந்தன.

திருமணமான பத்துநாட்களில் இங்கு மஞ்சுவை அழைத்துவந்தார். வீட்டுகோபதாபங்கள்,சொந்தபந்தங்களின் அலட்சியம்,முறைபெண்களின் நெற்றிசுருக்கங்கள்  என காதல்திருமணம் அத்தனை பக்கங்களிலும் இண்டுமுள்ளென பற்றி இழுத்தது. அனைத்தையும் சகித்த ஆசுவாசத்திற்கு பிறகு, மஞ்சுவுடன் இங்கு இப்படி சுதந்திரமாக வர வேண்டும் என்ற நீண்டநாளைய எதிர்பார்ப்பு நிறைவேறியது.

“என்னப்பா…எப்படி இந்த இடம்…”

“சினிமாவுக்கு கூட்டிட்டு போவேன்னு பாத்தேன்..கால் வலிக்குது,”என்று அவள் சலித்துக்கொண்டாள்.

ஏதோ ஒரு நடமாட்ட சந்தடி கேட்டது.பக்கத்திலிருந்த யானைப்பாறை மீது ஏறி நின்றார்.ஓசை நெருங்கி வந்ததும் பக்கவாட்டில் நீட்டிக்கொண்டிருந்த புளியமரத்தின் வழுவான கிளைபக்கம் சென்று நின்றார்.குன்று மேலேறிய ஒற்றையடிப் பாதையில் இருந்துதான் சலசலப்பு கேட்டது.மீண்டும் பாறையில் அமர்ந்தார்.

“இங்க என்ன பண்றண்ணே…”என்ற அதட்டலான குரலுடன் முத்தய்யா கலாக்காய் புதரிகளுக்கு பின்னிருந்து வந்தான்.மறந்தும் ,பதறியும் கூட எவர் முன்பாகவும் அண்ணன் என்று அழைக்காதவன்.

“வீட்லயே இருக்க ஒருமாதிரி இருக்கு..”

“அதுக்கு கோயில்ல போய் ஒக்கார வேண்டியதுதானே… இவ்வளவு தூரம் எதுக்கு வர்ற…”என்றபடி வலது கையிலிருந்த காகிதப்பெட்டியை இடது கைகளுக்கு மாற்றினான்.

“மலை ஏறலான்னு வந்தேன்…மூச்சுப்புடிக்குது…”

“வயசாவுதுல்ல… எதுக்கு எங்கியோ போய் கிடக்கற.அப்பன் பெரியாளுன்னா அவங்களோட.நம்ம நிம்மதிய பாரு …அவுங்க செத்து இருபதுவருஷம் ஓடிப்போச்சு.புள்ள பொண்டாட்டியோட இருக்காம என்ன பொழப்பு. அறுப்பு சீசன்ல நம்மஊரு சீரகநெல்ல வாங்கி வச்சு வித்தாக்கூட சம்பாதிக்கலாம்,”

“பாக்கலாம்..”

“கண்ணுபாக்க ஆளாச்சும் இருக்கனும்..பாக்கறேன் பாக்கறேன்னு இழுக்காத.அதான் ஐஞ்சுமாசமா வேலையில்லயே..அப்பிடியே இங்கியே இருந்துட்டா என்ன?”

பருத்த மரத்தை போல திறமாக காலூன்றி இடையில் கைவைத்து நின்றான்.தலையில் இருந்த தலைப்பாகை துண்டை அவிழ்த்து கழுத்தை முகத்தை துடைத்துக்கொண்டான்.

கையிலிருந்த செங்காய்களை நீட்டி, “இந்தா..மலகாட்டு கொய்யா..ஒடம்ப ஓடம்பாவா வச்சிருக்க..தேஞ்சுபோன சந்தனக்கட்டையாட்டம்,”என்றபடி நடந்தான்.



அழகன் தன்னையறியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தார்.கொய்யாவை பாறையில் தட்டித் திறந்தார்.அப்பாவுக்கு பிடித்தப்பழம்.

“எதுக்கு அவன தண்ணியடைக்க அனுப்பின..” என்றபடி அப்பா பின்பக்கமிருந்து வீட்டிற்குள் நுழைந்தார்.

“சொந்தவயலுக்கு தண்ணிவிட்டா என்ன?”

“சேத்துல எறக்கியிருக்க…”

“பின்ன எப்படி தண்ணிகட்டறது?” என்று அம்மா முகவாயில் கைவைத்து சிரித்தாள்.

“அவன் தப்பிப்பெறந்தவன்..படிக்கனும்..”

“இனிமே வயப்பக்கம் பாக்கக்கூடாது,” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு அவனை பார்த்தபடி  சென்றார்.

“சோறு தின்னுட்டு போலாமில்ல…”

“கட்சி வேலையா போறேன்..போறஎடத்துல பாத்துக்கறேன்..”

தலைநிமிராமல் கம்மஞ்சோறை மோர் வெங்காயத்துடன் கரைத்து குடித்தான். பின்புறம் கொட்டகையில் ,“அத்து மணல எண்ணுனாலும் அர்ஜீனரு பொண்டாட்டிய எண்ணமுடியாதாம்…” என்று மாடுகளுடன் சின்னம்மா பேசிக்கொண்டிருந்தாள்.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் எம்.ஏ முடித்து பி.எட் படிக்கும் போது, அப்பா  யார்வீட்டிலோ மாரடைப்பால் உயிர்விட்டார்.கருக்கலின் மெல்லிய இருளில் அரவமின்றி நான்குஆட்கள் வயல்பாதையில் தூக்கிக்கொண்டு வந்தார்கள். வீட்டின் நடுமுற்றத்து கயிற்றுக்கட்டிலில் போட்டப்பின்தான் அம்மா குரலெடுத்து அழுதாள்.

தன்மார்பில் தலைவைத்து கட்டிக்கொண்ட அவள் உடலின் பதறலில்...நடுக்கத்தில், தன்உடல் அதிரும் போதுதான் அழகனுக்கு இந்த வாழ்விற்கு மஞ்சுமட்டும் போதுமென்று தோன்றியது.அப்பாவின் முகம் காண வாய்க்காமல் குமுறும் குரல்கள் மனதில் கேட்டன.

அன்று பாடையை தூக்கும் போது வலது தோள் இறங்கியது.முடியாமல் திணறிய நேரத்தில் கூட்டத்திலிருந்து முத்தய்யா தோள் கொடுத்தான்.பின்புறமுதுகை தாங்கி நடந்தான்.

வயதுமூப்பு அடிப்படை என்று சிலஆண்டுகள் , தேர்வின் அடிப்படையில் வேலை,தனியார் பள்ளிகள் மீதான ஒவ்வாமை என்று ஆசிரியவேலை தட்டிப் போய்க்கொண்டிருக்க திருப்பூர் ,ஈரோடு, கோயம்புத்தூர் ,சென்னை என்று நினைத்துப் பார்க்காத எத்தனை வேலைகள்.அப்பாவிற்கு பின் இருந்த கடனிற்கு வயல் போனது.யாருக்கும் தெரியாமல் கொடுத்தனுப்பிய அப்பாவின் அர்ஜீன கணக்குகளுக்கு வீடு போனது.

“ரெண்டு பூரி செட்…ஒரு காப்பி..”

“யோவ்..எவ்வளவு நேரம்…”

டம்ளர்..தட்டுகளின் ஓசைகள் காதுகளுக்குள் பலமாகக்கேட்டன.

எழுந்து ஒற்றையடிப்பதையில் நடந்து இறங்கி பெரியண்ணசாமி களத்தில் நுழைந்தார். யாரோ ஆடு பலியிட்டிருந்தார்கள்.குருதி ஊறி கறுத்திருந்த மண்ணை பார்த்தபடி அந்த மிகச்சிறிய ஆலமரத்திற்கு அடியில் நின்றார்.ரத்தம் குடிக்கும் மரம் என்ற எண்ணம் வரவும் தலையை குலுக்கிக்கொண்டார்.

“அட..அழகண்ணணா..வாங்க..”என்று பூசாரி தேவன் அழைத்தான்.உயரமாக நின்ற பெரியண்ண சாமியின் தோள்களில் கிளி ஒன்று நடந்து கொண்டிருந்தது.பூசைக்காக ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக பத்துஆட்கள் நின்றார்கள்.

“தப்பா நெனக்காதீங்க.கோயிலுக்கு மூத்தகுடியாளு அவர்… வெளியில நிக்கக்கூடாது....”

ஆட்கள் இடம் விட்டார்கள்.கொடுவாள்மீசையும் ,அதனடியில் மதுரமாய் ஔிர்ந்த புன்னகையும், கருத்த பளபளப்புமாக ,கற்பூர ஔியில் பெரியண்ணசாமி மின்னினார்.திருநீறு கொடுக்கும் போது சட்டைப்பையை துளாவினார்.நல்ல வேளை நூறுரூபாய் நோட்டு இருந்தது.

ஆட்கள் கலைந்தப்பின் தேவன் ஒருபையில் வெற்றிலைபாக்கு தேங்காய் கொடுத்து கும்பிட்டான்.

“நீதான் பூச பண்றியா தேவா…”

“ஆமாண்ணே..அய்யாவுக்கு முடியல.இந்த லாக்டவுன்ல வேறென்ன வேல..”

“என்ன பண்ற…”

“இந்த வருசந்தான் பி.எச்.டி முடிச்சேன்…கண்ணனூர் காலேஜ்ல வேலபாக்கறேன்,”

ஆலமரத்தடிக்கு வந்திருந்தார்கள்.இடையில் கட்டியிருந்த துண்டால் மின்னும் கருத்த உடலை துடைத்துக்கொண்டான்.கிளையில் தொங்கவிட்டிருந்த  சட்டையை எடுத்து மாட்டினான்.அவனை பார்த்தபடியிருந்த அழகனின் முகம் மலர்ந்திருந்தது.

“எழுத்தாளராகனுன்னு சொல்லிக்கிட்டே இருப்பீங்களாமே..”

“ஆமாமா..” என்று சிரித்தார்.

“உங்கள நெனச்சுக்கிட்டு மாமா அடிக்கடி சொல்லும்..”

நெற்றியை சுருக்கியபடி அவன் முகத்தைப்பார்த்தார்.

“ஜெயபால் மாமா..”

“ஓ..…”என்று அவன் தோளில் தட்டினார்.

“அப்ப வரட்டா..”என்று திரும்பினார். சிவந்த புடவையில் வாட்டசாட்டமான அந்த அம்மாள், “அடைசல் போட்டிக்கோம்..சாப்பிட்டு போலாம்…எழ விரிச்சாச்சு..ரெண்டு பேரும் வாங்க,”என்றாள்.

இலை கழுவப்பட்டு பளபளத்தது.ஒரு பிள்ளை ஓடிவந்து தண்ணீர் வைத்தது.

“ந்நா..சீக்கிரம்..உக்காந்திருக்காங்க..”

ஒருவர் பெரியஅன்னக்கரண்டியில் சோற்றை அள்ளுவதை பார்த்ததும் அழகன், “பாத்து வைங்க..தாங்காது..”என்றார்.

பின்னால் அந்தஅம்மாள் பெரிய அகப்பை நிறைய கறியை அள்ளி வைத்தாள். கொஞ்சம் தள்ளி பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.தேவன் குனிந்த தலை நிமிரவில்லை.

 “ எல்லாத்துக்கும் எலைய விரிங்க..தனியா திங்க சங்கட்டமா இருக்குமுல்ல..”என்று கூட்டத்தை கலைத்தாள்.

“பொழுது கெடக்கு..மெதுவா தின்னுங்க தம்பி…”என்றபடி வேறுபுறம் திரும்பிக்கொண்டு இலையில் ஒருகண் வைத்துக்கொண்டாள்.

குழம்பு வாளியை வாங்கி அகப்பையை விட்டு  துளாவி இருவருக்கும் எடுத்து வைத்தாள்.

“போதுங்க்கா…”

“அட..எலும்ப ஒதுக்குங்க.மெதுவானதா திங்கற ஆளுன்னு வைக்கறப்ப தெரியல..”என்று அழகனை பார்த்து சொன்னாள்.மீண்டும் வாளியை துளாவினாள்.

“ ஒறப்பு கூடுதலோ..தண்ணி கொஞ்சமா குடுச்சிக்கிங்க….”என்று சிரித்தாள்.அவர் குனிந்த போது அலைபேசி அழைத்தது.

அந்தம்மாள், “ இங்க குடுங்க.பசியாறிட்டு பேசலாம்.இந்த எழவு எதையும் ருசிக்க விடுதில்ல..”என்று அலைபேசியை உரிமையாக வாங்கி வைத்துக்கொண்டாள்.ஆட்கள் எந்த பேச்சும் இன்றி உண்ணும் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

களத்தில் பத்துபுளியமரங்களுக்கு மேல் நின்று நிழல் கூட்டியிருந்தன.சுற்றி வயல்காட்டின் சத்தமின்மையில் ஐயாற்றின் கர்ஜனை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

இருசக்கரவண்டி ஒன்றின் வருகை அவர்கள் கவனத்தையும் திருப்பியது.சுடிதார் பெண்ணை இறக்கிவிட்டு வண்டி திரும்பியது.அவள் ஆலமரத்தடிக்கு முன்னால்  கோயில் முகப்பில் நின்றாள்.

தேவன் சத்தமாக, “சமூ..உள்ள போய் நில்லு வாறேன்..”என்றான்.

சாமிக்கு தீபம்காட்டி தீருநீறு தட்டுடன் வந்தான்.அவள் குவித்த கைகளுடன் முதுகை சற்று குனித்து நின்றாள்.திருநீறை எடுத்து அவள் நெற்றியில் இட்டப்பின், “ய்யா…இந்த பிள்ளைக்கு நாலு பேரு மாதிரி நம்மளும் நல்லா பொழக்கனுங்கற எண்ணத்தக்குடு..”என்ற போது அவன் குரல் இளகியது.சமுத்ரா புன்னகைத்தாள்.

தேவனும் சமுத்ராவும் களத்தில் வந்து  நின்றபோது அழகன் சிரித்தபடி வந்தார்.

“அந்தஅக்கா உன்ன சாப்பிட வரசொன்னுச்சு,”

“பழக்கமில்லங்கய்யா..”

“அய்யாவா….?!”

“அப்ப பி.எட் படிச்சிட்டிருந்தேன் தேவா…வீட்டுக்கு வந்த சமுத்ரா, “ய்யா,” புத்தகம் வேணும்ன்னு சொன்னுச்சு.அய்யாவா !!மாமான்னு கூப்பிடுனேன். எங்கம்மா… மொதமொதலா சின்னப்பிள்ள தகப்பனா நெனச்சிருச்சு.வெளஞ்சகாடு…நெறஞ்ச கெணறாட்டம்ன்னுச்சு…”

“இன்னுமும் இப்படித்தாண்ணே..கிறுக்குத்தனமா யார எப்படி கூப்பிடறதுன்னு ஒருமண்ணும் தெரியாது ..”என்று புருவங்களை ஆட்டி சிரித்தான்.

“ய்யா..இவன் லேடிஸ் காலேஜ்ஜிக்கு செமினார்ன்னு ஒருதரம் போனான்…”

 “விடேன்..ப்ளீஸ்..வயல்வரைக்கும் போயிட்டு வர்றேண்ணா.இந்நேரம் வூட்டுக்காரி கோயிலும் போனமா, பூசய முடிச்சமா, தின்னமா, வந்தமான்னு இல்லாமையா இருக்கும் ஒரு பொழக்கிறஆம்பள.படிச்ச மாப்பிள்ளன்னு தலையிலகட்டிடாங்க..என்னத்துக்கு புண்ணியம்ன்னு வாயிலபோட்டு மென்னுதுப்புவா,”என்று அவசரமாகக் கிளம்பினான்.எதுவும் பேசாமல் அவர் சிரித்துக்கொண்டிருந்தார்.

“எங்கடா இன்னும் தம்பிய காணும்..”

“ஆத்துல தண்ணிபாக்க வந்தோம்…வயலுக்கு போயிருக்கான்,”

“நானும் பாக்கனும்…”

“வாங்க போலாம்....”என்று நடந்தாள்.மலையாங்காட்டின் ஓரத்து ஒற்றையடிப்பாதை.பத்துநிமிட நடையில் நீண்டபாறைகளை ஏறி இறங்கினார்கள்.பெரிய புளியமரத்திற்கு கீழே குயின்ஸ்பெரி சாமியார்களின் சிவலிங்கத்தை அடுத்து, ஐயாறு தெரிந்தது.சத்தம் காதை துளைத்தது.

மேட்டுக்கல்லில் அமர்ந்தார்கள்.இரண்டு குன்றுகளுக்கிடையே புகுந்து கட்டறுத்த கன்றென செந்நிறத்தில் பாய்ந்து ஓடியது ஐயாறு.

“என்னா பாய்ச்சல்…”

“ஆமாய்யா..வேகத்தபாருங்க…என்னதுக்காக இத்தன ஆவேசம்..”

“இதென்ன புதுசா…தண்ணின்னா பாயதான் செய்யும்…”

அவள் உதட்டை பிதுக்கிக்கொண்டாள்.ஐயாற்றின் ஈரம் கண்களில் படர்ந்தது.

கால்களை நீட்டி கையை விரித்து மூச்சை இழுத்துவிட்டார்.அவர்கள் முன்னால் ஆறு வேகமாக, சுழிப்புகளும், எம்புதல்களுமாக, துமிகள்தெறிக்க பசும்மரக்கிளைகளை ,காய்ந்தகட்டைகளை அடித்துக்கொண்டு நொடியும் நிற்காமல் பாய்ந்துகொண்டிருந்தது.

 இந்தநாள் முழுவதும் தன்முகம் மலர்ந்திருந்தை உணர்ந்த அழகன் விசுக்கென்று எழுந்து பாறையிலிருந்து கீழே குதித்தார்.மலையேறிவிட முடியும் என்று தோன்றியது.அவள் கண்கள் விரியப்பார்த்தாள்.அவர் திரும்பி குயின்ஸ்பெரிகளின் தளத்தைப் பார்த்தார்.காற்றில், மழையில், வெயிலில், பனியில் கிடக்கும் சிவன்.

“ எங்கயோ வெளிநாட்டுல பெறந்த குஞ்சுபொறி சாமிங்க இந்த மலையாங்காட்டுல எதையோ தேடியிருக்காங்க,”  

“ம்…மழப்பெய்யறதும் மகப்பேறும் எப்பன்னு மகாதேவனே அறியமாட்டானாம்…மனுசங்க மனசுக்கும் அது தானேடா,”

அவள் அவரை பார்த்தாள்.அன்று முற்றத்தில் கையில் புத்தகத்துடன் அமர்ந்திருந்த அய்யாவே தான்.இங்க அலையறதா சொல்ற சித்தர் யாராவது இவர் மீது ஏறிட்டாங்களா! என்று தோன்றியது. வானம் தெளிந்து வெயில் பரவிக்கொண்டிருந்தது.













Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...