Skip to main content

மத்தளம் கொட்ட

       2020 டிசம்பர் 12 சொல்வனம் இதழில் வெளியான  சிறுகதை.

                                                     மத்தளம் கொட்ட                                                                                  

அலுவலக நேரம்கடந்து கடகடவென்று  நேரம் ஓடிக்கொண்டிருந்ததை உணர்ந்தும் சரண்யா தன்இருக்கையில் அமர்ந்திருந்தாள். எழுந்து வெளியேற வேண்டும் என்ற எண்ணமும் இல்லாமல் இல்லை. அலுவலகநேரம் முடிந்தவுடன் ஒருமாதமாக இந்த வேதாளம் கழுத்தில் அமர்ந்து கொண்டு கனக்கிறது. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. மதில் ஏறி வழிகண்டு குதிப்பதை போல இருக்கிறது.

 காதில் கேட்காத முணுமுணுப்பு போல மெல்லிய இருள் படர்ந்திருக்கும் அரசு அலுவலகம் மனதை துணுக்குற செய்கிறது. முன்கட்டிடவாயிலில்  சார்நிலை கருவூலத்திற்குரிய  ஓயாத சந்தடி காதில் கேட்கிறது.

அம்மாவின் முகம் மனதில் வந்தது. அதை தவிர்க்க முயன்றால் அம்மாவின் சிரிப்பு, அழுத்தம் திருத்தமான பேச்சு என்று சூழ்ந்து கொண்டாள். எதிர்ப்பக்க சுவரையே பார்த்தபடி இருந்ததால் கண்கள் எரிந்தன. கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து கண்களின் மீது வைத்துக்கொண்டாள். கிருபாகரனின் முகம் தெளிவில்லாமல் வந்தது. கைக்குட்டையை எடுத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

இந்நேரம் வரை தெரியவில்லை. தனியே அமர்வது ஒவ்வொன்றையும் துல்லியமாக்கிறது . இதை பக்கத்து இருக்கை சுஜியிடம் சொன்னால் கல்யாணம் செய்து பிள்ளைக்குட்டி வந்தால் நமக்கு என்ன நடக்கிறது என்பதே நமக்கு தெரியாது என்பாள்.

 முப்பத்தைந்து ஆண்டுகளாக, எந்தப்பயல் இவளுக்குன்னு பிறந்திருக்கானோ? எவனை கட்டிக்கிட்டு என்ன பாடுபடப்போறீயோ? எவன் தலையில மொளகா அறைக்கப்போறியோ?  யார் நீ கண்ணில் பட்டுத்தொலையேன்? என்று யாரோவாக இருந்தது இந்தமுகம் தானா? இல்லை இதுவும் இல்லையா? என்று தோன்றியதும் அலைபேசியை எடுத்தாள்.

சித்தப்பாவை அழைத்து அனைத்தையும் சொல்லிவிட்டால் என்ன? பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என்னை படிக்க வைக்க வேண்டாம் என்றார். ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற பிள்ளையை எப்படி படிக்க வைக்காமலிருப்பது என்று கேட்ட அப்பாவிடம், பொதுசெலவில் பெண் பிள்ளைகள் படிப்பு செலவு சேராது. குடும்பத்தின் வரவு செலவு குழறும்  தனிக்குடித்தனம் பண்ணிக்கலாம் என்றவர். அப்போது அவர் முகத்தில் குரலில் இருந்த கறார் தன்மை மனதில் உறைந்து நிற்கிறது. அது கனவில் நினைவில் உடன் வந்து துரத்திக்கொண்டேயிருக்கிறது.

 மார்பில் மடியில் தோளில் படுத்துறங்க வைத்தவர். எப்பொழுதும் அவர் பக்கத்தில் சாய்ந்தே அமர்ந்திருந்த நினைவு. உண்ணும் போதும் அவரின் பக்கம் தான். வேண்டாம் என்பதை எடுத்து அவர் தட்டில் போடவும் பிடித்ததை கேட்காமல் எடுத்துக்கொள்ளவும் வசதி. கணக்கு வழக்கு பேசும் இவர் யார்? அனைத்தையும் கணக்காகவே பார்ப்பதால் என்ன செய்துவிடப்போகிறார். 

 அம்மாவிற்கு என்ன ஆகியது? தம்பிக்கு திருமணம் நடந்தபிறகு தான் அம்மா என் அம்மாவாக இல்லாமல் ஆனாள். அறுபது பவுன் நகையுடன் வந்த மருமகளிடம் என்னத்தைக் கண்டாள். சரண்யா படிப்பிற்காக குடும்பம் பிரிந்தால் என்ன? என்னால் பார்த்துக்கொள்ள முடியும் என்று சொல்லிய அம்மா. 

பித்தா பிறைசூடா பெம்மானே அருளாளா என்று சிவனை நினைத்து பாடி வியாபாரம் செய்யும் அப்பாவை தனித்து விட முடியாமல் கோபப்பட்ட சித்தப்பா. இத்தனைகளுக்குப் பிறகு படிப்பும் வேலையும் வாய்த்தது. இந்த வேலையை அம்மாவே இன்று பொருட்படுத்தவில்லை. 



அலைபேசி அழைத்தது. நிஷாந்தினி தான். இவளிடமாவது கேட்க வேண்டும்.

“இன்னும் அஃபீஸ்லயா இருக்க?”

“ஆமா?”

“ஹாஸ்ட்டல் போயிட்டு கூப்பிடுறியா?”

“பரவாயில்லை…?”

“கிருபாகரன் கிட்ட பேசினியா?”

“ச்…இல்ல,”

“என்னடி கல்யாணத்துக்கு முன்னாடிதான் கொஞ்சமாச்சும் நல்லா பேசுவாங்க…”

“கல்யாணமே நடக்குமான்னு தோணுது,”

“உறுதிபண்ணினப் பின்னாடி இப்படி பேசக்கூடாது…என்னாச்சு?”

“அம்மாதான்... என்ன நடக்குதுன்னு புரியல நிஷா. தம்பி கல்யாணத்துக்கு என்னோட சம்பள பணத்திலருந்து மூணுலட்சம் எடுத்தோம். இப்ப என் கல்யாணத்துக்கு வீட்டுபத்திரத்தை அடகு வைக்கனுன்னு அம்மாவுக்கு கோபம் வருது. மாப்பிள்ளைய மேட்ரிமோனில பாத்து சொன்னப்ப இருந்தே அம்மாவுக்கு பிடிக்கல. மாப்பிள்ளை சாதாரண வேலை, குடும்பம்ன்னு சொல்லிட்டே இருந்தாங்க. இப்ப ஆறுமாசம் தள்ளி கல்யாணம் வச்சுக்கலான்னு கிருபா சொல்றார். பேசி ஒருவாரமாச்சு…அப்படியே நிக்குது,”

“அம்மாவுக்கு என்னாச்சு?”

“இந்த மாதிரி வீட்ல நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா கதிர்பொண்டாட்டி எப்படி மதிப்பான்னு கேக்கறாங்க? கிருபா வீட்டுகாரங்கக்கிட்ட பேசும்போது அம்மா அதிகாரமா பேசறாங்க …அம்மாவா! ன்னு இருக்கு,”

“என் மேல கோபப்படாம கேக்கனும்…கதிருக்கு கல்யாணம் பண்றப்ப நீங்க இதுக்கும் கீழதானே இருந்தீங்க. அவங்க செஞ்ச சீர்ல கல்லாவும் வீடும் நெறஞ்சப்பிறகு ஹைகிளாஸ் ஆயாச்சு. சரிவிடு... நீ தானே மேட்ரிமோனில மாப்பிள்ளை பார்த்து சொன்ன. நீயே யாருக்கிட்ட பேசினா காரியம் ஆகுமோ பேசிடு…சொல்றது புரியுதா? இப்பவே பேசு. கிருபகாரன்கிட்டையும் பேசு. நான் ராத்திரி பேசறேன்,”

நேரம் கடந்து கொண்டிப்பதை முன்னால் சுவரில் கடிகாரம் டிக் டிக் என்று சொல்லிக் கொண்டிருந்தது.

பள்ளிக்கூடம் படிக்கும் போதும், கல்லூரியிலும், பணிக்கான தேர்வுகளுக்கான ஆண்டுகளிலும், வேலைக்கு சேர்ந்த பிறகும் மனதிற்குள் ஒரு தந்திரம் சரியாக சொல்ல வேண்டும் என்றால் இரக்கமின்மை இருந்தது. யாருக்காக? அப்பாவிற்காக.

அம்மாதான் சொன்னாள். படிக்கனும் வேலைக்கு போகனும் நிமிர்ந்து நிற்கனும். காதல் ஒரு மனவிளையாட்டு. கரும்பை மெல்லும் போதே சுவை குறைந்து சக்கையாவதைப் போல என்று சொல்வாள். அவளுக்குள் ஒரு தீவிரம். கூட்டுக்குடும்பத்தில் ஆண்களின் கீழ் இருக்கு முடியாத அவஸ்தை அவளுடையது. அம்மா ஆண்களில்லா வீட்டில் வளர்ந்தவள். இன்றும் அவளை மாற்றிக்கொள்ள முடியவில்லை. அது கிருபாகரனிடம் பேசும் விதத்தில் தெரிகிறது. 

அப்பாவை உணர இத்தனை ஆண்டுகளா! எத்தனை தோழிகளிடம் அம்மாவும் எனக்கு தோழிதான் என்று சொல்லியிருக்கிறேன். ஒருபோதும் அம்மா தோழியாக முடியாது. அது ஒரு பாவனை. அது ஒரு கண்காணிப்பு. கிருபாவிடம் பேசு என்று நிஷா எத்தனை கரிசனமாக சொல்கிறாள். அம்மா ஏன்?!

கதிருக்கு திருமணமானவுடன் அம்மாவின் பாரம் இறங்கிவிட்டதா? வீட்டில் ஒரு விசேசமாவது வைத்து விட்டோம் என்ற நிறைவில் நிம்மதியாய் அமர்ந்துவிட்டாளா? எதுவுமே நல்லது நடக்காத இந்த பத்தாண்டுகளில் அப்பாவையும் குடும்பத்தையும் சுமந்த வலி குறைந்து ஆசுவாசமாக இருக்கிறாளா? 

உடனே அலைபேசியில் சித்தப்பாவின் எண்ணை எடுத்தாள். சித்தப்பா பரபரக்கும் குரலில்,“தேதி சொல்றதா சொன்னாங்களே …ஒன்னும் தெரியல…”என்றார்.

“சித்தப்பா…அவங்க பேசி ஒருவாரமாகப் போகுது,”

“என்னாச்சு…கல்யாணத்தை தைமாசம் வைக்கலான்னு சொன்னாங்களே…”

“அம்மா தான்….”

“என்ன?”

சித்தப்பாவின் குரல் கடுமையாகியது. 

“மண்டபத்துக்கு மூணு தேதி சொன்னாங்கப்பா.  நமக்கு ஆறுரூம் இருக்காம்…அம்மா பத்து ரூம் வேணுன்னு சொன்னாங்களாம். அதில்லாம பட்டுப்புடவைக்கு அவங்க சொல்ற ரேட்டுக்கு பிடிகுடுக்காம பேசறாங்களாம். கிருபாகரன் மேமாசம் வைச்சிக்கலாமான்னு கேட்டார்…அப்புறம் பேசல…”

“வீட்ல பையன் கல்யாணமாகி வளைய வரான்.  என்னத்த சொல்றது?  நான் பேசறேன். அவரை போன் பண்ண சொல்றேன். சகஜமா பேசு. இன்னிக்கே இதை முடிச்சுவிடனும்,”

சித்தப்பாவிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு நெருக்கமாக பேசுவேன் என்று நினைக்கக்கூட இல்லை. திருமணம் முடிவு செய்ய சபையில் அமர்ந்து எத்தனை கறாராக பேசினார். வேலைக்கு போற பிள்ளை. நிறைய பவுன் எதிர்பார்க்காதீங்க. பிள்ளை பையனுக்கு சரியா சம்பாதிக்குது. கொடுக்கல் வாங்கல்ல நியாயம் இருக்கனும் என்று கறாராக சொன்னார். அப்பா அவர்தம்பி பக்கத்தில் சிவனே என்று அமர்ந்திருந்தார். நாற்காலியிலிருந்து நிமிர்ந்து பார்த்தாள். சன்னல் வழியே திருவரங்கத்தின்  கோபுரங்கள் நிமிர்ந்து நின்றன. 

இத்தனையும் அப்பாவிற்காக மட்டும் தான். அந்த முகத்தை நினைத்துக்கொண்டால் எந்தவயதிலும்,  எந்த முகமும் மனதை தொந்தரவு செய்யாது. 

ஜெயா காலிங்..

“சொல்லும்மா…”

“என்ன புதுசா அம்மான்னு கூப்பிடற…ஜெயான்னு கூப்பிடாம,”

“…”

“பெண்ணழைப்புக்கு மோதிரம் போடுவாங்க தானே?”

“ம்மா…தாலி செயின் போடறாங்க. அவங்களுக்கும் செலவிருக்குல்ல. நம்மள மாதிரி தானே,”

“இங்கபாரு நம்மள மாதிரின்னு சொல்லாத…”

“ நீ கட் பண்ணும்மா,”

“இரு சரண்யா…உந்தம்பிக்கிட்ட பெண்ணழைப்புக்கு மண்டபத்துக்கு பஸ் பேசறத பத்தி சொல்லு,”

“நீ சொல்லமாட்டியா,”

“நான் சொல்லி ரெண்டு நாளாச்சி…நீ சொல்லனுமாம்,”

“வைக்கறேன்…”

பேப்பர் வெயிட்டை எடுத்தாள். கண்ணாடி முட்டையினுள் நீல மஞ்சள் வண்ணம் சிதறியிருந்தது. மனம் துணுக்குற மேசை அடித்திறப்பை திறந்து உள்ளே வைத்தாள். எட்டித்திறந்ததால் சென்ற மாதம் வண்டி சறுக்கியதில் அடிப்பட்ட எழும்பு வலிகாட்டியது.

திருமண பேச்சுதுவங்கியதிலிருந்து இதே சள்ளைதான். தோள்ப்பட்டை வலி கைகளில் பரவியது. கைகளை விரித்து மூடி விரித்தாள். அம்மா வைத்துவிட்ட மருதாணி வெளிறியிருந்தது. கைப்பையை  எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். தழைந்த வெயிலை முகத்தில் உணர நடந்தாள் . ராமப்பொட்டு வைத்த சிறுமி கடந்து சென்றாள். கோணக்கொண்டை போட்டிருந்தால் இன்னும் அம்சமாக இருந்திருப்பாள்.

அன்று அவளுக்கு என்ன சிக்கலோ உருகிப்பாடி காதலித்து இங்கு வந்து மரித்துப்போனாள். எத்தனை தடைகளோ மனிதனை சென்றடைய. காலகாலமாய் அவள் மனதின் உருக்கமும் ஏக்கமும் கண்ணீரும்… கேட்டிலையோ வெண்சங்கின் பேரரவம் என ஒலித்துக் கொண்டிருக்கும் இருக்கும் அரங்கம்.

திரும்பி கிழக்கு வாசல் வழியாக கோவிலினுள் நுழைந்தாள். ஆயிரங்கால் மண்டபம் ஒருபக்கமும், தசாவதார மண்டபம் ஒருபக்கமும் அமைதியில் மூழ்கியிருந்தது. மெல்லியஇருள் கடந்து வெளிசுற்றில் மணலில் கால்பதிய நடந்தாள். அங்கிருந்த நம்மாழ்வார் நாலுகால் மண்டபத்தில் அமர்ந்தாள். சுற்றி மணல் விரிந்து கிடந்தது. ஆயிரம் ஆயிரம் காலடித்தடங்கள்.

“முழுமதி வதனமும் துளசிமாலையும்

காவிரிகரையில் அனந்தசயனமும் 

கண்டேன் அழகிய மணவாளா…”

வெட்டுகள் நிறைந்த வாயோதிகக்குரலில் பாடலுக்கு பேச்சிற்கும் இடையில் அரங்கனை தவிக்கவிட்டபடி மிளகாய்பழச்சிவப்பு மடிசாரில் பாட்டி ஒருத்தி அமர்ந்திருந்தாள். அவளுக்கு சுற்றியிருக்கும் எதைப்பற்றியும் கவனமில்லை. பார்வைகூட எதிலும் நிலைத்ததாக தெரியவில்லை. இவள் அன்னாந்து பார்த்தாள்.  உள்சுற்று மதிலில் கருடனின் தோளில் புறா ஒன்று அமர்ந்து தத்தித்தது. பார்வைக்கே எத்தனை மென்மை. 

அடர் பச்சைகைத்தறி சேலையில் வந்த அந்தமாமி புன்னகையுடன் பித்தளை கூடையில் இருந்த வாழைப்பழத்தில் இரண்டை சரண்யாவிடம் கொடுத்துவிட்டு பாட்டியை கைப்பிடித்து அழைத்து சென்றாள். பழங்களை பார்த்ததும் வயிறு தவிக்கத்தொடங்கியது. 

மறுமுறை சித்தப்பா அழைத்தார்.

“கணக்கா பேசிட்டேன். இனிமே மாற மாட்டாங்க. உங்கம்மாவ இந்த கணக்குவழக்குல தலையிட வேணான்னு சொல்லு…” 

தூணில் சாய்ந்து கால்களை தளர்வாக்கி அமர்ந்தாள். தோள்பட்டையை பிடித்துவிட்டபடி கிருபாகரனின் எண்ணை தொட்டாள்.

“ஹலோ கிருபா…எப்படியிருக்கீங்க?”

“ம்…”

“சித்தப்பா பேசினாரா…”

“உங்கவீட்ல அவர்தான் சரியா பேசறார். பட்டுப்புடவை எடுக்க சாரதாஸ் போனுன்னு அம்மா சொல்றாங்க…உங்கம்மா போத்தீஸ் சொல்றாங்களாம்…நம்மதான் பேசனும்,”

“ம்…அப்பறம் நீங்க…”என்பதற்குள் அவன் பேச்சை மீண்டும் தொடங்கினான். மறந்துவிடக்கூடாத அவசரம். பக்கத்தில் லிஸ்ட் இருந்தாலும் இருக்கும்.

“பத்திரிக்கை எத்தனை வேணும்ன்னு சரியா சொல்லுங்க. உங்க தம்பி ஒருகணக்கு. அம்மா வேற கணக்குன்னு இருக்கக்கூடாது…பேசாம உங்க சித்தப்பாக்கிட்ட கேட்டுக்கறேன்…”

அவன் பேசிக்கொண்டிருந்தான். அன்னாந்து பார்ந்தாள். மதிலில் அமர்ந்திருந்த புறா எப்பொழுதோ பறந்து சென்றிருந்தது. நேரம் கடந்து கொண்டிருந்தது.



Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...