Skip to main content

அகமும் புறமும்: 8

         விண்மீனை தேடித்திரிதல்


காலே பரிதப்பினவே கண்ணே

நோக்கி நோக்கி வாள் இழந்தனவே,

அகலிரு விசும்பின் மீனினும்

பலரே மன்ற,இவ்வுலகத்துப் பிறரே.


பாடியவர்: வெள்ளிவீதியார்

குறுந்தொகை 44

திணை: பாலை

செவிலிக்கூற்று பாடல் 


அகத்திணையில் தலைவன் தலைவியின் காதலை,துயரை காணும் அளவே, தலைவியின் மீது காதலும் அவள் பிரிவால் பெருந்துயர் கொள்ளும் ஒருத்தி உண்டு. அது அவளின் செவிலித்தாய். 

அந்த ‘செவிலித்தாய் மனநிலை’ தமையன் என்ற உறவிற்கும் உண்டு. தமையன் என்ற உறவு தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும் உருமாறக்கூடியது. ஒரு பெண் தன் இளையவனின் முன்னால் அதிகார மனநிலையில் நிற்கிறாள் அல்லது அவனை சிறுவனாகவே வைத்துக்கொள்கிறாள். அவளால் மூத்தவனுடன் தான் தோழியாக பழக முடிகிறது என்று நினைக்கிறேன். 

அதே மாதிரி ஒரு ஆணிற்கும் தன் தமக்கையை விட தங்கை அணுக்கமாக இருக்கிறாள். அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறான். அவளைப்பற்றி தனக்குத் தெரியாத எதுவும் இல்லை என்றே நினைக்கிறான்.

கிட்டதட்ட சங்கப்பாடல்களில் உள்ள செவிலித்தாயின் மனநிலையும் இதுவே. பெற்றவள் அறியாததைக் கூட நானறிவன் என்ற பெருமிதம் உள்ள மிக மென்மையான உறவு.

தலைவி வயதெய்துவது, காதல் கொள்வதை புரிந்து கொள்ள ஒரு செவிலித்தாய் சிரமப்படுகிறாள். அவளிடம் ஒரு தத்தளிப்பு இருந்து கொண்டே இருப்பதை சங்கக்கவிதைகளில் காண்கிறோம். செவிலித்தாய் கூற்றை மட்டும் எடுத்து வாசித்தால் அவளி்ன் மனநிலையின் பரிதவிப்பை நம்மால் உணரமுடியும்.

அவளுக்கு தாய் தந்தையைப்போல தலைவியை இற்செறிக்க மனம் ஒப்பாது. கடும்சுரத்தில் மகளை விடவும் மனம் ஒப்பாது. தலைவி காதல் கொண்டிருக்கிறாள் என்று நம்பவும் முடியாது. அவள் திருமணத்திற்கு தயாரான பெண் என்பதையும் ஏற்கவும் முடியாது. அந்த அன்பில் எழும் ‘பரிதவிப்பு உணர்வு நிலையே’ செவிலிதாய் கூற்று பாடல்களை மனதிற்கு நெருக்கமாக்குகின்றன.



கனிமொழி என்னுடைய முதுநிலை கல்லூரி  காலத்து தோழி. எங்கள் இருவருக்கும் விடுதியில் கேரளப்பெண்களுக்கான தளத்தில் தான் அறை கிடைத்தது. வேறுவழியே இல்லாமல் நட்பானவர்கள் நாங்கள். ஏனெனில் எந்த விஷயத்திலும் நாங்கள் ஒத்துப்போனதில்லை. ‘எங்களட பொன்னு கொச்சே…’ என்று கொஞ்சும் அதே பிள்ளைகள், எதாவது தங்களுக்குள் பேச வேண்டும் என்றால் எங்கள் இருவரையும் ‘ப்ளீஸ்..கொறச்சு சமயம் பொறத்து நிக்கனே’ என்று வெளியே துரத்தி கதவை அடைத்துவிடுவார்கள். பகலென்றால் சுற்றிவிட்டு வரலாம். இரவு பனிரெண்டு மணிக்கும் ஏதாவது அடிதடி, பேச்சுவார்த்தை நடக்கும். தமிழ்பிள்ளைகளின்  அறையை அந்த நேரத்தில் தட்டி கேலிகளால் காதுகளை புண்ணாக்கி கொள்வதற்கு பனியோ, காற்றோ  எதுவானாலும் நாங்கள்  வராண்டாவில் ஒருத்தருக்கொருத்தர் துணை என்று  நட்பை வளர்த்தோம்.

இன்றுவரை வாரம் ஒருமுறையாவது வாட்ஸ்ஆப்பில்,அலைபேசியில் அழைத்து பேசாவிட்டால் எனக்கு ஒரு நாள் விரயமாகும். எனக்கு கால் பண்றத விட என்ன வேலை உனக்கு? [இந்த வரி இன்னும் கடுமையாக இருக்கும்.] என்று அவள் தொடங்கினால் என்னால் பதில் கூற முடிவதில்லை. அவளை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்று நம்புவதால் வரும் கோபம் அது.

காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் சில பெண்கள் குடும்பத்தாரால் இரக்கமின்றி தனித்து விடப்படுகிறார்கள். காதல் எத்தனை மாதங்களுக்கு சலிக்காமல் இருக்கும்? அதுவும் குழந்தையின் இடையீடு கூட இல்லாத திருமண வாழ்க்கை கொடுக்கும் வெளிநாடு வாழ் ‘தனிமை நரகம்’ அவள் வாழ்க்கை.

அவள் மூன்று அண்ணன்களுடன் பிறந்தவள். இவர்கள் வீட்டில் பெண்பிள்ளைக்காக வரிசையாக மூன்று ஆண்பிள்ளைகள். அப்பா, அண்ணன்களின் அன்பு சூழ வளர்ந்தவள்.

இளநிலை கல்லூரி படிப்பின் போது அவளின் தந்தை இறந்ததால் அண்ணன்களின் அன்பு மேலும் கூடுதலானது. அவள் ஊர் ஸ்ரீமுஷ்ணம். ஸ்ரீமுஷ்ணம் விஷ்ணுவின் ஊர் அதனால நீ மதுரை மீனாட்சி  என்று அடிக்கடி சொல்வேன். மூன்று அண்ணன்களும் வாரவாரம் மாற்றி மாற்றி வந்துவிடுவார்கள். அவளுடன் நானும் அவர்களின் செல்லமாக மாறினேன். அவர்களின் அன்பை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். என் நினைவில் ப்ரியம் என்ற சொல் அவர்களுடன் இணைந்து கொள்கிறது.

அவள் ஊரை சார்ந்த அவளின் பள்ளித்தோழனை அவள் காதல் திருமணம் செய்து கொண்டாள். முதுநிலை தேர்வு முடிந்த நாளன்றே அவள் டெல்லி கிளம்பி சென்றுவிட்டாள். அவன் டெல்லி ஜ.ஜ.டி யில் முனைவர் படிப்பு முடிக்கும் தருவாயில் இருந்தான். 

என்னை பற்றி அறிந்தவளாதலால் கிளம்பும் அன்று என்னிடம் எதுவும் கூறவில்லை. ஊருக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அடுத்த நாள் மதியம் விடுதிக்கு அவளின் மூன்றாவது அண்ணன் வந்திருந்தார். அவர் எங்களை விட மூன்று ஆண்டுகள் மூத்தவர். கோபக்காரர்.

எனக்கு ‘ஸ்கெட்ச்’ போடப்பட்டிருப்பதை நான் உணரவில்லை. மப்டியில் வந்த காவலர் உறுதியான குரலில் என்னிடம் பேசத்தொடங்கினார். அப்படி பேசினால் என்னிடமிருந்து எதையும் வாங்கமுடியாது. மண்டைக்குள் அனைத்தும் மறந்து போகும். எனக்கு அவர் சொல்லித்தான் அவள் வீட்டிற்கு செல்லவில்லை என்று தெரிந்தது.

சிறிது நேரம் சென்று அண்ணா, “ சார் பாப்பாவுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். நான் பேசிப்பாக்கிறேன்,”என்றார்.

விடுதியிலிருந்து பிள்ளைகள் வெளியேறிக்கொண்டிருந்தார்கள். எங்கள் ஊருக்கு ஒரு பேருந்தை விட்டால் அடுத்த பேருந்து கிடைக்க இரண்டு மணி நேரமாவது ஆகும் என்ற அவசரம் வேறு. நான் விழிப்பதைப் பார்த்தவர் என் கைகளை பற்றிக்கொண்டார்.

“ம்மா…கனியக் காணோம். அதோட சீரியஸ்னெஸ் உனக்கு புரியுதா இல்லையா..”

“வீட்டுக்கு போறேன்னு தான் சொன்னா,”

“இன்னும் வரலம்மா…உனக்கு எதாச்சும் தெரியுமா?”

“வித்யா வீட்டுக்கு போயிருப்பா,”

“அங்க போகல..”

“….”

“அவ யாரையாச்சும் லவ் பண்ணினாளா? விவரம் தெரியாம எங்கியாவது மாட்டிக்கிட்டா என்ன பண்றது. யாராச்சும் அவள்ட்ட தப்பா நடந்திருந்தா? எங்கியாச்சும் மாட்டியிருந்தா…நேத்து நைட் வார்டன் வீட்டுக்கு கால் பண்ணி வந்திட்டாளான்னு கேட்ட பிறகுதான் தேட ஆரம்பிச்சோம்..”

“டெல்லி ஐ.ஐ.டியில படிக்கிற உங்க ஊர்க்காரரை லவ் பண்ணினாள்..”என்று தெரிந்த அனைத்தையும் சொல்லிவிட்டேன். அவள் ஏன் என்னிடம் டெல்லி செல்வதை சொல்லாமல் சென்றாள் என்பது புரிந்திருக்கும்.

அன்று அந்த அண்ணா பேசியதும்,அவரின் கலங்கிய  கண்களும் உறுதியாக பொய்யானது இல்லை. என் கைகளை பற்றியிருந்த அவர் கைகளின் வியர்வையின் ஈரத்தை இன்னும் உணர்கிறேன். தவிப்பின் பிரிவின் ஏமாற்றத்தின் வலி காதலிற்கு மட்டுமல்ல எல்லா வகையான அன்பிற்கும் ஒன்றுதான். 

அண்மையில் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தில் ‘ எல்லா உறவுகளையும் காதல் என்றே பழைய நூல்கள் சொல்கின்றன. இறைவனுடனான உறவைக்கூட’ என்று எழுதியிருந்தார்.

அவளின் அண்ணன்களிடம்  எத்தனை காதல் திருமணங்களைப்பற்றி காவல் நிலையத்தில் கூறியிருப்பார்கள். விஷயம் தெரியும் வரை அவர்கள் மூவரும் எங்கெங்கு சுற்றியிருப்பார்கள். இந்த செவிலித்தாயின் தேடலின் தவிப்பும்.அவர்களின் தவிப்பு ஒன்றுதான்.


கால்கள் நடை தளர்ந்தன

கண்கள்

பார்த்து பார்த்து ஔி இழந்தன,

பெருவெளியின் விண்மீன்கள் போல

இவ்வுலகில் உறுதியாக

இவளும் இவனும் போல

பலர் உள்ளர்.





Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...