Skip to main content

உடன்போக்கு

        டிசம்பர் 10, 2020 வாசகசாலை இணையஇதழில் வெளியான சிறுகதை.                                                                   உடன்போக்கு

கார் முன்னிருக்கையில் விரல்களால் தட்டிக்கொண்டு குமரன் அமர்ந்திருந்தான். கண்கள் சிட்டுக்குருவியின் உடல் அசைவுகளென படபடத்துக்கொண்டிருந்தன. வழக்கத்துக்கு மாறாக பிராண்டட் பேண்ட் சட்டையில் பள்ளிக்கூடத்து வாத்தியார் போல இருந்தான்.

“என்ன முதலாளி நீங்க இப்பதான் புதுசா கல்யாணம் பண்றாப்ல பதட்டப்படுறீங்க… தங்கச்சியே தைரியமா இருக்கு,” என்று பின்னிருக்கையிலிருந்த காமாண்டி கார் அதிர சிரித்தான். டிரைவர் பெருமாள் திரும்பிப்பார்த்து புன்னகைத்து,“நாமல்லாம் மட்டையாகற நிதானத்துலதான் காமாண்டி சரியா பேசுவாப்ல…”என்றான்.

“பின்ன…நம்ம முதலாளிய யாருன்னு நெனச்ச? இல்லாட்டி தங்கச்சியே வர சொல்லுமா,”

“வாயமூடுங்கடா…உங்களையெல்லாம் நம்பி என்னாகுமோ…  எம்மாமன நெனச்சா அஞ்சுஉசுரும் தனித்தனியா போவுது,”

குறுகிய ஈரதார்சாலையில் இருள்அடந்துகொண்டிருந்த நேரம் அது. குளிர்காற்றினுள் கரும்சிகப்பு ஹீண்டாய் கார் புகுந்து சென்று கொண்டிருந்தது. 

“அனுமார்சாமி கணக்கா தன்பலம் தெரியாத ஆளாயிருக்கீங்க. முப்பது வயசுக்குள்ள தனியாளா இருபது ஏக்கரா நெலத்தை விதைச்சு அறுத்து வியாபரம்பண்ணி மொதலாக்குறீங்க. ஒரு பொண்ண தூக்க முடியாதா…இதென்ன புதுசா,”

“இவன் வாயக்கட்டுடா பெருமாளு,”

ஆலமரத்தடியில் காரை நிறுத்திவிட்டு அமர்ந்தார்கள். பத்துமணிக்கு மேல்  விரிந்து பரந்திருந்த நெல்லங்காட்டு வரப்பில் ஏறி நடந்தார்கள். முற்றிலும் இருள் சூழ்ந்திருந்தது. இரவுப்பூச்சிகளின் ஓசைகள். தவிர அங்கங்கே பிரிந்து ஓடைகளாக வாய்க்கால்களாக வாரிகளாக நடக்கும்  தண்ணீரின் சலசலப்பும் முணுமுணுப்பும், அருகில் தொலைவில் என வெவ்வேறாக ஒலித்தன. 

“முதலாளி பேண்ட்ட கலட்டுங்க…வேட்டி கட்டிட்டு வாங்கன்னேன். இந்தநேரத்துல எதுக்கு பேண்டும் சட்டையும்…கிறுக்கு தலையில நிக்குது ,” என்றப்பின் காமாண்டி அவனே சிரித்துக்கொண்டான். குமரன்  பேண்டை தோளில் போட்டுக்கொண்டு  அவன் முதுகில் தட்டினான். 

 வரப்பில் நின்றால் தெரியும் என்பதால் தங்கய்யாவயலின் பின்புறமிருந்த வாரியில் பதுங்கி நின்றார்கள். தொடைக்கு மேலேறியது தண்ணீர். பனிக்கட்டியின் சில்லிப்பு. பகலிலும் நிழலில் பதுங்கி வரும் கொல்லிமலை தண்ணீர். பாதிநிலா வெளிச்சத்தில் தண்ணீர் மினுங்கிக்கொண்டு சலசலத்தது. வாரி பள்ளத்திலிருந்து பார்க்கும் போதே வீடு சீரியல் பல்புகளின் வண்ணத்தில் மிதந்தது. ரேடியோ செட்டில் ‘பட்டா கத்தி நீட்டி… நீ மிட்டாய் அறுக்குற’ என்று பாடல் கேட்டது. காமாண்டி சிரித்தான்.

“நம்ம மொதலாளி பட்டாகத்தியாக்கும்…”

 குமரன் அலைபேசியை நொடிக்கொரு முறை பார்த்துக்கொண்டிருந்தான். உடல் வெடவெடக்கத்தொடங்கியது. காமாண்டி திரும்பி நின்று தன் வேலையைப் பார்த்தான். குமரன் தற்காப்புக்காக மூக்கை அழுத்திப் பிடித்தான். பெருமாள் கண்ணால் சைகைசெய்து காமாண்டியை தள்ளி செல்ல வைத்தான். 

களத்தில் பெரிய பந்தலாகப் போட்டிருந்தது. ஆட்கள் கலைந்து தார்பாய்களை விரித்துப்படுத்தார்கள். மாடியில் சாப்பாடு பரிமாறும் நடமாட்டம் தெரிந்தது. தண்ணீரின் சிலுசிலுப்பு உடலில் ஏறத்தொடங்கியது.

“ஒங்க மாமனாரு நல்லா பெரிசாதான் பந்தல் போட்ருக்காப்ல…” என்றபடி காமாண்டி தண்ணீரை அள்ளி அள்ளி வாய்க்கொப்பளித்தான்.

“நாளைக்கு காலையில நாலறை மணிக்கே கல்யாணமும் இங்கனேயேவாம்,”

குமரனின் அலைபேசி ஒலித்தது.

“ஹலோ…”

“…”

“வாரிக்கு மேற்கால ஆலமரத்துக்கு மேற்க கார் நிக்குது…”

“…”

“என்ன?”

“…”

“இந்தா பெருமாளு…”

“சொல்லும்மா…”

“…”

“நாங்க வாரியில தங்கய்யா கரையில நிக்கிறோம்…மேட்டுக்கல் பாசனத்து ஆலமரத்துக்கிட்ட கார் நிக்கிது…”

“…”

“ஆமா. அந்த குட்டியலமரம் தான். அவரு அப்படிதான்.ஒனக்கு தெரியாதாம்மா? நீ டென்சன் ஆகாத…இப்ப நான் மட்டும் வடக்கால பக்கமா உங்க வாழக்காட்டு வரப்புக்கிட்ட வரேன்…”

“மொதலாளி…நீங்களும்  காமாண்டியும் காருல போய் ஒக்காருங்க…”

“நான் போறேன் பெருமாளு…”

பெருமாள்  குமரனின் தோளில் கைவைத்து, “வாழக்காடு நொதநொதக்கும். நேரமாச்சுன்னா என்னப்பண்றது.  சில்லிப்பு தாங்காத தேகம்…நீங்க போங்க,”என்றான்.

“யாராச்சும் பாத்துட்டா… தப்பா நெனச்சி உன்மல கைவச்சிட்டா…”

“அதெல்லாம் ஒன்னும் நடக்காது…”

இருவரும் தண்ணீரில் சத்தம் கேட்காமலிருக்க மெதுவாக துளாவி நடந்தார்கள்.

 “எதுக்கு இப்படி நடக்கறீங்க..இங்க என்ன படையா நிக்குது? போங்க வேகமா…”என்ற பெருமாள் வாரியிலிருந்து வரப்பில் ஏறி வேட்டியை உதறி கட்டிக் கொண்டு நடந்தான். கையிலிருந்த தடியால் தட்டியபடி நடந்தான்.

காயத்ரி நகைகளை சுழற்றி வைத்துக்கொண்டிருந்தாள். பின்னால் ஜடைமுடியின் எடை இழுத்துக்கொண்டிருந்தது. அதை எடுத்து அம்மா பிரிப்பதற்குள் பாக்கியம் உள்ளே வந்தார்.

“அதுக்குள்ள எதுக்குபிள்ள அலங்காரத்த கலைக்கற…எங்கவீட்டாளுக நாலுபேர் வந்து பாப்பாங்க…”

“சரிங்கத்த,”

“பொண்ணு தூங்க வேண்டாமா? நாளைக்கு கல்யாணத்துல பாக்கமாட்டாங்களா?”

“இருக்கட்டும் அண்ணி. சாப்பாட்டு பந்தி முடியற வரைக்குமாச்சும் இருக்கட்டும்,”

ஐந்து ஆண்டுகளுக்கு முன் காயத்ரி விடுதியிலிருந்து வீட்டிற்கு வந்திருந்தாள். அன்று இரவில் வீட்டு முற்றத்தில் உறவுக்காரர்கள் பத்துபேர் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

“முத்துசாமி பேரனுக்கா  பாப்பாவ கேட்டாங்க!”

“ஆமா…”

“பாப்பாவும் அந்தப்பையனும்…”

“அவுருக்கு அம்புட்டு தைரியம் இல்ல. அவுங்க தாய்மாமன் கேக்றாப்ல. தாய்தகப்பனில்லாத பிள்ளைக்கு தன்காலத்துக்குள்ள நல்லது நடந்துட்டா போதுன்னு நெனக்கிறாரு…”

“இவ்வளவு வசதிக்காரவுங்க நம்மகிட்ட எதுக்கு வரனும்…”

“பிள்ள லட்சணமுன்னு ஒன்னுருக்கு. உள்ளூருக்குள்ளயே சொந்தம்தேடி வைக்கனுன்னு மனசுல இருக்கும்,”

காயத்ரிக்கு பத்துநாட்களில் செமஸ்ட்டர் தேர்வு இருந்தது. கூடிக்கூடி பேசுகிறார்களே தவிர அவளிடம் எதுவும் கேட்கவில்லை.

“எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்மா. படிச்சு முடிச்சப்பறம் பண்ணிக்கிறேன்,”

“அப்ப இந்தமாதிரி எடத்திலருந்து மாப்பிள்ள வந்து நிக்குமா?”

“வர மாப்பிள்ளைய பண்ணிக்கறேன்…” என்றபடி தாழ்வாரத்திற்கு வந்து நின்றாள்.

“நாங்க சொல்றத கேளு…ஏழுதலைமுறைக்கு சொத்து கெடக்கு. படிச்சு என்ன பண்ண போற,” என்ற சக்திமாமா நாற்காலியில் அமர்ந்தபடி செவலையின் முதுகை தடவி விட்டுக்கொண்டிருந்தார். அது தன் நாவால் அவர் கையை எட்டி எட்டி தொட்டுக்கொண்டிருந்தது. பெருமூச்சாக அது மூச்சுவிடும் சத்தம் தனியாக கேட்டுக்கொண்டிருந்தது.

யாரும் பேசாமல் நேரம் கடந்து கொண்டிருந்தது.

அவர் எழுந்து நின்று நெஞ்சில் கைவைத்து வானத்தைப்பார்த்தார். பின் குனிந்து செவலையின் வயிற்றில் வலதுகையின் ஐந்துவிரல்களையும் விரித்து பதமாக வைத்து கொஞ்சநேரம் நின்றார். மடிக்காம்பை,பின்புறத்தை பூவைத்தொடுவதைப்போல தொட்டுப்பார்த்த அவர்,“இன்னும் ரெண்டுநாள்ல்ல கன்னு போட்டுரும்…வயல்ல தனியா கட்டீறாதீங்க…” என்று அதன் நெற்றியை தடவினார். 

அவள் சட்டென்று ,“குமரன கல்யாணம் பண்ணிக்க முடியாது…”என்றாள்.

அப்பா,“ஏனாம்…நீ பெரிய ராஜா வூட்டுப்பிள்ளையா...மைனர் மாதிரி திரிஞ்சாலும் வாஞ்சையான பையனாக்கும். தங்க குணம்,”என்றார்.

“எனக்கு தங்கமும் வேணாம். தண்ணிவண்டியும் வேணாம்…”

“கழுத…உன்னைய யாரு கேட்டாங்க?”

“அவுங்க வூட்லயே அவருக்குன்னு தனியா ‘பார்’ வச்சிருக்கறது ஊருக்கே தெரியும்…”

“வீட்டோடதானே...யாருக்கு பழக்கமில்ல…”

“யப்பா…வீட்ல பார் வச்சிருக்கறதெல்லாம் என்ன பழக்கம்ப்பா…கருமம்..ச்சை,”

அவருக்குப்பின்னால் தொட்டிக்கல்லில் அமர்ந்திருந்த சித்தப்பா சிரித்தார்.

“வெவரம் தெரியாத பச்சப்பிள்ள…”

“ஆமா…நீங்கெல்லாம் நல்லா வெவரம் தெரிஞ்சுதான் அவர கட்டிக்க சொல்றீங்களா. குடிச்சே செத்து போனா யாரு தாலியறுத்து நிக்கறது…”

கன்னத்தில் பளீரென்ற அறை விழுந்தது மட்டும்தான் தெரிந்தது. அவன் கையை பற்ற எழுந்த அவள் கரத்தை அம்மா பற்றிக்கொண்டாள். தொட்டு தொட்டு விளையாடிய கைகள். அந்தக்கைகளை பார்த்துக்கொண்டேயிருந்தாள். எத்தனை அகலம்,எத்தனை வலு. 

“என்ன பாக்கற…நீ பாத்தா நாங்க பயந்தறனுமோ…நேருக்கு நேரா பாக்கறன்னிக்கே இத கட்டிக்கொடுத்திருக்கனும்ப்பா,”

“ஆத்தரப்படாத சண்முகம்…கூடப்பொறந்தவன் கைவைக்கக்கூடாது. பிள்ளைங்க மனசு தாங்காது.  நம்ம சொல்றத கேட்காம எங்க போகப்போகுது,” என்று பதறி எழுந்து வந்த மாமா அவனை தள்ளிக்கொண்டு சென்று அமரவைத்தார். கன்னத்தின் மேல்சதையிலிருந்து ஆழத்திற்கு வலி பரவியது. நடுங்கிய கால்களை நன்றாக ஊன்றி நின்று கொண்டாள்.

திருமணம் முடிந்த மூன்றாம் நாள் விருந்தின் இரவில் குமரனின் பாரில் சண்முகமும் குமரனும் அடித்துக்கொண்டு வம்பாகியது. பெண்கள் புகுந்து அவரவர் வீட்டு ஆட்களை இழுத்துச்சென்றார்கள். இனிமேல் இந்த வீட்டில் கால் வைக்க மாட்டேன் என்று மடித்துக்கட்டிய வேட்டியுடன் நீண்ட கால்களை எடுத்துவைத்து அப்பா வாசலைக் கடந்தார். பின்னால் தள்ளாடியபடி சென்ற சண்முகத்தின் கைகளை இறுகப்பற்றியிருந்தார். 

“அவருக்காகதான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். அவருக்கு நான் யாரோவா போயிட்டனாம்மா,” என்று அழுதாள். குமரன் அவளைப் பார்த்தபடி சாமியறைக்குள் சென்றான்.அம்மா அப்பாவின் படத்தின் முன்நின்றான். ‘அம்மா இந்தப்பிள்ளை மேல ஒரு நாளும் எனக்கு துவேசம் வராம நீதான் காப்பா இருக்கனும்’ என்று கையைகூப்பிக் கொண்டு அங்கேயே படுத்துவிட்டான்.

திருமணமாகி மூன்றுஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. எந்த விழாவிலும் சாவிலும் சடங்கிலும், ஒரு குரலாவது விசேசம் எதுவும் இல்லையா என்று கேட்டு, நடக்கும் விசேசத்தை அவளிடமிருந்து பறித்தது.

சின்னப்பிள்ளையிலிருந்து தெருவில், பள்ளியில், வீட்டில் வண்ணத்துப்பூச்சியாக பறந்துவிட்டு இப்பொழுது கூட்டுக்குள் நுழைய ஆத்திரமாக இருந்தது. அவளுக்கே காலைநேரங்களில் தெருவில் ஆட்கள் வெளியில் கிளம்பும் போது, விசேசங்களில் முன்னால் நிற்க தயக்கமாக இருந்தது. போதாதற்கு ஊரை சுற்றி வீட்டுக்கதைகளை அறிந்த குடுகுடுப்பைக் காரர்களின் தந்திரம் வேறு மனதை அலைபாய வைத்தது.

அன்று இரவில் மாடிநடைப்பாதையில் நின்று தெருவைப்பார்த்துக் கொண்டிருந்தாள். எட்டுமணிக்குள் சந்தடிகள் ஓய்ந்து அமைதி சூழ்ந்திருக்க நாய்களின் நடமாட்டம் தொடங்கியிருந்தது.

“காயத்ரி உள்ள வாய்யா…பனி பெய்யுது பாரு,”

“இந்த கரிசனத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. சொல்ற பேச்ச கேட்டா பரவாயில்ல,”

மாடியேறி வந்து அருகில் நின்றான்.

“தள்ளி நில்லு மாமா. வாடை குப்புன்னு அடிக்குது…கருமம்,”

“எதுக்கு பனியில நிக்கற…”

“திருஷ்ட்டி கழிச்சு போட்டிருகாங்கல்ல…அது எனக்காவத்தான். நான் அந்த பாப்பாவ இன்னிக்கு பாக்க போனேன்,”

நாற்சந்தியில் பெரிய கட்டிசூடம் எரிந்து கொண்டிருந்தது.

“லூசு மாதிரி பேசாத காயத்ரி…அது குழந்தை இருக்கற வீட்ல வழக்கமா செய்யற சடங்கு தானே,”

“அது எதுக்கு மாமா செய்யறாங்க. இல்லாதவங்கள எகத்தாளம் பண்றதுக்கு தானே. ஆசையா பிள்ளைகள பாக்கறத்துக்குக்கூட பயமா இருக்கு மாமா,”

அவள் அருகில் வந்தவன் அவள் மூக்கின் சுளிப்பை கண்டு விலகிக்கொண்டான்.

 “மறுபடி படிக்க வைக்கிறியா மாமா?”

“அதுக்கென்ன…எவ்வளவு படிக்கனுமோ படி,”

காயத்ரி குமரனுடன் மருத்துவமனையில் ஏ.சி குளிர் முகத்தில் அறைய தலையை குனிந்து அமர்ந்திருந்தாள். மருத்துவர் குமரனை குடியை குறைத்துக்கொள்ள ஆலோசனை வழக்கி அனுப்பினார். அவனை மீறிய பிடி அவனை விடுவதாயில்லை. அவன் விதவிதமான குப்பிகளை தன் சேகரிப்பில் அடுக்கிக்கொண்டிருந்தான்.

திருமணத்திற்கு முன் பெரியசாமி கோயிலில் மந்திரித்து கயிறு கட்டி இனி குடிக்கக்கூடாது என்று மாமா வயல்வீட்டில் இருத்தி வைத்தார். இரண்டுநாட்களில் வயலெங்கும் ஓட்டமும் நடையுமாக சுற்றி வந்தான். கைகளை மோட்டார் அறையின் மின்பெட்டியில் வைக்கச் சென்றவனை இழுத்துபிடித்த மாமா அவரே தாயத்தை அவிழ்த்துவிட்டு குடிக்க சொன்னார். அந்த நினைவின் அச்சம் மருத்துவர் சொல்லிய அறிவுரைகளை அவன் மனதில் நிற்கவிடாமல் செய்தது.

அது ஐப்பசி நடவு காலம். ஊர் ஆட்கள் வயலில் கிடந்தார்கள். தெருக்கள் வெறிச்சோடி அடைமழையில் நனைந்து கிடந்தன. காயத்ரியின் அப்பா நெல்லம்பயிர்க்கட்டுகளை சேற்றுவயல்களில் தூக்கிப்போட்டுக்கொண்டிருந்தார்.

“மாமா…மெதுவா போடுங்க. சேறு தெறிக்குமோன்னு விறுக்குவிறுக்குன்னு இருக்குல்ல,”

“நாலு வயலுக்கு வேலைக்கு போற பிள்ளைங்க. நம்ம நாத்து எப்படிம்மா?”

“சொல்லனுமா…பாக்கற கண்ணுக்கு தெரியாதா?”

“நாத்தை பிரிச்சு சேத்து நடறாப்ல தானே பொட்டப்பிள்ளை பொழப்பும். பிள்ளைய போய் பாக்காம இருக்கீங்களே. அங்கேயும் அப்பனாத்தா இல்ல. அந்தக்கெழவிக்கு என்னத்தெரியும். இப்படி பிள்ளைகள தனிச்சு விட்டுட்டீங்களே,”

அவர் அமைதியானார். அவர் வயதேயான பார்வதி மட்டும்,“தரிசா கிடக்கு உம்பிள்ள. என்ன ஏதுன்னு பாக்கமாட்டியா,” என்றார்.

அவர் அடுத்தநாள் மழைத்தூறும் சாயுங்கால நேரத்தில் குமரனை தேடிக்கொண்டு சென்றார். ஒன்பது கலப்பையால் வயலை உழுதபடி ட்ராக்டரில் அமர்ந்திருந்தான் குமரன். ஈரமண்ணை ஒன்பது சிறிய இரும்புக்கரங்கள் கீறி வகிர்ந்து கொண்டிருந்தன.

“பேசனும்…எறங்குங்க…”

“உங்க பையனோட சேந்துக்கிட்டு காயத்ரிய பாக்கக்கூட வரதில்ல. இன்னிக்கு என்ன புதுசா,”

“ வயவேல செய்ய வந்தப்பிள்ளைக கேள்வி கேக்குதுங்க.உம் மகள டாக்டருட்ட காட்டுன்னு சொல்லுதுங்க,”

“வீட்டுக்கு வாங்க பேசிக்கலாம்,”

“எம்மவன அடிச்ச வீட்டுல காலடி படாது,”

“பின்ன எதுக்கு வீண்வம்புக்கு வரீங்க…வீட்டுக்கு போய்படுங்க. நிதானமா பேசலாம்,”

உயரத்துக்கேற்ற எடையுடன் கால்களை அகட்டி வயலில் நின்ற அவரைப்பார்க்க சங்கிலிகருப்பன் மாதிரி இருந்தார்.

அவரைப்பார்த்து பதுங்கியபடி வந்த காமாண்டி,“மொதலாளி சொல்றத கேக்கனும்,” என்றார். அவனை வாய்க்காலில் தள்ளிவிட்டு காலை ஓங்கினார்.

ட்ராக்டரிலிருந்து குமரன் இறங்குவதற்குள்  வயலில் இருந்த ஆட்களும், பெருமாளும் அவரை இழுத்துக்கொண்டு போய் பாதையில் விட்டார்கள். பாதைக்கு சென்ற குமரன் பேசுவதற்குள் அவர் கையை ஓங்கினார். அவர் கைமணிக்கட்டை தன் இருகைகளாலும் வளைத்துப் பிடித்தான். பிடிநழுவும் நேரத்தில் அவனை அறைந்து தள்ளிவிட்டு மகனின் வண்டியில் ஏறினார்.


இரவு உணவு நேரத்தில் அவன்அப்பாயி , “இந்த ரொட்டியெல்லாம் எதுக்கு போடற. சோறாக்கு,”என்றார்.

“உனக்கு சக்கரை இருக்கும்மாயி. சோறே திங்கக்கூடாது,”

“எனக்கும் இதெல்லாம் செல்லுபடியாகல. வயிறு நெறயமாட்டிக்குது காயத்ரி,”

காயத்ரி அவன் கைக்கழுவும் வரை காத்திருந்தாள்.

“எங்கப்பாவுக்கு எலும்பு சுளுக்கு விழுந்திருக்காம்…”

“என்னைய கன்னத்துல அறஞ்சாரு,”

“என்னக்கூடத்தான் அடிச்சு கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் என்ன திருப்பி அடிச்சனா…உன்னைய கல்யாணம்பண்ணிட்டு பாடுபடல,”

“என்னத்துக்கு சேத்தி உன்னோட ஞாயம். தெனமும் உனக்கும் எனக்கும் நிம்மதியில்லாத பொழப்பு…என்னதான் செய்யனுங்கற,”

“என்னிய ஹாஸ்ட்டல்ல சேத்துவிடு,”

“சண்ட போட்டுக்கலாம். கட்டின பின்னாடி பிரிஞ்சிருக்கக்கூடாது…”என்று அப்பாயி அடைமழையாய் நசநசத்துக்கொண்டேயிருந்தாள்.

விடுதிக்கு சென்ற இரண்டு ஆண்டுகளில் தன்னை ஒத்த பிள்ளைகளை பார்த்து பார்த்து காயத்ரிக்கு மனம் வெதும்பியது. தேவையில்லாத பாரம் இந்தத்திருமணம். குமரனை திருத்துவதற்காகவா பிறந்தேன் என்ற எண்ணம் நாட்கள் செல்ல செல்ல  விவாகரத்து செய்துவிடலாம் என்று மாறியது.

முதுகலை தேர்வுமுடிந்து வீட்டிற்கு வந்தாள். ஆறப்போட்டால் தட்டி எடுக்கமுடியாது என்று மனதிற்குள் தோன்றியது. முகம்மலர தன்னை பார்த்துக்கொண்டிருக்கும் அவனிடம் சொல்லெடுக்க முடியாமல் திணறினாள்.

“மாமா…”

“சொல்லுய்யா…”

“….”

“என்ன?”

“நான் வேலைக்கு போலான்னு…”

“நமக்கே கணக்கு வழக்கு பாக்க ஆள் வேணும்…பள்ளிக்கூடம் வச்சு தரவா,”

“இல்ல…எனக்கு பிடிச்ச வேலைக்கு. நாம விவாகரத்து பண்ணிக்கலாமா மாமா,”

“விவாகரத்துக்கு போற அளவுக்கு நமக்குள்ள ஒன்னுமில்லையே!”

“என்ன ஏதுன்னு கேட்காம கல்யாணம் பண்ணிவச்சிட்டாங்க…எனக்கும் குழந்தை இல்லையான்னு கேட்டு கேட்டு பயமா இருக்கு மாமா. வாழ்க்கை முழுசும் இதுக்கே பதில் சொல்லி, அதுக்காக கோயில் ஹாஸ்பிட்டல்ன்னு அலைஞ்சிதிரிஞ்சு, அதுக்காக எதிர்பாத்து, ஏமாந்து கடைசி வரைக்கும் வாழ்க்கை வீணாயிடுன்னு தோணுது. தாய்தகப்பனில்லாத பிள்ள நீ .உம்மேல கோவம் இல்ல மாமா. ஆனா தெரிஞ்சோ தெரியாமையோ நீ பழகின பழக்கம் உன்னைய அழிச்சிருச்சு. என் வாழ்க்கையையும் அழிக்கனுமா?” 

“படிக்கவும் நெறய பேசுற,” என்று சுவரைப்பார்த்தான். அப்பாயி வாயில் கைவைத்தபடி எதுவும் பேசவில்லை.

 வழக்கை நீடிக்காமல் பரஸ்பரம் பிரிவதற்கு குழந்தை இன்மையும் ,அவனின் குடிப்பழக்கமும் உதவின. அவன் கொடுத்த பெரிய ஜீவனாம்ச தொகையை தன் வங்கிக்கணக்கில் வைப்பதில் பிடிவாதமாக இருந்த அவளிடம் சண்முகம் பணிந்தான். தினமும் யாராவது நிலத்தரகர்களை அழைத்து வந்தான்.

அவள் மனதிற்குள் குமரன் கேட்டதே அரித்துக்கொண்டிருந்தது. உண்மையாகவே அவனை பிடிக்கவில்லையா? என்ற கேள்வி தூங்கி எழும் நேரங்களில் மனதில் வந்து நின்றது. குமரனின் அப்பாயி இறந்த அன்று சென்றே ஆகவேண்டும் என்று கிளம்பினாள். அங்கு யாரும் எதுவும் அவளிடம் பேசாமல் குமரனை பார்த்தார்கள். குமரன் வெளியே சென்று நின்று கொண்டான்.

சங்கீதா காதோடு, “காயத்ரி…மைனரோட ‘பாரை’ காணும்டீ,”என்றாள்.

நெஞ்சதிர வலப்பக்க அறையை திரும்பிப்பார்த்தாள். வெறுமையாய் கிடந்தது. சுடிதார் துப்பட்டாவை இறுக்கி பிடித்தபடி விறுவிறுவென வெளியே வந்தாள்.

பந்தல்காரரிடம்  குமரன் பணத்தை எண்ணி கொடுத்துக்கொண்டிருந்தான். திரும்பிய அவன் முகம் அழுத அடையாளத்துடன் எண்ணெய் பளபளப்பில் மினுமினுத்தது. கண்களை சுருக்கி அவளைப்பார்த்தான்.

“ஹாஸ்பிடலுக்கு போனிங்களா இல்லையா…”

“போனம்…மாரடைப்பாம். வழியிலயே உசுரு போயிருச்சுன்னு சொன்னாங்க…”

“தனியா போனியா…”

“பெருமாளும்…காமாண்டியும்,”

“இப்ப எதுக்கு அவ்வளவு பணத்தை நீட்டுன…”

“அதைவிடு…வேலைக்கார மாப்பிள்ளையாமே… வேலைக்கு போகனுன்னு பெரிசா பேசுன,”

“ வேலை கிடைக்கல. தேடனும். கண்டதையும் பேசாத மாமா…ஒரு கல்யாணம் பண்ணியே உசலாட்டமா இருக்கு,”

“நீதான் மாப்பிள்ளைய ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னியாமே…”

“இங்க வந்தேம்பாரு. என்ன சொல்லனும். வேணும்ன்னு வம்பிழுக்க பாக்கற,” என்று வேகமாக வெளிய வந்தாள்.

வீட்டிற்கு வந்து நிலைகொள்ளாமல் இருந்தாள். அம்மா எதுவும் தெரியாது என்பதோடு முடித்துவிட்டாள். ஒரு மாதம் சென்று ராத்திரி சாப்பாட்டிற்கு பின் முற்றத்தில் அமர்ந்திருந்த அப்பா அவளை அழைத்தார். சண்முகம் படியில் அமர்ந்திருந்தான்.

“அவங்கூட என்ன பேச்சு,”

“…”

“கேக்றனில்ல…சனிக்கிழம கார நிறுத்திட்டு பஸ்நிக்கற எடத்துல பேசுனானா?”

“ஆமா…ஏன் பேசக்கூடாதா?”

“வெட்டி விட்டா முழுசா விட்டுடனும்…மாப்பிள்ள பாத்தாச்சு. இதெல்லாம் அவுங்க காதுக்கு போனுச்சா பிச்சுப்புடுவேன்,”

“ஏய்…இந்த அதட்ற வேல, மிரட்ற வேலையெல்லாம் வச்சிக்காத. எனக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னனா?”

“இதெல்லாம் சொல்லியா செய்வாங்க. எதாச்சும் பண்ணலான்னா பணத்தையும் கையவிட்டு எடுக்கமாட்டிக்கிற. உன்னைய வச்சுக்கிட்டு எனக்கு கல்யாணம் பண்ண முடியுமா. உன் காசுலதான் உனக்கு கல்யாணம்,”

“நான் என்னடா பண்றேன்…”

“மாமியார் மருமக சண்டையே தீராது…இதுல நீ வேறயா. அரசாங்க உத்தியோகம். கவுரவமா இருக்கலாம். உன்னைய பிடிச்சு கேட்டிருக்காங்க. அவருக்கும் ரெண்டாங் கல்யாணம்தான்,”

திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அம்மா எனக்கென்ன என்று பேசாமல் நின்றாள். இரவு அந்த மாப்பிள்ளை அலைபேசியில் அழைத்தார்.

சம்பிரதாயமான கேள்விகளுக்குப்பிறகு அவன், “எனக்கு எந்த பழக்கமும் இல்லீங்க,”என்றான்.

“நீங்க ஏன் பிரிஞ்சீங்க?”

“ஒத்து போகல. எதுலயும் தான்தான் அறிவாளின்னு அவளுக்கு மெதப்பு. அப்புறம்…”

“ம்…சரியா கேக்கல இருங்க,” என்று பின்பக்கம் வந்தாள்.பின்புறம் பேச்சுக்குரல் கேட்டது.

“காயத்ரி பிடிகொடுக்காம பேசுது. வெளியில விட வேணாம். மாப்பிள்ளைக்கிட்ட இப்ப பேசறேன்,” என்ற அப்பாவின் குரல் கேட்டது.

அறைக்குள் சென்று கதவை சாத்தினாள். 

“ஹலோ மாமா…”

“என்னய்யா?”

“நம்மவீட்டுக்கு வரவா?”

“வா. ஆனா எப்பிடி?”

“திருப்பி என்னையே கேளு... டிரைவர் அண்ணா பக்கத்தில இருந்தா குடு,”

டிரைவர் வாழைக்காட்டிற்குள் நிற்பது தெரிந்தது. வெளியே அம்மா அனைவரையும் படுத்துக் கொள்ள சொல்லும் குரல் கேட்டது. சற்றுநேரம் சென்று உள்ளே வந்த சங்கீதா , “போய்தொலையேண்டி’ அவரு எவ்வளவும் நேரம் ஈரவயல்ல கால்கடுக்க நிப்பாரு,” என்றாள்.

 வயல் தண்ணீரை உறிஞ்சி வாய்க்காலில் விடும் இயந்திரத்தை சங்கீதா இயக்கிவிட்டாள். அது சத்தமெழுப்பியபடியே இயங்கியது. சங்கீதா அங்கும் இங்குமாக நடந்து சிறுபயல்களை அழைத்து அந்த இடத்தை விளையாட்டுக்களமாக்கினாள். காயத்ரி வெளிச்சம் குறைவாக இருந்த பின்பக்கமாக நடந்து வாழைக் காட்டில் இறங்கினாள். வாழைக் காட்டின் குளுமை நடுங்க வைத்தது. புடவையை போர்த்திக்கொண்டாள். பத்தடிக்கு ஒருதரம் கால் வழுக்கியது.

“ஏம்மா கொழுசுமணியெல்லாம் குறைச்சு வாங்குனா என்ன? நீயே காட்டி குடுத்துடுவ போலயே…பிசாசுக்கூட நடக்கறப்ல இருக்கு,” என்ற பெருமாள் அவள் கையைபிடித்துக் கொண்டு மறுகையால் குச்சியில் தரையை தட்டியபடி நடந்தான். கார் நிற்கும் இடம் வரை நடப்பதற்குள் கணுக்கால் வரை சேறு ஏறியிருந்தது. வாய்க்காலில் கால்களைக்கழுவி ஏறும்போது வீட்டில் அனைத்துவிளக்குகளும் எரிவது தெரிந்தது.

மாம்பழநிற பட்டுச்சேலையில் பச்சைநிற ஓரம் மின்ன பின்னிருக்கையில் குமரன் அருகில் அமர்ந்தாள். அந்த பதநிலையிலும் வியர்த்திருந்தது. அவசரமாக பெருமாள் வண்டியை கிளப்பினான்.

“எங்க போறோம்…”

“ ஊரைத்தாண்டி ஓட்டு,”

“என்னய்யா சிடுசிடுன்னு இருக்க…”

ஜடையை முன்னால் தூக்கி போட்டபடி, “இறுக்கமா பின்னிட்டாங்க…பிரி மாமா,”என்று நீட்டினாள்.

முன்னால் காமாண்டி சிரித்தபடி பாடலை ஒலிக்கவிட்டான்.

“சொன்னா கோவிச்சுக்கிறீங்க…சடையை பிரிக்க முடியல உங்க முதலாளிக்கு…”என்று பெருமாளின் தோளில் தட்டினாள்.

“செல்லமா வளந்தப் பிள்ள…இந்த வேலையெல்லாம் தெரியுமாம்மா?” என்று கண்ணாடியை சரிசெய்து பின்னால் பார்த்தான்.

“எம்மேல கோவம் இல்லையா மாமா,”

“ரொம்ப கோவம்… அடிக்கற அளவுக்கு ஆத்திரம் எல்லாம் இருந்துச்சு. அம்மா மாதிரி சின்னவயசிலேயே செத்துபோயிருவியோன்னு பயம். அதான்….”

கொஞ்சநேரம் பாடல்மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது.

“ஆனா டைவர்ஸ் ஆன பின்னாடிதான் புரிஞ்சுது. ஒவ்வொருத்தனும் கேள்வியா கேக்கறான். உனக்கு எம்புட்டு கஸ்ட்மா இருந்திருக்கும். அதான் நம்ம பாத்தமே அந்த டாக்டருட்ட ஆறுமாசமா ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கேன்,”

“டாக்டரும் இப்ப மொதாளிக்கு ப்ரண்டாக்கும்…மொதலாளிய யாருன்னு நெனச்சீங்க,”

சிரித்தபடி காயத்ரி கண்களை துடைத்துக்கொண்டு, “நான் திரும்ப வந்துருவேன்னு நெனச்சியா!” என்றாள்.

அவன் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தான். கண் மை ,இமை மை எல்லாம் கரைந்து கன்னத்தில் பூசியிருந்தாள். அவன் பார்த்தபடி இருந்தான். ஒருநாள் அம்மா கரிச்சட்டி விளக்கும் போது இப்படிதான் கன்னத்தில் அப்பி இருந்தாள். கருத்த கன்னத்துடன் நிமிர்ந்து புன்னகைத்தாள்.

பெருமாள் கண்ணாடியை மாற்றியபடி, “ஊரைத்தாண்டியாச்சு…” என்றான். குமரன் தலையை உலுக்கிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான்.

“எங்க முதலாளி மாதிரி ஆளுண்டா…”என்று காமாண்டி சொல்ல பெருமாள் பலமாக சிரித்து,“ஆமா…”என்றான்.

“என்ன ஆமா…ஜால்ரா போட்டுட்டே இருங்க. எப்படா இந்த தலைகனத்தை எறக்குவோன்னு இருந்துச்சு…”என்றபடி கொண்டை முடியை வெளியே வீசினாள். குமரன் கண்ணாடி வழியே வெளியே பார்த்தான். இருள் கலங்கி பொழுது வெளுக்கத்தொடங்கியிருந்தது. அவன் கார் கண்ணாடியை இறக்கிவிட்டான். கண்ணாடியில் மோதித்தவித்து வழிகண்டுகொண்ட காற்று காரினுள் புகுந்து நிறைந்து கொண்டிருந்தது.










Comments

Popular posts from this blog

அகத்தின் ஆரக்கால்கள்

 [ எழுத்தாளர் மயிலன் ஜி.சின்னப்பனின் முப்போகம் [குறுநாவல்], நூறு ரூபிள்கள் மற்றும் சிருங்காரம் சிறுகதை தொகுப்புகளை முன்வைத்து...] எழுத்தாளர் மயிலன் தண்டவாளத்தின் இருபக்க தண்டுகள் அதை இணைக்கும் குறுக்குப்பட்டைகள், ஜல்லிக்கற்கள் என்று அனைத்தும் சரியாயிருக்க ஓடும் ரயிலில் எங்கோ ஒரு சின்னஞ்சிறு விலகல் அனைத்தையும் குழப்பி தடம் புறளச்செய்கின்றது. புரண்டு கிடக்கும் ரயில் அந்த சின்னஞ்சிறு விலகலின் உண்மையான ரூபம். மறுபடி சரி செய்யப்பட்டு ஓடும் ரயில் பின் எங்கோ அதே போல தக்கி நிற்கும். அதை போன்ற ஒரு உணர்வு சித்திரத்தை மயிலனின் கதைகளை தொகுப்பாக வாசிக்கும் போது உண்டாகிறது. மனதின் அகஅடுக்குகளை கீறிப்பார்க்கும் சவரக்கத்தி என்றும் இவரின் எழுத்துகளை சொல்லலாம். அதில் ஒரு அடுக்கு காயத்தால் அழுகி புறையோடி சீல் கொள்கிறது. அது மற்ற அடுக்குகள் மீது கொள்ளும் செல்வாக்கின் கதைகள் இவை. அந்த வலி நிறைந்த அழுகிய அடுக்கை உருவாக்கும் விசைகளை நோக்கி செல்லும் கதைகள் இவை. மனித இயல்புகள் அல்லது  இயல்புகளை பாதிக்கும் சூழல்கள் என்று இவை இரண்டும் ,அந்த சவரக்கத்தியை தீட்டும் மணலின் நெறுநெறுப்பாகவும் தீட்டிய கத்தியை ...

கர்ணனின் கவசகுண்டலங்கள்

இந்த ஆண்டு நித்யவனத்தில் நடத்தப்படும் முழுமைஅறிவு [Unified wisdom] வகுப்புகளில் மரபிலக்கிய வகுப்பிற்கு செல்ல வேண்டுமென்று தோன்றிக்கொண்டிருந்தது. மரபின் மைந்தன் முத்தய்யா அவர்கள் நடத்தும் மரபிலக்கிய அறிவிப்பு வந்ததும்  வழக்கம் போல நிறைய யோசனைகள். பொங்கல் விடுமுறை நாட்களில் வருகிறது என்பது வேறு. இருந்தாலும் செல்ல வேண்டும் என்று ஒரு பிடிவாதம். பதினாறாம் தேதி ரம்யா மனோகருடன் ஈரோடு விஷ்ணுபுரம் அலுவலகத்திலிருந்து வெள்ளிமலை சென்றேன். சாயுங்காலம் ஐந்து மணி்க்கெல்லாம் மலையேறிவிட்டோம். அங்கு ஈரோடு கிருஷ்ணன் அவர்களை முதலில் பார்த்தோம். அவருடன் எங்கள் வகுப்பு சகாவான ஆனந்த் குமார் அறிமுகமானார். பின்பு அறைக்கு சென்று வந்து மலைச்சூழலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அங்கிருந்த திறந்தவெளி இருக்கைகளில் ரம்யாவும் நானும் கொஞ்சம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தோம். ஒரு நல்ல நட்பிற்கான அடித்தளம். மேடம்,கமலதேவி,கமலா...கடந்து...ரம்யாவை அக்காவிற்கு வர வைத்ததும் வேலை முடிந்தது. இனி இயல்பாக எல்லாம் நடக்கும். ரம்யாவின் இனிய முகம் மூன்றாவது நாள் ஈரோடு பேருந்து நிலையத்தில் விடைபெறும் வரை உடன் இருந்தது. அதே ப...

பெருகும் காவிரி

 காவிரியை பார்ப்பது எப்போதுமே எனக்கு பரவசமான பொழுது. பள்ளி வயதில் முசிறி காவிரி. கல்லூரி வயதில் திருச்சி காவிரி. கடைசியாக முசிறிக்கு சென்று நான்கு ஆண்டுகளாகிறது. முசிறியிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்து வழியில் காவிரி உடன் வரும். கொல்லிமலையில் உருவாகி எங்கள் ஊரில் பாயும் அய்யாறு முசிறி காவிரியில் கலக்கிறது. அண்மையில் எழுத்தாளர் சுரேஸ்குமார இந்திரஜித் கருத்தரங்கிற்காக திருச்சி செல்லும் போது இரண்டுஆண்டுகள் கழித்து  அந்தியில் காவிரியை பார்த்தேன். கொள்ளிடம் பாலத்தில் நல்ல காற்று. கொள்ளிடத்தில் ஓரளவு நீர் இருந்தது. கொள்ளிடம் பாலத்தில் பேருந்து செல்லும் போது வலது பக்கம் மலைக்கோட்டை ,திருவரங்க ராஜகோபுரம் இரண்டும் நீருக்கு அப்பால் இணையாக காட்சிக்கு வரும். அதற்கும் அப்பால் மேற்கு வானில் சரியும் ஆரஞ்சு வண்ண சூரியன்.    மங்கம்மாளை, தாயுமானவரை,ஆண்டாளை,வெள்ளையம்மாளை,ஆண்டாளை போலவே அரங்கனை தேடி வந்த முகலாய இளவரசி சுரதானியை மனம் சென்று தொடுகிறது. அன்னிய படையெடுப்பின் போது கோயில் உற்சவரை காப்பதற்காக கிழக்கு கோபுரத்தில் இருந்து உயிர் விட்டாள் தாசி குலத்து வெள்ளையம்மாள். வெள்ளை ...